வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக

வாய்களால் ஊதி அனைக்க முடியாத சத்தியக் கொள்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள்.

திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும் திட்டங்களை வகுத்தனர்.

அதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. தவ்ஹீத் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டனர். மேலப்பாளையத்தில் பீஜே பேசிக் கொண்டிருக்கும்போது மேடையில் ஏறி அவரை அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயத்துடன் அவர் பிழைத்துக் கொண்டார்.

இப்படியெல்லாம் இவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அவர்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கே பலம் சேர்த்தது. ஊருக்கு நாலு பேர் கூட இல்லாமல் இருந்த தவ்ஹீத் ஜமாஅத் ஊர்கள் தோறும் கிளை பரப்பவும் தமிழகத்தில் சுமார் 600 மர்கஸ்கள் உருவாகவும் இவர்களின் வன்முறை வெறியாட்டமே காரணமாக அமைந்தது.

இவர்களின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேருவதற்கு இவர்களே பாதை அமைத்துக் கொடுத்தார்கள்.

விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அற்பமான நிலையில் நாம் இருந்த போதே இவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சவில்லை. நம்முடைய பிரச்சாரத்தைத் தளர்த்தவில்லை. முன்பை விட இன்னும் வீரியமாகவே நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இவர்களின் எதிர்ப்பு நமக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது.

அதுபோல் தான் இப்போதும் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். முன்பு இவர்கள் எப்படி முனை மழுங்கிய ஆயுதத்தை நமக்கு எதிராகத் தூக்கினார்களோ அதை விட பலவீனமான ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு இப்போது நமக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர்.

திருவிடைச்சேரி எனும் கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத் பிரமுகர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஹஜ் முஹம்மதுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக மக்களை உசுப்பி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

இவர்கள் நாடெங்கும் ஒட்டிய ஆளுயர சுவரொட்டியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

"தமிழக அரசே திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரைப் படுகொலை செய்த டிஎன்டிஜே குண்டர்களுக்கும் அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு''

என்பது சுவரொட்டியின் முக்கிய வாசகம்.

இதில் 19 இயக்கங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 15 இயக்கங்கள் வெறும் லட்டர் பேடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜாக் ஆகிய இரண்டு இயக்கங்கள் தவிர அனைத்து இயக்கங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் இப்படி சுவரொட்டி ஒட்டுவதால் அந்தக் கொலையைச் செய்த சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவராகி விடுவாரா? அரசாங்கம் உடனே இந்தச் சுவரொட்டியை ஆதாரமாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா? இந்தச் சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

அல்லது இப்படி சுவரொட்டிகள் ஒட்டுவதால் மக்கள் அதை அப்படியே நம்பி கொந்தளித்துப் போய் விடுவார்களா? அந்தக் காலம் மலையேறி விட்டது. இவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன.

தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையைப் பிடிக்காத மக்களுக்குக் கூட இந்த ஜமாஅத் இது போன்ற செயல்களில் ஈடுபடாது என்று நல்லெண்ணம் இருக்கிறது. இதனால் தான் ஜூலை 4 அன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களும் தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பை ஏற்று தீவுத் திடலில் குழுமினார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இருக்கும் போது இவர்களின் ஆளுயர சுவ ரொட்டிகள் இவர்களுக்கு ஒரு பயனையும் அளிக்கப் போவதில்லை.

இவர்களின் சுவரொட்டிக்குப் பின்னர் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என்பதை மக்கள் விசாரிக்கும் போது 19 கூட்டமும் பொய்யர்கள் என்பது இன்னும் உறுதியாகும். இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பால் மக்கள் கவனம் திரும்பும். இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு இயக்கத்துக்கு எதிராக ஏன் புளுகுகிறார்கள் என்ற விழிப்புணர்வு தான் இதனால் ஏற்படும். இன்ஷா அல்லாஹ் இது தான் சுவரொட்டியால் கிடைக்கும் நன்மையாக இருக்கும்.

இப்போது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் அனைவரும் ஏற்கனவே இவர்களின் கூட்டத்தில் இருந்தவர்கள் தான். இவர்களின் தில்லுமுல்லுகளையும், திருகுதாளங்களையும், புளுகு மூட்டைகளையும் கண்டு தான் அங்கிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தனர் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை.

தவ்ஹீத்வாதிகளைப் பொறுத்த வரை இது போன்ற மிரட்டல்களால் அவர்களின் ஈமான் இன்னும் அதிகரிக்குமே தவிர சோர்வோ தளர்வோ அவர்களுக்கு ஏற்படாது. அவர்களுக்குப் பின்வரும் வசனங்கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம் பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.

எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

தனது நேசர்களை ஷைத்தான் தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!.

(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. 

நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

"(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது'' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.

நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

(திருக்குர் ஆன் 3 : 173 - 179)

அல்லாஹ் போதுமானவன் என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்ட தவ்ஹீத்வாதிகளை இதுபோன்ற மிரட்டல்கள் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்குச் சொல்கிறது.

மறுமையில் யாருக்கு நற்பேறு இல்லை என்று அல்லாஹ் முடிவு செய்து விட்டானோ அத்தகையவர்கள் தான் இது போல் சத்தியத்துக்கு எதிராக அணி திரள்பவர்கள் என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுகிறான்.

மேலும் நாங்களும் தவ்ஹீத் தான் என்று வேஷம் போட்டு கலந்திருந்தவர்களை பிரித்துக் காட்டாமல் அல்லாஹ் விட மாட்டான் என்ற வாக்குறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இவர்கள் என்ன தான் நடித்தாலும் இவர்கள் தவ்ஹீதின் எதிரிகள் தான் என்பதை அல்லாஹ் அடையாளம் காட்டுவதற்காக இவர்களைத் தள்ள வேண்டிய இடத்தில் தள்ளி விட் டான்.

கப்ரு வணங்கிகளையும் அதை எதிர்ப்பதாக நாடகமாடியவர்களையும். மத்ஹபுவாதிகளையும் மத்ஹபை எதிர்ப்பதாக நாடகமாடியவர்களையும் அல்லாஹ் ஓரணியில் திரட்டி அடையாளம் காட்டி விட்டான்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இவர்கள் ஒன்றுபட்டிருப்பது போல் தோன்றினாலும், இவர்கள் ஒன்றுபட்டு பலம் பெற்றிருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இவர்களிடையே எந்த ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

இதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) நயவஞ்சகரை நீர் அறியவில்லையா? "நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுடன் நாங்களும் வெளியேறுவோம். உங்கள் விஷயத்தில் எவருக்கும் எப்போதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவுவோம்'' என்று வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரிடம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.  அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேறவே மாட்டார்கள். அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் அவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.  அவர்களது உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலிருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர்கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.  அவர்களுக்குச் சற்று முன் சென்ற சமுதாயத்தினர் போன்றே (அவர்கள் உள்ளனர்) அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

(திருக்குர் ஆன் 59:11-15)

பார்வைக்குத் தான் இவர்கள் ஒன்று பட்டது போல் காட்டிக் கொள்வார்கள். உண்மையில் இவர்களின் உள்ளம் சிதறிக் கிடக்கிறது.

ஒரு தேர்தல் வந்தால் போதும். இவர்களின் ஒற்றுமை மாயை கலைந்து போய் விடும். ஆளுக்கு ஒரு கட்சியுடன் பேரம் பேசிக் கொண்டு தனித் தனியாக சிதறிப் போய் விடுவார்கள்.

ஒரு டிசம்பர் ஆறு வந்தால் போதும் தங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவதற்காக தனித்தனி வழியில் பலம் காட்ட போய் விடுவார்கள்.

நம்மை எதிர்ப்பதில் தவிர வேறு எந்த ஒரு காரியத்திலும் இவர்கள் ஒத்த கருத்தை எட்ட முடியாது. மேலும் இவர்கள் அனைவரும் சேர்ந்து விட்டதால் ஏதோ பலம் பெற்று விட்டது போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் கோழைகள். சொந்த பலத்தில் எதையும் சாதிக்கத் திராணியற்றவர்கள். தங்களுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தால் தவிர எதிலும் இறங்கத் திராணியற்றவர்கள் என்பதையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்கின்றன.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)

12.10.2010. 12:45




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
102 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி