வசூலிப்பவருக்கு கமிஷன் கொடுக்கலாமா
வசூலிப்பவருக்கு கமிஷன் கொடுக்கலாமா
சந்தா வசூலிக்க கமிஷன் அடிப்படையில் ஆள் நியமித்துக் கொள்ளலாமா ?
- இப்ராகிம், பல்லாவரம்
மாநில நிர்வாகம் சார்பில் நிதி திரட்டுவதற்காக பிரதிநிதிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் இவர்களுக்கு மாத ஊதியமோ கமிஷனோ கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. கமிஷன் கொடுக்காமல் தலைமை நேரடியாக நிதி திரட்டினால் அதிகமான தொகை தலைமைக்கு கிடைக்கும் அல்லவா? தலைமையில் சம்பளம் வாங்குவோர் நிதி திரட்டினால் அவர்களுக்குக் கமிஷன் வழங்கலாமா?
- ஷி. முஹம்மது யூசுஃப், அத்திக்கடை
நிதி வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் கொடுப்பதால் தலைமைக்கு நஷ்டம் என்ற நல்ல நோக்கத்தில் நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது சரியாகத் தோன்றினாலும் நடைமுறையில் அவ்வாறு இல்லை.
இதற்காகக் கமிஷன் கொடுத்து பிரதிநிதிகளை நாம் நியமிக்காத போது நூறு ரூபாய் வசூலாகிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்காக கமிஷன் கொடுத்து வசூலிக்கும் போது ஆயிரம் ரூபாய் வசூலாகும் என்பது தான் நடைமுறை உண்மை. ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் அல்லது இரு நூறு ரூபாய் கமிஷன் கொடுத்தாலும் ஜமாஅத்துக்கு 800 அல்லது 900 ரூபாய் கிடைத்து விடும்.
கமிஷன் கொடுப்பதால் வருவாய் அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் இதுதான் ஜமாஅத்துக்கு அதிக நன்மை பயப்பதாகும்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நம் ஜமாஅத் நிதியாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதன் மூலமே தொடர்ந்து செயல்பட முடியும். இதற்குக் கமிஷன் அடிப்படையில் பிரதிநிதிகளை நியமிப்பது ஒன்றே சரியான வழி என்ற அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஜகாத் எனும் கடமையை அல்லாஹ் நமக்கு விதியாக்கியுள்ளான். அதற்காகத் திரட்டப்படும் தொகையை எட்டுப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த எட்டுப் பிரிவினரில் ஜகாத்தை வசூலிப்பவர்களை ஒரு பிரிவினராக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
ஜகாத்தை யார் வசூலிக்கிறார்களோ அவர்கள் சேவை அடிப்படையில் தான் வசூலிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர்களுக்கு அதில் இருந்து வழங்கலாம் என்று அல்லாஹ் அனுமதித்ததன் அடிப்படையில் தான் நாமும் கமிஷன் அளிக்க முடிவு செய்தோம்.
அடுத்து தலைமையில் சம்பளம் வாங்குவோருக்கு கமிஷன் வழங்கலாமா என்ற கேள்வியும் மேலோட்டமானதாக உள்ளது. எந்தப் பணிக்காக சம்பளம் கொடுக்கப்படுகிறதோ அந்தப் பணி அல்லாத பணியைக் கூடுதலாக செய்தால் அவர்களின் உழைப்பை உறிஞ்சுவது எப்படி ஹலாலாகும்?
ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர் ஓவர் டைம் பார்த்தால் கூட அதற்காக தனி ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். சம்பளம் வாங்குபவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியில் குறை வைக்காமல் மேலதிகமாக வேறு பணிகளைச் செய்தால் அதற்கான ஊதியத்தை நாம் எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? யாருடைய உழைப்பையும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது.
16.12.2011. 09:16
