பணம்கொடுத்து ஆள்பிடிப்பது ஏன்?
பணம்கொடுத்து ஆள்பிடிப்பது ஏன்?
நமது ஜமாஅத்தில் உள்ளவர்கள் பிறருக்கு உதவி செய்வதைப் பார்த்து உங்கள் ஜமாஅத்தில் ஆள்சேர்க்க பணம் கொடுக்கிறீர்களா என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
- ஹபிபுர் ரகுமான்
மங்கலம்பேட்டை, கடலூர் மாவட்டம்
? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது மற்ற இயக்கங்களைப் போல் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளும் இயக்கம் அல்ல. திருக்குர்ஆனையும் குர்ஆனுக்கு முரணில்லாத ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் ஆதாரமாக ஏற்பவர்கள் மட்டும் தான் இதில் உறுப்பினராக முடியும். உறுப்பினராக இருப்பவர்கள் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் தாட்சண்யம் இல்லாமல் நீக்கப்படுவார்கள்.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் உதவிபெறும் மக்களில் அதிகமானோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவே நம்மிடம் உதவி பெற்றவர்கள் கொள்கையை ஏற்காமல் உறுப்பினராகச் சேர வந்தாலும் அவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இதைப் புரிந்து கொள்ளும் அறிவுடைய யாரும் இப்படி கேள்வி கேட்க மாட்டார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இப்போது, "தானே" புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினோம். அதில் முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாத மக்களும் உதவி பெற்றனர். அந்த முஸ்லிமல்லாத மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராகச் சேர மாட்டார்கள். சேர்க்கப்படவும் மாட்டார்கள்.
பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் கடமை நம் மீது சுமத்தப்பட்டுள்ளது. நம்மை நம்பி நன்மக்கள் பொருளாதாரத்தை வழங்குவதால் அல்லாஹ்வுக்கு அஞ்சி அதை அப்படியே வினியோகம் செய்கிறோம். வேறு எந்த எதிர்பார்ப்பும் இதில் இல்லை.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அறப்பணிகள் அனைத்தும் கீழ்க்காணும் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் காரணமாகவே செய்யப்படுகின்றன.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை."எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்
- திருக்குர் ஆன் 76:8-11
உணர்வு 16:24
21.02.2012. 12:32
