பித்ராவில் TNTJ முன்ன்னியில் இருப்பது
பித்ராவில் TNTJ முன்ன்னியில் இருப்பது ஏன்
கடந்த நோன்புப் பெருநாளைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வினியோகிக்கப்பட்ட பித்ரா நிதி அரை கோடிக்கும் மேல் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகம் என்று உங்கள் வெப்சைட்டில் வெளியிடுகிறீர்கள். தமிழகத்தில் எவ்வளவோ இஸ்லாமிய அமைப்புகள் இருந்தாலும் பித்ரா, ஜகாத் நிதிகளைத் திரட்டுவதில் உங்கள் ஜமாஅத் மட்டும் முன்னணியில் இருக்க என்ன காரணம்?
- அபூ அப்பாஸ், புளியங்குடி
திரட்டப்படும் நிதியின் அளவை வைத்து மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் எடை போட முடியாது. எனெனில் ஒரு மாநாட்டுக்காக ஒரு இயக்கம் ஒரு கோடி ரூபாய் திரட்டினால் இரண்டு செல்வந்தர்கள் தலா ஐம்பது லட்சம் கொடுத்தால் கூட ஒரு கோடி திரண்டுவிடும்.
எனவே இதை வைத்து ஒரு இயக்கம் எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று அளவிட முடியாது.
ஆனால் பித்ரா அப்படி இல்லை. கோடீஸ்வரருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் ஒரே அளவு தான். பித்ரா என்பது ஒவ்வொரு நபருக்கும் என்பது அல்லது நூறு ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது. செல்வந்தரும் நடுத்தர வர்க்கத்தினரும் அனைவரும் அந்த நிர்ணயிக்கப்பட்ட தொகையைத் தான் கொடுப்பார்கள். இதை முதலில் உங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து சுமார் அறுபது லட்சம் ரூபாய் தவ்ஹீத் ஜமாஅத் மூலம் பித்ரா கொடுக்கப்பட்டதாக நீங்கள் குறிப்பிட்டது தவறாகும் என்பதை இரண்டாவதாக சுட்டிக் காட்டுகிறோம்.
இந்த வருடம் உத்தேசமாக சுமார் 60 லட்சம் ரூபாய் பித்ரா வழங்கப்பட்டது என்று நாம் குறிப்பிடுவதை அது தான் மொத்தத் தொகை என்று புரிந்து கொண்டு கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
ஆனால் அந்தத் தொகை மாநிலத் தலைமைக்கு மக்கள் அனுப்பி மாநிலத் தலைமையால் கிளைகளுக்குப் பிரித்து கொடுக்கப்பட்ட தொகை மட்டுமே. தலைமை மூலம் கொடுக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு தொகையை ஒவ்வொரு கிளையும் திரட்டி அதையும் சேர்த்து வினியோகம் செய்துள்ளனர். தலைமை மூலம் திரட்டப்பட்ட பித்ரா தொகையை விட கிளைகள் சொந்த ஊரில் திரட்டிய தொகை 5 மடங்கு அதிகம்.
நாம் பத்தாயிரம் ரூபாய் ஒரு கிளைக்கு கொடுத்தால் அவர்கள் முப்பது அல்லது நாற்பது அல்லது ஐம்பது ஆயிரம் அளவுக்குத் திரட்டியுள்ளனர். இதன்படி பார்த்தால் உத்தேசமாக மூன்று கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பித்ரா வழங்கப்பட்டுள்ளது.
உத்தேசமாக மூன்று கோடி ரூபாய் பித்ராவாகத் திரட்டப்பட்டால் தலைக்கு நூறு ரூபாய் என்று கணக்கிட்டால் மூன்று லட்சம் நபர்களிடமிருந்து திரட்டப்பட்டதாகும். தலைக்கு எண்பது என்று கணக்கிட்டால் சுமார் நான்கு லட்சம் மக்கள் வழங்கிய தொகையாகும். நடுத்தரவசதி படைத்தவர்கள் மற்றும் செல்வந்தர்கள் மட்டத்தில் மூன்று லட்சம் அல்லது நான்கு லட்சம் மக்கள் இந்த ஜமாஅத்தை நம்புகிறார்கள் என்பது பொருள்.
செல்வந்தர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் நம் சமுதாயத்தில் சில லட்சங்கள் தான் இருப்பார்கள். அவர்களில் பித்ராவின் முக்கியத்துவத்தை விளங்கியவர்கள் சில லட்சங்கள் தான் இருப்பார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
அப்படியானால் இந்த ஜமாஅத்தை அந்த அளவுக்கு மக்கள் நம்புகின்றனர் என்பது உறுதி. ஏழை மக்களிலும் இதே சதவிகிதம் தான் இருக்கும் என்பதை அறிவு படைத்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இந்த அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் இந்த ஜமாஅத்தை நம்புவதற்குக் காரணம் அல்லாஹ்வின் அருள்தான். அவன்தான் இந்த ஜமாஅத் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம்மை வழி நடத்துகிறான். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
மற்ற இயக்கத்தினர் திரட்டிய பித்ரா பற்றிய விபரத்தை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடுவது போல் வெளியிட்டால் அப்போது தவ்ஹீத் ஜமாஅத் மக்களின் நம்பிக்கையை எந்த அளவுக்கு பெற்றுள்ளது என்பது இன்னும் தெளிவாகும்.
உணர்வு 16:11
16.12.2011. 09:35
