செத்துப்போன வாதங்கள்
செத்துப்போன வாதங்கள்
போலிகள் ஜாக்கிரதை
ஆதாரமில்லாமல் மகான்கள் என்று நம்பப்படும் மையித்துகளிடம் பிரார்த்தணை செய்யக் கூடாது என்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் அருளால் மக்கள் இன்று விழிப்படைந்து விட்டனர். மக்கள் தெளிவாக இருந்தாலும் மார்க்க அறிஞர்கள் போர்வையில் நடமாடுவோர் மூடத்தனமான வாதங்களை எடுத்து வைத்து செத்தவர்களைக் கடவுளாக்க முயற்சித்து வருகின்றனர். அ889 களில் செத்தவர்களை பிரார்த்திப்பதை நியாயப்படுத்தி கப்ரு வணங்கிகள் கூட்டம் ஒரு நூல் வெளியிட்டது. ஹமீது அப்துல் காதிர் என்ற ஞான சூனியம் எழுதி இலவசமாக வெளியிட்ட கலிகால இமாம்கள் என்ற அந்த நூலில் எடுத்து வைத்த கோமாளித்தனமான உளறல்களுக்கு பீஜே ஆசிரியராக இருந்த போது அல்ஜன்னத் 1993 மார்ச் இதழில் மறுப்புத் தொடர் எழுதப்பட்டது. அதில் ஒரு தொடர் இப்போது வெளியிடப்படுகிறது - தேவையான திருத்தங்களுடன்
கப்ரு வணங்கிகளின் வாதம்
கலிகால இமாம்கள் நபிகள் நாயகம் (ஸல்) கபுருகளில் போய் தங்கள் தேவைகளைக் கேட்கவில்லை என்று எதற்கெடுத்தாலும் எம்பெருமானார் (ஸல்) அவர்களையே சாடுகிறார்கள். நான் சொல்கிறேன். எம் பெருமான் (ஸல்) அவர்களின் முன்மாதிரியில் இலட்சத்தில் ஒன்றைக் கூட சாதிப்பதற்கு நமக்கு அறிவும் இல்லை. திராணியும் இல்லையே.
(உதாரணம்)
நாம் 25 வாட்ஸ் பவர் உள்ள ஒரு மின்சார பல்பு
வலிமார்கள் 40 வாட்ஸ் பல்பு
இமாம்கள் 100 வாட்ஸ் பல்பு
எம்பெருமானார் 1000 வாட்ஸ் பல்பு .
1000 வாட்ஸ் பல்பு மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்குமிடத்தில் 25 வாட்ஸ் பல்பை இணைத்தால் அது தீய்ந்து போய்விடும் என்பதைக் கவனித்து நமது புத்திக்குத் தக்கபடி தான் செயல்கள் இருக்க வேண்டும்.
இங்கு உங்களுக்கு நான் ஒரு நிகழ்ச்சியைக் கூற ஆசைப்படுகிறேன். ஒரு நாள் ஹாங்காங் ஜாமியா பள்ளியின் இமாம் அவர்களிடம் போய் ( அவர்கள் மிகவும் ஞானமுள்ளவர்கள்) நான் கேட்டேன். எம்பெருமான் (ஸல்) அவர்கள் தங்களது 63 வயதில் வபாத்தானார்கள். அவர்களின் அனுபவத்தை நமது வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எத்தனை வயதுடையவர்கள் ( அந்த இமாம் அவர்களுக்கு 60 வயது இருக்கலாம்) எனக் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் . நாம் ஒன்று அல்லது ஒன்றரை வயது குழந்தைகளுக்குச் சமமானவர்கள் என்றார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். ஒன்றரை வயது குழந்தை பசி எடுத்தால் பால் யாரிடம் கேட்கிறது என்றேன். குழந்தை தாயிடம் கேட்கும் என்றார்கள். அப்படி குழந்தை தாயிடம் கேட்பதும் சாதாரணமாக நமக்குப் பசி எடுத்தால் தாயாரிடமோ அல்லது மனைவியிடமோ பசிக்கிறது உணவு தாருங்கள் என்றால் அது ஷிர்கா? கலிகால இமாம்களின் கூற்றுப்படி எதுகேட்டாலும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். மற்றவர்களிடம் கேட்பது ஷிர்காக ஆகிறதே என்று சொன்னேன் அதற்கு அவர்கள் கலிகால இமாம்கள் சரியான ஞானமில்லாதவர்கள் என்றார்கள் (பக்கம் 7, 8,9)
நமது பதில்
சமாதியாகிவிட்டடவர்களிடம் பிரார்த்தனை செய்வது தவறில்லை என்பதற்கு ஹமீது அப்துல் காதிர் எடுத்து வைக்கும் ஆதாரம் இது தான்.
நபி (ஸல்) அவர்கள் கபுருகளில் எதையும் கேட்டதில்லை என்றாலும் நபியவர்களை நாம் பின்பற்ற முடியாது. அவர்கள் 1000 வாட்ஸ் பல்பு என்றும் நாம் 25 வாட்ஸ் பல்பு தான்.
ஒரு வயதுக் குழந்தை தாயிடம் பால் கேட்பது ஷிர்க் அல்ல. அது போல் நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாமும் ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள் என்பதால் சமாதிகளில் போய் வேண்டுவது ஷிர்க் அல்ல.
இது தான் அவர் கூறுவதன் சாராம்சம். ஒரு குர்ஆன் வசனத்தையோ ஒரே ஒரு ஹதீஸையோ தனது செயலுக்கு ஆதாரமகாகக் காட்ட முடியாமல் உதாரணம் என்று உளறிக் கொட்டுகிறார். இவரது வாதத்தில் உள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் சமாதிகளில் போய் எதையும் கேட்டது கிடையாது என்று இவர் ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் நபியவர்களின் நிலை வேறு நம் நிலை வேறு. அவர்களை நம்மால் பின்பற்ற முடியாது என்பதால் தான் சமாதியை வணங்கலாம் என்கிறார்.
இவர் கூறுவதை உண்மையாகவே இவர் நம்பினால் இஅவரிடம் நாம் கீழ்க்காணும் வினாக்களை எழுப்புகிறோம்.
1.நம்மால் பின்பற்ற முடியாத ஒருவரை இறைவன் ஏன் வழிகாட்டியாக அனுப்ப வேண்டும்?
2.அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகான முன்மாதிரி இருக்கிறது (33:21) என்று இறைவன் கூறுவதற்கு அர்த்தம் என்ன?
3.இந்தத் தூதர் உங்களிடம் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் (59:7) என்று இறைவன் கூறுவது ஏன்?
4.நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் (3:31) என்று நபியவர்களைக் கூறச் சொல்வது ஏன்?
5.ஐங்காலத் தொழுகை, சுன்னத்தான தொழுகைகள், நோன்பு , ஸகாத் மற்றும் ஏராளமான நல்லறங்களை நபியவர்கள் செய்துள்ளனர். அவர்களைப் போல் நாம் செய்ய முடியாது என்று கூறும் ஹமீது அப்துல் காதிர் இந்தக் கடமைகளை எல்லாம் செய்யத் தேவையில்லை என்கிறாரா? செய்ய வேண்டும் என்று அவர் கூறினால் 100 வாட்ஸ் பல்பு போல் 25 வாட்ஸ் பல்பு போல் ஆகிவிடுகின்றதே. இதற்கு என்ன சொல்லப் போகிறார்.
6.வட்டி, மதுபானம், திருட்டு, கொலை, கொள்ளை, புறங்கூறல், பொய் பேசுதல், மோசடி, ஏமாற்றுதல், விபச்சாரம், போன்ற அனைத்துத் தீமைகளிலிருந்தும் நபியவர்கள் விலகியிருந்தார்கள்.அவர்கள் மட்டும் தான் அவ்வாறு விலகிக் கொள்ள முடியுமே தவிர 25 வாட்ஸ் பல்புகளால் விலகிக் கொள்ள முடியாது என்று கூறப் போகிறாரா? மேற்கண்ட தீமைகளை 25 வாட்ஸ் பல்புகள் செய்வதில் தவறில்லை என்று போதனை செய்யப் போகிறாரா?
7.ஏகத்துவக் கொள்கை 1000 வாட்ஸ் பல்புகளுக்கு மட்டுமே உரியவை, 25 வாட்ஸ் பல்புகளுக்கு உரியவை அல்ல என்றால் 25 வாட்ஸ் பல்பை விடவும் குறைவான மக்கத்துக் காபிர்கள் இறைவனல்லாதவர்களை வேண்டியது எப்படித் தவறாகும்? 25 வாட்ஸ் பல்புகளே இறைவனல்லாதவர்களிடம் வேண்டலாம் என்றால் 0 வாட்ஸ் பல்புகள் இறைவனல்லாதவர்களை வேண்டுவது எந்த வகையில் தவறானது?
8.யூதர்களும், கிறத்தவர்களும் நபிமார்களிடம் வேண்டுவதும் இந்துக்கள் பற்பல தெய்வங்களிடம் வேண்டுவதும் கூட இவரது வாதப்படி தவறானதல்லவே? விளக்குவாரா ஹமீது அப்துல் காதிர்?
9.நபியவர்களுடன் ஒப்பிடும் போது நாம் ஒரு வயது குழந்தை போன்றவர்கள் என்றால் இந்த நிலையில் உள்ளவர்களைத் தண்டிப்பது அக்கிரமம் அல்லவா? அத்தகையவர்களின் தவறுகளுக்காக இறைவன் நரகத்தை ஏன் சித்தப்படுத்தி வைக்க வேண்டும்?
10.நாமாவது ஒரு வயதுக் குழந்தை போன்றவர்கள். காபிர்கள் ஒரு நாள் குழந்தையை விடவும் குறைவானவர்கள் தானே. அவர்களுக்கு நிரந்தர நரகத்தைச் சித்தப்படுத்தியிருப்பது ஏன்? இது அநியாயம் அல்லவா? ஒரு வேளை நரகம் என்று ஒன்று கிடையாது என்று கூறப் போகிறாரா?
இப்படி ஏராளமான கேள்விகள்!
ஹமீது அப்துல் காதிர் கம்பெனியாரிடம் இவற்றுக்கெல்லாம் எந்த பதிலும் கிடையாது. இது ஒருபுறமிருக்கட்டும்.
கபுரு ஜயாரத்துக்குச் செல்பவர்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்பதில்லை என்று இவர் கூறியதைச் சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்கவில்லை என்று மறுத்து விட்டு அடுத்த பக்கத்தில் அவ்லியாக்களிடம் கேட்பதை ஒப்புக் கொண்டு அதை நியாயப்படுத்துகிறார்.
இவர்களுக்கென்று தெளிவான எந்தக் கொள்கையும் கிடையாது. எதையாவது உளறி தங்கள் தவறை நியாயப்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பதற்கு இந்த முரண்பாடு சான்றாக உள்ளது.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடுவது ஷிர்க் என்றால் தாயாரிடமும் மனைவியிடமும் உணவு கேட்பதும் ஷிர்காக ஆகுமே என்ற அவரது வாதமும் ஏற்கத்தக்கதல்ல.
அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் உதவி தேடக்கூடாது என்று நாம் கூறுவதன் பொருள் கடவுள் நிலையில் வைத்து எவரிடமும் உதவி தேடக்கூடாது என்பது தான். அவ்வாறின்றி சாதாரண நிலையில் வைத்து உதவி தேடுவதை நாம் கூடாது என்று கூறவில்லை.
நபி ஸல் அவர்களே எத்தனையோ சந்தர்ப்பங்களில் தம் மனைவியிடமும் , தோழர்களிடமும், எதிரிகளிடமும் உதவி தேடியுள்ளனர். நல்ல காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள் (5:2) என்று அல்லாஹ் கூறுகிறான். நாங்களும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பலரிடமும் உதவி தேடுகிறோம் . இறைத் தன்மையை மற்றவர்களுக்கு வழங்கி உதவி தேடும் வகையில் இவை அமையவில்லை. அதனால் இத்தகைய உதவி தேடுதலை நாம் ஷிர்க் என்று கூற மாட்டோம்.
ஆனால் ஹமீது அப்துல் காதிர் நியாயப்படுத்தும் உதவி தேடுதல். இறந்தவர்களுக்கு இறைத் தன்மை வழங்குகின்றது. அதனால் தான் இதை மட்டும் நாம ஆட்சேபணை செய்கிறோம். இதை நாம் விரிவாக முன்பு ஒரு முறை விளக்கியிருந்தாலும் ஹமீது அப்துல் காதிருக்காக மீண்டும் விளக்குவோம்.
தாயாரிடம் , மனைவியிடம், நண்பர்களிடம், ஆட்சியாளரிடம், வேலைக்காரர்களிடம், முதலாளிகளிடம் நாம் உதவி தேடும் போது சில ஒழுங்குகளைச் சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.
அ. மேற்கண்டவர்களிடம் உதவி தேடும் போது எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களை ஹமீது அப்துல் காதிர் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியைப் பார்க்காமல், அவரது குரலைச் செவியுறாமல் அழைக்கிறார். அப்துல் காதிர் ஜீலானியின் கேட்கும் திறனுக்கு எந்த வரம்பும் கிடையாது என்று நம்புவதாலேயே இவ்வாறு அவர் கேட்கிறார். இந்த விஷயத்தில் இறைவன் எப்படி நமது கோரிக்கையைச் செவியுறுகிறானோ அப்படிச் செவியுறும் தகுதி அப்துல் காதிர் ஜீலானிக்கு உண்டு என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? மனித நிலையில் நிறுத்தி கேட்கப்படும் உதவியும், கடவுள் நிலைக்கு உயர்த்தி தேடப்படும் உதவியும் எப்படி சமமாக முடியும்?
ஆ.மேற்கண்டவர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்களுக்கு என்ன மொழி தெரியுமோ அந்த மொழியில் அவர்களிடம் கேட்கிறோம். அவர்களுக்குத் தெரியாத மொழியில் கேட்பது கிடையாது.
அரபு மொழி மட்டுமே அறிந்திருந்த அப்துல் காதிர் ஜீலானியிடம் அவர் அறிந்திராத தமிழ் மொழியில் ஹமீது அப்துல் காதிர் ஏன் கேட்கிறார்? கேரளத்துக்காரர்கள் மலையாளத்தில் ஏன் கேட்கின்றனர்? இன்றும் பல மொழி பேசுவோர் தத்தமது மொழிகளில் கேட்பது ஏன்? இறைவனுக்கு மொழிகள் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை என்பது போல் அப்துல் காதிர் ஜீலானிக்கும் மொழி ஒரு பிரச்சனை கிடையாது என்று அவர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை தான் இதன் காரணம். இது அவருக்குக் கடவுள் தன்மை வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்கவில்லையா?
இ.சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது ஒரு நேரத்தில் பல்லாயிரம் பேர் ஒருவரிடம் உதவி தேடுவது கிடையாது. ஏன் ஒரு நேரத்தில் ஒருவரிடம் இரண்டு நபர்கள் கூட உதவி தேடுவது கிடையாது. ஒரு நேரத்தில் ஒருவரது பேச்சைத் தான் அவருக்குக் கேட்க முடியும். அந்த அளவு பலவீனமான மனிதர் என்று நாம் அவரைப் பற்றி நம்புவதே இதன் காரணம்.
அப்துல் காதிர் ஜீலானியிடம் ஹமீது அப்துல் காதிர் உதவி கோரும் அதே நேரத்தில் எத்தனையோ ஆயிரம் பேர் அவரிடம் உதவி தேடுகிறார்கள்.அத்தனை பேருடைய அழைப்பையும் ஒரு சமயத்தில் அவரால் செவியுற முடியும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம்
இரண்டையும் சமமாக எப்படிக் கருதுகிறார் ஹமீது அப்துல் காதிர்?
ஈ) சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது அவர்கள் தான் உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது நமக்குத் தெரியும் வகையில் அவர்கள் செய்யும் உதவிகள் அமைந்துள்ளன.
அப்துல் காதிர் ஜீலானியிடம் தேடும் உதவிகளில் அவர்கள் எப்படி உதவுகிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. நமக்குத் தெரியாத வகையில் நாம் அறியாத விதத்தில் உதவி செய்வது என்பது இறைவனுக்கு மாத்திரமே உரியது. மற்றவர்கள் செய்யும் உதவிகள் அதற்கென்று உள்ள வழிகளில் தான் மற்றவர்களுக்கு கிடைக்கும்.
இந்த வகையிலும் இரண்டு உதவி தேடுதல்களும் வித்தியாசப்படுகின்றன.
உ) சாதாரண மனிதர்களிடம் உதவி தேடும் போது எதை வேண்டுமானாலும் நாம் கேட்பது இல்லை. அவரிடம் என்ன கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிகின்றதோ அதைத் தான் கேட்போம். அவரது சக்திக்கு உட்பட்டதைத் தான் கேட்போம்.
ஆனால் இறந்தவரிடம் உதவி தேடுவோர் எதை வேண்டுமானாலும் வேண்டுகின்றனர். அவரது சக்திக்கு உட்படாதது ஒன்றுமே இல்லை என்ற நம்பிக்கையில் கேட்கப்படுகிறது. அதாவது அனைத்தையும் எப்படி அல்லாஹ்விடம் கேட்போமோ அது போல் இறந்தவரிடம் கேட்கப்படுகிறது. இரண்டும் எப்படி சமமாக முடியும்?
ஊ) சாதாரண மனிதர்களிடம் நாம் உதவி தேடும் போது நாம் அவரிடம் உதவி தேடுவது போல் அவரும் மற்றவர்களிடம் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்று நம்புகிறோம். ஒரு விஷயத்தில் அவர் உதவி செய்தால் பல விஷயத்தில் அவர் உதவி தேடும் நிலையில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் அப்துல் காதிர் ஜீலானி அவ்வாறானவர் அல்ல. அவரிடம் தான் நாம் உதவி தேட வேண்டும். அவர் நம்மிடம் எந்த உதவியும் தேடத் தேவையில்லை. உதவுவதற்கென்றே அவதாரம் எடுத்தவர் என்றெல்லாம் நம்பப்படுகின்றது.
கடவுள் நிலைக்கு ஒருவரை உயர்த்தி வைத்து அவரிடம் தேடப்படும் உதவியைத் தான் நாம் ஷிர்க் என்கிறோம் இறைவனின் எந்த ஒரு அம்சத்தையும் வழங்காமல் சாதாராண மனிதர் என்ற நிலையில் ஒருவரிடம் ஒருவர் உதவி தேடுவதை நாம் ஷிர்க் என்று கூறியதில்லை.
இந்த வித்தியாசங்களை உணராமல் ஹமீது அப்துல் காதிர் மனைவியிடம் உணவு கேட்பதையும் சமாதிகளில் கேட்பதையும் சமநிலையில் நிறுத்துகிறார்.
கலிகால இமாம்கள் என்ற இந்த நூலில் உருப்படியான எந்த விஷயமும் அல்ல. இலவசமாக நாடு முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்குப் பலமான வாதமும் இல்லை. இது போன்ற வாதங்களை விடுத்து அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நடக்க ஹமீது அப்துல் காதிருக்கும் நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்.
இந்த நூல் செத்தவர்களைக் கடவுளாக்குவது மத்ஹபுகளையும் நியாயப்படுத்தி நானிலம் போற்றும் மத்ஹபுகள், நன்மை செய்வோம் நஜாத் நன்பர்களே என்ற பெயரில் இரண்டு நூல்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில் உள்ள அபத்தங்களை நாம் அடுத்த இதழில் அலசுவோம்.
21.10.2010. 09:05
