நாவு பேசும் பேசாது என்று குர்ஆன் முர
நாவு பேசும் பேசாது என்று குர்ஆன் முரண்படுவது ஏன்
திருக்குர்ஆனின் 24:24 வசனமும், 36:65 வசனமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதே?
ஜவாஹிரா, காயல்பட்டிணம்
ஒரு வசனம் மறுமையில் நாவுகள் பேசும் என்றும் இன்னொரு வசனம் வாய்களுக்கு மறுமையில் முத்திரை இடப்படும் என்றும் கூறுவதால் மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடு போல் தோன்றினாலும் சிந்திக்கும் போது இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.
மனிதனின் நடவடிக்கைகள் பற்றி பேசும் போது சொல்லும் செயலும் சரியாக இருக்க வேண்டும் என்று நாம் குறிப்பிடுகிறோம்.
நாவு அல்லாத மற்ற உறுப்புக்களின் நடவடிக்கைகள் செயல் என்றும் நாவு மூலம் நடக்கும் பேச்சு எனும் நடவடிக்கை சொல் என்று நாம் வகைப்படுத்தியுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களைப் பார்த்தால் எவ்வளவு அற்புதமாக வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன என்று நாம் அதிசயப்படும் அளவுக்கு பொருத்தமாக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன..
இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.
திருக்குர்ஆன் 36:65
இந்த வசனம் வாய்களுக்கு முத்திரை இடப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு உறுப்பும் செய்வதை உலகில் நாவு மூலம் தான் தெரிவிக்க இயலும். ஆனால் மறுமையில் உறுப்புகள் தனது செயலை தானே பேசி விடும் என்று இவ்வசனம் கூறுகிறது.
கை செய்ததை நாவு பேசாது. கை தான் பேசும். கால் செய்தது குறித்து நாவு பேசாது. கால் தான் பேசும். இப்படி ஒவ்வொரு உறுப்பும் தான் செய்தது பற்றி பேசும் என்று இவ்வசனம் கூறுகிறது.
அப்படியானால் நாவு செய்த்து பற்றி நாவு தான் பேச வேண்டும். மற்ற உறுப்புக்களின் செயல்களைப் பேசமுடியாமல் தான் நாவுக்கு முத்திரை இடப்படும். ஆனால் நாவு பேசியது குறித்து நாவு தான் சாட்சி சொல்லும் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது.
இதில் அடங்கியுள்ள செய்தி தான் 24:24 வசனத்தில் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. அந்நாளில் அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.
திருக்குர்ஆன் 24:23, 24
இங்கே அவதூறு கூறுவது குறித்து பேசப்படுகிறது. இது நாவால் நடப்பதாகும். நாவால் நிகழ்த்தப்பட்ட அவதூறை நாவு தான் பேச முடியும். எனவே தான் இந்த இட்த்தில் நாவு பேசும் எனக் கூறப்படுகிரது.
அதாவது அனைத்தையும் பேசும் சர்வாதிகாரம் படைத்திருந்த நாவின் அதிகாரம் பறிக்கப்பட்டு தான் செய்தது பற்றி மட்டும் பேசும் அளவுக்கு குறைக்கப்படும் என்பது தான் இரண்டு வசனங்களையும் இணைத்துப் பார்க்கும் போது கிடைக்கும் பொதுவான கருத்தாகும். இதில் முரண்படு ஏதுமில்லை.
11.01.2012. 13:16
