பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வே
பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?
பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா?
ரஃபீக்
பதில்
மத்ஹபைப் பின்பற்றும் போலி அறிஞர்கள் இஸ்லாமியச் சட்டங்களைப் பல வகைகளாகப் பிரித்து மக்களைக் குழப்பி வருகின்றனர்.
இவர்கள் மார்க்க விஷயங்களை ஃபர்ள் (குர்ஆனில் கூறப்பட்ட கட்டாயக் கடமைகள்) வாஜிபு (நபிவழியில் கூறப்பட்ட கட்டாயக் கடமைகள்) நஃபில் (உபரியானது) சுன்னத் (நபிவழி) முஸ்தஹப்பு (விரும்பத்தகுந்தது) சுன்னதுன் முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட நபிவழி) சுன்னதுன் கைரு முஅக்கதா (வலியுறுத்தப்படாத நபிவழி) என்று பிரிக்கின்றனர்.
மார்க்கச் சட்டங்களை இத்தனை வகைகளாகப் பிரிக்க வேண்டியதில்லை. அனைத்து மார்க்க விஷயங்களையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் ஒரு வகை. உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஸகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம் செய்ய வேண்டும். இவற்றைச் செய்யக் கடமைப்பட்டவர்கள் இவற்றைச் செய்யாவிட்டால் குற்றம் ஏற்படும். இதற்காக மறுமையில் கேள்வி கேட்கப்படும். எனவே இது மாதிரியான விஷயங்களை விட்டுவிடாமல் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
செயல்படுத்துவதற்கும் செயல்படுத்தாமல் விடுவதற்கும் அனுமதியுள்ளவை இரண்டாவது வகையாகும். கடமையான தொழுகைக்கு முன் பின் நிறைவேற்றப்படும் சுன்னத்தான தொழுகைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதுபோன்ற வணக்கங்களைக் கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. செய்தால் நன்மைகள் கிடைக்கும். செய்யாமல் விட்டால் நன்மையும் கிடைக்காது. குற்றமும் ஏற்படாது.
நபி மொழிகளில் மேலே நாம் குறிப்பிட்டுள்ள படி கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்களும் விரும்பி செய்யக்கூடிய காரியங்களும் கூறப்பட்டுள்ளன.
திருக்குர் ஆனில் வலியுறுத்தப்பட்டால் அது கடமை என்றும் நபிமொழியில் வலியுறுத்தப்பட்டால் அது சுன்னத் என்று சிலர் கூறுவது அறியாமையாகும்.
திருக்குர்ஆனில் வலியுறுத்தப்பட்ட பல விஷயங்கள் கடமையாக இல்லாமல் இருக்கின்றன. உதாரணம் ஜகாத் அல்லாத தான தர்மங்கள்.
அது போல் ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளிலும் கடமையானவை உள்ளன.
கடமை என்றோ கடமை அல்ல என்றோ ஒரு வணக்கத்தை முடிவு செய்வது மிக எளிதானது தான்.
ஒரு காரியத்தைச் செய்யுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிட்டதுடன் அக்கட்டளையை மீறினால் கடும் தண்டனையும் கிடைக்கும் என்று சொல்லி இருந்தால் அவை கட்டாயக் கடமை என்று புரிந்து கொள்ளலாம். கடமையை விட்டால் தான் அல்லாஹ் தண்டிப்பான். கடமையாக்காத ஒன்றைச் செய்தால் அல்லாஹ் தண்டிக்க மாட்டான்.
ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளை இட்டு அதைச் எய்தால் பெரிய பரிசுகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டால் அல்லது பரிசோ தண்டனையோ குறிப்பிடாமல் ஆர்வமூட்டப்பட்டால் அதை சுன்னத் அதாவது கடமையாக்கப்படாத நபிவழி என்று முடிவு செய்யலாம்.
முஸ்தஹப், மக்ரூஹ், சுன்னத் முஅக்கதா என்று வகைப்படுத்த தக்க காரணமோ, ஆதாரமோ இல்லை.
13.01.2012. 10:52
