பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மற
பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா
என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன?
பதில்
தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மண முடித்துக் கொடுக்க வேண்டாம்'' என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள், "அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்) என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (5136)
கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.
அறிவிப்பவர் : கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)
நூல் : புகாரி (5138)
நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டார் கூறுகின்ற மாப்பிள்ளையைத் தேர்வு செய்வதற்கும் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு.
உங்கள் பெற்றோர்கள் நிர்பந்தப்படுத்தினால் இத்திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என அவரிடம் நீங்கள் நேரடியாகவே கூறலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள ஜமாஅத்தார்களிடம் முறையிடலாம்.
16.05.2011. 14:09
