ஏகத்துவம் மே 2012
ஏகத்துவம் மே 2012
தலையங்கம்
கொலை செய்யப்படும் பெண் குழந்தைகள்
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான்.அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 16:58, 59
அன்றைய அறியாமைக் காலத்தின் அவல நிலையை இந்த வசனங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைக்கின்ற கோர, கொடூரச் செயல் அன்றைய அரபிகளிடம் குடிகொண்டிருந்தது. இஸ்லாம் அதைத் தகர்த்தெறிந்து, பெண்களுக்கு வாழ்வுரிமை மட்டுமல்ல, வாரிசுரிமையையும் சேர்த்து வழங்கி பெண்ணினத்திற்கு மரியாதையையும் மகிமையையும் சேர்த்தது.
ஆனால் இந்தியாவில் இன்றும் இந்தக் கொடுமை தொடர்கின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களிடம் இந்த அவல நிலை தொடர்வது வேதனையும் வெட்கக்கேடும் ஆகும்.
கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஊடகங்களில் ஒரு சோக செய்தி முதன்மை இடத்தைப் பிடித்தது. அது தலைப்புச் செய்தியுமானது.
அஃப்ரீன் என்ற மூன்று மாதப் பெண் குழந்தையை உமர் பாரூக் என்ற கொடியவன் சித்ரவதை செய்து கொன்ற செய்தி தான் அந்த சோகச் செய்தி!
உமர் பாரூக் என்பவன் வேறு யாருமல்ல. அந்தக் குழந்தையைப் பெற்ற தந்தை தான்.
குழந்தைக்கு அதிகாரப்பூர்வமாக உயிர் பிரிந்தது ஏப்ரல் 12ஆம் தேதி தான். ஆனால் அது பிறந்த நாளிலிருந்து இந்தப் பாவியின் கையால் அன்றாடம் அணு அணுவாகச் செத்தது. அவ்வப்போது உயிர் பிரிந்து, பிரிந்து திரும்ப வந்தது.
குழந்தையின் தொடை, பித்தட்டுப் பகுதிகளை இந்தக் கோர மனம் படைத்த மிருகம் கடித்துக் குதறியிருக்கின்றான். குழந்தையின் இளந்தளிர் மேனியில் பதிவான கோரப் பற்களின் காயத் தழும்புகள் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்தின.
இவன் கைகளில் குழந்தை மட்டுமல்ல, தாயும் சேர்ந்து தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றாள்.
குழந்தையின் தாயும் உமர் பாரூக்கின் மனைவியுமான ரேஷ்மா பானு இதைத் தெரிவிக்கின்றார்.
குழந்தையின் தலைப்பகுதி கடுமையாகத் தாக்கப்பட்டதால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்ததை ஸ்கேன் தெளிவுபடுத்தியது. கண்களின் பார்வைப் பகுதிகளும் அதிகமான பாதிப்புக்குள்ளாகியிருந்தன.
வெண்டிலேட்டர் துணையுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து வைத்தியம் பார்த்தும் சிகிச்சை பலன் இல்லாமல், சிறகடித்துப் பறக்க வேண்டிய அந்தக் குழந்தையின் உயிர் சித்ரவதை தாங்காமல் சிறகடித்துப் பறந்தது.
அதுவரையில் முப்பதாயிரம் வரை செலவழித்து குழந்தை கையில் திரும்ப வராதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த தாய்க்கு இறுதியில் ஏமாற்றமே காத்திருந்தது. குழந்தையின் இன்னுயிர் நிரந்தரமாகப் பிரிந்து போனது.
குழந்தையின் சாவுக்குக் காரணமான அந்தக் கொடியவனை, தனது கணவனைத் தூக்கிலிடுங்கள் என்று அந்தத் தாய் கதறி அழுதது அனைவரின் உள்ளத்தையும் கசக்கிப் பிழிந்தது.
இப்படி இந்தக் காட்டுமிராண்டி, சின்னஞ்சிறிய மழலையை முளையிலேயே கொய்வதற்கும் கொல்வதற்கும் என்ன காரணம்? ஏதோ புத்தி சுவாதீனம் இல்லாமல் கொலை செய்தானா என்றால் காரணம் அதுவல்ல என்று மருத்துவர்கள் அடித்துச் சொல்கின்றனர். பின்னர் என்ன காரணம்?
பெண் குழந்தை வேண்டாம்; ஆண் குழந்தை தான் வேண்டும் என்பது தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று கொலையாளியே வாக்குமூலம் தந்திருக்கின்றான். இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றான்.
இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று பார்ப்போம். இதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. பெண் என்றால் இழவு, பெண் என்றால் செலவு என்று மக்கள் கருதுவது தான். இதை, தினமணி நாளிதழின் தலையங்கத்தில் பார்க்கலாம்.
பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும் நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.
பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப் பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது, குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று மகிழ்ச்சியுடன் போன தாய் ரேஷ்மா பானு தனது கணவர் சொந்த மகளை அடித்துக் கொல்வார் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குவாலியரில் இதேபோன்று ஒரு தந்தை, தன் பெண் குழந்தைக்கு அதிகளவு புகையிலையைப் புகட்டிக் கொலை செய்தார். இந்த வழக்குத் தொடர்பாக அவரை அண்மையில் குவாலியர் போலீஸ் கைது செய்துள்ளனர். வரதட்சிணை கொண்டுவராத உன் குழந்தைக்கு நான் வரதட்சிணை கொடுக்க வேண்டுமா? என்பதுதான் இந்தத் தகராறின் அடிப்படைக் காரணம்.
பிறக்கப்போகும் குழந்தை பெண் குழந்தை தான் என்று ஜோதிடத்தை நம்பி, பெண்ணை அடித்து உதைத்து கருக்கலைப்பு செய்த சம்பவம் ஆந்திர மாநிலம், குண்டூரில் மார்ச் 31-ஆம் தேதி நடந்தது. முன்னி என்ற அந்தப் பெண்மணி மணமான பத்து ஆண்டுகளில் தற்போது ஆறாவது முறையாகக் கருவுற்றிருந்தார். ஆனால் ஜோதிடரோ, அந்தப் பெண்ணுக்கு ஏழாவது குழந்தைதான் ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்று அறிவித்தார். அதனால்தான் இந்த சித்திரவதை.
இவ்வாறு ஏப்ரல் 13, 2012 அன்று தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகளுக்கு அடிப்படைக் காரணம் வரதட்சணை தான். நாளை மறுமையில் விசாரிக்கப்படும் போது அந்தக் குழந்தை மட்டுமல்ல, கொல்லப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் இறைவனுக்கு முன்னால் இதை அணுவணுவாக எடுத்து வைக்கும். அப்போது வரதட்சணை திருமணத்திற்கு அல்ஃபாத்திஹா ஓதியவர்கள், வரதட்சணை திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள், அங்கு போய் விருந்து சாப்பிட்டவர்கள், பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் இந்தக் குழந்தைகளின் முறையீட்டுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெண் சிசுக் கொலைக்குக் காரணமான, பெண் வீட்டில் ஏற்றப்படும் பாரமான பெண் வீட்டு விருந்து உட்பட அனைத்தையும் புறக்கணிக்கச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தின் அக்கினிப் பிரச்சாரத்தின் மூலம் சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றம், மறுமலர்ச்சி ஏற்பட்டு இலட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த இலட்சியத் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் ஏகத்துவம்.
நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது.
அல்குர்ஆன் 14:24
இந்தத் தீமை தொடர்வதற்குக் காரணம் இணை வைப்பு தான்.
இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன.
அல்குர்ஆன் 6:137
பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்தப் பேதமை ஒழிய வேண்டுமென்றால் இணை வைப்பை விட்டு நீங்கி, ஏகத்துவத்தைப் பின்பற்றுவது ஒன்றே வழி! இதைத் தவிர வேறு வழியில்லை.
நபிவழிக்கு முரணான மத்ஹபுகள் தொடர்: 3
கிரகணத் தொழுகையில் குத்பா மாநபி வழி
சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது இறைவனை நினைவு கூறும் வகையில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள். மற்ற தொழுகை முறையிலிருந்து சற்று வேறுபடும் அந்தத் தொழுகைகளை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழகுற காட்டித் தந்துள்ளார்கள்.
மற்ற தொழுகைகளில் ஒரு ரக்அத்தில் ஒரு ருகூவு செய்ய வேண்டும். ஆனால் இந்தத் தொழுகையில் இரண்டு ருகூவுகள் செய்ய வேண்டும். தொழுகை முடிந்த பிறகு குத்பா எனும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்பது நபிகளார் காட்டிய நல்வழி.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ 1046
இது போன்ற இன்னும் ஏராளமான நபிமொழிகளில் கிரகணத் தொழுகையை நிறைவேற்றிய பிறகு நபிகளார் குத்பா உரையாற்றியதாக இடம் பெற்றுள்ளது. இதுவே நபிவழி. ஆனால் குத்பாவைப் பற்றி ஹனபி மத்ஹபு கூறுவதென்ன?
மத்ஹபு வழி
கிரகணத் தொழுகையில் குத்பா கிடையாது. ஏனென்றால் அவ்வாறு ஹதீஸ் பதிவுசெய்யப்படவில்லை.
(ஹிதாயா, பாகம்: 1, பக்கம்: 88)
கிரகணத் தொழுகைகளில் நபிகளார் குத்பா உரையாற்றியதாக புகாரியில், இன்னும் பிற நூல்களில் வந்துள்ள செய்திகள் ஹதீஸ்கள் இல்லையா? நபிவழியைக் கவனத்தில் கொண்டு மத்ஹபு சட்டங்கள் அமைக்கப்படவில்லை என்பதற்கு இது போதுமான சான்றாகும்.
மஃரிப் தொழுகையின் முன் சுன்னத்
மத்ஹபு வழி
தமிழகத்தில் உள்ள அதிகமான பள்ளிவாசல்களில் ஐந்து நேரத் தொழுகைகளின் பாங்கு, இகாமத் சொல்லப்படும் நேர அட்டவணையை சிறு கரும்பலகையில் எழுதியிருப்பார்கள். அதில் ஒவ்வொரு நேரத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத் சொல்லப்படுவதற்கும் இடையில் 15, 20 நிமிட இடைவேளை விடப்பட்டிருக்கும். ஆனால் மக்ரிபு தொழுகைக்கு மாத்திரம் "பாங்கு: 6.30, இகாமத்: உடன்' என்று எழுதியிருப்பர். குறித்த நேரத்தில் பாங்கு சொல்லி முடித்த உடன் சற்றும் தாமதிக்காமல் இகாமத் சொல்லத் துவங்கி விடுவார்கள். இது தான் பெரும்பாலான மத்ஹப் பள்ளிவாசல்களில் நடைபெறும். இதற்குக் காரணம் மக்ரிபிற்கு முன், சுன்னத்தான தொழுகைகள் ஏதும் இல்லை என மத்ஹப் கூறுகின்றது.
சூரியன் மறைந்த பிறகு ஃபர்ளு தொழுவதற்கு முன்னால் எந்த உபரியான தொழுகைகளும் நிறைவேற்றப்படாது. அதன் காரணமாக மஃரிப் தாமதமாகிவிடும் என்பதினால்.
(ஹிதாயா, பாகம் : 1 பக்கம் : 41)
மாநபி வழி
ஆனால் மாநபி வழிமுறையைப் பாருங்கள்:
அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்'' (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, "இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்'' என்றார்கள்.
(புகாரி 1183)
மக்ரிபின் முன் சுன்னத்தைத் தொழ விரும்புவர்களுக்கு அதற்கான இடைவெளியை, கால அவகாசத்தை அளிப்பது தான் நபிவழி என்பதை இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. இதற்கான நேரத்தை அளிக்காமல் உடனடியாக ஜமாஅத் தொழுகையை ஆரம்பிக்கும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கியது?
முன் சுன்னத் தொழுவதால் மக்ரிப் தாமதமாகி விடும் என்ற காரணம் இங்கு கூறப்படுகின்றது. படித்த உடனே இது பொய்யான காரணம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 10 நிமிட இடைவெளி விடுவதால் எப்படி மக்ரிப் தொழுகை தாமதாகும் என்பதை இந்தச் சட்ட வல்லுனர்கள் (?) சிந்திக்கவில்லை போலும். என்ன காரணம் கூறப்பட்டாலும் அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்த ஒரு காரியத்தை, வணக்கத்தைத் தடை செய்யும் அதிகாரம் உலகில் வேறு யாருக்கும் இல்லை என்பதைப் புரிந்து மத்ஹபினர் தங்கள் தவறை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
நபிவழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள்
குர்ஆன், ஹதீஸை மட்டுமே முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்; அவையல்லாத வேறு எதையும், யாரையும் பின்பற்றக் கூடாது. நபித்தோழர்களாக இருந்தாலும் அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டியாக மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இதையே தவ்ஹீத் ஜமாஅத் தனது நிலைப்பாடாகக் கொண்டு, மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து இன்றளவும் நிலைமாறாமல் இறையருளால் நிலைத்து நிற்கின்றது.
ஆனால் சில போலி தவ்ஹீத்வாதிகளும், மத்ஹபைச் சார்ந்தவர்களும் ஸஹாபக்களைப் பின்பற்றலாம், அவர்கள் மார்க்கத்தின் அத்தாரிட்டி என்பதால் அவர்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாமவர்களின் முகமூடியையும், இரண்டாமவர்களின் அறியாமையையும் விளக்கக்கூடிய வகையில் நாம் பதிலளித்து இருக்கிறோம், இன்றும் பதிலளித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தனி விஷயம்.
ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மத்ஹபினர் மக்ரிபின் முன் சுன்னத் விஷயத்தில் ஸஹாபாக்கள் நிலையைப் பார்க்கத் தவறிவிட்டார்களே? என்பதையே இப்போது கேள்வியாக முன்வைக்கின்றோம்.
நபித்தோழர்கள் நபிவழி அடிப்படையில் மக்ரிபின் முன் சுன்னத் தொழுபவர்களாகவும், தொழ விரும்புபவர்களுக்கு அவகாசம் அளிப்பவர்களாகவுமே இருந்திருக்கின்றார்கள். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மதீனாவில் இருந்தபோது தொழுகை அறிவிப்பாளர் மஃக்ரிப் தொழுகைக்காக அறிவிப்புச் செய்துவிட்டால் மக்கள் (நபித் தோழர்கள்) தூண்களை நோக்கிச் சென்று (அதன் அருகில் நின்று) தலா இரண்டிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். வெளியூரிலிருந்து யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் மிகுதியான பேர் அவ்விரு ரக்அத்கள் தொழுவதைக் கண்டு (மஃக்ரிப்) தொழுகை முடிந்துவிட்டது என எண்ணிவிடுவர்.
(முஸ்லிம் 1521)
மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (எகிப்தின் ஆளுநராயிருந்த) உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் சென்று, "அபூதமீம் (அப்துல்லாஹ் பின் மாலிக்ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் அவ்வாறு செய்துவந்தோம்'' என்று விடையளித்தார்கள். "இப்போது ஏன் நீங்கள் செய்வதில்லை?'' என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் "அலுவல்களே காரணம்'' என்றார்கள்.
(புகாரி 1184)
இவர்கள் நபித்தோழர்களை மதிப்பதாக, பின்பற்றுவதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய் வார்த்தைகள், வெற்று ஜாலங்கள் என்பதும், மேலும் இவர்கள் யாரை இமாம்களாகக் கருதுகின்றார்களோ அவர்களை நபித்தோழர்களை விட சிறப்புக்குரியவர்களாக மதிக்கின்றார்கள், நபித்தோழர்களை இழிவுபடுத்துகின்றார்கள் என்பதும் இதிலிருந்து தெளிவாகப் புலப்படுகின்றது.
தொழுகையை முடிக்கும் ஸலாம்
நபிவழி அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபுகளின் பெயரால் தொழுகையை முறை தவறித் தொழுது, தங்கள் நன்மைகளைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொழுகையின் பல செயல்களில் நபிவழிக்கு மாற்றமான முறையை மத்ஹபுகள் போதிப்பதே இதற்குக் காரணம். தொழுகையின் ஆரம்ப தக்பீரிலிருந்து ஸலாம் வரை நபிவழிக்கு முரணாண பல காரியங்களை மத்ஹபுகள் போதிக்கின்றன.
வேற்று மொழிகளில் தொழுகையைத் துவக்கலாம், அர்ரஹ்மானு அக்பர் என்று சொல்லலாம், ருகூவின் போது லேசாக தலையைத் தாழ்த்தினாலே போதும் என்பன போன்ற மார்க்கம் அனுமதிக்காத பல விஷயங்களை மத்ஹபு அனுமதித்து இருந்ததை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். இப்போது ஸலாம் கூறும் முறையில் நபிவழியுடன் மத்ஹபு எவ்வாறு முரண்படுகின்றது என்பதை காண்போம்.
நபிவழி
நாம் தொழுகையின் முடிவில் ஸலாம் கொடுக்கும் போது வலப்புறமும், இடப்புறமும் திரும்பி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் எனக் கூறுகிறோம். இதுவே நபிவழி. இந்த நபிவழி அடிப்படையில் தான் அனைத்து முஸ்லிம்களும் தொழுது வருகிறோம். சிறு குழந்தைகள் கூட ஸலாம் கூறும் முறையை சரியாகக் கடைபிடிப்பதை இன்றளவும் பள்ளிவாசல்களில் காணலாம்.
வலது புறமும், இடது புறமும் திரும்பி "அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்'' என்று நபி (ஸல்) அவர்கள் சலாம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),
நூல்: திர்மிதீ (272), அபூதாவூத் (845)
ஸலாம் கொடுக்கும் முறை இது தான் என்பதில் எந்த முஸ்லிமிற்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மத்ஹபு வழி
இரண்டு தடவை அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கூறுவது தொழுகையின் கடமைகளில் ஒன்றாகும். இரண்டாவது தடவை வாஜிபாகும். அலைக்கும் என்பது கடமையன்று.
(துர்ருல் முக்தார், பாகம் : 1 பக்கம் : 504)
மேற்கண்ட வார்த்தைகளின் விளக்கமென்ன?
ஸலாம் கூறும் போது இரண்டு தடவை அஸ்ஸலாம் என்று சொல்வது தான் கடமை; அலைக்கும் என்று சொல்வது அவசியமில்லை என மேற்கண்ட மத்ஹபு சட்டத்தில் கூறப்படுகின்றது. அஸ்ஸலாம் என்று மட்டும் கூறி நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையை முடித்துள்ளார்களா? அல்லது அவ்வாறு முடிக்கலாம் என்று அனுமதித்துள்ளார்களா? இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் தங்கள் பள்ளிகளில் இவ்வாறு ஸலாம் கூறி தங்கள் இமாம்கள் இயற்றிய மத்ஹபு சட்டத்தை நடைமுறைப்படுத்துவார்களா?
"அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று நபிகளார் கூறியதில் அஸ்ஸலாமையும் அலைக்கும் என்பதையும் வித்தியாசப்படுத்த என்ன அடிப்படை? இக்கேள்விகளுக்கு மத்ஹபைப் பின்பற்றுவோர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளனர். இச்சட்டத்திற்குத் தங்கள் மனோஇச்சைகளைத் தவிர மார்க்க ஆதாரம் ஏதும் இல்லை.
அது சரி! வேண்டுமென காற்று பிரித்தும், ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தும் தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே! மத்ஹபைப் பின்பற்றுவோர் சிந்திக்கட்டும்.
பாங்கிற்காக எழுந்து நிற்பது
நபிவழி
யாருக்காகவும், எதற்காகவும் எழுந்து நிற்பது என்ற கலாச்சாரத்தை நபியவர்கள் கற்றுத் தரவில்லை. நம்மை ஒரு ஜனாஸா கடந்து சென்றால் நம்மைக் கடக்கும் வரை அதற்காக மட்டும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கட்டளையிட்டுள்ளார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் எழுந்து நிற்குமாறு அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தரவுமில்லை, கட்டளையிடவுமில்லை.
மத்ஹபு வழி
ஆனால் ஹனபி மத்ஹபின் சட்ட நூலான துர்ருல் முக்தாரில் பாங்கு சொல்லப்படும் போது எழுந்து நிற்பது சிறப்புக்குரியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்கு சப்தத்தைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும்
(துர்ருல் முஹ்தார், பாகம் : 1, பக்கம் : 397)
இதற்கான ஆதாரம் நபிவழியில் எங்கே இருக்கிறது? நபியவர்கள் கூறாத ஒன்றை மார்க்கம் என்று சொல்வது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை உணர்வார்களா?
பள்ளியைக் கட்டியவருக்கே பாங்கு இகாமத் உரிமை
மத்ஹபு வழி
பள்ளிவாயிலைக் கட்டியவருக்குத் தான் பாங்கு மற்றும் இகாமத் சொல்லும் அதிகாரம் உண்டு. இது பொதுவானதாகும். (அவர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் பிரச்சனை இல்லை) இமாமத் செய்யும் அதிகாரமும் அவருக்கே உரியது. (இது பொதுவானதன்று) அவர் நேர்மையாளராக இருக்க வேண்டும்.
(துர்ருல் முக்தார், பாகம் : 1, பக்கம் 431)
மாநபி வழி
ஒருவர் பள்ளிவாயிலைக் கட்டினால் அதற்குரிய கூலி அல்லாஹ்விடம் அவருக்கு உண்டு. ஆனால் பள்ளிவாசலில் அவருக்கென்று பிரத்தியேகமான எந்த உரிமையும் கிடையாது.
ஏனெனில் "நிச்சயமாக பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
(72:18)
அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிவாசல் என்று ஆகும்போது அவனது அடியார்கள் அனைவருக்கும் அதில் சமமான உரிமைகள் உள்ளன. இஸ்லாம் காட்டக்கூடிய வழிமுறைப் பிரகாரம் முஸ்லிம்கள் தமக்கென ஒரு தலைவரைத் தேர்வு செய்வார்கள். அந்தத் தலைவர் இஸ்லாம் கூறக்கூடிய தகுதிகளின் அடிப்படையில் பாங்கு சொல்பவரை, தொழுகை நடத்துபவரை ஏற்பாடு செய்வார். இதுதான் இஸ்லாம் காட்டக்கூடிய வழிகாட்டுதல் ஆகும். பள்ளிவாசலைக் கட்டியவருக்கு அதிகப்படியாக உரிமைகள் இருப்பதாக அல்லாஹ்வோ அவனது தூதரோ நமக்குக் கூறவில்லை.
பள்ளிவாசலைக் கட்டியவருக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சிறப்பு உரிமை அவரோடு முடிந்து விடப்போவதில்லை. மாறாக பரம்பரை பரம்பரையாக இந்த உரிமை தொடருமாம்.
பள்ளிவாசலைக் கட்டியவரின் மகனும் அவனது குடும்பத்தினரும் மற்றவர்களை விட அதிக உரிமை படைத்தவர்கள்.
ரத்துல் முக்தார், பாகம் 3, பக்கம் 241
இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு அறிந்து வைத்திருக்கின்ற எந்த முஸ்லிமாவது இது மாநபி வழியில் அமைந்த சட்டம் என்று கருதமுடியுமா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்
கல்லில் தயம்மம் செய்தல்
நபிவழி
உளூ செய்வதற்காகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை நேரும் போது தயம்மும் என்ற முறையை இறைவன் மாற்றுப் பரிகாரமாக ஆக்கியுள்ளான். தூய்மையான மண்ணில் ஒரு முறை அடித்து முகத்தையும், கையையும் தடவுவதே தயம்மும் எனப்படும். மண்ணில் தயம்மும் செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:43)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்பு, கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்ஆன் 5:6
மத்ஹபு வழி
குர்ஆனின் இவ்வசனங்களுக்கு எதிராகக் கல், மரகதம் போன்றவற்றிலும் தயம்மும் செய்யலாம் என மத்ஹபு போதிக்கின்றது.
மண், கல், சாந்து, ஜல்லிக் கல், சுர்மா, மரகதம் போன்ற பூமியின் வகையைச் சார்ந்த அனைத்தின் மூலம் தயம்மம் செய்வது இமாம் அபூஹனிபா மற்றும் (அவரது மாணவர்) முஹம்மத் ஆகியோரிடம் அனுமதியாகும்.
நூல் : ஷரஹ் ஹிதாயா, பாகம் 1, பக்கம் 194
மண் என்பது உதிரியாகக் கிடந்தாலும், அல்லது ஒன்று சேர்ந்து திரளாக, கட்டியாக இருந்தாலும் அதில் தயம்மும் செய்வது குர்ஆன் வசனத்திற்கு எதிரானதாக ஆகாது. ஆனால் எந்த அடிப்படையில் கல்லில் தயம்மும் செய்யலாம் என்று இமாம் அபூஹனிபா சட்டம் எடுத்தார்? மரகதம், ஜல்லிக்கல் ஆகியவற்றிலும் தயம்மும் செய்யலாம் என்றால் அதற்கு ஆதாரம் என்ன? அவை மண்ணின் வகையைச் சார்ந்ததா?
தயம்மும் செய்ய ஏற்ற பொருள் தூய்மையான மண் என்று இறைவன் தெளிவாகக் கூறியிருக்கும் போது கல், மரகதம் ஆகியவற்றையும் அதில் சேர்த்திருப்பது நபிவழிக்குப் பொருத்தமானதா? இது போலவே மத்ஹபுச் சட்டங்களில் அதிகமானவை குர்ஆன், நபிவழிக்கு முரணாகவே உள்ளன என்பதை மத்ஹபின் விசுவாசிகள் உணர வேண்டும்.
முரண்பாடுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்
பைத்தியம் பலவிதம் தொடர்: 2
உத்தம நபி ஒளியால் படைக்கப்பட்டார்களா?
நபி (ஸல்) அவர்கள் மனிதரல்ல! ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்பது பரேலவிகளின் வாதம். இது எவ்வளவு பைத்தியக்காரத்தமானது என்பதைச் சென்ற இதழில் கண்டோம்.
பரேலவிகள் தங்கள் அறியாமைக்கு ஆதாரமாகக் காட்டுகின்ற சில சான்றுகளை இந்த இதழிலும் பார்ப்போம். அதற்கு முன்னால், நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை, அவதூறை பரேலவிகள் கூறி வருகின்றனர். முதலில் அதைப் பார்த்து விட்டு அவர்கள் வைக்கின்ற சான்றுகளைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் சொன்னோமா?
நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் என்று நாம் ஒரு போதும், எந்தவொரு காலகட்டத்திலும் சொன்னது கிடையாது. அவ்வாறு சொல்லவும் மாட்டோம். அவ்வாறு எப்படிச் சொல்ல முடியும்?
நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி (வஹீ) வந்தது. இந்த இறைச் செய்தி இனி எவருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறுதிநாள் வரை வராது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அந்த இடத்தை மனித குலத்தில் யாரும் பிடிக்க முடியாது. இந்த அடிப்படையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது என்றே அடித்து, ஆணித்தரமாகச் சொல்கின்றோம்.
ஆனால் அதே சமயம் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களா? என்றால் நிச்சயமாக, ஒரு போதும் கிடையாது. அந்த வகையில் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றோம். இதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. இதற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் குர்ஆனை மறுத்தவர்கள். காரணம் இந்தக் கருத்தை நாமாகக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. அல்லாஹ் தான் இவ்வாறு கூறுகின்றான்.
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 18:110
குர்ஆனுடைய இந்த நிலைபாடு தான் நம்முடைய நிலைபாடு! இந்த நிலைபாட்டைச் சொல்லும் போது, "நபி (ஸல்) அவர்களை சாதாரண மனிதர்' என்று நாம் கூறுவதாக பரேலவிகள் நம்மைப் பார்த்துக் குற்றம் சாட்டுகின்றனர்.
உண்மையில் இவர்கள் குர்ஆனுக்கு மாற்றமான நிலைபாட்டிற்குச் சென்று விட்டு, அதாவது இறை மறுப்பைச் செய்து கொண்டு, நம்மைக் குற்றவாளியாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.
இவர்களுடைய இந்த இறை மறுப்புக் கொள்கையை முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்து விட்டனர். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வளர்ச்சியே சிறந்த சான்றாக அமைந்திருக்கின்றது.
இது தான் நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர் என்று நாம் கூறுவதாக இவர்கள் சொல்கின்ற அவதூறுக்கும் அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலாகும்.
இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல, ஒளியினால் படைக்கப்பட்ட உன்னதப் படைப்பு என்பதற்குக் காட்டுகின்ற சான்றுகளைப் பார்ப்போம்.
அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தபோது) எனது வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்த் தளத்திலும் நான் மேல் தளத்திலும் தங்கியிருந்தோம். ஓர் இரவில் நான் உணர்வு பெற்று, "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேலே நடமாடுவதா?'' என்று சொல்லிக்கொண்டு, (தலைக்கு நேரான பகுதியிலிருந்து) விலகி மற்றொரு பகுதியில் (நானும் வீட்டாரும்) இரவைக் கழித்தோம்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்துச்) சொன்னபோது அவர்கள், "கீழ்த் தளமே மிகவும் வசதியானது'' என்று கூறினார்கள். நான், "நீங்கள் கீழேயிருக்க நான் மேல் தளத்தில் இருக்கமாட்டேன்'' என்று சொன்னேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் மேல் தளத்துக்கும் நான் கீழ்த் தளத்துக்கும் இடம் மாறிக்கொண்டோம்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்துவந்தேன். அது (நபி (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) என்னிடம் கொண்டுவரப்பட்டால், (உணவுப் பாத்திரத்தில்) நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்பேன். அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைக் கண்டறி(ந்து அந்த இடத்தில் நான் சாப்பிடு)வேன்.
இவ்வாறே (ஒரு நாள்) வெள்ளைப் பூண்டு உள்ள ஓர் உணவு தயாரித்தேன். (நபியவர்களிடம் சென்றுவிட்டு) அது திருப்பிக் கொண்டுவரப்பட்டபோது, நபி (ஸல்) அவர்களின் விரல்கள் பட்ட இடத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது "நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணவில்லை'' என்று என்னிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு நான் பதறினேன்.
மேல் தளத்திற்கு ஏறிச்சென்று "அது (வெள்ளைப் பூண்டு) தடை செய்யப்பட்டதா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அதை நான் விரும்பவில்லை'' என்று பதிலளித்தார்கள்.
நான், "அவ்வாறாயின், தாங்கள் வெறுப்பதை அல்லது தாங்கள் வெறுத்ததை நானும் வெறுக்கிறேன்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்களும் வேதஅறிவிப்பும்) வந்துகொண்டிருந்தன.
நூல்: முஸ்லிம் 3828
இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் சொல்ல வருவது என்ன?
நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதரல்ல என்று நபித்தோழர்கள் கருதியதால் தான் நபியவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, அபூஅய்யூப் அல்அன்சாரி அவர்கள் மேல் தளத்தில் இருக்க மறுத்து விடுகின்றார்கள். இது தான் இவர்கள் சொல்ல வருகின்ற சான்று.
அதாவது, நபித்தோழர்களே நபியவர்களைச் சாதாரண மனிதராகப் பார்க்கவில்லை என்று இதன் மூலம் நிறுவ வருகின்றார்கள்.
இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால் நபியவர்களுக்கென்று உள்ள தனிச்சிறப்புக்களைப் பற்றி நாம் அறிந்தாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் இருக்கின்றன.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
அல்குர்ஆன் 49:2
இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது; அப்படிப் பேசினால் அவ்வாறு பேசியவர்களின் வணக்கங்கள் பாழாகி விடும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் இந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தனியாகச் சந்தித்துப் பேச வேண்டுமென்றால் அன்பளிப்பு வழங்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இத்தூதரிடம் (முஹம்மதிடம்) இரகசியமாகப் பேசினால் உங்கள் இரகசியத்துக்கு முன் தர்மத்தை முற்படுத்துங்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. தூய்மையானது. உங்களுக்கு (எதுவும்) கிடைக்காவிட்டால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 58:12
இந்த உத்தரவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.
3. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
அல்குர்ஆன் 24:63
நபி (ஸல்) அவர்களை, நம்மில் சிலர் சிலரை அழைப்பது போல் அழைக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இந்த உத்தரவும் நபி (ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் பொருந்தாது.
4. முஸ்லிம்கள் யாரும் ஒரே சமயத்தில் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் முடிக்கக் கூடாது. ஆனால் இந்தச் சட்டத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணந்து கொள்ள விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும். (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:50
இதிலும் நபி (ஸல்) அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுகின்றார்கள்.
5. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்üவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்களுக்கு வாழ்வüக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்'' என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?'' என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், "குர்ஆனின் அத்தியாயங்கüலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்üவாசலிலிருந்து வெüயே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள்.
அவர்கள் வெüயே செல்ல முனைந்தபோது நான் அவர்கüடம், "நீங்கள் "குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் "அல்ஃபாத்திஹா' அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 4474
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை கூறப்படுகின்றது. இந்தத் தகுதியையும் யாரும் அடைய முடியாது. இதன் அருகில் கூட யாரும் நெருங்க முடியாது.
6. ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள் தனித்தன்மை மிக்கவர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இதோ:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல்பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூ செய்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் (மீண்டும்) அவர்கள் உளூ செய்யவில்லை.
(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், "மக்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கண்கள்தாம் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது'' என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)' என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் "''இறைத்தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும்' என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்'' என்று கூறினார்கள். பிறகு "(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்'' எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.
நூல்: புகாரி 138, 859, 3569
இவையெல்லாம் நபி (ஸல்) அவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகின்ற தன்மைகள். இந்தத் தன்மைகளில் மற்றவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களை நெருங்க முடியாது. காரணம், இவை அல்லாஹ்வின் தூதர் என்ற அடிப்படையில் அமைந்தவை. இந்த வகையில் அவர்கள் சாதாரண மனிதர் கிடையாது.
இந்த அடிப்படையில் தான் அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கீழ் தளத்தில் இருக்கும் போது, நாம் மேல் தளத்தில் இருக்கலாமா? என்று கருதி தயங்கியிருக்கின்றார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கீழ் தளத்திற்கு மாறியிருக்கின்றார்கள். அவ்வளவு தான்.
அபூஅய்யூப் அல்அன்சாரி இவ்வாறு மாறியதற்குக் காரணம், அவர் நபியவர்களை நம்மைப் போன்ற மனிதராகப் பார்க்காமல் வேறு படைப்பாகப் பார்த்திருக்கின்றார்கள் என்பது போன்ற தோற்றத்தை இதில் ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் அப்படிக் கருதுவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. இருப்பினும் இந்த ஹதீஸை இழுத்து வளைத்து நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் ஆன படைப்பு என்று நிறுவ முன்வருகின்றார்கள்.
இது பரேலவிச சிந்தனையின் பச்சையான பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. இவர்களுடைய பரேலவிசக் கொள்கையே நபி (ஸல்) அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்; அவர்கள் மனிதப் படைப்பு கிடையாது என்பது தான்.
இவர்களுடைய இந்தக் கொள்கை மிகவும் ஆபத்தானது; அபாயகரமானது. இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தைத் தகர்க்கக் கூடியது. இதை மக்களிடம் தெளிவுபடுத்தும் போது, "நபி (ஸல்) அவர்கள் சாதாரண மனிதர்' என்று நாம் கூறுவதாக இவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இவர்களது பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை என்றாலும் இந்த வாதங்கள் ஒவ்வொரு ஏகத்துவவாதிக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலை ஏகத்துவத்தில் விரிவாக எடுத்து வைக்கின்றோம்.
அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் செலுத்திய மரியாதை இந்தத் தவறான, தறிகெட்ட பரேலவிசப் பாதையில் அமைந்ததல்ல. நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு என்ற வட்டத்தின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) போன்று அனைத்து நபித்தோழர்களும் நபி (ஸல்) அவர்களை மனிதர்களாகவே பார்த்தார்கள். ஏன்? அன்றைய இஸ்லாத்தின் எதிரிகளான மக்கா காபிர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பாகவே பார்த்தனர். அதனால் தான் நபியவர்களை மறுக்கவும் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பாக இல்லாமல் ஒளியினால் படைக்கப்பட்ட அற்புதப் படைப்பாக இருந்தால் அவர்களை அந்தக் காபிர்கள் மறுத்திருக்க மாட்டார்கள்.
"இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.
அல்குர்ஆன் 25:7
மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிடக்கூடாது என்பது தான். அதாவது நபியவர்கள் மலக்காக, ஒளியாக இருக்க வேண்டும் என்று தான் அந்த மக்கள் எதிர்பார்த்தார்கள்.
இது மக்கா காபிர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல! உலகத்தில் தூதர்கள் அனுப்பப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் இந்த எதிர்பார்ப்பில் தான் இருந்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, அதாவது மனிதப் படைப்பாக அந்தத் தூதர்கள் இருந்ததால் தான் தூதரை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
இதோ அல்லாஹ் கூறுகின்றான்:
"மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?'' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
"பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்'' என்பதைக் கூறுவீராக!
அல்குர்ஆன் 17:94, 95
மக்கத்து காபிர்கள் வைத்த இந்த வாதங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மனிதத் தூதர் தான் என்று நம்பியே நபித்தோழர்கள் ஏற்றார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கின்ற வரையிலும், மரணித்த பின்பும் மனிதராகவே பார்த்தார்கள்.
இரத்தம் சிந்திய இறைத்தூதர்
நபி (ஸல்) அவர்கள் பசியுடன் இருந்ததையும், உணவு உண்டதையும், தண்ணீர் அருந்தியதையும் இதன் விளைவாக அவர்கள் மலஜலம் கழித்ததையும் அந்த மக்கள் கண்டார்கள். நபியவர்கள் திருமணம் முடித்ததையும் பிள்ளைகள் பெற்றதையும் கண்கூடாகக் கண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் வெட்டப்பட்டதையும் அதன் விளைவாக அவர்களது உடலில் இரத்தம் பீறிட்டுக் கொப்பளித்ததையும் தங்கள் கண்களால் சந்தேகமின்றி பார்த்தார்கள்.
இவையெல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி நபி (ஸல்) அவர்களை மனிதர் தான் என்பதைத் தெளிவுபடுத்தின.
ஆனால் இந்தப் பரேலவிகள் மட்டும், "நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களை மனிதராகப் பார்க்கவில்லை, மலக்காக அல்லது ஒளியாகப் பார்த்தார்கள்' என்பது போன்று சித்தரிக்கின்றார்கள். இதனைச் சிந்தனைக் குருடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
இன்னும் இதுபோன்று நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பிலிருந்து வேறுபடுத்துவதற்காக என்னென்ன உருப்படாத ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.
சாப்பிடுவதன் ஒழுங்குகள்
தூய்மையானவற்றை உண்ணுதல்
நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!
அல் குர்ஆன் 2:172
சாப்பிடும் முன் கைகளைக் கழுவுதல்
நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் நிலையில் சாப்பிட நாடினால் சாப்பிடுவதற்கு முன்னால் (வழக்கம் போல்) தனது இரு கைகளையும் கழுவிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: நஸயீ 256
பிஸ்மில்லாஹ் கூறி, அருகிலிருப்பதை உண்ணுதல்
உமர் பின் அபீ ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது "நான் நபி (ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அளாவிக் கொண்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! (பிஸ்மில்லாஹ் என்று) அல்லாஹ்வின் பெயரைச் சொல்! உன் வலக் கரத்தால் சாப்பிடு! உனது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி 5376
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிஸ்மில்லாஹ்'' கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 4105
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் உணவு சாப்பிட (ஆரம்பிக்கும்) போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். ஆரம்பத்தில் (பிஸ்மில்லாஹ்) கூற மறந்து விட்டால் "பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி'' (பொருள்: ஆரம்பத்திற்காகவும் இறுதிக்காவும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: திர்மிதி 1781
இடது கையால் சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் சாப்பிடும் போது தனது வலக்கரத்தால் சாப்பிடட்டும். குடிக்கும் போதும் தனது வலக்கரத்தால் குடிக்கட்டும். ஷைத்தான் தனது இடக்கரத்தால் சாப்பிடுகிறான். தனது இடக்கரத்தால் குடிக்கின்றான்''
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4108
உணவுப் பொருள் கீழே விழுந்தால்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு கவள வாய் உணவு கீழே விழுந்து விட்டால் அதில் பட்ட அசுத்தங்களை நீக்கி விட்டு அவர் அதை சாப்பிடட்டும். அதை ஷைத்தானுக்காக (வீணாக) விட்டு விட வேண்டாம்''
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 4138
சாய்ந்து கொண்டு சாப்பிடுதல்
நபி (ஸல்) அவர்கள், "(ஆணவத்தை வெளிப்படுத்துவது போல்) நான் சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்: புகாரி 5398, முஸ்லிம் 4122
நின்று கொண்டு சாப்பிடுவதோ குடிப்பதோ கூடாது
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதைத் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4115
நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்
நபி (ஸல்) அவர்கள "ஸம் ஸம்'' தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5617
அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: "மக்களில் சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கின்றேன்''
நூல்: புகாரி 5615
பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்''
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்: புகாரி 153
சாப்பிட்ட பின் விரல்களைச் சூப்புதல்
(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களைச் சூப்புமாறும், தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும் உணவின் எந்தப் பகுதியில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4136
பால் அருந்திய பின் வாய்கொப்பளித்தல்
நபி (ஸல்) அவர்கள் பால் குடித்த பின் வாய் கொப்பளித்தார்கள். பிறகு "அதிலே கொழுப்பு இருக்கிறது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 211
சாப்பிட்டு முடித்த பின் ஓத வேண்டிய துஆ
நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) உணவு விரிப்பை எடுக்கும் போது "அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' (அதிகமான தூய்மையான வளமிக்க எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்) என்ற துஆவைக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: புகாரி 5458
வலது புறமிருந்து வினியோகிக்கத் துவக்குதல்
நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். நபியவர்கள் (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்து விட்டு "வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5612
வலது புறத்தில் உள்ளவர் அனுமதி கொடுத்தால் இடது புறத்தில் உள்ளவருக்கு முதலில் கொடுக்கலாம்
நபி (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவனிடம் "(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதி தருவாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவன் "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) யாருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்'' என்று பதில் கூறினார். உடனே நபியவர்கள் அதை அச்சிறுவனின் கையில் வைத்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரி 5620
ஒருவரது உணவு இருவருக்குப் போதும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(கூட்டாகச் சாப்பிடும் போது) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானதாகும். நான்கு நபர்களுடைய உணவு எட்டு நபர்களுக்குப் போதுமானதாகும்''
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4182
கூட்டாகச் சாப்பிடுவதன் ஒழுங்குகள்
உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் 24:61
அடுத்தவருக்குக் கொடுக்காமல் சாப்பிடக் கூடாது
(தன்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்) தனது சகோதரரிடம் அனுமதி பெற்றே தவிர, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2455
சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5460
பசிக்கும் போது உணவுக்கே முன்னுரிமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவு நேர உணவு வைக்கப்பட்டு தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்''
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி 671
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது''
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 969
உணவைக் குறை கூறுதல் கூடாது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபியவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.
நூல்: புகாரி 3563
உணவை வீண் விரையம் செய்யக்கூடாது
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.
அல் குர்ஆன் 7:31
விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:27
பொறுப்பாளி இறுதியில் தான் சாப்பிட வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தாருக்கு (குடிபானத்தை) பங்கிட்டுக் கொடுக்கக் கூடியவர் அவர்களில் இறுதியாக குடிக்கக் கூடியவராவார்''
அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1213, திர்மிதி 1816
மூஸா நபியின் கப்ர் தொழுகை
எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆனைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு "அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்'' என நற்செய்தி கூறுவதற்காகவும், "அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.
அல்குர்ஆன் 18:1
என்று சிறப்பித்துக் கூறுகின்றான். பின்வரும் வசனத்திலும் குர்ஆனை கோணலற்றது என்று வர்ணிக்கின்றான்.
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.)
அல்குர்ஆன் 39:28
ஆனால் பரேலவிகள் எனப்படும் சமாதி வழிபாட்டுச் சிந்தனையாளர்கள், குர்ஆனை கோணலாகவே பார்க்கின்றார்கள்.
அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள், அவன் தான் என்றென்றும் உயிருள்ளவன் என்று நாம் கூறுகின்ற போது இறந்து போன அவ்லியாக்களும் உயிருடன் இருக்கின்றார்கள் என்கின்றார்கள். ஆதாரம் என்ன? என்று கேட்டால் "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்' (அல்குர்ஆன் 2:154) என்ற வசனத்தையும், "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்' (அல்குர்ஆன் 3:169) என்ற வசனத்தையும் காட்டுகின்றார்கள்.
ஆனால் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் பொதுவாக நாம் புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் இங்கே பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இது கூட அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்த ஷஹீத்கள் எனும் உயிர்தியாகிகளுக்கான சிறப்புத்தகுதி என்பதையும் இருட்டடிப்பு செய்வார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக விளக்குகின்றார்கள்.
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்' (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே!'' என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்'' என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
நூல்: முஸ்லிம் 3834
அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷுஹதாக்களின் இந்த ஹதீஸைத் தான் கடத்தல் செய்து, இறந்து போன நல்லடியார்களுக்குக் கொண்டு போய் பொருத்துகின்றார்கள். இது ஷஹீத்களுக்குரிய ஹதீஸ் ஆயிற்றே? இதை எப்படி இறந்து விட்ட மற்ற நல்லடியார்களுக்குக் கொண்டு போய் சேர்க்க முடியும்? என்று கேட்டால் அவர்கள் சொல்கின்ற பதில் இதோ:
ஷுஹதாக்கள் தங்களுடைய இன்னுயிரை போர்க்களத்தில் மாய்த்ததைப் போன்று இந்த நல்லடியார்கள் அல்லாஹ்வை வணங்குவதில் தங்களை மாய்த்தவர்கள். எனவே இவர்களும் உயிருள்ளவர்கள். இதன் அடிப்படையில் இறந்து போன நல்லடியார்கள் உயிருடன் வாழ்கின்றார்கள். அதனால் அவர்களிடம் நமது கோரிக்கையை முன்வைத்து கேட்கலாம், துஆச் செய்யலாம் என்று சொல்கின்றார்கள்.
இறந்து போன நல்லடியார்களை ஷஹீத்கள் பட்டியலில் இவர்கள் சேர்த்தாலும் அது இவர்களின் குருட்டு நம்பிக்கையை நியாயப்படுத்த உதவாது. ஏனெனில் சொர்க்கத்தில் பறவை வடிவில் அவர்கள் உண்டு களித்து இருப்பார்கள் என்பது தான் உயிரோடு உள்ளார்கள் என்பதன் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிவிட்டதால் அவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதை அந்த நல்லடியார்கள் கவனிக்காமல் இன்பத்தில் திளைத்து இருப்பார்கள்.
மேலும் ஒருவரை நல்லடியார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதையும் இவர்கள் மக்களிடமிருந்து மறைக்கிறார்கள்.
அல்குர்ஆனின் நேரிய வழி
அல்குர்ஆன் தெளிவாக, நேரடியாகச் சொல்வதும், கட்டளையிடுதும் என்ன?
உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
அல்குர்ஆன் 1:4
அல்லாஹ் தன்னிடமே நேரடியாக உதவி தேடும்படி நமக்கு இந்த வசனத்தின் மூலம் கற்றுத் தருகின்றான்.
"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
அல்குர்ஆன் 40:60
இந்த வசனத்திலும் அல்லாஹ் தன்னிடமே கேட்க வேண்டும் என்று அடியார்களுக்கு உத்தரவிடுகின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)
அல்குர்ஆன் 2:186
இதிலும் அடியார்கள் தன்னிடமே கேட்க வேண்டும் என்று கூறுகின்றான். தான் என்றென்றும் உயிருள்ளவன், நிர்வாகம் செய்து கொண்டிருப்பவன் என்று தன்னுடைய ஆற்றலையும் தெளிவுபடுத்துகின்றான். இப்படி உயிருள்ள ஒருவனிடம் நேரடியாகக் கேட்பதை விட்டு விட்டு இறந்து போனவர்களிடம் கேட்பதற்காக என்னென்ன குறுக்கு வழிகளை, கோணல்வழிகளைக் கையாளுகின்றார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கோணல் புத்தியும் குறுக்கு வழியும்
யூத, கிறித்தவர்கள் இப்படித்தான் குறுக்கு வழியைக் கையாண்டார்கள். நேரிய வழியை விட்டும் மக்களைத் தடுத்தார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
"வேதமுடையோரே! நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள்.
அல்குர்ஆன் 3:99
அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள்.
அல்குர்ஆன் 11:19
இந்த பரேலவிசப் பேர்வழிகள் இத்தகைய பிரிவைச் சார்ந்தவர்கள் தான். யூத, கிறித்தவர்கள் செய்த அதே வேலையைத் தான் இவர்களும் செய்கின்றார்கள். இவர்களின் இந்தக் குறுக்கு வழிகளில் உள்ள ஒன்று தான் மூஸா நபி உயிருடன் இருக்கின்றார் என்ற வாதமும், அதற்காக அவர்கள் சமர்ப்பிக்கின்ற ஆதாரமும். அந்த ஆதாரம் என்ன? முஸ்லிமில் இடம் பெறக்கூடிய பின்வரும் செய்திதான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
முஸ்லிம் 4736
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணத்தின் போது நடந்த இந்த நிகழ்வை ஆதாரமாகக் காட்டி, மூஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள், எனவே நபிமார்களை, நல்லடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
இவ்வாறு கூறுகின்ற இந்தப் பரேலவிகள் யாரும் மூஸா நபியை அழைத்துப் பிரார்த்திப்பதில்லை. அது போல நூஹ், ஹூத், ஸாலிஹ், இப்றாஹீம் போன்ற நபிமார்களை அழைப்பதில்லை. மாறாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மறைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தோன்றி மறைந்த முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஹ்யித்தீன், ஷாகுல் ஹமீது போன்ற அடியார்களைத் தான் அழைக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் மூஸா நபியின் இந்த ஹதீஸை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு இவர்களாக நல்லடியார்கள் பட்டம் கொடுத்துக் கொண்டவர்களை அழைப்பது தான்.
நபிமார்களை அழைப்பது இவர்களது நோக்கமல்ல. குறைந்த பட்சம் அவர்கள் நபிமார்களை அழைத்தாலாவது ஓரளவுக்குத் தங்கள் வாதத்தில் சரியாக இருக்கின்றார்கள் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு இவர்கள் அழைப்பது கிடையாது. இதன் மூலம் அவர்கள் குறுக்கு வழியிலும் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது அவர்கள் காட்டுகின்ற மூஸா நபியின் கப்ர் தொழுகை ஹதீஸைப் பார்ப்போம்.
மூஸா நபி தனது கப்ரில் தொழுது கொண்டிருப்பதை நபிகள் நாயகம் கண்டது உண்மை. அதை யாரும் மறுக்க முடியாது. மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை அவர்களது கப்ரில் மட்டும் காணவில்லை. அவர்களைப் பல இடங்களில் காணுகின்றார்கள். அவற்றை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
பைத்துல் முகத்தஸில் மூஸா நபி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4736
மண்வெளியில் மூஸா நபி
நபிகள் நாயகம் அவர்களுக்கு இதற்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.
நூல்: முஸ்லிம் 3410
விண்வெளியில் மூஸா நபி
அங்கிருந்து விண்வெளிக்கு செல்லும் போது மூஸா அங்கேயும் நபியைப் பார்க்கின்றார்கள்.
அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வாவனர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை "ஸம்ஸம்'' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் "ஈமான்'' எனும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.
பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக்கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், "திறங்கள்'' என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், "யார் இவர்?'' எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், "ஜிப்ரீல்'' என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், "உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா?'' எனக் கேட்டார். அவர்கள், "ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள்'' என்று பதிலüத்தார்கள். அதற்கு அவர், "(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?'' என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம்'' என்று கூறினார்கள்.
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்துகொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்கüடம், "இவர் யார்?'' எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்கüல் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம்மக்களைப்) பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்'' என்று பதிலüத்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச் சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் "திறங்கள்'' என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலüத்தபின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன?'' என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் தொடர்கிறார்கள்:
"என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது "நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!'' என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் இத்ரீஸ்'' என்று பதிலüத்தார்கள்.
பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், "நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்கள் தாம் மூசா'' என்று பதிலüத்தார்கள்.
நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் "நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்தாம் ஈசா'' என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், "நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார்கள். நான், "இவர் யார்?'' என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர் தாம் இப்ராஹீம்'' என்று கூறினார்கள்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் விதிகளை பதிவு செய்துகொண்டிருக்கும்) எழுது கோல்கüன் ஓசையைச் செவியுற்றேன்.
நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)
திரும்பும் போது ஒரு சந்திப்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர் மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், "உங்கüடம் உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?'' என்று கேட்டார்கள். நான், (என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்'' என்று பதிலüத்தேன். அவர்கள், "அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது'' என்று கூறினார்கள்.
உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகüன் எண்ணிக்கையை குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்கüடம் நான் திரும்பிச்சென்று "அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்'' என்று சொன்னபோது மீண்டும் அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது'' என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) "இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப்படாது'' என்று கூறிவிட்டான்.
உடனே நான் மூசா (அலை) அவர்கüடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்'' என்றார்கள். நான், "என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்'' என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) "சித்ரத்துல் முன்தஹா''வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது. அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
நூல்: புகாரி 349 (ஹதீஸின் ஒரு பகுதி)
இது எதைக் காட்டுகின்றது? நபி மூஸா (அலை) அவர்கள் மண்ணுலகில் கப்ரில் மட்டும் தொழுது கொண்டிருக்கவில்லை. மாறாக விண்ணுலகில் நபி (ஸல்) அவர்கள் வரவேற்கவும் செய்கின்றார்கள், வழியனுப்பவும் செய்கின்றார்கள். மூஸா நபியின் பாத்திரம் கப்ரில் மாத்திரம் அடங்கி இருக்கவில்லை. விண்ணுலகு வரை விரிந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.
ஈஸா நபியுடன் சந்திப்பு
மேலே இடம் பெற்ற ஹதீஸில் நபிகள் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைச் சந்திக்கின்றார்கள். இதில் ஈஸா நபியைத் தவிர மற்ற எல்லா நபிமார்களும் இறந்தவர்கள். ஈஸா நபியவர்கள் வானத்தில் தான் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களையும் சேர்த்தே நபியவர்கள் பார்த்திருக்கின்றார்கள். சந்தித்திருக்கின்றார்கள்.
பிலால் (ரலி) அவர்களுடன் சந்திப்பு
நபி (ஸல்) அவர்கள் நபிமார்களை மட்டும் பார்க்கவில்லை. சுவனத்தில் பிலால் (ரலி) அவர்களின் நடமாட்டத்தையும் காண்கின்றார்கள்.
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1149
இங்கு நாம் கவனிக்க வேண்டியது நபி (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் போது, "நான் உலகில் தானே இருக்கின்றேன். சுவனத்திற்கு எப்படி வந்திப்பேன்' என்று பிலால் (ரலி) கேட்கவில்லை. அப்படியானால் இதன் பொருள் என்ன?
பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை அங்கு காட்டுகின்றான். இறந்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று இந்தப் பரேலவிகள் நம்புவதைப் போன்று, உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களாக ஆகிவிடுவார்களா? ஒரு போதும் இல்லை. இங்கு நாம் காணவேண்டியது அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலைத் தான். பிலால் (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை சுவனத்தில் நடமாட விடுவது போன்று, இறந்தவர்களை மிஃராஜின் போது எழுப்பிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றான். அதாவது எடுத்துக் காட்டியிருக்கின்றான். இந்த அற்புதம் தான் இதிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயமும் படிப்பினையுமாகும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், ஒருவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவர் இறந்து, மறுமை நாளில் அவர் எழுப்பப்பட்டு, விசாரணை முடிந்து தான் சுவனத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் பிலால் (ரலி) முந்தியே சென்றிருக்கின்றாரே! எப்படி? இது எடுத்துக்காட்டப்பட்ட நிகழ்வு!
சுவனத்தில் உளூச் செய்யும் உமர் (ரலி) மனைவி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் இருந்த போது அவர்கள், "நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் உளூ செய்து கொண்டிருந்தாள். நான் (ஜிப்ரீலிடம்), "இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், "உமர் அவர்களுக்குரியது' என்று பதிலüத்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு, "தங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 3680
கியாமத் நாள் ஏற்பட்டு சுவனத்தில் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சுவனத்து மனைவியைப் பார்த்தது எப்படி?
ருமைசாவின் பிரவேசம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்கüன் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, "யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), "இவர் பிலால்' என்று பதிலüத்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், "இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), "இது உமருடையது' என்று சொன்னார். ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)'' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்கüடமா நான் ரோஷம் காட்டுவேன்'' என்று கேட்டார்கள்.
நூல்: புகாரி 3679
பூமியில் உள்ள அபூதல்ஹாவின் மனைவியை சுவனத்தில் எப்படிப் பார்க்க முடிந்தது?
நபி (ஸல்) கண்ட நரகக் காட்சிகள்
இதுபோல் நபி (ஸல்) அவர்கள் நரகத்திலும் சில காட்சிகளைக் கண்டார்கள். நரகம் எப்போது? மறுமை நாள் வந்து, கேள்வி கணக்கு விசாரணை முடிந்த பின்னர் தீயவர்கள் போய்ச் சேருமிடம் தான் நரகம். அந்த நரகத்தின் காட்சிகளை நபி (ஸல்) அவர்கள் முன்னரே கண்டார்கள்.
விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும் மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். "ஜிப்ரயீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அபூதாவூத் 4255
இந்தக் காட்சியும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டது தான்.
பெண்கள் நிறைந்த நரகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி 3241
நபி (ஸல்) அவர்கள் சுவனத்தில் அதிகமான ஏழைகளைக் கண்டதாகவும், நரகத்தில் அதிகமான பெண்களைக் கண்டதாகவும் இந்த ஹதீஸில் பார்க்கிறோம். பின்னால் நடக்கப்போகும் ஓர் உண்மையை அல்லாஹ் தனது தூதருக்கு இங்கு காட்சியாகக் காட்டியிருக்கின்றான் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
தஜ்ஜாலின் காட்சி
இவை நபி (ஸல்) அவர்கள் சுவனத்திலும் நரகத்திலும் கண்ட சில காட்சிகளாகும். இவையல்லாமல் நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலையும் நரகத்தின் காவலர் மாலிக்கையும் பார்க்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூசா அவர்களை "ஷனூஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகüல் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3239
இவை அனைத்தும் பின்னால் நிகழவிருக்கும் நிகழ்வுகளையும், இந்த நிகழ்வுகளில் சம்பந்தப்படக்கூடிய ஆட்களையும் தன் திருத்தூதருக்கு அல்லாஹ் காட்சியாக எடுத்துக் காட்டியனவாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் தூதருக்கு இவ்வாறு மிஃராஜ் போன்று நேரிலும் எடுத்துக் காட்டுவான். கனவிலும் எடுத்துக் காட்டுவான். இது அவனுடைய மாபெரும் ஆற்றலுக்குரிய அத்தாட்சியாகும்.
ஆதம் நபி அவர்களைப் படைத்து, அவர்களிடமிருந்து தோன்றப் போகும் அனைத்து சந்ததிகளையும் அவர்களிடமே எடுத்துக் காட்டுகிறான்.
இதை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)
அல்குர்ஆன் 7:172
ஆதம் நபி உருவானதிலிருந்து இறுதி நாளில் மரணிக்கவிருக்கும் மனித சந்ததி அத்தனை பேரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சாட்சியம் அளித்திருக்கின்றனர். நாமும் அளித்திருக்கின்றோம். ஆனால் இது நமக்கு நினைவில் இல்லை. இப்படி அல்லாஹ் பின்னால் நடக்கவுள்ளதை முன்னாலேயே தனது தூதர்களுக்கு ஒரு டிரையலாக எடுத்துக் காட்டுகிறான்.
ஒரு பொறியாளர் தான் கட்டவிருக்கும் மாபெரும் மாளிகையின் மாதிரியை முதலில் தனது ஆட்களுக்குச் செய்து காட்டி விடுகின்றார். எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் இல்லை.
எனவே மிஃராஜ் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு நிகழ்வாகும். இதை வைத்துக் கொண்டு மூஸா நபியவர்கள், இவர்கள் சித்தரித்துக் காட்டுகின்ற அர்த்தத்தில் உயிருடன் உள்ளார்கள் என்பது தவறாகும்.
திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 8
கியாமத் நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்
உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்களையும் அதற்கான விளக்கத்தையும் கண்டு வருகின்றோம்.
ஈஸா நபி மரணித்துவிட்டார் என்று வாதிடுவோரின் அடுத்த ஆதாரம் இது தான்.
அவர் (அக்குழந்தை), 'நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாயாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
திருக்குர்ஆன் 19:30-32 இந்த வசனங்களுக்குப் பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர்.
தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஒரு சாரார் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்கு இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.
1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான்.
(திருக்குர்ஆன் 19:30)
2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான்.
(திருக்குர்ஆன் 19:31)
3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
(திருக்குர்ஆன் 19:32)
இரண்டாவது வசனத்தில் 'நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்'' என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.
ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.
இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.
எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.
இவ்வசனத்தில் 'வ பர்ரன் பிவாலிததீ'' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. 'எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பது இதன் பொருள்.
செய்பவனாகவும் (செய்பவன் + ஆக + உம்) என்பதில் 'உம்''மைப் பொருளை எங்கே முற்றுப் பெறச் செய்வது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.
'உம்''மைப் பொருளைப் பொருத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முத-ல் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
'இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன்'' என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு 'உம்''மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் 'கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்'' என்ற வரிசைப்படி அமையும்.
"நல்லவனாகவும்' என்பதை முற்றுப் பெறச் செய்வதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, திருக்குர்ஆன் 19:32 வசனத்தை ஆராய்வோம்.
'என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பதை எங்கே முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதை முற்றுப் பெறச் செய்ய முடியும்.
'என்னை நபியாகவும் ஆக்கினான்'' என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக 'என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்று முற்றுப் பெறச் செய்யலாம்.
'என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்' என்ற கருத்து கிடைக்கிறது.
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்' என்ற சொற்றொடரை 19:31 வசனத்தின் இறுதியிலும் முற்றுப் பெறச் செய்ய முடியும்.
'நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்' என்ற கருத்து இதி-ருந்து கிடைக்கும்.
நாம் இரண்டாவதாகக் கூறியபடி முற்றுப் பெறச் செய்வது தான் மிகவும் சரியானதாகும்.
'உம்மை'ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் முற்றுப் பெறச் செய்ய வேண்டும். அருகில் முற்றுப் பெறச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் முற்றுப் பெறச் செய்ய வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.
'என் தாயாருக்கு நன்மை செய்பவனாக' என்பது 19:32-வது வசனம்.
அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் முற்றுப் பெறச் செய்ய வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் முற்றுப் பெறச் செய்வதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே 'நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம்" என்பது தான் சரியான பொருளாகும்.
எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
ஈஸா நபிக்கு ஸகாத் எப்போது கடமையாகும்? என்றால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை அல்லாஹ் கூறுகிறான்.
1. ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும்.
2. அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
இவ்விரண்டு நிபந்தனைகளும் ஒரு சேர அமைந்திருந்தால் தான் அவர்கள் மீது ஸகாத் கடமையாகும்.
ஈஸா நபி உயர்த்தப்படுவதற்கு முன்பு தான் இது பொருந்தும். அப்போது தான் அவர்கள் உயிருடனும் இருந்தார்கள். தாயாருக்கு நன்மை செய்யும் நிலையிலும் இருந்தார்கள்.
அவர்கள் தாயாரை விட்டு எப்போது உயர்த்தப்பட்டார்களோ அப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்ற ஒரு நிபந்தனை மட்டும் தான் உள்ளது. தாயாருக்கு நன்மை செய்பவராக என்ற நிபந்தனை இல்லை.
இன்று கூட ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தமது தாயாருக்கு நன்மை செய்யும் நிலையில் இல்லை.
எனவே ஸகாத் அவர்கள் மீது கடமையில்லை. யாருக்கு ஸகாத் கொடுப்பார் என்று கேட்பது அபத்தமானதாகும்.
ஒரு வாதத்திற்காக எதிர் தரப்பினரின் வாதத்தை ஏற்றாலும் அவர்களின் கேள்வி அர்த்தமற்றதாகும்.
அல்லாஹ்வின் எந்தக் கட்டளையானாலும் அதற்குரிய சூழ்நிலை இருக்கும் போது தான் அதை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அல்லாஹ் அதைக் கூறாவிட்டாலும் கூட அப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
'முஃமின்களே! உங்கள் குரலை நபியின் குரலை விட உயர்த்தாதீர்கள்'' (49:2) என்று அல்லாஹ் கூறுகிறான்.
முஃமின்களே என்று அழைத்து இறைவன் கூறுவதால் இதை நாம் செயல்படுத்த வேண்டும். இதை எப்படிச் செயல்படுத்த இயலும்? நபியின் குரலைக் கேட்கும் காலத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது இயலாது. இதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் இதைச் செயல்படுத்தும் கடமை நமக்கு இல்லை என்று புரிந்து கொள்கிறோம். இங்கே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில்லை. அல்லாஹ் 'அதற்கான சூழ்நிலை இருக்கும் போது'' என்று கூறாவிட்டாலும் அது தான் பொருள் என விளங்குகிறோம்.
ஈஸா (அலை) அவர்கள் இப்பூமியில் வாழக்கூடிய காலத்தில் பொருள் வசதி பெற்றவராக இல்லாமலிருந்தால் அப்போதும் அவர்களால் ஸகாத் கொடுக்க முடியாது. அதனால் அவர்கள் இப்பூமியில் வாழ்ந்ததையே மறுத்து விட முடியுமா? உயிருடன் உள்ளவரை ஸகாத் கொடுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்றால் அதற்குரிய வசதி வாய்ப்பு இருந்தால் என்றே புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேற்கண்ட வசனத்தை வைத்து ஈஸா (அலை) மரணித்து விட்டார்கள் என்று முடிவு செய்ய முடியாது.
ஈஸா நபி உயிருடன் உள்ளார் என்ற கருத்தை வலுவூட்டக் கூடிய மற்றொரு சான்றாகவும் இது அமைந்து விடுகிறது.
ஈஸா நபியவர்கள் மரணித்து விட்டார்கள் எனக் கூறுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். ஆராய்ந்து பார்த்தால் அறியாமையின் அடிப்படையில் அவர்களின் வாதம் எழுப்பப்பட்டிருப்பதை அறியலாம்.
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
(திருக்குர்ஆன் 3:144)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக் கூடாது; இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர, முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது "ஈஸா நபி மரணித்து விட்டார்கள்' என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாகச் சிலர் வாதிடுகின்றனர்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.
ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால், இக்கருத்து மேலும் வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித் தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித் தான் நபித் தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தனர்.
இந்த வரலாறு புகாரி (1242, 3670, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலு சேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ர-) அவர்களின் வாதத்தை நபித் தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். "ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது' என்று நபித் தோழர்கள் எதிர்க் கேள்வி கேட்டிருப்பார்கள். இது அவர்களின் வாதம்.
திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாதவர்கள் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழி முறையல்ல.
இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். பல இடங்களில் அது குறித்து கூறப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.
திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதி விலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.
"ஈஸா நபியைத் தவிர' என்று இந்த இடத்திலேயே கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.
"முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்' என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதி விலக்கு அளிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.
(திருக்குர்ஆன் 43:61)
ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 4:159)
ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று இவ்விரு வசனங்களும் அறிவிக்கின்றன.
எனவே 'அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள்'' என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து 'ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் அவருக்கு முன் மரணித்து விட்டார்கள்'' என்று தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு முடிவு செய்யும் போது, எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.
இவ்விரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
(திருக்குர்ஆன் 5:75)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து 'அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்' என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.
இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.
இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகின்ற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?
'ஈஸா தூதர் தான்; அவரே மரணித்து விட்டார்'' என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.
மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா? 'ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்' என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் ஞானமிக்கவன், நுண்ணறிவாளன், அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு, இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.
அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?
அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர் எனக் கூறி விட்டு அவர் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை அல்லாஹ் மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி அவரது கடவுள் தன்மையை இறைவன் மறுத்திருப்பான்.
முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம். அது போல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித் தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் சான்றாகக் காட்டுவதும் சரியல்ல. ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித் தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் நபித் தோழர்கள் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர்.
நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் 'நபிகள் நாயகம் மரணிக்கவில்லை'' என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ர-) அவர்களின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.
அனைவருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரிந்த விதி விலக்குகளை யாரும் சான்றாகக் காட்டிப் பேச மாட்டார்கள். எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததாகக் கூறவில்லை.
வளரும் இன்ஷா அல்லாஹ்...
சென்ற இதழின் தொடர்ச்சி...
ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்
நோயாளி ஓதவேண்டிய பிரார்த்தனைகள்
கடந்த இதழில் நாம் சுட்டிக் காட்டியதைப் போன்று, அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹூம்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நோயாளிகள் ஓதிக் கொள்ளலாம்.
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து,
"பிஸ்மில்லாஹ்' என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை
"அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு' என்று சொல்வீராக'' என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
நூல்: முஸ்லிம் 4430
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது
அல்லாஹும்ம இன்னீ அப்துக, வப்னு அப்தி(க்)க, வப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக, அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வநூர ஸத்ரீ, வஜிலாஅ ஹுஸ்னீ, வதஹாப ஹம்மீ''
(பொருள்: அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.
இறைவா! இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும். உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.)
என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி விடுவான். அவருடைய கவலையின் இடத்தில் சந்தோஷத்தைப் பகரமாக்கி விடுவான்.
"அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகளை நாங்கள் கற்றுக் கொள்வது எங்களுக்கு அவசியமானதா?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள், "அவற்றை யார் செவியுறுகிறாரோ அவர் அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 4091
அய்யூப் நபியவர்கள் தமக்குக் கடுமையான நோய் ஏற்பட்ட போது பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.
அன்னீ மஸ்ஸனியல் லுர்ரு வஅன்த்த அர்ஹமுர் ராஹிமீன்
"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனைப் பிரார்த்தித்தார்.
அல்குர்ஆன் 21:83
ஒருவருக்குத் தாங்க முடியாத துன்பம் அல்லது நோய் ஏற்படும் போது பின்வருமாறு பிரார்த்திக்கலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆக வேண்டும் என்றிருந்தால்,
"இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல்: புகாரி 6351
தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாமா?
தண்ணீரில் ஓதி ஊதிக் குடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது.
சிலர் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டி தண்ணீரில் ஓதி ஊதிக் குடிக்கலாம் என்று கூறுகின்றனர்.
உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன் அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத நோய் இருந்தது. அந்தப் பெண் "அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது'' என்று கூறினார். நபியவர்கள் "என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். "இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு'' என்று கூறினார்கள்.
உம்மு ஜுன்துப் (ரலி) கூறுகிறார்: அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் "அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்'' என்று கூறினார். மேலும் (உம்மு ஜுன்துப்) கூறுகிறார்: நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் "அவனது நோய் நீங்கி விட்டது. சாதாரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்'' என்று கூறினாள்.
நூல்: இப்னு மாஜா 3523
இந்த ஹதீஸைத் தான் தண்ணீரில் ஓதி ஊதும் தொழில் செய்வோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
இமாம் அஹ்மத் அவர்கள் "இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை' என்றும், இப்னு மயீன் அவர்கள் "இவர் பலமானவர் இல்லை' என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
அபூஸுர்ஆ அவர்கள், "இவர் பலவீனமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக ஆக்கக் கூடாது' என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், "இவர் உறுதியற்றவர்' என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் "இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இவரிடமிருந்து வர ஆரம்பித்து விட்டன' என்றும் விமர்சித்துள்ளனர்.
யஃகூப் பின் சுப்யான் அவர்கள், "இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது' என்றும் விமர்சித்துள்ளனர்.
இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், "ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்' என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப், (பாகம்: 11, பக்கம்: 288)
மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் "சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்'' என்ற அறிவிப்பாளரும் இடம் பெற்றுள்ளார். "இவர் யாரென்றே அறியப்படாதவர்'' ஆவார்.
இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒரு வாதத்திற்கு இது சரியானது என்று வைத்துக் கொண்டால் கூட இதில் எந்த ஒன்றையும் ஓதி ஊதிக் கொடுத்ததாக வரவில்லை. நபியவர்கள் எதையும் ஓதாமல் தம்முடைய கைகளைக் கழுவி வாய்கொப்பளித்து கொடுத்ததாகத் தான் வந்துள்ளது.
மேலும் நபியவர்கள் அல்லாஹ்விடம் நிவாரணம் தேடச் சொன்னதாகத் தான் மேற்கண்ட செய்தியில் இடம் பெற்றுள்ளது.
இது சரியானதாக இருந்தால் கூட நபியவர்களுக்கு மட்டும் உரிய தனிச் சிறப்பு என்று தான் கருத முடியுமே தவிர இதிலிருந்து அனைவரும் இவ்வாறு செய்யலாம் என்று சட்டம் எடுப்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதில் இல்லை.
ஓதி, தண்ணீரில் ஊதிக் குடிக்கலாம் என்பவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் நோயுற்றிருந்த நிலையில் நபியவர்கள் அவரிடம் (நலம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டிற்குள்) நுழைந்தார்கள். "மனிதர்களின் இரட்சகனே ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸை விட்டும் இந்த நோயைக் குணப்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள். பிறகு பத்ஹான் (என்ற இடத்தில்) இருந்து மண்ணை எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டார்கள். பிறகு தண்ணீரை அதில் ஊதி அதனை அவர் மீது கொட்டினார்கள்
நூல்: அபூதாவூத் 3387
இந்த ஹதீஸ் ஓதி, தண்ணீரில் ஊதுவதைப் பற்றிப் பேசவில்லை என்பதுடன் இது பலவீனமான ஹதீஸாகவும் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் யூசுஃப் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் யார் என்று அறியப்படாதவராவார். இவர் நம்பகமானவர் என்று யாரும் உறுதிப்படுத்தவில்லை.
பொருளியல் தொடர்: 21
கடன் தள்ளுபடி
கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான்.
ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். "கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்' என்று கூறிவிட்டால் மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் "நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?'' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், "வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!'' என்று கூறினார். உடனே, "அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்!'' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி 2077
மற்றோர் அறிவிப்பில், "சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!'' என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இன்னோர் அறிவிப்பில், "வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!'' என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மற்றோர் அறிவிப்பில் "வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!'' என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இங்கு நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் எவ்வளவு தான, தர்மம் செய்தாலும் அதற்கு இப்படியான ஒரு வாய்ப்பை அல்லாஹ் தருவானா? இல்லை. ஆனால் கடனுக்கு இப்படியான ஒரு பாக்கியத்தை அல்லாஹ் வைத்துள்ளான்.
நாம் கடன் கொடுத்து, அந்தக் கடனைத் தள்ளுபடி செய்யும் போது, நான் இதை உனக்காகச் செய்யவில்லை. மாறாக எனக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தரவேண்டும்; மறுமை வாழ்க்கையை அல்லாஹ் எனக்கு எளிதாக்க வேண்டும் என்று நினைத்து தள்ளுபடி செய்ய வேண்டும். மறுமை நன்மையை எதிர்பார்த்து இதைசெய்ய வேண்டும். அதே போல நபி (ஸல்) அவர்கள் ஒரு சம்பவத்தை சொல்லுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வா-பரிடம், "(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்'' என்று சொல்-வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்த போது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3480
கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்
ஒருவர் கடன் பட்டிருக்கிறார். இன்னொருவர் கடன் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது கடன் வாங்கியவர் நம்மிடம் வந்து, எனக்காக அவரிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால், நாம் சொல்வதைக் கடன் கொடுத்தவர் கேட்பார் என்றால் நாம் சென்று அவரிடத்தில் அந்தக் கடனை விட்டுக் கொடுக்குமாறோ, அல்லது அவகாசம் கொடுக்குமாறோ அல்லது மன்னித்து விடுமாறோ அவருக்காகப் பேசலாம்.
நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.
(புகாரி 2706, 457, 471, 2418, 2424, 2710)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüன் காலத்தில்) எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு குரல்கள் உயர்ந்தன. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கüருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். தமது அறையின் திரையை விலக்கி, "கஅப்!'' என்றழைத்தார்கள். நான், "இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலüத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை (இந்த அளவை) உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்துவிடு!'' என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) "எழுந்து சென்று கடனை அடைப்பீராக!'' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 457
அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபி (ஸல்) அவர்கள் பரிந்த்துரை செய்கின்றார்கள். ஆனால் கடன் கொடுத்தவர் அதனை ஏற்று கொள்ளவில்லை என்ற செய்தியையும் ஹதீஸ்களில் (புகாரி 2127, 2395, 2396, 2406, 2601, 2709) காணமுடிகிறது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையார் உஹதுப் போரின் போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்கüடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, "நாம் உன்னிடம் காலையில் வருவோம்'' என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகüல் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்கüன் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.
நூல்: புகாரி 2395
வளரும் இன்ஷா அல்லாஹ்
09.05.2012. 05:41
ஏகத்துவம் ஏப்ரல் 2012
ஏகத்துவம் ஏப்ரல் 2012
கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்
கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.
விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.
உச்சி மண்டையைப் பிளக்கின்ற உச்சி வெயிலின் கோரப் பிடியிலிருந்தும் கொடூர வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காகத் தான் கோடை விடுமுறை!
கோடை விடுமுறையின் இந்த நோக்கத்தையே இவர்களின் வெயில் விளையாட்டு தகர்த்தெறிந்து விடுகின்றது; தவிடுபொடியாக்கி விடுகின்றது.
இதற்கு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம். அதன் காரணமாகக் கோடை வெயிலின் கொடூரத்தை விட்டும் அவர்கள் தப்பலாம்.
கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி, கண்ட கண்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது, பெண்களைக் கேலி செய்வது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, ஊதாரித்தனமாகச் செலவு செய்வது போன்ற வீணான, பாவமான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
புகை பிடிப்பதிலிருந்து போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற பாவச் செயல்களிலும் பலியாகி விடுகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக, கோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.
அந்தந்த மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்வி, ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இன்று கல்வி என்பது உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உலகக் கல்வி ஒரு குழந்தையின் நாள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. மார்க்கக் கல்வியைப் பொறுத்த வரை காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் என்ற ஓரக் கல்வியாக ஆகி விட்டது. பலருக்கு அதற்குக் கூட நேரமில்லை.
மக்தப் மதரஸாக்களில் இந்த ஓர நேரங்களில் ஓத வருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இருநூறு அல்லது முன்னூறு இருக்கும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரேயொரு ஆசிரியர் தான் இருப்பார். அலிப் சபர் ஆ, பே சபர் பா என்று கூட்டாக ராகம் போட்டு ஒரு பாட்டு பாடி விட்டுக் கலைந்து விடுகின்றனர்.
இந்தக் கூட்டுக் கல்வியில் குழந்தைகள் என்ன கற்று விடப் போகின்றார்கள்? சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில் தான் கோடைகாலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.
குறைந்த நாட்களில் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், தொழுகைப் பயிற்சி, தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள், அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள், மனனம் செய்தல் போன்ற ஒரு குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி மார்க்கக் கல்வி பயிலச் செய்யுங்கள். கொடிய நரகத்திலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
கேள்வி பதில்
மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூடுமா?
? ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?
உவைஸ்
எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும்.
உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான்.
சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.
அதிக மதிப்புள்ள பொருளை குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள்.
உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.
அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள்.
இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன.
முதல்வகை
நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள்.
உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால் 6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள்
இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள்.
பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள்.
தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும்.
ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள்.
அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார்.
இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள்.
இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.
ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும்.
இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்.
இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும்.
இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது.
பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.
இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர்.
இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்?
இரண்டாவது வகை
இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் மற்றொரு வகையான மோசடியும் நடைபெறுகிறது.
அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி இல்லாத பொய்களைச் சொல்லி அதனை மிகப்பெரும் விலையில் யாருக்காவது விற்பதாகும்.
வியாபாரத்தில் பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் ஆகும். அது வியாபாரத்தின் பரக்கத்தை அழித்துவிடும்.
சாதாரண ஒரு படுக்கையை, "இது அதி அற்புதமான சக்தி வாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும். இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது'' என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்ப வைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.
சர்க்கரை நோய்க்கு மருந்து தருகிறோம் என்று கூறி ஏதேனும் ஒரு மாத்திரையைத் தருவார்கள். இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் இனி ஒருபோதும் சர்க்கரை நோய் ஏற்படாது என்று அடித்துச் சொல்வார்கள். பத்து ரூபாய் மாத்திரையை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பார்கள்.
இப்படி மாத்திரை வாங்கியவர், இன்னும் ஆறு பேருக்கு அந்த மாத்திரையை விற்றால் நீங்கள் கொடுத்த பத்தாயிரம் உங்களுக்குக் கிடைத்து விடும். அந்த ஆறு பேரும் தலா ஆறு பேருக்கு விற்றால் உங்களுக்கு 60,000 லாபம் கிடைக்கும். இப்படி மூன்று அடுக்கு போய் விட்டால் உங்களுக்குக் கார் பரிசு கிடைக்கும். ஐந்து அடுக்கு போனால் பங்களா பரிசு கிடைக்கும். பத்து அடுக்கு போய் விட்டால் அமெரிக்காவுக்கு சுற்றுலா! இருபது அடுக்கு போய் விட்டால் தென்ஆப்பிரிக்காவில் ஒரு தீவு வாங்கித் தருவோம் என்று கற்பனையில் மிதக்க வைப்பார்கள்.
ஆனால் சர்க்கரை நோய்க்கு இப்படி ஒரு மருந்து இருந்தால் அது அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களுக்குத் தெரியாமல் போகுமா? பிரபல மருந்துக் கம்பெனிகள் அதைத் தயாரிக்காமல் இருக்குமா? என்றெல்லாம் யாரும் சிந்திக்க மாட்டார்கள். கார், பங்களா கனவு தான் பிரதானமாக இருக்கும்.
சாதாரண ஒரு பற்பசையைத் தந்து, இதனை பட்டாணி அளவில் வைத்தாலே அதிக அளவில் நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்ப வைத்து அதிகமான விலையில் விற்பனை செய்வார்கள்.
இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள். "நான் மிகவும் ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரனாகி விட்டேன்' என்றெல்லாம் சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள்.
உற்பத்திச் செலவு இரண்டாயிரம் உள்ள பொருளை இப்படிப் பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.
இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலாபமாக வழங்குவார்.
ஒவ்வொருவரும் தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும் தான் அறிவார்கள். யாரும் கம்பெனியோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.
இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும் போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள்.
நாம் உதாரணத்திற்குத் தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள், பல பொருட்களை, பல விதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன.
இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்?
மூன்றாவது வகை
அன்றாடம் தேவைப்படக்கூடிய சில அவசியமான பொருட்களை ஒரு கம்பெனி தயார் செய்யும். உதாரணத்திற்கு சோப்பு, பவுடர், பேஸ்ட், சட்டை இது போன்ற பொருட்களைத் தயார் செய்யக் கூடிய ஒரு கம்பெனியாக இருக்கும்.
இவர்கள் தயார் செய்யும் பொருட்களை இவர்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் ஆட்களைப் பிடித்து அவர்களின் மூலம் விற்பனை செய்வார்கள். இதற்கு அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். யார் அவர்களுடைய கம்பெனியில் உறுப்பினர்களாக இணைகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் வியாபாரச் சரக்கை வழங்குவார்கள். உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு வியாபாரச் சரக்கு வழங்க மாட்டார்கள்.
இப்படி உறுப்பினர்கள் மூலம் வியாபாரம் செய்வதால் விளம்பரச் செலவு கிடையாது; அதனால் அந்த லாபத்தை நாங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம் என்று வியாக்கியானம் கூறுவார்கள்.
அவர்களுடைய கம்பெனியில் நாம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொன்னால் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட வேண்டும். அதில் ஒரு கணிசமான தொகை உறுப்பினர் கட்டணம் என்று எடுத்துக் கொண்டு மீதித் தொகைக்கு நாம் வியாபாரம் செய்வதற்கு சரக்கு தருவார்கள்.
உதாரணத்திற்கு ஒருவர் 20,000 ரூபாய் செலுத்தினால் 10,000 ரூபாயை உறுப்பினர் கட்டணம் எனப் பிடித்துக் கொண்டு 10,000 ரூபாய்க்கு சரக்கு தருவார்கள். அவர்கள் நமக்கு குறிப்பிட்ட விலையில் சரக்கினைத் தருவார்கள். நாம் அதனை விற்றால் நமக்கு அதில் இலாபம் கிடைக்கும்.
இவ்வாறு மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இத்தோடு நில்லாமல் நீங்கள் விற்பனை செய்வதோடு நின்று விடாமல் நீங்கள் இரண்டு உறுப்பினர்களை எங்கள் கம்பெனியில் சேர்த்து விட்டால் அவர்கள் செய்யும் விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்று நமக்கு கூறுவார்கள்.
உதாரணத்திற்கு நாம் சேர்த்து விடுகின்ற இருவர் ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் நமக்கு இலாபத்தில் இரண்டு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட ஒரு அளவு பங்கு தருவார்கள்.
இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்ட இரண்டு பேர் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு நபர்களைச் சேர்த்து விடுவார்கள். அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும்.
இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும் போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.
சில நேரங்களில் 100 பேர், 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும் போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.
நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்?
நாம் எந்த வியாபாரமும் செய்யாமல் நமக்கு இலாபம் கிடைக்கிறது எனும் போது அது ஹராமான சம்பாத்தியமாகத் தான் இருக்கும்.
இதுபோன்று சங்கிலித் தொடரில் விற்பனை செய்பவர்கள், ஹலாலான முறையில் விற்றார்களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் ஏமாற்றி விற்பனை செய்தால் அந்தப் பாவத்திலும் நமக்கு பங்கு இருக்கத் தானே செய்யும்?
நாம் சேர்த்து விடுவதினால் மட்டும் நமக்கு இலாபம் கிடைக்கும் என்பதே நியாயமானது கிடையாது. ஒரு வாதத்திற்கு இதைச் சரி என்று வைத்து கொண்டாலும் முதல் இருவரைத் தான் நாம் சேர்த்து விடுகிறோம். அவர்களுக்குப் பின்னால் இணைபவர்கள் செய்யும் வியாபாரத்தில் இருந்தும் நமக்கு பங்கு வருகிறதே?
இப்படி இலாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான உற்பத்திச் செலவுள்ள பொருட்களைக் கூட பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி அதிகமான விலைக்கு விற்பனை செய்ய வைக்கின்றார்கள். ஏமாற்றியதில் கிடைக்கும் பணத்தில் தான் பங்கு தருகின்றார்கள். எனவே இது எப்படி நமக்கு ஹலாலாக முடியும்?
இப்படி பொய்களைச் சொல்லி விற்பனை செய்வதன் மூலமும் அந்த வியாபாரம் ஹராமானதாக மாறிவிடுகிறது.
பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள் தான்.
வியாபாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்த சில போதனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.
(நூல்: முஸ்லிம் 3033)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 164
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!ள
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2079
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 2237
ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்
நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும்.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம்.
வலிக்கு ஓதிப் பார்த்தல்
நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை தொட்டு அதனால் மண்ணைத் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்த்துள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி,
பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஃளினா லியுஷ்ஃபா பிஹி சகீமுனா பிஇத்னி ரப்பினா
"அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்'' என்று கூறுவார்கள்.
நூல்: முஸ்லிம் 4417
நபியவர்கள் மேற்கண்ட வழிமுறையுடன் பல்வேறு முறைகளில் ஓதிப்பார்த்தலை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
வலக்கரத்தால் வலியுண்டான இடத்தைத் தடவி ஓதிப்பார்த்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து,
அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்
என்று பிரார்த்தித்தார்கள்.
(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)
நூல்: புகாரி 5743
ஓதி, கைகளில் ஊதித் தடவுதல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.
நூல்: புகாரி 5748
இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள் என புகாரி 5018வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
நோயுற்றவர் தாமாகவே இந்த அத்தியாயங்களை ஓதி தம்மீது தடவிக் கொள்ளலாம்.
நபியவர்கள் தாம் நோயுற்ற போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்கு ஓதிப்பார்க்குமாறு வேண்டியுள்ளதால் நாமும் மற்றவர்களிடம் அவ்வாறு தமக்குச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம்.
ஓதி வலியேற்பட்ட இடத்தில் உமிழ்தல்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க மறுத்து விட்டார்கள். பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. ஆகவே, அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எலலா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டனர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது! என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஒரு ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.
அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...' என்று ஓதி உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று (நபித்தோழர்) ஒருவர் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப்பார்த்தவர் கூறினார்.
நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு, நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறினார்கள்
நூல்: புகாரி 5749
நோய், துன்பம், மற்றும் கவலைகளின் போது ஓதும் துஆக்கள்
நோய் மற்றும் கவலை துன்பம் நீங்குவதற்காக பல்வேறு துஆக்களை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் பிரார்த்தனைகள்.
நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர் தானே செய்யும் பிரார்த்தனைகள்.
மற்றவர்கள் நோயாளிகளுக்குச் செய்ய வேண்டிய துஆக்கள்
மேலே நாம் குறிப்பிட்டுள்ள அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹும்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நாம் நோயாளிகளுக்காக ஓதிக் கொள்ளலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால்,
கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.
(தமது அந்த வழக்கப்படியே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்துவான் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, "நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்'' என்று சொன்னார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.) என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3616
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தன்னுடைய மரணத்தை நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது ஏழு தடவை
அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக”
(உனக்கு ஆரோக்கயம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) என்று கூறினால் (கண்டிப்பாக) அவர் ஆரோக்கியம் வழங்கப்படுவார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2137
நபியவர்கள் நோயுற்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் துஆவைக் கொண்டு ஓதிப் பார்த்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது,
"பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க''
என்று ஓதிப் பார்த்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்.)
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி)
நூல்: முஸ்லிம் 4403
தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்...
பொருளியல் தொடர்: 21
கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை
இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால் கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள்.
இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, "நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்' என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான்.
மாறாக அதனை மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லாஹ் அதனை அப்படியே ஆக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பின் வரக்கூடிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்கüன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல்: புகாரி 2387
நபி (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்கு பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் (நபியவர்களின் தோழர் ஒருவரை அழைத்து எனக்கு யாரிடத்திலாவது) கடன் வாங்கி வர வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர், அவர்களிடம் "உம்முல் முஃமினே, நீங்கள் கடன் வாங்கி வருமாறு கேட்கிறீர்கள். உங்களிடம் நிறைவேற்றுவதற்கு ஒன்றும் இல்லையே'' என்று கூறினார். அதற்கு மைமூனா (ரலி) சொன்னார்கள்: "யார் நிறைவேற்ற நாடியவராக கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
நூல்: திர்மிதி 4608
மரணிப்பவருடைய வஸிய்யத்
ஒரு மனிதன் அவனுடைய மரணத் தருவாயில் கண்டிப்பாக வஸிய்யத் செய்ய வேண்டும். தன்னுடைய பிள்ளைகளை அழைத்து வஸிய்யத் செய்ய வேண்டும். "நான் இன்னாரிடம் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்'' என்று கூற வேண்டும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்!'' என்றார். மறுநாள்(போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்றில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது.
(நூல்: புகாரி 1351)
பெற்றோரின் கடனைத் தீர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இன்றைக்குப் பெற்றோரின் கடனை நிறைவேற்றாமல் அவர்களுக்காக மார்க்கம் காட்டாத கத்தம் பாத்திஹா, மவ்லூது போன்றவற்றை ஓதி வருவதைக் காண்கிறோம், இதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். நான் கட்டளையிடாத ஒன்றை ஏன் செய்தாய்? என்று தான் கேட்பான்,
ஆனால் தந்தை, தாய் பட்ட கடன் பிள்ளையிடம் தான் சேரும். அதனை இன்றைய சமூகத்தில் அப்படியே விட்டு விடுவதைகக் காண்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஒரு மனிதர் வந்து, "என்னுடைய தாயோ அல்லது தந்தையோ (இரண்டு விதமாகவும் ஹதீஸ்களில் வருகிறது) ஹஜ் கடமையான நிலையில் மரணித்து விட்டார். அவருக்காக வேண்டி நான் நிறைவேற்றவேண்டுமா? ஹஜ் கடமையா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதரிடம், "உம்முடைய தாய் கடன் வாங்கினால் அதனை நீர் தானே நிறை வேற்றவேண்டும் அப்படி என்றால் அல்லாஹ்வுடைய கடனை நிறைவேற்று! கடன் எப்படி கடமையோ அதேபோன்று தான் ஹஜ்ஜும் கடமை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பெற்றோர் பட்ட கடனுக்கு அவருடைய பிள்ளைகள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது, நமது பெற்றோருடைய நண்பர்களிடமும் விசாரிக்க வேண்டும். அப்படி கடன் பட்டு இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற முடியாது என்றால், "எனது தந்தை மரணித்து விட்டார். என்னிடமும் அதை நிறைவேற்றுவதற்கு வசதி இல்லை. ஆகையால் அதனை இந்த உலகத்திலேயே மன்னித்து விடுங்கள்'' என்று கூறவேன்டும். இதனை யாரும் செய்வது கிடையாது.
இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.
"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 4.11.12)
ஆண்களுக்கு இவ்வளவு, பெண்களுக்கு இவ்வளவு என்று கூறிக்காட்டும் போது இது எல்லாம் அவர் செய்து விட்டுச் சென்ற வஸிய்யத்துக்குப் பின்னாலும் அவருடைய கடனை அடைத்ததற்குப் பின்னாலும் தான். அதற்கு முன்னால் அதை வாரிசு எடுக்க முடியாது. ஆனால் இதை இன்றைக்கு யாரும் செய்வதில்லை.
பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலுள்ள சொத்தை விட்டுச் சென்றால் அதனை அப்படியே கடன் வாங்கியவனிடம் கொடுத்து விடவேண்டும். அது போக அதிகமாக இருந்தாலும் நம்முடைய கையிலிருந்து அதனைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் இதனை நாம் எத்தனை நபர்கள் செய்கிறோம்?
நபி (ஸல்) அவர்கள் கடன்பட்ட ஒருவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அப்படியென்றால் நம்முடைய தாய், தந்தையரின் கடனை அடைக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் சென்று விடுவார்களே! எனவே நாம் எப்பாடு பட்டாவது கடனை அடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது பிள்ளைகள் மீது கடமையாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1852)
நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது கவலை காரணமாக வசூல் வாங்குவதெல்லாம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இருந்ததெல்லாம் காலியாய் போய் ஒன்றுமில்லாமல் இருந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே எல்லாவற்றையும் முடுக்கி விடுகிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் வரும் என்று தகவல் வந்தவுடன் அபூபக்கர் (ரலி) ஓரிரு நாட்கள் தாமதிக்கிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் அல்லது பேரித்தம் பழம் அல்லது கோதுமை ஏதோ ஒன்று அங்கிருந்து வந்த உடன் அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களை எல்லாம் அழைத்துக் கூறினார்கள்.
"மக்களே! ஒரு பொருள் வந்திருக்கிறது. அதில் யாரிடத்திலாவது நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டு இருந்தால் அல்லது வாக்குறுதி அழித்திருத்தால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். அதனை ஏன் அபூபக்கர் நிறைவேற்ற வேண்டும்? தந்தையுடைய கடனை எப்படி மகன் நிறைவேற்ற வேண்டுமோ அதே போன்று ஆட்சியாளர் பெற்ற கடனுக்கு அவருக்குப் பிறகு யார் வருகிறாரோ அவர் தான் அதற்கு பொறுப்பாளி.
எப்படி நல்லது கெட்டதுக்கு பொறுப்பாளியோ அப்படித் தான் கடனுக்கும் அவர் பொறுப்பாளியாவார். எனவே அதனை அவர் நிறைவேற்ற வேன்டும் இதன் அடிப்படையில் அதனை அபூபக்கர் (ரலி) நிறைவேற்றினார்கள். அந்த அடிப்டையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் கடன் வாங்கியிருந்தார்களோ அவர் வந்து எடுத்து கொள்ளட்டும் என்று கூறினார்கள். அப்போது ஆளுக்கு ஆள் அதனை வாங்கிப் போக ஆரம்பித்தார்கள்.
அந்த அடிப்படையில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு ஒன்று தருவேன் என்று வாக்களித்திருந்தார்கள். அதனைப் போய் கேட்டவுடன் அப்படியே அள்ளி, அள்ளி ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். திரும்பவும் இன்னும் கொஞ்சத்தை கொடுங்கள் என்று கேட்கிறார். மீண்டும் ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். மீண்டும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க, மீண்டும் ஐநூறு திர்ஹம், ஆக மொத்தம் ஆயிரத்தி ஐநூறு திர்ஹங்கள் ஜாபிருக்கு அபூபக்ர் (ரலி) கொடுக்கிறார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, "நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று "நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. "இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக!'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2296 2298 2683 3137 3165 4383
நாம் மேலே விவரித்தது எல்லாம் கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேன்டிய விஷயங்கள் ஆகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 7
கியாம நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்
உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம் என்பதைக் கடந்த இதழில் கண்டோம்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.
ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்; இன்னும் மரணிக்கவில்லை; இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்:
வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்.
(திருக்குர்ஆன் 4:159)
ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இவ்வசனத்தில் வேதமுடையோர் என்று குறிப்பிடப்படுவதில் யூதர்களும், கிறித்தவர்களும் அடங்குவார்கள். இவ்விரு சாராரும் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.
யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "தவறான வழியில் பிறந்தவர்' என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.
கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.
எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.
இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.
இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டுவோம்.
"அவரை நம்பிக்கை கொள்ளாமல்'' (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் "அவரை' என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.
இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள "அவரது மரணத்திற்கு முன்னர்'' (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த "அவரது' என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.
"வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்'' என்று அவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
"அவரது மரணத்திற்கு முன்னர்'' என்றால் "ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்'' என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.
பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.
அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம்.
ஆனால், இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளில் முதல் மொழி பெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. முதல் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.
முதல் மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!
"வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.''
இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.
அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் தாம் மரணிப்பதற்கு முன் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்றெல்லாம் இந்த மொழி பெயர்ப்பின்படி கருத்து அமைகின்றது.
மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.
ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.
இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, "அவரது மரணத்திற்கு முன் - அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.
இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் "ஈஸா மரணிப்பதற்கு முன்னால்'' என்று கூற முடியாது. மேலும்,
"நம்பிக்கை கொண்டார்கள்'' என்று இறந்த கால வினையாகக் கூறாமல் "நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்'' என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.
இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.
சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.
ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி "அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்'' என்று கூறவே முடியாது.
ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் "இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்'' என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
(பார்க்க: புகாரி 3448)
ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது மேலும் உறுதியாகின்றது.
அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், "அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.
திருக்குர்ஆன் 4:156-159
ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.
ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "உயர்த்திக் கொண்டான்' என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.
"அவரை உயர்த்திக் கொண்டான்' என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் "தன்னளவில்' என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.
"ரபஅ' என்ற சொல்லுக்கு "அந்தஸ்து உயர்வு' என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.
"உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்'' என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான்
(திருக்குர்ஆன் 19:57)
ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.
தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் "ரபஅ' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.
மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்சலிட்டனர். "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே! நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம். நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். "அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி (எனக் கூறுவீராக.)
(திருக்குர்ஆன் 43:57-61)
ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?
ஈஸா நபியைப் பொறுத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர்.
அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார்; என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன்மொழிகள் தெரிவிக்கின்றன.
கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.
'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூற்கள்: புகாரி, முஸ்லிம்
நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். 'யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்'' என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.
முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் 'போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.
அவர் இறங்கக் கூடிய காலத்தில் 'இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'' என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.
தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி),
நூல்: திர்மிதீ
இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.
ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்குக் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இதே அடிப்படையில் நபித்தோழர்களும், இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை.
குர்ஆனுக்கு முரண்படும் குறிப்பிட்ட சில ஹதீஸ்களுக்கு மாத்திரம் பதில் என்ற பெயரில் உளறுகிறார்களே தவிர குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை விதியை மறுக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த அடிப்படைக்குப் பல சான்றுகளை நாம் தெளிவுபடுத்தி பல வருடங்கள் ஆகியும் இன்றுவரை இதைப் பற்றி இவர்கள் வாய்கூட திறக்கவில்லை.
வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டும் இவர்களால் இந்த அடிப்படை விதியை மறுக்கும் விஷயத்தில் வாய் திறக்க முடியவில்லை. காரணம் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று கூறினால் இவர்கள் பொய்யர்கள் என்பது வெட்வெளிச்சமாகி விடும். இவர்களின் எந்த உளறலுக்கும் இடம் கொடுக்காத வகையில் இதற்குரிய ஆதாரங்கள் அமைந்துள்ளன.
இந்த விதியின் அடிப்படையில் அஜ்வா வகை பேரீச்சம் பழம் பற்றி புகாரியில் இடம்பெற்றுள்ள செய்தி பலவீனமானது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.
எனவே அஜ்வா ஹதீஸ் தொடர்பாக நம்முடைய நிலைபாட்டைத் தெளிவுபடுத்திய பின் அதற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் உரிய பதிலைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் ஏழு " (அஜ்வா' ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 5445
அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்கள் விஷத்தை முறிக்கின்ற அளவுக்கு ஆற்றல் கொண்டவை. மனித உயிரைக் கொல்லும் எப்படிப்பட்ட விஷமாக இருந்தாலும் இந்தப் பழத்தை உண்டவருக்கு அந்த விஷம் ஒன்றும் செய்யாது என இந்தச் செய்தி கூறுகின்றது.
நிரூபித்துக்காட்ட வேண்டும்
இந்தச் செய்தி மனிதர்களின் சுய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கம் நரகம் போன்ற இஸ்லாத்தின் மறைவான விஷயங்களைப் பற்றி பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.
மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதிபயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. எனவே உண்மையில் அஜ்வா பழத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும். இந்தச் செய்தியை நம்பக் கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
இதை நிரூபித்துக்காட்ட இவர்களுக்கு அஜ்வா பழம், விஷம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. இவை இரண்டையும் எளிதில் வாங்கிவிட முடியும். எனவே அஜ்வா பழத்தை உண்டு விட்டு விஷம் குடிக்க வேண்டும். இதன் பிறகு விஷம் இவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டால் இந்தச் செய்தி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
இந்தச் செய்தி உண்மையானது என்பதை நிரூபிக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. அசத்தியத்தைத் தோலுரித்துக் காட்ட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.
ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான். "உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்'' என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.
தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 2:258
இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் அஜ்வா பழம் தொடர்பான செய்தி அசத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்.
இந்தச் செய்தியைச் சரியானது என்று வாதிடக்கூடியவர்கள் நாம் விடும் சவாலை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இது சரியான செய்தி என்று அவர்களின் வாய் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதன் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள்.
அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
அல்குர்ஆன் (4 : 87)
தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.
அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)
நூல்: அஹ்மத் 15478
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1
எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.
நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276
உளறல்களும் விளக்கங்களும்
இந்தச் செய்தியைச் சரி காணக்கூடியவர்கள் நமது வாதங்களுக்குப் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு உளறி வருகிறார்கள். இவர்களின் இந்த உளறல்களே இந்தச் செய்தி பொய்யானது என்பதை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
பயணத்திலும் உள்ளூரிலும் கடமையான தொழுகை இரண்டு ரக்அத்களாக இருந்தது. இதன் பிறகு உள்ளூரில் இருந்தால் நான்கு ரக்அத் தொழ வேண்டும் என இரண்டு ரக்அத்கள் அதிகமாக்கப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முன்பு கூறினோம்.
இதன் பிறகு வேறு சில செய்திகளைக் கவனிக்கும் போது இந்தச் செய்தியை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்கிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து முன்பு கூறிய கருத்திலிருந்து மாறி இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு வந்தோம்.
அஜ்வா பேரீச்சம் பழம் தொடர்பாக மறுப்புக் கூற வந்தவர்கள் இந்தப் பிரச்சனையை சுட்டிக்காட்டி நாம் ஆய்வில் அரைகுறையாக இருக்கின்றோம் என்பதைப் பின்வருமாறு கூறியுள்ளனர்.
பயணத் தொழுகை பற்றிய ஹதீஸை முன்னர் மறுத்து விட்டுப் பின்னர் நாம் ஏற்றுக் கொண்டதால் நாம் அரைகுறை ஆய்வு செய்பவர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களின் இந்த உளறல்படி பார்த்தால் உலகத்தில் ஒரே ஒரு ஆய்வாளர் கூட இருக்க மாட்டார். இவர்கள் உலகில் யாரைப் பெரிய ஆய்வாளர் என்று கூறுகிறார்களோ அவர்களும் இதே அளவுகோல் பிரகாரம் அரைகுறை ஆய்வாளர்கள் தான்.
மார்க்க விஷயங்களில் முன்பு ஒரு கருத்தைக் கூறிவிட்டு அது தவறு என்று தெரிய வரும் போது அதிலிருந்து மாறிக் கொள்வது அனைத்து ஆய்வாளர்களிடமும் சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடியதாகும்.
இத்தகைய தவறு வராத ஒரு ஆய்வாளரும் உலகத்தில் இல்லை. நான்கு இமாம்கள் உட்பட அனைத்து இமாம்களின் நிலையும் இதுவே. முன்பு ஒரு மார்க்கச் சட்டத்தைக் கூறிவிட்டு பின்பு மாற்றிய சம்பவங்கள் இமாம்கள் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன.
ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறிவிட்டுப் பிறகு அது சரியானது என்று கூறுவதும், சரியான செய்தி என்று கூறிவிட்டுப் பிறகு பலவீனமானது என்று கூறுவதும் இவர்கள் பெரிதும் மதிக்கும் அல்பானீ போன்ற அறிஞர்களிடம் நிறையவே ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அல்பானீ ஆய்வில் அரைகுறை என்று கூறுவார்களா?
சொன்னது தவறு என்று தெரிந்த பிறகும் ஊருக்குப் பயந்து கொண்டு உண்மையைச் சொல்லாமல் மறைப்பது தான் பெருங்குற்றமாகும். விமர்சிப்பவர்களுக்கு அஞ்சாமல், தான் சொன்னது தவறு என்று ஒருவர் வெளிப்படையாகக் கூறினால் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
சிறப்புக்குரிய ஒன்றைக் குறையாகச் சொல்லிக் காட்டுகிறார்கள் என்றால் இவர்களின் சிந்திக்கும் திறன் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.
மேலும் பயணத் தொழுகை தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் குறிப்பிட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று நாம் கூறிய போது இவர்கள் யாரும் சரியான விளக்கத்தை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவில்லை. இன்றைக்கு அஜ்வா பழ செய்தியைச் சரி காண உளறுவதைப் போன்று அந்தச் செய்தியிலும் உளறினார்கள்.
இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் இவர்களின் கற்பனைகளாக இருந்தது.
நாம் மறு ஆய்வு செய்யும் போது இதற்குரிய விளக்கத்தை ஆதாரங்களுடன் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. நாமாகத் தான் ஆய்வு செய்து அதை அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்
அஜ்வா செய்தி குர்ஆனுடன் முரண்படுகின்றதா?
அஜ்வா செய்தி மேற்கண்ட அடிப்படையில் குர்ஆனுடன் முரண்படுகின்றது என நாம் கூறியதற்கு இவர்கள் எழுப்பும் கேள்வி என்ன?
அஜ்வா பற்றிய ஹதீஸ் இந்த வசனத்துக்கு முரண்படுகிறது என்று நாம் எடுத்துக் காட்டவில்லையாம். அஜ்வா சாப்பிட்டால் விஷம் பாதிக்கும் என்று ஒரு வசனம் இருந்தால் தான் அது குர்ஆனுக்கு முரணாம். அப்படி ஒரு வசனம் இல்லாததால் இது குர்ஆனுக்கு முரண்படவில்லையாம்.
இது போன்ற கேள்விகள் கேட்பவர்கள் வடிகட்டிய மூடர்களாகத் தான் இருப்பார்கள். குர்ஆனுடைய போங்கை அறியாதவரே இது மாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். இறைவன் பயன்படுத்தும் ஒரு வார்த்தை பல்வேறு பிரச்சனைக்குத் தீர்வாக அமையக்கூடிய சிறப்பைப் பெற்றுள்ளது.
உதாரணமாக இஸ்லாத்தில் போதைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நவீன காலத்தில் கஞ்சா, ஹெராயின், அபின், போதை மருந்து ஊசிகள் இன்னும் பல பெயர்களில் போதைப் பொருட்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த போதைப் பொருட்களுக்கு இவர்கள் வைத்துள்ள எந்தப் பெயரும் குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஒருவர் கஞ்சா குடிக்கக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? அபின் சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? என்று கேட்டால் அவர் குர்ஆனைப் படிக்காதவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் படித்தும் புரியாத அறிவிலியாக இருக்க வேண்டும்.
இவர்களின் கேள்வியும் இந்த லட்சணத்தில் தான் அமைந்துள்ளது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. எதுவெல்லாம் பொய்யாக இருக்கின்றதோ அவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிரானவை என்று சாதாரண அறிவு படைத்த ஒவ்வொரும் அறிந்து கொள்வர். நான் சொல்வது போல் அல்லாஹ் சொன்னால் தான் ஒப்புக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்கே பாடம் நடத்தும் அறிவீனர்களை என்னவென்பது?
அஜ்வா வகை பேரீச்சம் பழத்தையும் விஷத்தையும் உண்டு பாதிப்பு ஏற்டவில்லை என்பதை நிரூபித்தாலே இந்த பேரீச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஜ்வா பழத்துக்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருப்பதாகக் கூறினார்கள் என்ற இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன.
இத்தனை ஆண்டுகளில் உலகத்தில் ஒருவர் கூட அஜ்வாவையும் விஷத்தையும் உண்டு நிரூபித்துக் காட்டவில்லை. இந்த ஹதீஸ் செயல்படுத்த இயலாத செய்தி என்பதை உணர்ந்த சிலர் இதை வெளிப்படையாக மறுத்துவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தோன்றிய கற்பனைகளைக் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றார்கள்.
ஹதீஸ் கூறாத கருத்தை இவர்கள் கூறுவதாலும் இதைச் செயல்படுத்திக் காட்டி நிரூபிக்க இவர்கள் முன்வரவில்லை என்பதாலும் இவர்களும் இந்த செய்தியைப் பொய் என்றே நம்புகின்றனர்.
இப்படிப்பட்ட பொய்யான செய்தியை அல்லாஹ் தன் தூதருக்கு கூறினான். இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்தப் பொய்யை மக்களுக்குக் கூறினார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு எதிரான கூற்றாக இவர்களுக்குத் தெரியவில்லை.
ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட சக்தி உண்டு என்று யாராவது வாதிட்டால் அதை நிரூபித்துக் காட்டுவது அவருடைய கடமை. நிரூபிக்க இயலாவிட்டால் அது தவறானது என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு தெளிவுபடுத்துகின்றது.
அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் அதைச் செய்து காட்ட முன்வரவில்லை. எனவே குர்ஆனின் அளவுகோலின் படி இது பொய் என்பது உறுதியாகி விட்டது. பொய்யான தகவலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறினார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கை இல்லையா?
இதன் பிறகும் இந்தச் செய்தி குர்ஆனுக்கு எப்படி முரண்படுகின்றது என்று அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.
சம்பந்தமில்லாத கேள்விகள்
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம்பவத்தை நாம் சுட்டிக்காட்டியதால் அதிலிருந்து பின்வருமாறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
இந்த வசனத்திற்கும் அஜ்வாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அஜ்வா ஹதீஸைச் சரி காணும் யாரேனும் உயிர்ப்பிக்கச் செய்யும் - மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வின் வல்லமைக்குப் போட்டியாக, அஜ்வா சாப்பிட்டால் நாங்கள் மரணிக்கவே மாட்டோம் என்று தர்க்கம் செய்தார்களா? அல்லது அல்லாஹ் மரணிக்கச் செய்தவனை அஜ்வாவை ஊசி மூலம் செலுத்தி உயிர்ப்பிப்போம் என்று சொன்னார்களா? அல்லது அஜ்வா சாப்பிட்டால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம்; உயிரோடு உள்ளவர்களை அஜ்வா கொடுத்து மரணிக்கச் செய்யலாம் என்று இந்த ஹதீஸின் அர்த்தம் சொல்கிறதா? இல்லையே!
என்ன அற்புதமான கேள்விகள்! என்னே சிந்தனைத் தெளிவு!
இந்தக் கேள்விகளைக் கேட்டதன் மூலம் இவர்கள் கூறவரும் விளக்கம் என்னவென்றால் ஒருவன் அல்லாஹ்வின் தன்மைகள் தனக்கு இருப்பதாகக் கூறினால் தான் அதைச் செய்து காட்டுமாறு அவனிடம் கேட்கலாம்.
அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் யாரும் அஜ்வாவிற்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாக நம்பவில்லை. எனவே இதை நாங்கள் செய்துகாட்ட வேண்டிய அவசியமில்லை என்பதே இந்தக் கேள்விகளின் சாராம்சம்.
இந்த ஹதீஸைத் தூக்கிப் பிடிக்க இவர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதமும் இவர்களின் அறியாமையைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவே அமைந்துள்ளது.
ஒருவன் கற்களுக்குச் சிந்திக்கும் சக்தி உண்டு; மரங்களுக்கு பேசும் சக்தி உண்டு; கத்தரிக்காயில் விஷ முறிவுக்கு மருந்து உண்டு என்று கூறினால் அதையும் இவர்களின் வாதப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறுபவனிடம் இவற்றைச் செய்து காட்டி நிரூபிக்குமாறு கேட்கக் கூடாது.
ஏனென்றால் இவன் கற்களுக்கும் மரங்களுக்கும் கத்தரிக்காய்க்கும் அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாகக் கூறவில்லை. சிந்திப்பதும், பேசுவதும், விஷத்தை முறிப்பதும் அல்லாஹ்வின் தனித்தன்மையில்லை. மாறாக இவை படைப்பினங்களின் தன்மைகள். எனவே இவனுடைய கூற்றை இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதை இவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒருவனுக்கு அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாக நம்புவது எவ்வாறு மடமையோ அது போன்று ஒரு பொருளுக்கு இல்லாத தன்மை இருப்பதாக நம்புவதும் மடமையாகும். அந்தத் தன்மை வேறு படைப்புகளில் உள்ள தன்மையாக இருந்தாலும் சரியே.
மனிதன் சிந்திப்பான் பேசுவான் என்று கூறினால் யாரும் இதை மறுக்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவரும் இதைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் அனைத்து மரங்களும் பேசும் என்று கூறினால் இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அதை நிரூபித்துக் காட்டுவது கடமை.
சொல்லப்போனால் அல்லாஹ்வின் தன்மை தனக்கு இருப்பதாக ஒருவன் வாதிட்டால் அதைச் செய்துகாட்டி நிரூபிக்குமாறு கேட்பது நியாயமானது என்றால் அஜ்வா பழத்திற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் இருப்பதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது அதை விடவும் நியாயமானது.
ஏனென்றால் அல்லாஹ்வை யாரும் கண்ணால் பார்க்கவில்லை. அவனுடைய படைப்புகளைச் சிந்தித்து அல்லாஹ்வையும் அவன் ஆற்றலையும் அறிந்து கொள்கிறோம். இவ்வாறு சிந்திக்காதவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். எனவே இறை நம்பிக்கை என்பது சிந்தனை அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் உள்ள விஷயம்.
ஆனால் விஷத்தை முறிக்கும் தன்மையாகிறது அது மறைவான நம்பிக்கை தொடர்பானதாகவோ சிந்தித்து நம்ப வேண்டிய விஷயமாகவோ இல்லை. நேரடியாகக் கண்ணால் பார்த்து சோதித்துப் பார்த்து நம்ப வேண்டிய விஷயம்.
எனவே அல்லாஹ்வின் தன்மை எனக்கு உள்ளது என்று சொல்பவனை விட அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று கூறக் கூடியவர்கள் அதை நிரூபித்துக்காட்ட அதிகக் கடமைபட்டிருக்கின்றார்கள்.
அஜ்வா பகுத்தறியும் சக்தி கொண்டதா?
விஷத்தை வேண்டுமென்றே குடித்தால் அஜ்வா விஷத்தை முறிக்காது. பாம்பு போன்ற விஷப் பிராணிகளால் நாம் விரும்பாமல் விஷம் உடம்பில் ஏறிவிட்டால் அப்போது தான் அஜ்வா வேலை செய்யும் என்று இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் கூறுகின்றனர்.
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து முள் தானாக நமக்குக் குத்தினால், அதற்காக அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுப்போமா? ஒருவன் ஒரு முள்ளை எடுத்து வேண்டுமென்றே தனது காலில் குத்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுக்க முடியுமா? அதுபோல் தான் விஷப்பாம்பு தானாக நம்மைத் தீண்டினால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அஜ்வா நம்மைக் காக்கும். நாமாக திமிர் எடுத்துப் போய் விஷப்பாம்பை கடிக்க விட்டால் அல்ல.
இப்படி வாதிடுவதன் மூலம் இவர்களுக்கும் சிந்தனைக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது உறுதியாகிறது. இதில் முள் குத்தினால் வலிக்காது என்று கூறப்படவில்லை. அப்படிக் கூறப்பட்டால் அதையும் நிரூபிக்குமாறு நாம் கேட்போம். அதுவும் பொய்யானது என்று நாம் மறுப்போம். இந்த ஹதீஸில் மறுமையில் கிடைக்கும் நன்மை பற்றி பேசப்படுகிறது. அதை நிரூபிக்குமாறு கேட்க முடியாது. அது உலகில் நிரூபித்துக் காட்டும் விஷயமே அல்ல. உதாரணம் காட்டுவது என்றால் இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த அறிவு கூட இவர்களுக்கு இல்லை.
துன்பத்தை நாமாக வரவழைத்துக் கொண்டால் நன்மை கிடைக்காது என்பது சரி தான். ஏனென்றால் தன்னைத் தானே நோவினைப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்த காரியத்தைச் செய்து நன்மையை அடைய முடியாது.
ஆனால் அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கின்றது என நம்பக்கூடியவர்களுக்கு விஷம் சாப்பிடுவது நோவினையான ஒன்றல்ல. ஏனென்றால் அஜ்வா விஷத்தினால் வரும் நோவினைகளைத் தடுத்துவிடும் வல்லமையுடையது என்று நம்புகிறார்கள். அதாவது அஜ்வா சாப்பிட்ட பின்னர் விஷம் சாதாரண உணவு என்ற நிலைமைக்கு வந்து விடுகிறது. எனவே இதைச் சாப்பிடுவது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவர்கள் நம்பினால் இதை உதாரணமாகக் காட்ட முடியாது. அஜ்வாவுக்குப் பின்னர் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பினால் இவர்களும் இந்த ஹதீஸை நம்ப மறுக்கிறார்கள் என்றே பொருள்.
எனவே இவர்களின் நம்பிக்கைப்படி பார்த்தால் அஜ்வா பேரீச்சம் பழத்தை உண்டுவிட்டு பிறகு விஷம் குடித்துக் காட்டுவது இஸ்லாத்தில் பாவமான காரியமல்ல. எனவே இதைச் செய்துகாட்ட இவர்களுக்கு எந்தத் தடையுமில்லை.
முள் யதார்த்தமாகக் குத்தியதா? அல்லது வேண்டுமென்றே குத்திக் கொண்டானா? என்பதை அல்லாஹ் பிரித்து அறியக்கூடியவன். எனவே வேண்டுமென்று குத்திக் கொண்டவனுக்கு அவன் நன்மை கொடுக்க மாட்டான்.
அஜ்வா பேரீச்சம் பழம் அல்லாஹ்வைப் போன்று பிரித்து அறியும் தன்மை கொண்டதா? விஷம் உடலுக்குள் சென்றால் இந்த விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டதா? அல்லது இவன் விரும்பாமல் விஷ ஜந்துக்களால் ஏற்றப்பட்டதா? என்று அஜ்வா பழம் சிந்திக்குமா?
விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டிருந்தால் அஜ்வா வேலை செய்யாதாம். இல்லாவிட்டால் வேலை செய்யுமாம். என்ன அறிவிப்பூர்வமான விளக்கம்?
ஒருவன் விஷத்தைக் குடி பானம் என்று நினைத்து, தவறுதலாகக் குடித்துவிட்டால் அப்போது அஜ்வா இவனைக் காக்கும். விஷம் என்று தெரிந்தே குடித்தால் அஜ்வா காக்காது என்று கூறுகிறார்கள். இப்போது அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மையுடன் விஷம் குடிப்பவனின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் சக்தியும் வந்துவிட்டது?
இப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் தான் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அஜ்வா ஹதீஸ் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய நாட்டத்தைப் பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க அஜ்வாவைப் பற்றியே பேசுகின்றது. அஜ்வா செய்தி ஆன்மிக அடிப்படையில் சொல்லப்படவில்லை. மருத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
நாம் அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை. அஜ்வாவின் ஆற்றலைப் பற்றியே சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றோம்.
அல்லாஹ் நாடினால் நெருப்பு குளிராகும். கடல் பிளக்கும். மலை தூள்தூளாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்பது உண்மை. இதனால் நெருப்பு எப்போதும் குளிராக இருக்கும் என்றோ கடலை எப்போதும் யார் வேண்டுமானாலும் பிளக்கச் செய்யலாம் என்றோ கூறுவது அறிவீனம்.
அல்லாஹ் நாடினால் வெண்டைக்காய் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்று நான் சொல்லக்கூடாது. அதே நேரத்தில் வெண்டைக்காயில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாக நிரூபித்து விட்ட பின் அல்லாஹ் நாடினால் குணமாகும் என்று கூறலாம்.
அஜ்வா ஹதீஸைச் சரிகாணக்கூடியவர்கள் அதை நிரூபித்துக் காட்டாத வரை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பற்றிப் பேசக்கூடாது. அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்பதை நிரூபித்த பின்பே அல்லாஹ்வின் நாட்டத்தால் அது விஷத்தை முறிக்கும் என்று கூறலாம்.
அஜ்வா செய்தியில் விஷம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூறுவது போல் நம்முடைய விருப்பம் இல்லாமல் தானாக உடலில் விஷம் ஏறினால் தான் அஜ்வா பாதுகாக்கும் என்பது ஹதீஸில் இல்லாத இவர்களின் சொந்தச் சரக்காகும்.
அஜ்வாவை நிலைநாட்ட வந்து விஷத்தைக் குடித்து மரணித்துவிடக்கூடாது என்ற பயத்தில் இவர்களாகக் கூறிய கற்பனை விளக்கமாகும்.
ஒரு பொருளுக்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்குமானால் விஷம் எந்த முறையில் ஏற்றப்பட்டாலும் அப்பொருள் விஷத்தை முறிக்க வேண்டும். இதற்கு தற்காலத்தில் உள்ள விஷ முறிவு மருந்துகளை உதாரணமாகக் கூறலாம்.
ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறினாலும் அவர் வேண்டுமென்றே விஷத்தைக் குடித்தாலும் இந்த விஷ முறிவு மருந்தை அவருக்குக் கொடுத்தால் இந்த மருத்து விஷத்தை முறித்துவிடும்.
அஜ்வா என்பது இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று தானே. அஜ்வா விஷத்தை முறிக்கும் என்றால் மற்ற விஷ முறிவு மருந்துகள் வேலை செய்வது போல் அஜ்வாவும் வேலை செய்ய வேண்டும். மற்ற மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பது போல் அஜ்வாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
எனவே அஜ்வா ஹதீஸைச் சரிகாணக் கூடியவர்கள் கூறும் விளக்கங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. விளக்கம் என்ற பெயரில் இந்த ஹதீஸை மென்மேலும் பலவீனப்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.
வேண்டுமானால் இவர்களுக்காக நாம் சவாலை மாற்றி இவர்கள் ஆசைப்படக் கூடிய வகையில் கேட்கிறோம். இவர்கள் அஜ்வாவை மட்டும் சாப்பிடட்டும். விஷத்தைச் சாப்பிட வேண்டாம். இவர்கள் அஜ்வாவைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் மீது நாம் விஷ ஊசியை ஏற்றுகிறோம். இவர்கள் தமாக விரும்பி விஷத்தை ஏற்றிக் கொள்ளாததால் இந்த சவாலுக்கு இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இதையாவது ஏற்பார்களா?
மொத்தத்தில் அஜ்வாவுக்கு வாக்காலத்து வாங்கும் இவர்களுக்கும் அதில் கடுகளவு நம்பிக்கை கூட இல்லை. இவர்களும் அஜ்வா சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாது என்று வாயளவில் சொல்கிறார்கள். விஷம் தனது வேலையைக் காட்டும் என்று மனதால் நம்புகிறார்கள். எனவே யாருமே இந்த ஹதீஸை நம்பவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
நாம் மனதாலும் வாயாலும் அது பொய் என்கிறோம். இவர்களோ வாயால் நம்பி, மனதாலும் நடவடிக்கையாலும் பொய்யாக்கிக் கொண்டு உள்ளனர். இது தான் வித்தியாசம்.
இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 14
குர்ஆனை மறந்த நபிகள் நாயகம்?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.
அல்குர்ஆன் 22:52
இறைத் தூதர்களின் ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்று மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. ஓதுதலில் என்றால் ஓதப்பட்டதில் என்று பொருள். அதாவது இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து பெற்ற தூதுச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, அவை பற்றி தவறான குழப்பத்தையும், வீண் சந்தேகங்களையும் மக்களுக்கு மத்தியில் ஷைத்தான் ஏற்படுத்துவான் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்வதே குர்ஆனுக்கும், நபிவழிக்கும் பொருத்தமானதாகும்.
தவறான கொள்கையுடைய பல இஸ்லாமிய இயக்கங்கள், குழுக்கள் தங்களது கொள்கைகளை திருக்குர்ஆன் ஆதரிப்பதாகப் பிரச்சாரம் செய்வதை இன்றைக்கும் காண முடிவது இந்த வசனத்தின் அடிப்படையில் தான். ஷைத்தான் ஏற்படுத்துகின்ற குழப்பத்தின் காரணத்தாலே இந்தத் தவறான கொள்கைகள் அவர்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. எனவே ஓதுதலில் என்பது ஓதப்பட்டதில் என்பதையே குறிக்கும்.
ஆனால் மேற்கண்ட வசனத்திற்குச் சில அறிஞர்களால் தவறான பொருள் செய்யப்படுவதோடு அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும், கொள்கையை ஆட்டம் காணச் செய்யும் அளவில் சில கட்டுக்கதைகளும் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.
"இறைத்தூதர்கள் இறைச் செய்திகளை ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தி, இறைத்தூதர்களின் ஓதுதலில் பல தவறுகளை நிகழ்த்தி விடுவான். எனவே இறைத்தூதர்கள் வசனங்களை மாற்றி, தவறாக ஓதிவிடுவார்கள். ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்பதன் அர்த்தம் இதுதான். நபிகள் நாயகம் அவர்களின் ஓதுதலிலும் ஷைத்தான் புகுந்து விளையாடியுள்ளான்'' என்று இந்த வசனத்திற்கு சில இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.
நபியவர்கள் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஓதுதலில் ஷைத்தான் புகுந்து, நபியவர்களை தப்பும் தவறுமாக ஓத வைத்து விட்டான் என ஒரு கதையை விரிவுரை நூல்களில் உலாவ விட்டிருக்கின்றார்கள். அந்தக் கதையையும், அது எவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதையும் தொடர்ந்து காண்போம்.
நபியவர்கள் ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக இமாம்களால் விரிவுரை நூல்களில் கூறப்படும் கதை இது தான்.
நபியவர்களுக்கு மக்காவில் இருக்கும் போது அரபுகளின் கடவுள்கள் பற்றி இறைவசனம் அருளப்பட்டது. எனவே அவர்கள் லாத், உஸ்ஸா பற்றி திரும்ப, திரும்ப ஓதலானார்கள். தங்களுடைய கடவுகள்களைப் பற்றி நபியவர்கள் ஓதியதை அம்மக்கள் செவியுற்ற போது சந்தோஷம் கொண்டு, அதைக் கேட்பதற்காக மேலும் நபியவர்களை நெருங்கி வந்தார்கள். அப்போது அவர்களின் ஓதுதலில் "அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள், பரிந்துரை அவைகளிடம் வேண்டப்படும்'' என்று (தவறாக ஓதுமாறு) ஷைத்தான் போட்டான். நபியவர்களும் இதை ஓதினார்கள். அப்போது தான் இறைவன் இவ்வசனத்தை (22:52) அருளினான்.
நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம் 10, பக்கம் 514
நபியவர்கள் மகாமு இப்ராஹீமில் தொழுது, (நஜ்ம் அத்தியாயத்தை) ஓதிக் கொண்டிருக்கும் போது சற்று தூங்கலானார்கள். அப்போது "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள். அவைகளிடம் பரிந்துரை வேண்டப்படும்'' என்று (தவறாக) ஓதினார்கள். தங்களது கடவுள்களுக்கு பரிந்துரை செய்யும் ஆற்றல் உண்டு என நபியவர்கள் கூறியதை அவர்கள் செவியுற்ற போது சந்தோஷம் அடைந்தனர். பிறகு நபியவர்கள் "லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை.'' என்று (திருத்தி, சரியாக) ஓதினார்கள்.
நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான், பாகம் 2, பக்கம் 387
இணை வைப்பாளர்கள் பெரிதும் மதித்த, கடவுள்களாகப் போற்றிய லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளைப் பற்றி திருக்குர்ஆனில், "இவை மக்களால் சூட்டப்பட்ட வெறும் பெயர்கள் தாம், கற்பனைப் பாத்திரங்கள் தாம்' என்று இறைவன் நஜ்ம் அத்தியாயத்தில் (53:19-23) குறிப்பிடுகின்றான்.
நபியவர்கள் தொழுகையில் இந்த வசனங்களை ஓத முற்படும் போது ஷைத்தான் ஜிப்ரீல் வடிவில் வந்து லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகள் உண்மைப் பாத்திரங்கள் என்றும், அவைகளுக்குப் பரிந்துரை செய்யும் ஆற்றல் உள்ளது எனவும் வசனங்களை மாற்றி ஓதுமாறு நபியவர்களைக் குழப்பி விட்டானாம். ஷைத்தானால் குழப்பத்திற்குள்ளான நபியவர்களும் அவ்வாறு வசனங்களை மாற்றி ஓதிவிட்டார்கள் என்று மேற்கண்ட விளக்கவுரை (?) யில் கூறப்படுகின்றது. தங்கள் கடவுள்களுக்குச் சக்தி உள்ளது என்பதை நபியவர்கள் தங்கள் வாயாலே ஒப்புக் கொண்டதைக் கண்டு இணை வைப்பாளர்களும் சந்தோஷம் அடைந்தார்கள் என்றும் அவ்விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல விரிவுரை நூல்களில் கூறப்பட்ட இச்சம்பவம் எந்த ஹதீஸ் நூலிலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சில இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் இச்சம்பவத்தை எந்தக் கண்டனமும் இன்றி பதிவு செய்வதற்கு முன், இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா என்றும், இதை உண்மை என ஒப்புக் கொண்டால் ஏற்படும் விளைவு என்ன என்றும் சிந்தித்திருக்க வேண்டும்.
ஆம்! இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் ஒரு கட்டுக்கதை இது! குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் போர் தொடுக்கும் ஒரு பொய்க்கதை இது!
பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகம்
சாதாரண மனிதர்களுக்கு மறதி உள்ளதைப் போன்று நபியவர்களுக்கும் மறதி ஏற்படும். பல நிலைகளில் நபியவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. அரிதாகத் தொழுகையில் சில ரக்அத்களை கூட்டியும், குறைத்தும் நபியவர்கள் தொழுதது மறதியினால் தான்.
அந்தச் சந்தர்ப்பத்திலேயே, "நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களுக்கு மறதி ஏற்படுவதைப் போன்று எனக்கும் மறதி ஏற்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 401)
எனினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபியவர்கள் ஒரு போதும், கிஞ்சிற்றும் மறந்துவிட மாட்டார்கள். நபிகளார் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச் செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய் விடும். எனவே தான் வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகத்திற்கு மறதி ஏற்படாது என்ற ஒரு பாதுகாப்பை இறைவன் வழங்கியுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் எந்த ஒன்றையும் மறந்து விட மாட்டார்கள்.
நபியவர்களின் உள்ளத்தில் புகுந்து, சரியான வசனங்களை மறக்கடிக்கச் செய்து, தவறான வசனங்களை ஓதச் செய்யும் ஆற்றல் ஷைத்தானுக்குத் துளியும் இல்லை. நபிகளாரின் உள்ளத்தை இது போன்ற கேடு ஏற்படாதவாறு இறைவன் பலப்படுத்தியுள்ளான்.
திருக்குர்ஆனில் உள்ள பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.
(முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம் நீர் மறக்க மாட்டீர்.
அல்குர்ஆன் 87:6
(முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
அல்குர்ஆன் 25:32
அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!
அல்குர்ஆன் 11:75
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
அல்குர்ஆன் 15:9
நபியவர்கள் குர்ஆனில் எதையும் மறக்க மாட்டார்கள் என்று இத்தனை வசனங்கள் கூறும் போது லாத், உஸ்ஸாவை ஆதரித்து நபியவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டிக்காது. அவைகளுக்கு ஆற்றல் உண்டு என நபிகளார் மறந்தும் கூறியிருக்க மாட்டார்கள் என்பதில் அறிவுடைய மக்களுக்குத் துளியும் சந்தேகமிருக்காது. விரிவுரையில் கூறப்பட்ட அந்த விஷமத்தனமான விளக்கம் இத்தனை இறை வார்த்தைகளோடும் நேரிடையாக மோதுவதை அறியலாம்.
விடைதரும் விளக்க வார்த்தைகள்
மேலும் பின்வரும் குர்ஆன் வசனங்களையும் சிந்தித்துப் பார்த்தாலே மேற்கண்ட கதையை நம்புவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணரலாம்.
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
அல்குர்ஆன் 69 :44
"நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 10 :15
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:4
(முஹம்மதே!) நாம் உமக்கு தூதுச் செய்தியாக அறிவிக்காததை நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்று உம்மைத் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!
அல்குர்ஆன் 17: 73
நபியவர்கள் குர்ஆனில் உள்ளதை மறந்து விட மாட்டார்கள்.
குர்ஆனில் இல்லாத எதையும் ஓத மாட்டார்கள்.
குர்ஆனில் இருப்பதை மாற்றி ஓத மாட்டார்கள்.
இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுபவை தவிர வேறெதையும் ஓத மாட்டார்கள்.
இறைவன் கூறாததைக் கூறியதாக இட்டுக்கட்ட மாட்டார்கள்.
தவறு ஏற்படாதவாறு இறைவன் நபியவர்களை நிலைப்படுத்தியுள்ளான்.
என்பன போன்ற பல கருத்துக்கள் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளை ஆதரித்து, சரியான வசனங்களை மறந்து நபியவர்கள் தொழுகையில் ஓதினார்கள் என்றால் இறைவனின் முத்து முத்தான மேற்கண்ட வசனங்களுக்கு என்ன அர்த்தம்? அச்சம்பவத்தை நம்புவது இவ்வளவு இறைவசனங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமில்லையா? இந்த விளக்கங்கள் குர்ஆனை விளங்க உதவுமா?
இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க நினைக்கும் கயவர்கள் விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கும் இது போன்ற விளக்கங்களைக் கையிலெடுத்து தான் பிரச்சாரம் செய்கின்றனர். எச்சிலைச் சோற்றுக்கு நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாய்கள் போல இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைக்க சல்மான் ருஷ்டி போன்ற மனித ஷைத்தான்கள் அலைகின்றார்கள்.
இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்குத் தீனி போடும் விதமாகவே விரிவுரை நூல்களில் காணப்படும் இது போன்ற விளக்கங்கள் அமைந்துள்ளன என்பதை இமாம்களின் விளக்கங்களைக் கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குர்ஆனின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் இமாம்கள் கூறிய இக்கதை அமைந்துள்ளது. இது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது. இதையும் எவ்விதக் கண்டனமும் இன்றி இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றால் இதிலிருந்தே விரிவுரை நூல்களின் நிலையை, இமாம்களின் விளக்கங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
நூஹ் நபியின் கப்பல்
அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். "நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11:38
திருக்குர்ஆன், நூஹ் நபியின் வரலாற்றை மனிதர்களுக்கு அழகாக எடுத்துரைக்கின்றது. 950 வருடம் தம் சமுதாய மக்களிடையே வாழ்ந்து, ஏகத்துவப் பிரச்சாரம் செய்தும் சொற்ப நபர்களே நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். எனவே ஒரு கப்பல் செய்யுமாறு நூஹ் நபிக்கு இறைவன் கட்டளையிட்டு அதில் நம்பிக்கை கொண்ட மக்களை அழைத்து செல்லுமாறும், ஏனைய மனிதர்களுக்குத் தனது தண்டனையை இறக்கப் போவதாகவும் இறைவன் தெரிவித்தான். நூஹ் நபியும் இறைவனது கட்டளைக்கு இணங்கி, தனிக்கப்பலில், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுடன் இறைவழியில் பயணமானார்கள். ஏனையோர் இறை தண்டனைக்கு ஆளானார்கள்.
பல்வேறு படிப்பினைகள் நிறைந்த இந்த வரலாற்றுச் சம்பவம் துளியும் மாற்றமின்றி திருக்குர்ஆனில் பல வசனங்களில் கூறப்படுகின்றது. அவற்றில் இந்த வசனமும் ஒன்று.
இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதுவரையிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனினும் இமாம்கள் இதில் தலையிட்டு விளக்கமளிக்க புகுந்த பிறகு தான் புற்றீசல்களைப் போன்று பிரச்சனைகளும் கிளம்ப ஆரம்பித்து விட்டன. நல்ல கருத்துக்களை விளக்கியிருந்தால் அதை இவ்வாறு நாம் விமர்சித்திருக்க மாட்டோம். இந்த வசனத்தில் அவர்கள் விளக்கியிருப்பது நூஹ் நபியின் கப்பலைப் பற்றி....
இதோ அந்த விளக்கங்கள்:
ஈஸா அலை அவர்களிடம், "(நூஹ் நபியுடன்) அக்கப்பலில் கலந்து கொண்ட ஒரு மனிதரை நீங்கள் உயிருடன் எழுப்பலாமே. அவர் நமக்கு அதைப் பற்றி தெரிவிப்பாரே'' என்று ஹவாரிய்யீன்கள் கேட்டனர். அவர்களை மண் நிறைந்த பகுதியை நோக்கி ஈஸா அலை அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து இது என்னவென உங்களுக்குத் தெரியுமா? என மக்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என அவர்கள் பதிலளித்தனர். அதற்கு ஈஸா (அலை), "இது நூஹுடைய மகன் கஃப்'' என்று கூறி தனது அஸாவினால் அதை அடித்து, "அல்லாஹ்வின் அனுமதியுடன் நீ நிலைபெறு'' என கூறினார்கள். அப்போது தனது தலையிலிருந்த மண்ணை தட்டிவிட்டவாறே அவர் (நூஹுடைய மகன்) எழுந்து நின்றார். அவர் முதியவராக இருந்தார்.
அப்போது ஈஸா (அலை), "நீ இவ்வாறு தான் அழிக்கப்பட்டாயா?'' என வினவினார். அதற்கு அவர், "இல்லை நான் இளைஞனாக இருந்தபோதே மரணித்து விட்டேன். எனினும் அது ஒரு நேரம். இப்போது நான் நரைத்து விட்டேன்'' என பதிலளித்தார். "சரி நூஹுடைய கப்பலை பற்றி நமக்கு நீ கூறு'' என ஈஸா (அலை) கூறினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:
அதன் நீளம் ஆயிரத்து இருநூறு முளங்கள், அதன் அகலம் அறுநூறு முளங்கள், அதில் மூன்று தட்டுக்கள் இருந்தன. ஒரு தட்டில் கால்நடைகள், மற்றொரு தட்டில் மனிதர்கள், மற்றொரு தட்டில் பறவைகள் இருந்தன.
கால்நடைகளின் சாணங்கள் அதிகரித்த போது, "யானையின் தும்பிக்கையை வெட்டி விடு'' என இறைவன் வஹீ அறிவித்தான். நூஹ் (அலை) அவர்களும் அதை வெட்டினார்கள். அதில் அந்த இடத்தில் ஒரு ஆண் பன்றியும் ஒரு பெண் பன்றியும் தங்கின. அவைகள் சாணத்தை நோக்கி வந்தன.
எலி ஒன்று கப்பலின் நங்கூரத்தில் வந்த போது அந்த நங்கூரத்தை எலி சாப்பிட ஆரம்பித்தது. உடனே இறைவன், சிங்கத்தின் இரு கண்களுக்கிடையில் அடி என நூஹ் (அலை) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். அதன் மூக்குத் துவாரத்திலிருந்து ஆண் பூனை, பெண் பூனைகள் வெளிப்பட்டன. அவ்விரண்டும் எலியை நோக்கி வந்தன.
நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8, பக்கம் 44
நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 312
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் 1200 முழம் நீளம், 600 முழம் அகலம் கொண்டதாக இருந்தது எனவும், அக்கப்பலில் மனிதர்களுக்கு ஒரு தட்டு, பறவைகளுக்கு ஒரு தட்டு, ஏனைய விலங்கினங்களுக்கு ஒரு தட்டு என மொத்தம் 3 தட்டுக்கள் இருந்ததாகவும் இவ்விளக்கத்தில் கூறப்படுகின்றது. இவ்விளக்கத்திற்கு அச்சாரமாக அமைந்த திருக்குர்ஆன் வசனம் எது என்பதை இமாம்கள் விளக்குவார்களா? அல்லது இந்தச் சம்பவத்தை நபிகள் நாயகம் கூறியதற்கான ஆதாரத்தைத் தான் முன்வைப்பார்களா?
விலங்கினங்களின் சாணம் நிறைந்த போது பன்றியை உருவாக்கி அதைக் காலி செய்தது, எலியின் சேட்டை அதிகரித்த போது அதை அழிக்க சிங்கத்தின் மூக்குத் துவாரத்திலிருந்து (என்ன மர்மமோ?) பூனையை உருவாக்கியது என வழக்கம் போல மாயாஜாலக் கதைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. மொத்தத்தில் இதுவும் அடிப்படை ஆதாரமற்ற ஒரு கதை தானே ஒழிய இதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.
வளரும் இன்ஷா அல்லாஹ்
ஸைபுத்தீன் பரேலவி
தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேரூன்றுவதற்கு முன்னால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் இரு சாரார்களாக இருந்தனர்.
ஒரு சாரார் மத்ஹபு என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டு சமாதி வழிபாட்டைக் கண்டிக்கின்ற சாரார்!
இந்த சாரார் தேவ்பந்த் மஸ்லக் - அதாவது தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் கொள்கைகளை, நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்பட்டனர்; அடையாளப்படுத்தப்பட்டனர்.
மற்றொரு சாரார், சமாதி வழிபாட்டை ஆதரித்து அதில் சாஷ்டாங்கம் செய்பவர்கள். இந்த சாரார் தர்ஹா தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆதரிப்பர்.
கப்ருக்கு சந்தனம் பூசுதல், அதற்குப் போர்வை போர்த்துதல், அதன் அருகில் ஊதுபத்தி கொளுத்துதல், சாம்பிராணி போடுதல் போன்ற தீமைகள் அனைத்தையும் மார்க்கம் என்று மூர்க்கத்தனமாக வாதிடுவர்.
மல்விது ஓதுதல், அந்த மவ்லிதுக் கதாபாத்திரங்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா ஆகிய அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற படு மோசமான, இஸ்லாத்திற்கு எதிரான, பரேலவிச சந்நியாச சாமியார் கொள்கைகளைக் கொண்டவர்கள்.
இப்படி சுன்னத் வல் ஜமாஅத்தினர் இரு சாராக இருந்த நிலையில் தவ்ஹீது சிந்தனை தோன்றி, மத்ஹபு மாயையைத் தகர்த்தெறிந்தது. சமாதி வழிபாட்டுச் சிந்தனையை அடியோடு ஒழிக்கக் களமிறங்கியது.
வேஷம் போடும் வேடதாரிகள்
தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய பின்னர் இவ்விரு சாராரும் சேர்ந்து கொண்டு மூர்க்கமாக, மும்முரமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க ஆரம்பித்தனர். அத்துடன் அதுவரையிலும் பரேலவிகளை எதிர்த்து நின்ற தேவ்பந்த் சிந்தனையாளர்களின் எதிர்ப்பின் வேகம் முனை மழுங்கிப் போனது; முடங்கிப் போனது.
காரணம், சமாதி வழிபாட்டை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்ததும் வஹ்ஹாபி என்ற முத்திரை அவர்களுக்குக் குத்தப்பட்டது. நஜாத் என்று அழைக்கப்பட்டனர். இந்த வேலையைச் செய்பவர்கள் வேறு யாருமல்லர்! சாட்சாத் ஷைத்தானின் தோழர்களான பரேலவிகள் தான். பரேலவிகளின் இந்த முத்திரைக்குப் பயந்து தேவ்பந்த் சாரார் முடங்கி, முடமாகிப் போயினர். இருப்பினும் தங்கள் கொள்கையில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் வேஷம் போடுகின்ற வேடதாரிகள். இவர்கள் தங்களை வெளியில் தேவ்பந்த் சிந்தனையாளர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் பரேலவிச சிந்தனை கொண்டவர்கள்.
இவர்கள் பரேலவிசத் தலைவன், நரகப் பாதையின் ஏஜெண்ட் அப்துல்லாஹ் ஜமாலியுடன் பகிரங்கமாக மேடையைப் பகிர்வது கிடையாது. ஆனால் பேச்சில், பிரச்சாரத்தில் அப்துல்லாஹ் ஜமாலியை ஒத்தவர்கள், ஒருமித்தவர்கள்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதத்திற்குப் பதிலளித்து 12.02.2012 அன்று மேலப்பாளையத்தில் ஸைபுத்தீன் ரஷாதி பேசிய பேச்சு!
தவ்ஹீத் ஜமாஅத் வைத்த வாதம் என்ன?
யாகுத்பா என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, முஹ்யித்தீனைக் கடவுளாக்குகின்ற காட்டுமிராண்டித்தனத்தை பி.ஜே. கடுமையாகக் கண்டித்துப் பேசினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாகுத்பாவின் பாடல் வரிகளின் அபத்தங்களைப் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் அம்பலப்படுத்தியது. அந்தப் பிரசுரம் மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தாங்குவாரா இந்தத் தர்ஹா பேர்வழி? விடுவாரா இந்தத் தவ்ஹீது விரோதி?
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி சொன்னதாக யாகுத்பாவில் இடம் பெறும் வரிகள் தன்னுடைய மாணவர்களைப் பார்த்துச் சொன்னது என்ற புது விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் கொடுத்தார். தான் ஒரு பக்கா பரேலவி என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்; ஆணித்தரமாக விளம்பரப்படுத்தினார்.
இப்போது இவர் கூறும் விளக்கத்திற்கு வருவோம்.
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.
இதற்கு ஸைபுத்தீன் பரேலவி, விளக்கம் என்ற பெயரில் சொல்கின்ற குதர்க்கத்தையும், நடத்துகின்ற கூத்தையும் பாருங்கள்.
இந்தக் கவிதை வரியில் அல்ஃப் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதன் பொருள் ஆயிரம் என்பதாகும். ஆனால் இதற்கு அர்த்தம் ஆயிரம் என்பதல்ல. அன்பு கொள்ளுதல், நேசம் கொள்ளுதல் என்பது தான் அதன் பொருள். அன்பு என்ற பொருளைக் கொண்ட "அல்ஃப்' என்பது பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படாமல் வேர்ச் சொல்லாக அதாவது நேசித்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் உறக்கத்தைக் களைந்தவராக, உறுதியான நம்பிக்கையுடன் என்ற பொருளில் உள்ள அரபி வார்த்தைகளும் வேர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இதற்கு ஆயிரம் தடவை என்பதற்குப் பதிலாக, "அன்பு கொண்டவராக' என்றே பொருள் கொள்ள வேண்டும்.
அவரது அழைப்புக்கு மறுமொழி சொல்வேன் என்றால் அவருக்காக நான் துஆ செய்வேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
இது தான் ஸைபுத்தீன் பரேலவி கூறுகின்ற குதர்க்கமான விளக்கமாகும்.
இவர் கூறுகின்ற இந்தக் குதர்க்க விளக்கத்தின்படி இந்தக் கவிதையின் பொருளைப் பார்ப்போம்.
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் அன்பு கொண்டவராக என் திருநாமத்தை அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். (அதாவது துஆ செய்வேன்)
ஸைபுத்தீன் பரேலவியின் கருத்துப்படி யாகுத்பாவின் மேற்கண்ட வரிகளுக்கு இந்தப் பொருள் வருகின்றது.
இது தவிர அவர் கூறிய மற்றொரு அற்புத விளக்கம்: "இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் தன்னுடைய மாணவர்களை நோக்கிச் சொன்னதாகும். மக்களை நோக்கிச் சொன்னதல்ல'
இந்த ஏகத்துவ எதிரியிடம் நாம் எழுப்புகின்ற கேள்விகள்:
1. யார் என் திருநாமத்தை, என்னுடைய பெயரை அழைப்பாரோ என்று தெளிவான வார்த்தை இங்கு இடம் பெறுகின்றது. அதற்குத் தக்க இந்தக் கவிதையின் இறுதியில், "அப்துல் காதிர் முஹ்யித்தீனே!' என்று முடிகின்றது.
சந்தேகமில்லாமல் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதைத் தான் இது தெரிவிக்கின்றது. இதற்கு ஸைபுத்தீன் கூறும் விளக்கத்தின்படி, இவரிடம் இவரது மாணவர், "ஸைபுத்தீனே' என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா?
2. அஃதி அல்ஃபன் லில் ஹள்ரத்தி - ஹஜரத்திற்கு ஆயிரம் கொடு என்று கூட்டப் பொறுப்பாளர் தன் பணியாளரிடம் அரபியில் சொன்னால், அதற்கு அந்தப் பணியாளர் ஸைபுத்தீனிடம் ஆயிரத்தைக் கொடுப்பாரா? அல்லது அன்பு செலுத்துவாரா? (இவருக்கு என்ன ரேட் என்று தெரியவில்லை).
முன்பின் உள்ள வாக்கிய அமைப்பைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றால் இங்கேயும் அன்பு என்று பொருள் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.
இந்த ஸைபுத்தீன் பரேலவிக்கு மணமும் குணமும் சேர்த்து கறிச் சாப்பாடு பரிமாறப்பட்ட நிலையில் அந்த அன்பை நினைவில் கொண்டு உடனே கிளம்பி விடுவாரா? அல்லது தவறாமல் கவரை வாங்கிக் கொண்டு தான் போவரா? நிச்சயமாகக் காசு வாங்காமல் போக மாட்டார். காரணம், காசு என்றால் அவ்வளவு கவனம். கடவுள் கொள்கை என்றால் அவ்வளவு அலட்சியம்.
இந்தப் பரேலவி தலைவனை அழைத்து வந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆலிம்கள் யாகுத்பாவுக்கு இந்தப் பொருளைக் கொடுக்கவில்லை. காரணம் இந்த ஜென்மங்கள், குத்பியத் என்ற பெயரில் யாகுத்பா கவிதை வரியின் அடிப்படையில், இரவு நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு ஆயிரம் தடவை "யா முஹ்யித்தீன்' என்று அழைத்து திக்ரு செய்கின்றனர். இனியும் அப்படித் தான் செய்வார்கள். ஏனென்றால் இதன் மூலம் அவர்களின் வயிறுகள் வளர்க்கப்படுகின்றன; நிரப்பப்படுகின்றன. இது தான் உண்மை! யதார்த்த நிலை!
இப்படி ஆயிரம் தடவை இருட்டு திக்ரு செய்வதிலிருந்தே, பெரிய அரபி படித்த பண்டிதர்கள் முதல் சாதாரண பாமரன் வரை இந்த வரிக்கு ஆயிரம் என்ற பொருளைத் தான் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த உண்மை நிலைக்கு மாறாக ஸைபுத்தீன் பரேலவி பேசுகின்றார். இது அப்பட்டமான குதர்க்கம்; இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் விளையாடும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
நாம் அவருக்குச் சவால் விடுகிறோம். யாகுத்பாவுக்கு இவர் கொடுத்த விளக்கத்தின்படி தமிழகம் முழுவதும்... வேண்டாம்! குறைந்தபட்சம் இந்தப் பேச்சை அவர் பேசிய மேலப்பாளையத்திலாவது 'இனிமேல் யாரும் ஆயிரம் தடவை முஹ்யித்தீன் என்று திக்ரு செய்யக் கூடாது; காரணம் அதற்கு அந்த அர்த்தமில்லை' என்று பகிரங்கமாக பரேலவிகள் அறிவிக்கத் தயாரா?
இன்னும் காயல்பட்டணம், கீழக்கரை என்று இந்த இருட்டு திக்ரு நடக்கும் இடங்களில் இந்த அடிப்படையில் பொருள் செய்து ஆயிரம் தடவை முஹ்யித்தீனை அழைக்கும் கொடிய இணை வைத்தலை நிறுத்துவார்களா? ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.
யாகுத்பாவில் இடம் பெறும் "அல்ஃப்' என்பதற்கு இந்த இடத்தில் ஆயிரம் என்பது பொருள். அதனால் தான் இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை ஆயிரம் தடவை கூவிக் கூவி அழைக்கின்றார்கள்.
4. மறுமொழி சொல்வேன் என்பதற்கு அரபியில். "அஜப்துஹு' என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதற்கு, "பதிலளிப்பேன், மறுமொழி சொல்வேன்' என்பது பொருள். இவ்வாறு பொருள் செய்து கொண்டு, மாணவர்கள் அழைத்தால் கஷ்ஃபில் - ஞான உதிப்பில் (?) தெரியும். அவ்வாறு தெரியும் போது அந்த மாணவர்களுக்காக துஆச் செய்வாராம் முஹ்யித்தீன்!
எவ்வளவு கூறுகெட்ட விளக்கத்தைக் கொடுக்கிறார் இந்த ஸைபுத்தீன் பரேலவி என்று பாருங்கள்.
"என்னைக் கூப்பிடு! நான் பதிலளிப்பேன்' என்று தெளிவாக வருகின்றது.
நான் பதிலளிப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை. விரைவாகப் பதிலளிப்பேன் என்று நேரடியாக முஹ்யித்தீன் வருவதைத் தான் யாகுத்பா சொல்கின்றது. ஆனால் ஸைபுத்தீனோ, துஆ செய்வார் என்று குருட்டுத்தனமாகக் கூறுகின்றார்.
5. யாகுத்பாவை இந்த அளவுக்குத் தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி இதைப் பாட வேண்டிய அவசியம் என்ன? இப்படி வளைத்து, திரித்து ஒரு பொருளை ஏன் கொடுக்க வேண்டும்? "யாகுத்பா என்பது ஒரு குப்பை! எவனோ பிழைப்புக்காக இப்படி எழுதி வைத்திருக்கிறான். அதை யாரும் பாடக் கூடாது' என்று ஒரு வரியில் சொல்ல வேண்டியது தானே! அல்லது "யாகுத்பா அதன் உண்மையான பொருளில் பாடப்படவில்லை. முஹ்யித்தீனை ஆயிரம் முறை அழைத்தால் வருவார் என்று கூறுவது தெளிவான ஷிர்க்; இந்தப் பொருளில் யாரேனும் யாகுத்பாவைப் பாடினால் அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்' என்று அறிவிக்கலாம் அல்லவா?
இப்படி ஒருபோதும் இவர் செய்ய மாட்டார். இறந்தவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஸைபுத்தீன் பரேலவியும் கொண்டிருப்பதால் தான் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதன் மூலம் இவர் ஒரு சரியான பரேலவி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
அத்வைத ஸைபுத்தீன்
இது மட்டுமில்லாமல் இந்த ஸைபுத்தீன் பரேலவி அத்வைதக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரிக்கின்றார்.
"அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்'' என்று சொன்ன பரேலவிகளின் தலைவன் முஹ்யித்தீன் இப்னு அரபியையும்,
"நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை'' என்று கூறிய அபூயஸீத் அல்புஸ்தாமியையும்,
காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற கொள்கையைத் தனது நூலில் பதிவு செய்த கஸ்ஸாலியையும் இந்தப் பரேலவி முல்லா ஆதரிக்கின்றார். "ஏதோ ஒரு நிலையில் அப்படிச் சொல்லி விட்டார்' என்று கூறிச் சமாளிக்கின்றார். கடுகளவு ஏகத்துவச் சிந்தனை கொண்ட முஸ்லிம் கூட இந்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான்.
அப்துல்லாஹ் கோமாளி போன்றவர்கள் தங்களைப் பரேலவிகள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்றார்கள்.
ஆனால் இவரோ தேவ்பந்த் போர்வையில் சுற்றி வருகின்ற பரேலவி என்பதை, அத்வைதக் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.
பைத்தியம் பலவிதம்
"பைத்தியம் பலவிதம்; அதில் பரேலவிசம்' ஒருவிதம் என்று சொன்னால் அது சரியான வாதமாகும்.
ஒருவர் இறந்து விட்டால் அவர் பேச மாட்டார்; அவர் கேட்க மாட்டார். அதனால் தான் அவர் உயிருடன் இருக்கின்ற வரை அவரை மரியாதையாக அழைத்த மக்கள், அவர் இறந்த பின்பு பிணம் வருகின்றது, மய்யித் வருகின்றது, சவம் கிடக்கின்றது, பிரேதத்தை அடக்கப் போகின்றோம் என்று பேசுகின்றனர்.
சவம், சடலம், பிணம், பிரேதம் என்ற அவப்பெயருக்கு இறந்தவர் ஆளாவதற்குக் காரணம் என்ன? அவருடைய உடலில் இருந்த உயிர் மறைந்ததால் இத்தகைய சிறப்புப் பட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் இதே கதி தான்.
இந்த உண்மையை சாதாரண பாமரன் கூடப் புரிந்து வைத்துள்ளான். ஆனால் இந்த உண்மை பரேலவிகளுக்குப் புரிவதில்லை. இவர்கள் எப்போதும் இறந்தவர்களை உயிருள்ளவர்கள் என்றே அழைப்பார்கள். இருளை ஒளி என்பார்கள். நிழலை வெயில் என்பார்கள். அதனால் இந்த வகையில் அவர்கள் சரியான பைத்தியம் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இவர்களது இந்தப் பைத்தியக்கார வாதங்களில், புத்தி பேதலிப்பு பிதற்றல்களில் ஒன்று தான், "நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல! அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்பு'' என்ற குருட்டுக் கருத்து!
தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேர் பிடிப்பதற்கு முன்பு இந்தத் தீய சிந்தனை தமிழக முஸ்லிம்களிடம் இடம் பிடித்திருந்தது. ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் இந்தக் கருத்து படிப்படியாக மறைந்து கொண்டிருக்கின்றது. ஒரேயடியாக இனி அது மரணிக்கவும் இருக்கின்றது. அவ்வாறு மரண அடி கொடுத்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் அருள் வசனங்கள் தான்.
அந்த அருள் வசனங்களில் ஒன்று தான் இது!
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 18:110
நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற குருட்டு வாதத்திற்குச் சம்மட்டி அடி கொடுக்கின்ற சத்திய வசனம் இது!
ஆனால் இந்த பைத்தியக்காரக் கூட்டம் அந்தச் சம்மட்டியை வளைக்கவும் உடைக்கவும் பார்க்கின்றது. அது எப்படி?
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!' என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், அல்லாஹ் சொல்ல வருகின்ற கருத்து, "நான் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன்'' என்பது தான்.
இப்படி ஒரு பரேலவிப் பைத்தியம் கூறியுள்ளது.
அல்லாஹ் குர்ஆனில் அதே வசனத்தில், "உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே'' என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அதற்கு, "உங்களுடைய கடவுள் ஒரே ஒரு கடவுள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன். காரணம் நான் பல கடவுள் கொள்கையைத் தான் சொல்கிறேன்'' என்ற மோசமான கருத்து வராதா?
"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1)
இந்த வசனத்தில் "அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராக' என்று சொல்லப்படுகின்றது. இவர்களுடைய கிறுக்குத்தனமான வாதத்தின்படி, "அல்லாஹ் ஏகன் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்; ஆனால் உண்மையில் அல்லாஹ் ஏகன் கிடையாது; ஏராளமான அல்லாஹ் இருக்கிறான்'' என்ற தீய கருத்து வராதா?
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:219
பரேலவிகளின் பைத்திய விளக்கத்தின்படி, மதுவிலும் சூதாட்டத்திலும் மறுமையில் நன்மை இருக்கின்றது என்ற அர்த்தம் வந்து விடாதா?
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 2:22)
இதிலும் இதே கருத்து வராதா?
இப்படி, "நபியே! நீங்கள் சொல்லுங்கள்' என்ற கருத்தில் வரக்கூடிய அத்தனை வசனங்களுக்கும் பொருள் செய்தால் குர்ஆன் கூறக்கூடிய கொள்கை, கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் அனைத்துமே கேலிக்கூத்தாக ஆகிவிடும்.
"நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 14:11
நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல! ஏனைய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதப் படைப்பு தான் என்று இந்த வசனம் தெள்ளத்தெளிவாக, சந்தேகமில்லாமல் தெரிவிக்கின்றது.
எனவே முஹம்மத் (ஸல்) அவர்களும், அதற்கு முன்பு வந்த ஏனைய தூதர்களும் மனிதப் படைப்பு தான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பல்ல என்ற பரேலவிகளின் வாதம் பைத்தியக்காரத்தனமானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
04.04.2012. 22:52
ஏகத்துவம் மார்ச் 2012
ஏகத்துவம் மார்ச் 2012
தலைமையகம் அமைய தாராளமாக உதவுவீர்
மாநபி (ஸல்) அவர்களை மக்காவை விட்டும் இறை மறுப்பாளர்கள் துரத்தியடித்தனர். அதனால் நாடு துறந்த நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தஞ்சம் அடைந்தார்கள். மதீனாவுக்கு வந்த மாத்திரத்தில் அவர்கள் செய்த தலையாய பணி, ஒரு பள்ளிவாசலை நிறுவியது தான். அதுவும் சொந்தப் பணத்தில் பள்ளியை நிறுவினார்கள்.
இந்தப் பள்ளி தான் ஐவேளையும் அல்லாஹ்வைத் தொழுகின்ற ஆலயமாக, மார்க்கப் பிரச்சாரம் செய்கின்ற மையமாக சட்டமியற்றும் சட்டமன்றமாக, நீதி வழங்கும் நீதிமன்றமாக, குற்றவியல் தண்டனையை நிறைவேற்றும் கூடாரமாக, கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக, படையனுப்பும் இராணுவத் தளமாக, பாடம் பயிற்றுவிக்கின்ற பள்ளிக்கூடமாக, தான தர்மங்களை வழங்குகின்ற தர்மச் சத்திரமாக - மொத்தத்தில் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்பட்டது.
இந்தப் பள்ளிவாசல் தான் மக்காவை, இதர அரபிய அந்நியத் தலைநகரங்களை வெற்றி கொள்கின்ற வியூகக் களமாகவும், வீர நிலமாகவும் போர் பயிற்சிப் பாசறையாகவும் திகழ்ந்தது. உலகமெல்லாம் இஸ்லாம் போய்ச் சேர்வதற்கு ஓர் ஒலி-ஒளிபரப்பு நிலையமாகச் செயல்பட்டது.
இன்று அல்லாஹ்வின் கிருபையால் நமது ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகம், ஆட்சியதிகாரம் தவிரவுள்ள அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு தலைமைச் செயலகமாகச் செயல்படுகின்றது.
இந்தத் தலைமையகத்திலிருந்து ரமளான் மாதம் முழுவதும் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ஆற்றப்படுகின்ற சொற்பொழிவுகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகி இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களால் பார்க்கப்படுகின்றது. பெயரளவுக்கு முஸ்லிமாக வாழும் மக்களிடமும், முஸ்லிமல்லாத பிற மத மக்களிடமும் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெயரளவு முஸ்லிம்கள் உண்மையான மார்க்கத்தை, ஏகத்துவக் கொள்கையை அறிந்து ஏற்றுக் கொள்வதற்கும், முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை அறிந்து அலையலையாக ஏற்றுக் கொள்வதற்கும் தொலைக்காட்சிப் பிரச்சாரம் தக்க சாதனமாக அமைகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின்தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4831
இந்த நன்மைகள் பன்மடங்காகப் பெருகுவதற்குத் தலைமையகம் தான் காரணமாக அமைகின்றது.
கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகள், பிரிவினை அளவுக்குச் செல்லும் நிலையில் தீர்வுக்காகவும் தீர்ப்புக்காகவும் இங்கு வருகின்றன. பல தம்பதியர்களின் மனங்களை ஒன்றிணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாகவும் தலைமையகம் செயலாற்றுகின்றது. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தும் சமரசக் கோட்டையாகவும் நீதிமன்றமாகவும் இது திகழ்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களின், அநீதியிழைக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாகவும் இந்தத் தலைமையகம் ஒலிக்கின்றது.
கோடிக்கணக்கில் ஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை வசூல் செய்து ஏழைகளுக்கு இந்த ஜமாஅத் வினியோகிக்கின்றது. ஹஜ் பெருநாளின் போது குர்பானி இறைச்சி வினியோகம் செய்கின்றது.
சுனாமி, பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரணங்கள் வழங்குகின்றது.
அனாதைகளை ஆதரிக்கின்ற, ஆதரவற்ற முதியோரைப் பாதுகாக்கின்ற அறப்பணியை இந்தத் தலைமையகம் செய்கின்றது.
ஆபத்து, அவசர சிகிச்சைகளுக்காக இரத்த தானம் அளிப்பது, இரத்த தான முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இரத்த தானம் செய்வது போன்றவற்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் முதன்மையாகத் திகழ்வதற்கு இந்தத் தலைமையகம் தான் காரணம்.
இப்படி வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் செயல்படுத்துகின்ற ஒரு தலைமைச் செயலகமாக இது இயங்குகின்றது.
அனைத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் பள்ளியாகவும், ஏகத்துவத்தை நிலைநிறுத்துகின்ற மையமாகவும் செயல்படுகின்றது.
அனைத்து நன்மைகளின் அடித்தளமாக, ஆணி வேராகச் செயல்படுகின்ற இந்தத் தலைமையகம் ஒரு வாடகைக் கட்டடத்தில் செயல்படுகின்றது. இதற்கான மாத வாடகை மட்டும் அறுபதாயிரம் ரூபாய்.
ஒவ்வொரு கொள்கைவாதிக்கும் ஏகத்துவக் கொள்கை என்பது தன்னுடைய உயிரினும் மேலாக இருக்குமானால் இந்தத் தவ்ஹீது மையம் சொந்தக் கட்டடத்தில் அமைவதற்காகத் தங்கள் பொருளாதாரத்தை அள்ளி வழங்க வேண்டும்.
"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9:24
இந்த வசனத்தில் அல்லாஹ் சொன்னது போன்று நபித்தோழர்கள் அன்று தங்கள் உயிரை இந்த மார்க்கத்திற்காக அர்ப்பணித்தனர். உடைமைகளை, பொருளாதாரத்தை அர்ப்பணித்தனர்.
இன்றைக்கு நமது உயிரை அர்ப்பணிக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டால் அதற்காகவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு தற்போது நமது நாட்டில் இல்லை.
இருக்கின்ற வாய்ப்பு பொருளாதாரத்தை அர்ப்பணிப்பது தான். அந்த அர்ப்பணத்தை நாம் செய்து, தவ்ஹீதுக்கு மையமான தலைமையகம் அமைய அள்ளி வழங்குவோமாக! பன்மடங்காகப் பெருகும் அந்தப் பயன்களைப் பெறுவோமாக!
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:261
? கேள்வி பதில் !
ஐந்து கலிமாக்கள் இஸ்லாத்தில் உண்டா? ஐந்து கலிமா தெரியாதவர்கள் முஸ்லிமே இல்லை என்ற அளவுக்குக் கூறுகிறார்களே! விளக்கவும்.
அப்துல் அலீம்
ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும்.
ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. ஒரு நபித்தோழர் கூட அதைச் சொல்லவும் இல்லை. அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை.
நான்கு மற்றும் ஐந்தாவது கலிமாக்களை எவனோ ஒருவன் சுயமாகக் கற்பனை செய்து அதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று என நம்பச் செய்துள்ளான் என்றால் இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ரத்துல் குஃப்ர் என்ற பெயரில் இவர்கள் கற்பனை செய்த அந்தக் கலிமா இது தான்:
அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅன்வ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரஃத்து மினல்குஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.
கலிமா தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் ஆதாரமில்லாமல் கற்பனை செய்த நன்காம் கலிமா இது தான்:
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.
மேற்கண்ட கலிமாவின் வாசகங்கள் சில ஹதீஸ்களில் வந்துள்ளது என்றாலும் அந்த ஹதீஸ்கள் சரியான அறிவிப்பாளர் தொடரின் வழியாக வரவில்லை. மேலும் பலவீனமான அந்த ஹதீஸ்களும் ஈமானின் கடமை என்ற கருத்தில் சொல்லப்படவில்லை.
மூன்றாம் கலிமா என்ற பெயரில் இவர்கள் கடமையாக்கியுள்ள சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்துள்ளனர். ஆனால் ஈமானுக்கு ஐந்து கடமைகள் உள்ளதாகவும் அதில் இது மூன்றாவது கலிமா என்றும் அவர்கள் சொல்லித் தரவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கான துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றில் இதுவும் ஒரு துஆ என்ற அடிப்படையில் இதைக் கற்றுத் தந்துள்ளனர்.
சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவதற்கு அவர்கள் துஆக்கள் கற்றுத் தந்தனர். இந்த துஆ தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தால் ஓத வேண்டிய துஆ என்று கற்றுத் தந்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு "லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்)'' என்று கூறிவிட்டு, "அல்லாஹும்மஃக்பிர்லீ'' (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.
நூல்கள்: புகாரி 1154, இப்னு மாஜா 3868
முதல் கலிமா என்றும் இரண்டாம் கலிமா என்றும் இவர்கள் கூறுவது ஒரே கலிமா தான்.
லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்பது முதல் கலிமாவாம்.
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு. வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்பது இரண்டாம் கலிமாவாம்.
இரண்டும் ஒரே கலிமா தான். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராகவும் ஒப்புக் கொள்வதை இது குறிக்கிறது.
ஒன்றில் சில வார்த்தைகள் கூடுதலாக இடம் பெற்ற போதும் இரண்டில் எதைச் சொன்னாலும் ஒருவர் முஸ்லிமாக ஆகிவிடுவார்.
எனவே ஐந்து கலிமாக்கள் என்பது மார்க்கத்தில் உள்ள விஷயங்களும் மார்க்கத்தில் இல்லாத விஷயங்களும் கலந்த கலவையாக உள்ளது. இதற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தமில்லை.
? நூஹ் நபி வரலாற்றுக்கு ஆதாரமாகக் கப்பல் அமைந்துள்ளது. இதுபோன்று உலகம் முழுவதும் நபிமார்கள் அனுப்பப்பட்டிருந்தும் அரேபியாவைத் தவிர மற்ற இடங்களில் ஏன் அதற்கான அடையாளம் இல்லை?
பாரிசல்
மனித சமுதாயத்துக்குச் சான்றாக எதை ஆக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் விரும்பும் பொருட்களை அத்தாட்சியாக ஆக்குவான்.
நபி நூஹ் (அலை) அவர்களின் கப்பலை இந்தச் சமுதாயத்துக்கு அத்தாட்சியாக ஆக்கியது போன்று கொடுங்கோல அரசன் ஃபிர்அவ்னுடைய உடலையும் அத்தாட்சியாக ஆக்கியுள்ளான்.
ஒவ்வொரு நபிக்கும் ஒரு அத்தாட்சியை இந்த உலகத்தில் வைக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடவில்லை என்று இதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆனில் சில நபிமார்களின் வரலாறு மட்டுமே கூறப்பட்டுள்ளது. பல நபிமார்களின் வரலாறுகளை இறைவன் கூறவில்லை.
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.
அல்குர்ஆன் 40:78
எனவே அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ள ஒரு விஷயத்தை அல்லாஹ் ஏன் செய்யவில்லை என்று கேட்க முடியாது.
அவன் நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
அல்குர்ஆன் 85:16
அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.
அல்குர்ஆன் 21:23
மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும்
பின்பற்ற முடியாததா நபியின் வாழ்க்கை?
சென்ற இதழின் தொடர்ச்சி...
கே.எம். அப்துந் நாசிர்
சிலர் நபியவர்களின் வாழ்க்கையை உலக விஷயம், மார்க்க விஷயம் என்று பிரித்துப் பார்ப்பது கூடாது. நபியவர்கள் செய்த அனைத்தையும் பின்பற்றுவது தான் மார்க்கக் கடமை என்று கூறுகின்றனர்.
அதாவது நபியவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்துள்ளதால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத்து தான்.
நபியவர்கள் கோதுமை சாப்பிட்டுள்ளார்கள் என்று எண்ணி நாமும் கோதுமை மட்டும் சாப்பிடுவதும் சுன்னத்து தான்.
நபியவர்கள் இரத்தக் காயத்திற்கு சாம்பலைப் பூசினார்கள் என்றால் நாம் அவ்வாறு செய்வது சுன்னத்து தான் என்று வாதிக்கின்றனர்.
இவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் உள்ளனர் என்பதற்கு மேற்கண்ட அவர்களின் கூற்றே சான்றாகும்.
நபியவர்கள் மார்க்க அடிப்படையில் ஒன்றைச் செய்தால் அதற்கு மாற்றமாகச் செய்வது பித்அத் ஆகும். பித்அத்கள் அனைத்தும் வழிகேடு. வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்று நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
லுஹர் தொழுகையை நபியவர்கள் நான்கு ரக்அத் தொழுது காட்டினால் நாம் ஐந்தாகத் தொழுதாலும் மூன்றாகத் தொழுதாலும் அது தொழுகையாகாது. மார்க்கத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் லுஹர் தொழுகை மூன்று ரக்அத் என்று மாற்றினால் அவன் வழிகேடன் ஆவான்.
ஒட்டகத்தில் செல்வது மார்க்கம் என்றால் அது அல்லாத வேறு வாகனங்களைப் பயன்படுத்துவது பித்அத் ஆகும். எனவே தற்போது உலக முஸ்லிம்களில் 95 சதவிகிதம் பேர் நரகவாசிகள், பித்அத் செய்பவர்கள் என்று இவர்கள் கூறுவார்களா?
ஹஜ்ஜுக்குச் செல்லும் போது ஒட்டகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் கால கட்டத்திலேயே அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபியவர்களுக்குப் பின்னால் எந்த ஒன்றும் மார்க்கச் சட்டம் ஆகமுடியாது. நபியவர்களுக்குத் தெரியாத மார்க்க விஷயம் ஒன்றும் இஸ்லாத்தில் கிடையாது.
அதே நேரத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்றைக்கு உலகத்தில் உள்ளன. விமானம், பேருந்து, கார், பைக், சைக்கிள், ஆட்டோ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒட்டகத்தில் செல்வதும் மார்க்க விஷயம் என்றால் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்று உலகத்தில் தோன்றியுள்ளதே! முஸ்லிம்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே!
அப்படியென்றால் இஸ்லாமிய மார்க்கம் நபியவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற இறை வசனத்தின் பொருள் தான் என்ன?
மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன் என்று உரைக்கும் திருமறைக் குர்ஆன் வாகனங்களில் நபியவர்கள் காலத்தில் இல்லாத புதியவைகளும் பின்னால் உருவாகும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளது.
குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.
அல்குர்ஆன் 16:8
உலக விஷயம் வேறு; மார்க்க விஷயம் வேறு!
மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது; உலகம் புதுமை அடையும்.
மார்க்கத்தில் நபியவர்களுக்குத் தெரியாதது கிடையாது; உலகத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை நாம் அடைந்துள்ளோம்.
மேற்கண்ட வசனத்திலிருந்து இந்த விஷயங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்கள் வாழும் காலகட்டத்தில் மனிதன் என்ற அடிப்படையிலும், அன்றைய கால மக்களின் உலகப் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் செய்த காரியங்கள் மார்க்கம் என்று கூறினால் இஸ்லாம் பின்பற்ற முடியாத மார்க்கமாகவும். நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியற்ற வாழ்க்கையாகவும் ஆகிவிடும். இதைக் கூட இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.
இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் வசதியான வீடுகளில் வசிக்கின்றனர். ஏசி, வாஷிங் மிஷின், ஏர்கண்டிஷனர், மின்விசிறி போன்ற வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். விபத்துகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களையும், வசதிகளையும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் நபியவர்கள் கூரை வீட்டில்தான் வசித்துள்ளார்கள். நபியவர்கள் இரத்தக் காயங்களுக்கு சாம்பலைத் தான் பூசியுள்ளார்கள். இவ்வாறு தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறினால் இன்றைய உலகில் ஒரு சதவிகிதம் மக்கள் கூட இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாது. நபிகள் நாயகத்தை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது. இதைக் கூட விளங்காதவர்களாகத் தான் இந்த ஆலிம்கள் உள்ளனர்.
உடும்புக் கறியும் உண்மை விளக்கமும்
நபியவர்கள் வெறுத்ததை நாமும் வெறுக்க வேண்டும் என்பது தான் மார்க்கச் சட்டம். ஆனால் அதே சமயம் நபியவர்கள் வெறுத்த ஒன்று இறைச் செய்தியின் அடிப்படையில் வெறுத்ததாக இருக்க வேண்டும்.
அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் வெறுத்ததையும் நாம் மார்க்கம் என்று கருதி வெறுத்தால் இறைவன் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்கிய மிகப்பெரும் பாவத்தில் வீழ்ந்து விடுவோம். இதனைப் பின்வரும் செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது "இது உடும்பு இறைச்சி'' என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை'' என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
நூல்: புகாரி 5391, 5400, 5537
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.
நபியவர்கள் வெறுத்ததை நாம் வெறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் யாராவது உடும்புக் கறி ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? அப்படி வழங்கினால் அவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியுமா?
நபியவர்கள் உடும்பு இறச்சியை வஹீ அடிப்படையில் சாப்பிடாமல் இருந்திருந்தால் அது ஹராம். நாம் அதைச் சாப்பிடுவதும் ஹராம்.
நபியவர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் சாப்பிடாமல் இருந்ததால் அது வஹீ அடிப்படையில் உள்ளது அல்ல.
இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சாப்பிடாவிட்டாலும் நபித்தோழர்கள் உடும்பு இறைச்சியைச் சாப்பிட்டார்கள். இது இறைத்தூதருக்கு மாறு செய்தல் என்று யாராவது கூறமுடியுமா?
இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.
1. மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
2. இறைவனின் செய்தியைப் பெற்று, தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.
இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.
இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணை வைப்பாக ஆகிவிடும் என்பதையும் உணர வேண்டும்.
மார்க்கத்தில் இறைக்கட்டளை!
உலக விஷயத்தில் ஆலோசனை!
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்
அல்குர்ஆன் 7:3
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் 6:106
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 43:43, 44
மேற்கண்ட வசனங்களில் இறைக் கட்டளைகளை மட்டும்தான் இறைத் தூதர் பின்பற்ற வேண்டும் என்றும், இறைவன் அல்லாதவர்களைப் பொறுப்பாளர்களாக்கி, அவர்களுடைய கருத்துக்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
ஆனால் பின்வரும் வசனத்தில் ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், எடுக்கப்படும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்றும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்
அல்குர்ஆன் 3:159
இறைவனைத் தவிர வேறு யாரையும் பொறுப்பாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஒரு வசனம் கட்டளையிடுகிறது.
பிறருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களாகிய ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்து எடுக்கும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்று மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இவை முரண்பாடு போல் தோன்றினாலும் இந்த இரண்டு வசனங்களுக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.
இறைக்கட்டளையை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்பது மார்க்க விஷயத்தில்!
ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்பது உலக விஷயத்தில்!
மார்க்கம் என்பது இறைச் செய்தி மட்டும் தான். அதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.
உலக விஷயத்தில பயனுள்ள யாருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். மார்க்கமல்லாத விஷயங்களில் நபியவர்கள் கூட பிறருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்பது தான் மேற்கண்ட வசனங்களின் சாரம்சம்.
இறை மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காகத் தான் இறைத்தூதர் வந்தார்கள். எனவே இறைச் செய்தியின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்து காட்டியவை நமக்கு முன்மாதிரியாகும்.
நாம் இறைத்தூதரின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பது இறைச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் போதித்தவை தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நபியவர்கள் உயிரோடு வாழும் காலகட்டத்தில் பல்வேறு உலக விஷயங்களிலும், வழக்குகளிலும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்; கட்டளையிட்டுள்ளார்கள். நபியவர்கள் கட்டளையிட்டுவிட்டால் தீர்ப்பு வழங்கி விட்டால் அது மார்க்கமாகி விடும். இப்போது நாம் அதை உலக விஷயம் என்று கருதுவது கூடாது.
உதாரணமாக ஹுதைபியா உடன்படிக்கை என்பது நபியவர்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் செய்த ஒன்றாகும். இதன் காரணமாகத் தான் நபித்தோழர்கள் விரும்பாத நிலையிலும் நபியவர்கள் ஒப்பந்தங்களைச் செய்தார்கள். நபித்தோழர்களும் அதற்குக் கட்டுப்பட்டார்கள். நபியவர்கள் வாழும் போது எதையெல்லாம் கட்டளையிட்டுவிட்டார்களோ அவை அனைத்துமே மார்க்க விஷயம் தான்.
இரண்டு நபித்தோழர்களுக்கு மத்தியில் நீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்படும் போது நபியவர்கள் இருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கினார்கள். நபியவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டால் அதற்கு கட்டுப்படுவது மார்க்கச் சட்டமாகிவிடும்.
இறைத்தூதர் முடிவும் இறைவனின் கண்டனமும்
சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காணமுடியும்.
சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான். இறைவனால் கண்டிக்கப்பட்ட இது போன்ற விஷயங்களை நாம் பின்பற்றக் கூடாது.
தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள்.
ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.
நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 66:1
நான் அனுமதித்ததை நீ எப்படி ஹராமாக்கலாம்? என்று இறைவன் கேட்டதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே இவ்வாறு ஹராமாக்கினார்கள் என்பதை அறியலாம். மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூற அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது.
எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள்.
ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.
தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.
அல்குர்ஆன் 18:28
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.
அல்குர்ஆன் 80:1-10
அவர்களின் இந்த நடவடிக்கை வஹீயின் அடிப்படையில் அமையவில்லை என்பதை இறைவனே சுட்டிக் காட்டுவதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள், வெளிப்படையாக முஸ்லிம்களைப் போலவே நடந்து வந்தனர். தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களிலும் பங்கு பெற்று வந்தனர்.
ஆனால் போருக்குச் செல்லும் நிலை வந்தால் ஏதாவது பொய்க் காரணம் கூறி, போரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு நபிகள் நாயகத்திடம் விதிவிலக்குப் பெற்றுக் கொண்டனர்.
இது பற்றி இறைவனின் முடிவு என்ன? என்பதற்குக் காத்திராமல் அவர்களின் பொய்ச் சமாதானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தவறு எனப் பின்வருமாறு இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.
(முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும், தூரமாகவும் இருந்தது. "எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்பதை அல்லாஹ் அறிவான். (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
அல்குர்ஆன் 9:42,43
எனது கட்டளைக்குக் காத்திராமல் நீர் எப்படி அனுமதியளிக்கலாம் என்று கேட்டு மேற்கண்ட செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறான்.
பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.
பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
அல்குர்ஆன் 8:67,68
வஹீ வருவதற்கு முன் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. வஹீக்கு மாற்றமாக கவனக் குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்று அல்லாஹ் இறைவசனத்தை அருளிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்த போது அவனுக்காகப் பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு அல்லாஹ் அதையும் கண்டித்து திருமறை வசனத்தை அருளினான்.
இதனை புகாரி (4670, 4671, 4672 ஆகிய) ஹதீஸ்களில் காணலாம்.
எனவே நபியவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் நமக்கு போதித்தவை தான் இஸ்லாம் ஆகும். அவற்றைப் பின்பற்றுவது கடமையாகும். மனிதன் அடிப்படையிலும், அன்றைய காலப் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலும் நபியவர்கள் போதித்தவை மார்க்கச் சட்டம் ஆகாது. அவற்றில் நன்மையிருந்தால் நாம் பின்பற்றிக் கொள்ளலாம். இதனை விளங்கிப் பின்பற்றி வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!
நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்
தொடர்: 2
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கலாமா?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
அபூஹனிஃபாவின் ஃபத்வா
மதுவைத் தவிர உள்ள தடை செய்யப்பட்ட பானங்கள் அனைத்தையும் விற்பது அனுமதியாகும் என இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம் 3, பக்கம் 116
(ஃபதாவா ஆலம்கீரி என்பது ஹனபி மத்ஹபின் ஃபத்வாக்களின் தொகுப்பு நூலாகும்.)
இந்த ஃபத்வாவின் விபரீதத்தை, அபத்தத்தைப் புரிந்து கொள்ள இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு பொருள் பயன்படுத்த ஹராம் எனில் அதை விற்பனை செய்வதும் ஹராமே!
யூதர்களுக்குக் கொழுப்பை இறைவன் ஹராம் ஆக்கினான். ஆனால் அவர்கள் அதை உருக்கி, பிறருக்கு விற்ற காரணத்தினால் இறைவனின் சாபத்திற்குள்ளானார்கள் என்று நபிகளார் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2224
இறைவன் ஒன்றை முற்றிலும் ஹராமாக்கினால் அதை விற்பதும் ஹராமே என்பதையும், அவ்வாறு விற்பது இறைவனின் சாபத்திற்குரியது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையிலே மது, பன்றி, சிலை, செத்தவை ஆகியவை இஸ்லாத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதைப் போன்று விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே இறைவன் ஒரு பொருளை குடிக்க, பருகக் கூடாது என்று ஹராமாக்கி விட்டால் அவற்றை ஒரு போதும் விற்கலாகாது என்பதை இந்த அடிப்படையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாக, தடை செய்யப்பட்ட பானங்களை விற்கலாம் என அபூஹனிஃபா ஃபத்வா (?) அளித்திருக்கின்றார். அதில் மதுவுக்கு மட்டும் விலக்களித்திருக்கின்றார். இஸ்லாத்தில் போதை தரும் பானம் மட்டும் ஹராமல்ல. மனித உடலுக்குக் கேடு விளைவிப்பவை, அசுத்தத்திலிருந்து தயாரிக்கப்படும் பானம் போன்றவைகளும் ஹராமாக்கப்பட்டுள்ளது. இவற்றை விற்பது அனுமதி என்று இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்.
இதன் மூலம் மனித உடலுக்குக் கேடு தரும் பானங்களை விற்பது கூடும் என்கிறார். இது இஸ்லாமிய போதனைக்கு எதிரானதில்லையா?
பிறர் நலம் நாடுவது இஸ்லாத்தின் முக்கிய போதனை. இதை வலியுறுத்தி எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் கூட அபூஹனிஃபா கண்டு கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.
மேலும் ஒன்றை ஹராம் என்பதும், ஹலால் என்பதும் இறைவனின் அதிகாரத்தில் உள்ள விஷயம். இறைவன் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குவதற்கோ, அவன் அனுமதித்த ஒன்றைத் தடை செய்வதற்கோ நமக்கு யாருக்கும் துளியும் அதிகாரம் இல்லை.
பணத்திற்காகத் தொழுகை
மத்ஹப் வழி
"நீ லுஹர் தொழு! உனக்கு ஒரு தங்கக் காசு தருகிறேன்'' என்று ஒரு மனிதரிடம் கூறப்படுகின்றது. இந்த நோக்கத்திற்காகவே அவரும் தொழுகிறார். இவரது தொழுகை செல்லும் என்று தான் கூற வேண்டும். தங்கக் காசுக்கு அவர் உரிமை கொண்டாட முடியாது.
(துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 473)
ஹனபி மத்ஹப் சட்ட விளக்க நூலான துர்ருல் முக்தாரில் மேற்கண்டவாறு கூறப்படுகின்றது.
மாநபி வழி
வணக்க வழிபாடுகளை இறைவனுக்காக என்ற கலப்பற்ற, தூய எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். அதில் உலக ஆதாயம் பெறுவதோ, விளம்பர நோக்கமோ இருக்கும் எனில் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
அல்குர்ஆன் 5:27
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் 98:5
இறைவனுடைய திருப்தியை முன்னிலைப்படுத்தாமல் மக்களுக்காக தொழுவது நரகின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களின் குணம் என இறைவன் எச்சரிக்கின்றான்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 4:142
இறை திருப்தியை நாடாமல் செய்யப்படும் எந்த ஒரு வணக்கத்திற்கும் இறைவனிடம் எந்தக் கூலியும் கிடையாது என்பதை பின்வரும் நபிமொழி எடுத்துரைக்கின்றது.
"மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் கேட்கும்படிச் செய்து விடுவான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை அவர்கள் பார்க்கும் படி செய்து விடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
நூல்: முஸ்லிம்
நமது நற்செயல்கள் இறைவனுக்காகச் செய்யப்பட வேண்டும், மற்ற நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த நற்செயல்களுக்கும் இறைவனிடம் கூலி கிடைக்காது என்பதை இந்த இறை சான்றுகள் தெளிவாக பறைசாற்றுகின்றன.
இந்நிலையில் அற்பக் காசு பணத்திற்காகத் தொழுதால் அந்தத் தொழுகை செல்லும் என ஹனபி மத்ஹப் கூறுகின்றது. இது மேலே நாம் எடுத்துரைத்த அத்தனை சான்றுகளுக்கும் எதிரானது; முரணானது.
மழைத் தொழுகை இல்லை (?)
மத்ஹபு வழி
இமாம் அபூஹனிஃபா கூறுகின்றார்: மழை வேண்டுவதிலே ஜமாஅத்தாகத் தொழுகின்ற எந்த சுன்னத்தான தொழுகையும் கிடையாது. மக்கள் தனித்தனியாகத் தொழுதால் கூடும். "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் பாவங்களை மன்னிப்பவன் ஆவான்' என்ற வசனத்தின் பிரகாரம் மழைவேண்டுதல் என்பது துஆ செய்வதும் பாவமன்னிப்புத் தேடுவதும் தான். நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தொழுகை நடத்தியதாக அறிவிக்கப்படவில்லை.
நூல்: ஹிதாயா
பாகம் 1, பக்கம் 87
மழைத் தொழுகை என்ற ஒன்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுததாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகின்றார். நபிகள் நாயகம் மழை தொழுகை தொழுததாக எந்தச் செய்தியும் இல்லை என அபூஹனிபா மறுத்ததால் அது தொடர்பான செய்திகளை இங்கே குறிப்பிடுகிறோம்.
மாநபி வழி
நபி (ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி),
நூல்: புகாரி 1012
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கி துஆச் செய்தார்கள். தமது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி),
நூல்: புகாரி 1024
நபி (ஸல்) அவர்கள் பணிவாகவும் உள்ளச்சத்துடனும் அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: திர்மிதீ 512
இமாம் திர்மிதி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்து. அபூஹனிபாவின் கூற்றையும் குறிப்பிட்டு அபூஹனிபா நபிவழிக்கு முரண்பட்டு விட்டார் என விமர்சிக்கின்றார். அதையே நமது விமர்சனமாகத் தருகிறோம்.
மழைத் தொழுகை உண்டு என்பதை நிறுவ இவ்வளவு ஆதாரங்களை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் ஹனபி மத்ஹபினரே மழைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுகின்றனர். அதற்காக மக்களை அழைத்து ஒன்று திரட்டுகின்றனர். எனினும் இத்தனை செய்திகளைக் கண்டு கொள்ளாமல் மழைத் தொழுகை இல்லை என்கிறார் அபூஹனிபா. நீங்களே ஒப்புக் கொண்ட ஒரு வணக்கத்தை உங்கள் இமாம் இல்லை என மறுப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்த்தவில்லையா? என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்.
இமாம் அபூஹனிபா திமிர்த்தனமாக நடந்து கொள்கின்றார் என்று நாம் கூற முனையவில்லை. மாறாக. பல நபிமொழிகள் அவருக்கும் தெரியவில்லை. பல மார்க்கச் சட்டங்களில் அவர் தப்பும் தவறுமாகத் தீர்ப்பளித்துள்ளார் என்கிறோம்.
தவறுகள் ஏற்படும் இவரைப் பின்பற்றுவதை விட்டு விலகி, தவறுகளே நிகழாத இறைவனின் கட்டளைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று மத்ஹபினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
தொழுகையின் துவக்கம் இனி "அர்ரஹ்மானு அக்பர்'?
தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அக்பர் என கூறுவோம். இது தக்பீர் தஹ்ரீமா என மக்களால் அழைக்கப்படுகின்றது. தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று தான் கூற வேண்டும் என்று அனைவரும் நன்கறிவோம். இதைத் தான் அல்லாஹ் தன் தூதர் மூலமாக நமக்கு உத்தரவிட்டுள்ளான். இறை உத்தரவுக்கு மாற்றமாக, நாம் சுயமாக மார்க்கத்தில் எதையும் நுழைத்து விட முடியாது. அந்த அதிகாரம் இறைத்தூதர்களுக்கே இல்லை.
தொழுகையின் ஆரம்பத்தில் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்குப் பதிலாக அர்ரஹ்மானு அக்பர், அல்லாஹு அஜல்லு என்று கூறினால் அவரது தொழுகை செல்லும், அதில் எந்தத் தவறும் இல்லை என்று இமாம் அபூஹனிபா கூறுகிறார்.
தக்பீருக்குப் பதிலாக அல்லாஹு அஜல்லு, அல்லாஹு அஃலமு, அர்ரஹ்மானு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லது இறைவனுடைய பெயர்களில் எதையாவது ஒன்றைக் கூறினால் அது (அந்த தொழுகை) அபூஹனிபாவிடம் செல்லும்.
நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 47
அபூஹனிபா இதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் தொழுகையில் குர்ஆன் வசனங்களை பாரசீக மொழி, வங்காள மொழி என எந்த மொழியில் ஓதினாலும் அதையே அனுமதிப்பவராயிற்றே.
(பார்க்க: நூல் ஹிதாயா, பாகம்: 1, பக்கம் 47)
அவர் இதை அனுமதிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. யாருக்காகத் தொழுகின்றோமோ அந்த இறைவனிடம் இது கூடுமா? அவன் ஏற்றுக் கொள்வானா என்பதை மத்ஹபினர் சிந்தித்துப் பார்க்கட்டும்.
அபூஹனிபா அனுமதித்த இந்தச் சட்டத்தை அவரைப் பின்பற்றும் மத்ஹப்வாதிகள் தங்கள் பள்ளிகளில் இதை அனுமதிப்பார்களா? இறைவனின் உண்மையான அடியார்கள், நன்மக்கள் யாரும் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
உளூவில் ஒரு வினோத சட்டம்
ஒருவர் உளூ செய்யும் போது ஒரு உறுப்பைக் கழுவ மறந்து விடுகின்றார். அது எந்த உறுப்பு? கையா? காலா? அல்லது முகமா என்று தெரியவில்லை. இந்நிலையில் அவர் என்ன செய்ய வேண்டும்?
அவர் மீண்டும் உளூச் செய்ய வேண்டும் என்று சாதாரண அறிவுள்ள யாரும் எளிதாகப் பதிலளித்து விடுவார். இதற்குப் பெரிதாக மார்க்க அறிவு இருக்க வேண்டும் என்பதில்லை. சந்தேகம் ஏற்பட்டு விட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, சந்தேகமற்ற காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நபிகளார் நமக்கு வழிகாட்டியுள்ளதால் இது தான் மார்க்கத்தின் நிலைப்பாடுமாகும். ஆனால் இதற்குப் பதிலளிக்கப் புகுந்த ஹனபி மத்ஹப் என்ன கூறுகின்றது என்பதைப் பாருங்கள்.
(உளுவில்) அவன் ஒரு உறுப்பைக் கழுவவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுவ வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும்
நூல்: துர்ருல் முக்தார்
பாகம் 1 பக்கம் 150
உளூவின் போது கழுவப்பட வேண்டிய உறுப்புகளில் எந்த உறுப்பைக் கழுவவில்லை என்று சந்தேகம் கொண்டாலும் இடது காலைக் கழுவி விட்டு கூலாகச் சென்று விடலாமாம். இது தான் ஹனபி மத்ஹபின் சட்டம்.
இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரத்தைக் குறிப்பிடுவார்களா? நிச்சயம் இதற்கான ஆதாரத்தை அவற்றிலிருந்து காட்ட முடியாது.
ஒருவர் முகத்தைக் கழுவ மறந்திருப்பார், மற்றொருவர் கையைக் கழுவ மறந்திருப்பார் இந்த இரண்டிற்கும் இடது காலைக் கழுவுவது எப்படிப் பரிகாரமாக அமையும்? இறைவனோ, இறைத்தூதரோ கூறியிருந்தால் இது பரிகாரமாக அமையுமே ஒழிய வேறு யார் கூறினாலும் பரிகாரமாகாது.
மேலும் இத்தகைய வினோத தீர்ப்புக்கு, "இதுதான் அவனுடைய கடைசிச் செயல்' என்பதையே காரணமாகக் கூறுகின்றார்கள். கடைசிச் செயலுக்கும், மறந்த காரியத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப் போனால் கடைசியாகச் செய்த காரியம் தான் மறக்காமல் இருக்கும்.
தொழுகையில் ஒருவர் ஒரு காரியத்தை மறந்து, அது ருகூவா, ஸஜ்தாவா என்றும் தெரியவில்லை எனில் அவர் ஸலாம் கூறவேண்டும். ஏனெனில் இதுவே அவரின் கடைசிச் செயல் என்று பதிலளிப்பார்களா?
இது கொஞ்சமும் பொருத்தமற்ற, மார்க்க ஆதாரமற்ற (மத்ஹபு) சட்டம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ருகூவு செய்யும் முறை
மத்ஹப் வழி
ருகூவில் சீராக இருக்காமல் தலையைச் சிறிது தாழ்த்தினாலே அபூஹனிபாவிடம் தொழுகை கூடும் என்பதே தெளிவான பதிலாகும்.
நூல்: ரத்துல் முக்தார்
பாகம் 3 பக்கம் 392
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்த வேண்டும் என்பதில்லை. மாறாக சிறிது தாழ்த்தினாலே போதும் என ஹனபி மத்ஹப் சட்டம் சொல்கின்றது.
மாநபி வழி
ருகூவின் போது தலையை சீராகத் தாழ்த்தி, முதுகை நேராக வைக்க வேண்டும் என்று நபிவழி கூறுகின்றது. எந்த அளவிற்குத் தலையைத் தாழ்த்துகிறோமோ அதைப் பொறுத்து தான் நமது முதுகு வளைவின்றி நேராக, சீராக அமையும். இந்தச் சீரான அமைப்பு இல்லையெனில் தொழுகை கூடாது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்லிவிட்டு, "திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை'' என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே எனக்கு கற்றுத் தாருங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 757
ருகூவை பூரணமாகச் செய்யாதவனை தொழுகையில் திருடுபவன் என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: அஹ்மத் 11106
இன்னும் இதுபோல் ஏராளமான ஹதீஸ்கள், நன்றாகக் குனிந்து ருகூவு செய்வதை வலியுறுத்துவதுடன் அவ்வாறில்லையெனில் தொழுகை கூடாது என்றும் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) எந்தத் தொழுகையைக் கூடாது என்று கூறினார்களோ அந்தத் தொழுகையைக் கூடும் எனக் கூறி நமது தொழுகைகளைப் பாழாக்கும் மத்ஹபுகள் இனியும் தேவையா? மத்ஹபு அபிமானிகள் சிந்திக்கட்டும்.
சான் ஓட்டமும் ஜாக் வாட்டமும்
அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஓர் அபாரமிக்க வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. கழுத்தறுப்புக்கள், காலை வாருதல், முதுகில் குத்தல், முடமாக்கும் முயற்சிகள் அத்தனையையும் தாண்டி இந்த இயக்கம் அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றது; சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது.
நாம் இதற்கு முன்பு உருவாக்கிய அமைப்புக்கள், நமது சரிவிலும் சாவிலும் குறியாக, வெறியாக இருக்கின்றன. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படுகின்றது. இந்த அமைப்புக்கு ஒரு வீழ்ச்சியும் வேதனையும் ஏற்பட்டு விட்டால் அவர்களுக்குத் தலைகால் புரியாத சந்தோஷமும் சகலவிதமான ஆனந்தமும் உருவாகி விடுகின்றது.
இந்த இயக்கத்திற்குப் பெயரும் பெருமையும் கிடைத்து விட்டால் அவர்களுக்குத் துன்பமும் துக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.
இதோ அல்லாஹ் சொல்கின்றான்:
உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.
அல்குர்ஆன் 3:120
ஜாக், தமுமுகவினரின் மனநிலையை இந்த வசனம் அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றது. அதில் குறிப்பாக ஜாக் நமது விஷயத்தில், "மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும்' என்பது போன்று, தவ்ஹீது அழிந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் அழிய வேண்டும் என்பது தான் ஜாக்கின் நாட்டமும் தேட்டமுமாக உள்ளது.
இதை நாம் வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை.
2006ஆம் ஆண்டு பரேலவிசத் தலைவன் அப்துல்லாஹ் ஜமாலியின் கோஷ்டியினருக்கும தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையே களியக்காவிளையில் விவாதம் நடைபெற்றது.
அது தொடர்பாக அல்ஜன்னத் மாத இதழில் ஓர் அலசல் இடம் பெற்றிருந்தது. அதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது தங்கள் வெறுப்பையும் விஷ(ம)த்தையும் கக்கியிருந்தார்கள். இது அவர்களின் வாடிக்கை என்று சொல்லி விடலாம்.
அந்தக் கட்டுரையாளர் அந்த அலசலை முடிக்கும் போது, தனது உள்ளக்கிடங்கை, ஜாக்கின் ஏக்கத்தை அப்படியே வெளிப்படுத்துகின்றார்
"பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி கடந்த காலங்களில் ஏற்கனவே விவாதங்களை நடத்தி வென்றெடுத்த கொள்கைகளை மீண்டும் விவாதிக்கும் நிலை ஏற்பட்டும் கூட அவற்றை எதிர்த்து வாதாடிய தவ்ஹீது ஜமாஅத்தினர், "ஜெயித்த கேஸில் தோற்று விட்டார்களோ' என்ற பிரமை களியக்காவிளை விவாதங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது''
அல்ஜன்னத், அக்டோபர் 2006
எந்த விவாதம் நடந்தாலும் இரு தரப்பினரும் தாங்கள் தான் வென்றோம் என்றே வாதிடுவார்கள்; வழக்காடுவார்கள். உண்மையில் ஒரு வாதத்தில் வென்றவர் யார்? வீழ்ந்து விட்டு வென்றது போல் மாய்மாலம் செய்பவர் யார்? என்பதை அந்த விவாதத்தில் கிடைக்கும் விளைவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1986ல் கோட்டாற்றில் நடந்த முனாளரா எனும் விவாதத்தைத் தொடர்ந்து சமாதி வழிபாட்டுக்கும், மத்ஹபு மாயைக்கும் முழுக்குப் போட்டு விட்டு ஒரு பெருங்கூட்டமே சத்தியத்தில் வந்திணைந்தனர். அதே போன்று 2006ல் களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகும் கூட்டம் கூட்டமாக மக்கள் சத்தியத்தின் பக்கம் வந்து சேர்ந்தனர்.
களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு தான் குமரி மாவட்டத்தில் கடையாலுமூடு, ஈத்தாமொழி, நம்பாளி போன்ற ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத் வேர் பிடித்தது. அதாவது சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து வெளியேறி தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்தனர்.
இது தான் விவாதத்தின் வெற்றியைத் தெளிவுபடுத்துகின்ற உண்மை விளக்கமாகும். இதில் பிரம்மை எதுவும் கிடையாது. வெற்றியின் பிரமாதமும் பிரமாண்டமும் தான் தெரிகின்றது. ஆனால் இந்த மாலைக்கண் காரர்களுக்கு இது பிரம்மையாகத் தெரிகின்றது. இதற்குக் காரணம் நாம் தோற்க வேண்டும் என்ற இவர்களது ஏக்கமும் எதிர்பார்ப்பும் தான்.
இதற்கு ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனியின் பதிலும் மற்றொரு ஆதாரமாகும்.
களியக்காவிளை விவாதம் நடைபெறுவதற்கு முன் இது குறித்து ஜாக் என்ன நிலைபாட்டில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், கமாலுத்தீன் மதனியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்துல்லாஹ் ஜமாலி அணியினர் பேசுவது போன்று பேசினார். பிஜேவுக்கு எதிரான ஆதாரங்கள் வேண்டும் கோவை ரஹ்மத்துல்லாஹ் கேட்ட போது. திருச்சி அபூஅப்துல்லாஹ்விடம் கேட்டுப் பாருங்கள் என்று கமாலுத்தீன் மதனி பதிலளித்தார். அதாவது விவாதத்தில் முஷ்ரிக்குகள் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தார்.
இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகின்ற, அப்பட்டமாகத் தெரிகின்ற விஷயம், ஏகத்துவக் கொள்கை தோற்றாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் தோற்க வேண்டும் என்ற இவர்களின் நிலைப்பாடு தான்.
வாடும் ஜாக்
பரேலவிகள், தவ்ஹீதை எதிர்க்கின்ற பக்கா குராபிகள். கடுகளவு ஈமான் கொண்டவன் கூட இவர்களிடம் இணக்கத்தையும் நெருக்கத்தையும் காட்ட முடியாது. ஆனால் ஜாக்கோ பரேலவிகள் மீது காட்டத்தைக் காட்டாமல் ஒரு மறைமுகமான ஈர்ப்பைத் தான் காட்டுகின்றது. இந்த ஈர்ப்பு இல்லாமலா போகும்? குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு ஆதாரங்களைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற அஸ்திரத்தில் இவ்விரு சாராரும் ஒன்றுபடும் போது ஏன் பரேலவிகள் மீது இவர்களுக்கு ஈர்ப்பு இருக்காது? அதன் பிரதிபலிப்பு, நாம் அழிய வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு!
இந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு சான்று...
கிறிஸ்தவ சபையினர், பிற மதத்தவர்கள் வாழ்கின்ற வீதிகளில் மட்டுமல்ல, வீடுகளிலும் புகுந்து கிறிஸ்தவத்தைத் திணிக்கின்றர். முஸ்லிம்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. சொல்லப் போனால் முஸ்லிம்கள் தான் அவர்களின் வேட்டையாடும் இலக்குகள்.
ஈஸா (அலை) அவர்கள் தொடர்பான குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களின் சான்றுகளையும் எடுத்துக் காட்டி முஸ்லிம்களைத் தங்கள் வலைகளில் வீழ்த்துவதற்குப் பெரும் முயற்சிகளை இந்தக் கிறித்தவ சபையினர் மேற்கொள்கின்றனர். இதை முறியடிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விடுத்துக் கொண்டேயிருக்கின்றது.
இந்நிலையில் சான் என்ற அமைப்பினர் நம்மிடம் வசமாக மாட்டினர். விவாதத்திற்கு வந்து சிக்கினர். அவர்களை அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் நொங்கெடுத்து நொறுங்க வைத்தனர். அசத்திய வாதம் ஆட்டம் கண்டது. அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கிக் குண்டுகள் முதல் சுற்றிலேயே தீர்ந்து போயின. இனி அடுத்தடுத்து வருகின்ற சுற்றுக்களுக்கு அவர்களிடம் சரக்கு இல்லை.
அதனால் அடுத்த சுற்று விவாதத்திற்கு வருவது தங்கள் கழுத்துக்களுக்குப் போடுகின்ற சுருக்குக் கயிறு என்று எண்ணிய சான் அமைப்பினர் செய்த தந்திரம் தான் காவல்துறையின் தடையுத்தரவு, போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்ற சாக்குப் போக்குகள்; சால்ஜாப்புகள். இது உலகறிந்த உண்மை.
இதைத் தான் ஜாக்கின் மாவட்ட நிர்வாகி, ஹாமீம் பிர்தவ்ஸி என்பவர் தனது முகநூல் இணைய தளப் பக்கத்தில், "பி.ஜே.யின் வெற்றியா? காவல்துறையின் அனுமதி மறுப்பா?'' என்ற தலைப்பிட்டு வெளியிட்டு ஜாக்கின் ஏக்கத்தைத் தெளிவுபடுத்தினார்.
காவல்துறை அனுமதி மறுத்ததாக சான் அமைப்பினர் வெளியிட்டுள்ள காவல்துறையின் கடித நகலை மேற்படி தலைப்பில் ஜாக் அமைப்பினர் வெளியிட்டு தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டனர்.
உண்மையில் இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்ட பிறகு தான், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் விவாதத்தை நடத்துவதற்கு சான் சம்மதித்தது. அதன் பிறகு, "நேரடி ஒளிபரப்பு கூடாது என்று காவல்துறை தடை செய்துள்ளது; எனவே நேரடி ஒளிபரப்பு இல்லாவிட்டால் தான் விவாதத்திற்கு வருவோம்'' என்று விவாதம் துவங்குவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சான் அமைப்பு மின்னஞ்சல் அனுப்பியது.
எந்த நிலையிலும் விவாதத்திற்குத் தயார் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. உண்மையிலேயே விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பது சான் அமைப்பின் விருப்பமாக இருந்தால் அவர்கள் ஒப்புக் கொண்டபடி சபைக்கு வந்திருக்க வேண்டும். வந்த பிறகு நேரடி ஒளிபரப்பு கூடாது, அவ்வாறு ஒளிபரப்பினால் விவாதம் செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.
அதை விட்டு விட்டு 10 மணிக்குத் துவங்கும் விவாதத்திற்கு 8.40 மணிக்கு மெயில் அனுப்பி நேரடி ஒளிபரப்பு இருந்தால் விவாதம் இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் நேரடி ஒளிபரப்பைக் காரணம் காட்டி சான் அமைப்பினர் மறுத்தார்கள்.
அது மட்டுமின்றி நேரடி ஒளிபரப்பு என்பது ற்ய்ற்த் & ர்ய்ப்ண்ய்ங்ல்த் தளங்களில் தான் நடக்கப் போகிறது. காவல்துறை உத்தரவை மதித்து இவர்கள் தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருக்கலாம். நமது தளங்களில் காவல்துறை உத்தரவை மீறுவதால் காவல்துறை சான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. நேரடி ஒளிபரப்பு காரணமாக நடவடிக்கை என்றால் அது தவ்ஹீத் ஜமாஅத் மீது மட்டும் தான் இருக்கும்.
பொது இடத்தில் நடத்துவதற்குத் தான் அனுமதி கோர வேண்டும். நமது இடத்தில் கலந்துரையாடல் மாதிரி நடத்துவதற்கு யாரிடமும் அனுமதி கோரத் தேவையில்லை. எவ்வளவோ நிகழ்ச்சிகளை நமது மர்கஸ்களில் நடத்துகிறோம். அதற்கெல்லாம் எந்த அனுமதியும் கோருவதில்லை. இதனால் தான் தலைமையில் விவாதம் நடத்துவோம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தனைக்குப் பிறகும் சான் அமைப்பினர் மேற்கண்ட காவல்துறை அனுமதி மறுப்பு என்ற கடிதத்தைக் காரணம் காட்டி, விவாதத்திற்கு வர மறுத்து விட்டனர்.
சான் வெளியிட்ட இந்தக் கடிதத்தைத் தான் ஓஆணஐ வாந்தியெடுத்து, கொள்கையளவில் சானுக்குத் தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளார்கள்.
சான் அமைப்பு ஓட்டமெடுத்தது ஜாக்கை வாட்டமடையச் செய்திருக்கின்றது. இதிலிருந்து இவர்களது ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பும் பிணைப்பும் எக்கச்சக்கமாக வெளிப்பட்டுள்ளது.
கிறித்தவர்களிடம் தவ்ஹீதுக் கொள்கை வீழ்ந்தாலும் பரவாயில்லை, தவ்ஹீத் ஜமாஅத் வெற்றி பெற்று விடக் கூடாது. என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? என்ன ஒரு கொள்கை இறுக்கம்?
இவர்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று வாதிடுவோர், வால் பிடிப்போர் இனியாவது அடையாளம் கண்டு கொண்டால் சரி!
கசக்கும் பெற்றோர்கள் கருகும் மலர்கள்
சென்னை செயிண்ட் மேரீ ஆங்கிலோ இண்டியன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பதினைந்து வயது மாணவன் தனது ஆசிரியையைக் கொலை செய்த கோரச் சம்பவம் நாட்டின் அனைத்து மக்களையும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது.
ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி ஒரு விதமான கவலை கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் மாணவ மாணவியர்களின் மனநிலையையும், மறுபக்கம் பெற்றோர்களின் மனநிலையையும் இது பகிரங்கமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
மாணவ மாணவியர்களின் மனநிலை இந்த சம்பவத்தின் பின்னணியில் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இங்கு பெற்றோர்களின் மனநிலையைக் கொஞ்சம் சற்று உற்றுப் பார்ப்போம்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், வளர்கின்ற இளம் மலர்களிடம் அதிகமான மதிப்பெண்கள் பெற வேண்டும், மாநிலத்தில் முதல் இடம் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாது இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். மாநில அளவில் இல்லையென்றால் மாவட்ட அளவிலாவது முதலிடத்தை அடைய வேண்டும் என்று பிள்ளைகளின் மனோபாவத்தைக் கொஞ்சம் கூட உணராமல் பிள்ளைகளைக் கசக்குகின்றார்கள்.
நாம் படிக்கும் காலத்தில் இல்லாத, மலை போல் குவிந்து கிடக்கும் பாடப் பிரிவுகள்! குழந்தைகளின் குறுக்குகளை ஒடித்து, கூன் விழச் செய்யும் பாரம் நிறைந்த பாடப் புத்தகப்பைகள்! காலையில் எழுந்ததுமே அரைகுறை உணவு, அரை வயிறு சாப்பாட்டுடன் பள்ளிக்கு அலறி ஓடும் அநியாயம்! மாலையில் வந்ததும் ஓய்வுக்கு, விளையாட்டுக்கு வழியில்லாமல் டியூசன்கள்! இரவில் பதினோரு மணியைத் தாண்டிய படுக்கை என்று படாதபாடு படுகின்ற பரிதாப நிலை, பாவநிலை!
இவையெல்லாம் நம்முடைய காலத்தில் இல்லை என்று கொஞ்சம் கூட எண்ணிப் பார்க்காத, இதயத்திற்குப் பதிலாக இரும்பைப் பெற்ற பெற்றோர்களின் எக்கச்சக்க கசக்கலால், கசப்பால் கல்வி கற்க வேண்டிய மலர்கள் கசங்கிப் போய், கசந்து போய், உள்ளம் கருகிய அவர்களில் சிலர் உத்தரக் கட்டைகளில் கயிற்றை மாட்டித் தங்கள் உயிரை விட்டு சவக் கட்டைகளாக மாறுகின்றார்கள்.
மின்சார ரயில்கள் முன் பாய்ந்து, சிதறு தேங்காய்களாய் சில்லுகளாகிவிடுகின்றனர். பூச்சி மருந்து தின்று பூலோகத்தை விட்டு விடைபெற்று விடுகின்றனர்.
இவை கற்பனைகள் அல்ல. இதோ சில உண்மை நிகழ்வுகள் நிதர்சனங்கள்.
1. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு பசுந்தளிர் மாணவி ஜமீன் பல்லாவாரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வியாழன் காலை, கொசு மருந்தைக் குடிக்கின்றாள். காரணம் என்ன? "நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை; அதனால் உனது பெற்றோர்களை அழைத்து வா!' என்று வகுப்பு ஆசிரியர் சொன்னதற்குப் பரிகாரம் தான் இந்த பாரதூரமான நடவடிக்கை.
நல்ல வேளையாக இந்தச் சிறுமி இந்தக் கொலையின் கோரப் பிடியிலிருந்து தப்பிவிட்டாள். விஷத் திரவத்தின் வேகக் குறைவால் உயிர் பிழைத்தாள். இல்லையேல் பதினான்கு வயதுப் பயிர் வாடிப் போயிருக்கும்.
2. சென்னை புறநகரின் பெரவல்லூர் உஃங காலணியைச் சேர்ந்த பதினாறு வயது மாணவன் கொளத்தூர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு பயின்று கொண்டிருந்தான். இவன் தன்னுடைய படுக்கையறையின் கதவை வெள்ளிக்கிழமை காலை திறக்காததைக் கண்டு கலக்கமடைந்த பெற்றோர்கள் கதவைத் தட்டினர். திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்தனர். அவர்களது கலக்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் விளக்கம் காத்திருந்தது.
ஆம்! கூரையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியில் மாட்டியிருந்த கயிறு அவனது குரல் வளையை நெருக்கி உயிரைப் பறித்திருந்தது. ஒரு தனியார் ஆட்டோ மொபைல் கம்பெனியில் பணிபுரிந்த அவனது தந்தை அடித்து துவைத்து அறையில் அடைத்து வைத்திருந்தார். முன்பு நடந்த பரீட்சையில் தோல்வி அடைந்த அந்தப் பாடத்தில் சரியான பதில் ஒப்புவிக்கின்ற வரை உன்னை அறையை விட்டு வெளியே விட மாட்டேன் என்று கதவைப் பூட்டியும் போட்டார். அவனது வாழ்க்கையையும் சேர்த்தே பூட்டி விட்டார். தந்தையின் கேள்விக்கு விடை சொல்லாமல் ஒரேயடியாக விடை பெற்றுவிட்டான்.
கதையை முடிக்கும் கல்லூரி மாணவர்கள்
3. பள்ளிக் கூடப் பையன்களும் பெண் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கைக் கதையை, கணக்கை விரைந்து முடிக்கின்றார்கள் என்றால் கல்லூரி மாணவர்களும் இதை விட அதிகமாக முடிக்கின்றார்கள்.
நண்பன் என்ற சினிமாவில் இறுதியாண்டு பொறியியல் மாணவன் தனக்கு கொடுக்கப்பட்ட பிராஜக்ட் வேலையை முடிக்க முடியாமல் வாழ்க்கை பிராஜக்ட்டை முடித்து விடுகின்றானாம். அது நிழல்ல நிஜம் தான் என்று கூறி "ஹிந்து' பத்திரிக்கை, "வாழ்க்கையைத் தொலைக்கின்ற தொழிற்கல்வி மாணவர்கள்' பற்றிய புள்ளி விவரங்களைப் பதிய வைக்கின்றது.
இரண்டு பொறியியல் மாணவர்கள் ஓடும் மின்சார ரயில் முன்பு பாய்ந்து தங்களை மாய்த்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் இரயில்வே போலீசாரிடம் புகார் செய்கின்றனர். ஆசிரியர்களின் குடைச்சல் இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று அவர்கள் இந்தப் புகாரில் தெரிவிக்கின்றனர்.
4. ஜனவரி 30: நானோ டெக்னாலஜி பயில்கின்ற ஹைதராபாத்தைச் சார்ந்த பதினெட்டு வயது மாணவன் இரண்டு பாடங்களில் தோல்வி அடைகின்றான். ஆசிரியர் வகுப்பை விட்டுத் துரத்தி விடுகின்றார். பையனின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். சமாதானப்படுத்தி ரயிலில் அழைத்து வருகின்றார். பயணத்தில் இருவரும் உறங்குகின்றனர். விழித்துப் பார்த்த தந்தையின் விழித்திரைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பையனைக் காணவில்லை. காகிதத் துண்டு செய்தி அறிவித்தது. "இனிமேல் என்றும் என்னை நீங்கள் காண மாட்டீர்கள்'' என்று பிரியாவிடை கொடுத்திருந்தான். ஆனால் ஃபேஸ்புக்கில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அதைப் பார்த்த பெற்றோருக்குப் போன உயிர் திரும்ப வந்த பரம திருப்தி.
5. வார விடுமுறையான இரு நாட்கள் உழைத்து விட்டு மீதி நாட்கள் படிக்கச் சென்ற இன்னொரு மாணவன், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து, தன்னை அழுத்திக் கொண்டு அழித்துக் கொள்கின்றான்.
6. 2010-11 கல்வியாண்டில் ஐ.ஐ.டி.யில் பயிலும் இரு மாணவர்கள் அழுத்தம் தாங்க முடியாமல் தங்களை நிரந்தரமாகத் தொலைத்துக் கொள்கின்றார்கள்.
இவை அனைத்தும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், இந்து நாளேடுகளில் வெளிவந்தவை. இவையெல்லாம் எதை காட்டுகின்றன?
கல்லூரிகளில் ஆசிரியர் தொல்லை, தொந்தரவு எனப் புகார்கள் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்டாலும் உண்மை நிலை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் அவர்களது தகுதிக்கும் சக்திக்கும் மேலாக, அதிகமாக எதிர்பார்ப்பது தான்.
கலையியல் படிப்பதற்குத் தகுதியில்லாத மாணவர்களைக் கூட, பொறியியல் படிப்பிற்குப் பலவந்தமாகத் தள்ளி விடுகின்றார்கள். இந்தச் சுமையை மாணவ, மாணவியர்களால் சுமக்க முடியவில்லை. இந்தப் பாரத்தை சிறு பறவைகளான அவர்களால் தாங்க முடியவில்லை. அதன் முடிவு தான் தற்கொலைகள்.
மாணவ, மாணவியருக்கென்று ஒரு பாடத்தில் விருப்பமிருக்கும். அந்த விருப்பத்திற்கு எதிராக அவர்கள் திருப்பப்படும் போது அவர்கள் தங்களையே தொலைக்கத் துவங்கி விடுகின்றனர்.
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிய வேண்டும். அவ்வாறு புரிந்து செயல்பட ஆரம்பித்தால் பிள்ளைகளின் படிப்பை மட்டுமல்ல! வாழ்க்கையையும் சேர்த்துக் காக்கலாம். பிள்ளைகள் கசங்க மாட்டார்கள்; கருகவும் மாட்டார்கள்.
ஜனவரி இதழின் தொடர்ச்சி...
நல்லவராவதும் தீயவராவதும்...
கே.எம். அப்துந் நாசிர்
இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
குழந்தை முக்கியமல்ல! நல்லொழுக்கமுள்ள குழந்தையே முக்கியம்!
முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, "இறைவா எனக்கொரு குழந்தையைத் தா' என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, "இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா' என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.
மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
ஸக்கரிய்யா ''இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்'' என்று தம் இறைவனிடம் வேண்டினார்.
அல்குர்ஆன் 3:38
இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
அல்குர்ஆன் 37:100
எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).
அல்குர்ஆன் 2:128
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் 14:40
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 25:74
இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித் தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது'' என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 2:124
மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.
மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்
ஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், "என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)'' என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 10202
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3358
அழகிய முன்மாதிரி
திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.
நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.
"என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
அல்குர்ஆன் 2:132
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.
அல்குர்ஆன் 2:133
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 31:13
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
"நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).
அல்குர்ஆன் 31:16-19
நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.
தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.
மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.
ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு "முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?'' எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1485)
முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.
சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.
"சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
"நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.
நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.
நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதி 2440
சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.
(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)
நூல்: புகாரி 6247
இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், "சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது "சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று சொன்னார்கள்'' எனக் கூறினேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது "சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)
நூல்: புகாரி 5479
ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 24:58, 59
மறுமைக்கு அஞ்சுவோம்
பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்? உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? போன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.
மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.
அல்குர்ஆன் 66:6
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 2409
பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.
"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 33:67
சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.
ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல், செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.
இப்படியும் சில தப்ஸீர்கள்
தொடர்: 13
அர்ஷை சுமக்கும் வானவர்கள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். "எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத் தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
அல்குர்ஆன் 40:7
வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, அர்ஷைச் சுற்றி வருவதை நீர் காண்பீர். அவர்களுக்கிடையே நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். "அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறப்படும்.
அல்குர்ஆன் 39:75
இறைவன் வானத்தில் உள்ள அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றான். அந்த அர்ஷை சில வானவர்கள் சுமந்து கொண்டும், மேலும் சில வானவர்கள் அதைச் சுற்றிக் கொண்டும் இருக்கின்றார்கள் எனும் தகவல் மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகின்றது.
அர்ஷை சுமக்கும் வானவரின் தன்மை பற்றி நபிகளார் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.
"அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் ரலி
நூல்: அபூதாவூத் 4102
இவை தவிர இது தொடர்பான வேறு தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் விரிவுரையாளர்கள் மேற்கண்ட ஹதீஸை மூலதனமாக ஆக்கிக் கொண்டு அதில் தங்கள் கற்பனைகளையும் அள்ளிக் கலந்து சில விளக்கங்களை (?) அளித்திருக்கின்றார்கள்.
அர்ஷைச் சுமக்கும் வானவர்களின் கால்கள் பூமிக்கு அடியிலும், அவர்களின் தலைகள் அர்ஷைக் கிழித்துக் கொண்டும் இருக்கின்றன.
நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294
பூமியிலிருந்து அர்ஷைத் தாண்டியும் அவர்களது உயரம் உள்ளது என இந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை இதற்கு வக்காலத்து வாங்கும் இமாம்கள் யாராவது கூறுவார்களா?
அர்ஷை நெருக்கிய பாம்பு
மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்று விரிவுரையாளர்களின் (விளக்கமளிக்கும்) சிந்தனையும் பல நேரங்களில் ஒன்று தொட்டு ஒன்று என தாவிக் கொண்டே இருக்கும் போல!
பின்னே என்ன? அர்ஷைச் சுமக்கும் வானவரைப் பற்றி வர்ணிக்கப் புறப்பட்ட இமாம்களின் கவனம் திடீரென அர்ஷை நோக்கி (அதன் மூலத்தை நோக்கி) தாவி விட்டதே! ஆம்! அர்ஷ் பச்சை முத்துக்களால் ஆனதாம்!
இறைவன் அர்ஷை பச்சை முத்துக்களால் உருவாக்கினான் என கூறப்படுகின்றது.
நூல்: தப்ஸீருல் குர்துபீ பாகம் 15 பக்கம் 294
யார் இதைக் கூறியது? அர்ஷைப் படைத்த அல்லாஹ்வா? அல்லது அவனது தூதரா? விளக்கம் என்ற பெயரில் யார் எதை உளறிக் கொட்டினாலும் கூறப்படுகின்றது என்ற ஒற்றை வார்த்தையுடன் ஆதாரமற்ற அந்தத் தகவல்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்யப்படுகின்றன. இதன் நோக்கம் பக்கங்களை நிரப்புவதோ என எண்ணத் தோன்றுகின்றது.
நம்மில் ஒருவரை நோக்கி, "நீ எனக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும்'' என ஒருவர் சொல்கின்றார். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறாய் என்ற நமது கேள்விக்கு, இல்லை அவ்வாறு கூறப்படுகின்றது என்று அவர் பதிலளித்தால் இதை நாம் ஏற்போமா? நம் தொடர்புடைய விஷயங்களில் கூறப்படுகின்றது என்று சொன்னால் வலுவாக மறுத்து, அதற்கான தகுந்த ஆதாரத்தை வேண்டுகிறோம். அதுவே மார்க்க விவகாரம் எனும் போது தலையாட்டிக் கொண்டு செல்கிறோம். இது சரியா என்பதை அறிவுடைய மக்கள் சிந்தித்து பார்க்கட்டும்.
அர்ஷைச் சுமக்கும் வானவர்களைப் பற்றி விளக்கமளிக்க முன்வந்த விரிவுரையாளர்கள் சம்பந்தமில்லாது அர்ஷைப் பற்றி எதையோ கூறி, பிறகு அர்ஷுக்குக் கர்வம் வந்ததாகவும், அதன் கர்வத்தைப் போக்கும் விதமாக இறைவன் பலம் வாய்ந்த பாம்பை உருவாக்கி அதன் மூலம் அர்ஷைச் சுருட்டி, நெருக்கியதாகவும் ஒரு கட்டுக்கதையை தஃப்ஸீர் நூல்களில் அவிழ்த்து விட்டிருக்கின்றார்கள்.
கஃபுல் அஹ்பார் கூறியதாவது: இறைவன் அர்ஷைப் படைத்த போது என்னை விடச் சிறந்ததை இறைவன் படைக்கவில்லை என அர்ஷ் (கர்வத்துடன்) கூறியது. எனவே ஒரு பாம்பின் மூலம் இறைவன் அதை நெருக்கினான். அது நடுங்கியது. அந்த பாம்பிற்கு எழுபதாயிரம் இறக்கைகள் உண்டு. ஒரு இறக்கையில் எழுபதாயிரம் சிறகுகளும், ஒவ்வொரு சிறகிலும் எழுபதாயிரம் முகங்களும், ஒரு முகத்திற்கு எழுபதாயிரம் வாய்களும், ஒரு வாயில் எழுபதாயிரம் நாவுகளும் உள்ளன. ஒவ்வொரு நாளும் அதன் வாய்களிலிருந்து மழைத்துளிகளின் அளவிற்கு தஸ்பீஹ்கள் வெளிப்படும். மர இலைகளின் எண்ணிக்கை ஏற்ப, கற்கள் மற்றும் மண்களின் துகள்களுக்கேற்ப (தஸ்பீஹ்கள் வெளிப்படும்).
நூல்: தப்ஸீருல் குர்துபீ, பாகம் 15, பக்கம் 294, 295
குர்ஆனின் விளக்கவுரை நூலான குர்துபீயில், மேற்கண்ட வாசகத்தின் தொடர்ச்சியில் பாம்பு அர்ஷைச் சுருட்டியதாகவும் அந்த பாம்பின் பாதியளவு தான் இறைவனின் சிம்மாசனமான அர்ஷ் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
இவைகள் தாம் இறை வசனங்களை நமக்கு விளக்கித் தரும் அற்புத விளக்கங்களா?
இறைவன் வீற்றிருக்கும் அர்ஷை பாம்பு சுருட்டி, நெருக்கியது என்றால் அதில் இருந்த இறைவன் என்ன ஆனான்? பாம்பு விழுங்கிற்றா? நவூதுபில்லாஹ்.
விரிவுரை என்ற பெயரில் உலவும் இது போன்ற கதைகள் நம் வீட்டுக் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டுமானால் உதவுமே தவிர இறை வசனங்களை விளங்க ஒரு போதும் உதவாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.
"வய்ல்' என்றால்...? தலைசுற்றும் விளக்கம்
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
அல்குர்ஆன் 83:1
அளவு நிறுவையில் மோசடி செய்வோருக்கு மறுமையில் பெரும் வேதனை உண்டு என இறைவன் கூறுகின்றான். வேதனை என்பதைக் குறிக்க "வய்ல்' என்ற அரபி வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வய்ல் என்ற அரபிப் பதம் கேடு, வேதனை, நாசம் என்ற பொருளைத் தரும்.
இந்த வார்த்தையின் விளக்கம் இதுதான். ஆனால் இவ்வளவு சிம்பிளாக ஒரு விஷயம் முடிந்து போவதை நமது இமாம்கள் விரும்புவார்களா? எனவே தான் 'வய்ல்' என்றால் என்னவாக இருக்கும் என்று மிதமிஞ்சிய ஆய்வுக்குள் சென்று, அதன் முடிவில் பின்வரும் விளக்கங்களைச் சமர்ப்பித்துள்ளார்கள். இதோ அந்த விளக்கங்கள்:
வய்ல் என்பது நரகில் உள்ள பள்ளத்தாக்கு. எழுபது வருடம் (பயணிக்கும் அளவு) அதன் தொலைவாகும். அதில் தொன்னூறாயிரம் கிளைகள் உண்டு. ஒரு கிளையில் எழுபதாயிரம் பிரிவுகளும், ஒரு பிரிவில் எழுபதாயிரம் குகைகளும், ஒரு குகையில் எழுபதாயிரம் கோட்டைகளும், ஒரு கோட்டையில் இரும்பால் ஆன பெட்டிகளும், ஒரு பெட்டியில் எழுபதாயிரம் மரங்களும், ஒரு மரத்தில் எழுபதாயிரம் கிளைகளும், ஒரு கிளையில் எழுபதாயிரம் கனிகளும், ஒவ்வொரு கனியிலும் அட்டைப்புழு இருக்கும். அதன் நீளம் எழுபதாயிரம் முழங்களாகும். ஒவ்வொரு மரத்திற்கு கீழ் எழுபதாயிரம் மலைப்பாம்புகளும், தேள்களும் உள்ளது. அந்த பாம்புகளின் நீளம் ஒரு மாத (பயணிக்கும்) தொலைவாகும். மலைகளைப் போன்று உடல் வலிமை, பேரீச்சமரத்தை போன்று பற்கள் அதற்கு இருக்கும்.
நூல்: தஃப்ஸீர் முகாதில் பின் சுலைமான், பாகம் 3, பக்கம் 460
இதைப் படித்தவுடன், "என்ன இது? நான் எங்கே இருக்கிறேன்?' என்று ஒரு கணம் இந்த உலகை மறந்து வேறொரு கற்பனை உலகத்திற்குச் சென்று, திரும்பியதைப் போன்ற உணர்வைப் பெறுவீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில் வய்ல் என்ற இறைவனின் வார்த்தைக்கு இமாம்கள் அளித்த விளக்கம் அந்த நிலையில் உள்ளது.
இந்தக் கூறுகெட்ட விளக்கத்தில் ஆயிரத்தெட்டு எழுபதாயிரம் வருகின்றதே?. இதில் மாத்திரம் அல்ல, குறிப்பிட்ட இந்த விரிவுரை நூலில் எழுபதாயிரத்திற்குப் பஞ்சமில்லை எனலாம். அவ்வளவு முறை தொட்டதுக்கு எல்லாம் எழுபதாயிரம் என்று இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இந்த விளக்கங்கள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த விளக்கங்கள் அல்ல, எழுபதாயிரம் என்ற கணித முறை அடிப்படையில் அமைந்த ஒரு கூறு கெட்ட விளக்கம் என்பதே நமது கருத்து.
அபாபீல் பறவைகள் - ஓர் நேர்முக வர்ணனை (?)
(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களுக்கு எதிராகப் பறவைகளை கூட்டம் கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.
அல்குர்ஆன் 105:1,2,3,4,5.
அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஃபாவை இடிப்பதற்கு வந்த போது கூட்டம் கூட்டமாகப் பறவைகளை அனுப்பி அதன் மூலம் கஃபாவை அழிக்க வந்த யானைப் படையினரை அழித்து, கஃபாவை இறைவன் காப்பாற்றினான் என்ற வரலாற்றுச் செய்தியைப் பற்றி இந்த அத்தியாயத்தில் இறைவன் நினைவூட்டுகின்றான்.
இந்த அத்தியாயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதற்குக் கணக்கற்ற படிப்பினைகள், விஷயங்கள் நிரம்பி வழிகின்றன. இறைவனின் வல்லமை, கஃபாவின் பாதுகாப்புத் தன்மை போன்ற விஷயங்களை எடுத்து, அலசி ஆராய்ந்து, நபிவழி எனும் ஒளியின் துணையுடன் மக்களின் அறியாமை எனும் இருளை அகற்றியிருக்கலாம். ஆனால் அறிஞர்கள் ஆய்வுக்காக, தஃப்ஸீர் அளிப்பதற்காக கையில் எடுத்திருப்பதோ அபாபீல் பறவைகளைப் பற்றி!
(அபாபீல் என்றால் கூட்டம் கூட்டமாக, அதிகமாக என்று பொருள். ஆனால் சொல் வழக்கில் அதையே நாம் அப்பறவைகளின் அடையாளப் பெயராக பயன்படுத்துகின்றோம்.)
சூடான கற்களுடன் பறவைக் கூட்டத்தை அனுப்பி எதிரிகளை அழித்தான் என்று குர்ஆன் சொல்கிறதல்லவா? உடனே அந்தப் பறவைகளின் நிறம் என்ன? எத்தனை கற்களை அவைகள் சுமந்து வந்தன? அந்தக் கற்களைப் பறவைகள் எதில் சுமந்தன போன்ற தேவையற்ற விஷயங்களை விளக்கம் என்ற பெயரில் பக்கம் பக்கமாக விளக்கித் தள்ளியிருக்கின்றனர். இதில் எதிரிப் படையினரின் யானைகளின் எண்ணிக்கையையும் தவறவிடவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சம்(?). அவை உங்கள் பார்வைக்கு:
அவை (பறவைகள்) கடலின் முன்பகுதியிலிருந்து வந்தன என்று சிலர் கூறுகின்றனர். பிறகு அதன் வர்ணனையில் அவர்கள் (விரிவுரையாளர்கள்) வேறுபடுகின்றனர். சிலர் அவை வெண்மை நிறம் கொண்டவை என்றும், மற்றும் சிலர் கறுப்பு நிறம் என்றும் வேறு சிலர் பச்சை நிறம், மேலும் அதற்கு பறவைகளின் மூக்கும், நாய்களின் உள்ளங்கைகளும் உண்டு எனவும் கூறுகின்றனர்.
நூல்: தஃப்ஸீருத் தப்ரி, பாகம் 24, பக்கம் 630
கால்களில் இரண்டு, அலகில் (வாயில்) ஒன்று என ஒவ்வொரு பறவையிடமும் மூன்று கற்கள் இருந்தன.
நூல்: தஃப்ஸீர் தப்ரி, பாகம் 4, பக்கம் 634.
அவர்களுடன் (யானைப் படை) ஒரு யானை மட்டுமே இருந்தது என முகாதில் கூறுகின்றார். எட்டு யானை என லிஹ்ஹாக் கூறுகின்றார். பன்னிரண்டு எனவும் ஒரு கருத்து உண்டு.
நூல்: தஃப்ஸீருல் பகவீ, பாகம் 8, பக்கம் 540
என்னே அற்புதம்? இந்தச் சம்பவம் நடைபெறும் போது நபிகள் நாயகம் அவர்களே பிறக்கவில்லை. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு தான் நபியவர்கள் பிறக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரவர்கள் சொல்லாத, ஆச்சர்யமான (?), அதிசயக்கத்தக்க (?) பல நுணுக்கமான விஷயங்களை இந்த விரிவுரையாளர்கள் தருகின்றார்கள்.
இந்தச் சம்பவம் நடைபெறும் போது இவர்கள் உடனிருந்தார்களா? இல்லையெனில் எப்படி ஒரு பத்திரிக்கையாளரைப் போன்று சம்பவத்துளிகள் அனைத்தையும், எட்டு யானை, பறவையின் வாயில் ஒரு கல், காலில் இரண்டு கற்கள், பறவைகளின் நிறம், அது புறப்பட்டு வந்த திசை என ஒன்று விடாமல் சொல்ல முடிகின்றது?
இவைகள் யாவும் கற்பனை. இமாம்களின் பல விளக்கங்கள் இந்த நிலையில் தான் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள இது ஒன்றே போதுமான சான்றாகும்.
குர்ஆனை மறந்த நபிகள் நாயகம் (?) இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்.....
பொருளியல்
தொடர்: 20
கடன் பற்றிய சட்டங்கள்
கடன் விஷயத்தில் கடினப் போக்கு
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் நபியவர்கள் ஜனாஸா தொழுவிப்பது தான் வழக்கம். அப்படித் தொழ வைக்கும் போது முதலில் "இந்த ஜனாஸா ஏதாவது கடன்பட்டு உள்ளதா?' என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால் அந்தக் கடனை அடைப்பதற்கு ஏதாவது விட்டுச் சென்று இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள்.
இல்லையென்று சொன்னால் தமது தோழர்களைப் பார்த்து, "உங்களுடைய சகோதரருடைய கடனை உங்களில் யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்?'' என்று கேட்பார்கள். யாராவது முன் வந்தால் அதனை நிறைவேற்றுவார்கள். அப்படி யாராவது முன்வராத போது, "உங்களுடைய சகோதரனுக்கு நீங்களே தொழ வையுங்கள்'' என்று கூறி விட்டுச் சென்று விடுவார்கள்.
இதை எதற்காக சொல்கிறார்கள் என்றால் ஒரு மனிதனுக்கு கடன் இருக்கும் நிலையில் அவனுக்காக துஆ செய்தால் அது அவருக்குப் பயன் தராது என்பதற்காக ஜனாஸா தொழுவிக்காமல் இருப்பார்கள். ஏனென்றால் மறுமை நாளில் கடன் என்ற பாவம் மன்னிக்கப்படாமல் வந்து நிற்கும் என்பதற்காக வேண்டியோ அல்லது கடனைப் பற்றிய எச்சரிக்கைக்காக வேண்டியோ இருக்கலாம். ஆனால் இஸ்லாமிய அரசின் பொருளாதாரம் வளம் பெற்ற பின் இது மாற்றப்பட்டு விட்டது.
நபி (ஸல்) அவர்களுடைய ஆரம்ப கால கட்டத்தில் பைத்துல்மாலில் அதிகமான பண வசதி இருக்கவில்லை. பின்னர் பஹ்ரைன் போன்ற நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டு பைத்துல்மாலுடைய நிதி அதிகமாகக் கிடைத்தது. இதன் காரணமாக நபி (ஸல்) அவர்கள், "உங்களுடைய சகோதரன் ஒருவன் மரணம் அடைந்து ஏதாவது விட்டுச் சென்றிருந்தால் அதை அவருடைய வாரிசுகள் எடுத்துக் கொள்ளட்டும். கடன் பட்டிருந்தால் என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன். உங்களில் நான் தான் மிகத் தகுதி வாய்ந்தவன்' என்று கூறுவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: இறுதித் தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. "இவர் கடனாளியா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித் தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, "இவர் கடனாளியா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம்! என்றனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்'' என்றார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு'' என்று கூறியதும், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2295
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது "இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். "கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.
அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்! என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2298
ஒரு மனிதனுக்கு ஜனாஸா தொழுகை என்பது கடைசி தொழுகை, அதில் நபி(ஸல்) அவர்களுடைய துஆ முக்கியமானது. அதைக் கூட கடன்பட்டவன் இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே கடன்பட்டவனுக்கு அந்தக் கடனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எற்படவேண்டும்.
வசதி படைத்தவன் காலம் தாழ்த்தக் கூடாது
இன்றைக்குச் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு எந்த வழியும் இருக்காது. உதாரணமாக மருத்துவச் செலவுக்கு வாங்குவான். அந்தக் கடனை அவனால் நிறைவேற்ற முடியாத நிலைமையில் அவகாசம் கேட்பது பரவாயில்லை.
ஆனால் வசதி படைத்த சிலர் கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடனை நிறைவேற்றாமல், அதனை நிறைவேற்றுவதற்குரிய எல்லா தகுதியும் இருந்தும் அதனை நிறைவேற்றாமல் இருந்து ஏமாற்றுவது மிகப் பெரிய அநியாயமாகும்.
எனவே பணக்காரன் கடன் வாங்குவதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். மிகவும் கஷ்டப்பட்டு வீடு, வாசல் எல்லாம் இழக்கின்ற நிலைமை ஏற்ப்பட்டால் கடன் வாங்குவது பரவாயில்லை. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கக் கூடிய பணக்காரர்கள் எதற்கு வாங்குகிறார்கள்? ஒருவனிடம் ரூபாய் பத்து லட்சம் இருக்கும்; அதனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இன்னும் ஒரு பத்து லட்சம் வாங்குகிறான்.
எதற்கு இதனை வாங்குகிறார்கள்? ஏதோ அவசர தேவைக்காக வாங்குகிறார்களா? இல்லை மாறாக, தன்னுடைய தொழிலை அதிகரிப்பதற்காக வேண்டித் தான். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தால் அல்லாஹ் நாளை மறுமை நாளில் இவர் பட்ட கடனுக்காக இவர் யாரிடத்தில் வாங்கினாரோ அவருக்கு அப்படியே எடுத்துக் கொடுத்து விடுவான். கடன் கொடுத்தவர் மன்னிக்காவிட்டால், இவர் போகக் கூடிய இடம் நரகம் தான். எனவே கடன் வாங்குவதை இயன்ற அளவு தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக்கொள்ளட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2287 2288 2400
எனவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது கூடாது. ஏனென்றால் நமக்கு எந்த நேரத்திலும் மரணம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே அடுத்தவருடைய பணத்தை நாம் நம்முடைய வீட்டில் வைத்து அழகு பார்க்க வேண்டுமா? அவசியம் ஏற்பட்டால் வாங்குவது தவறு இல்லை. அப்படி வாங்கினாலும் பணம் இருந்தால் உடனே கொடுத்து விட வேண்டும். கடனை அடைக்க வசதியில்லை என்றால் அவனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறையைத் தான் இஸ்லாம் கற்றுத் தருகின்றது.
நல்ல முறையில் திருப்பி கொடுத்தல்
ஒரு மனிதனிடம் நாம் கடன் வாங்கும் போது, எவ்வளவு வாங்குகிறோமோ அதை விட அதிகமாக நல்ல முறையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்றைக்குக் கடன் வாங்கும் வரை வளைந்து குனிந்து பணிவுடன் வாங்கி விடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்கும் போது கடன் கொடுத்தவரை அலையாய் அலைக்கழிப்பதையும் இழுத்தடிப்பதையும் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. திருப்பிக் கொடுக்கும் போது கொஞ்சம் கூடுதலாகவே கொடுங்கள் என்று மார்க்கம் கூறுகின்றது.
இவ்வளவு கூடுதலாகத் தர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கடன் கொடுத்தால் அது வட்டியாகி விடும்.
அதே போன்று திருப்பிக் கொடுப்பவர் இன்ன தொகைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து, கூடுதலாகக் கொடுத்தால் அதுவும் கூடாது.
உதாரணமாக ஒருவன் பத்தாயிரம் கடன் வாங்கி விட்டு, கொடுக்கும் போது ஆயிரமோ, இரண்டாயிரமோ கூடுதலாக, தானாக முன்வந்து கொடுத்தால் அது தவறு கிடையாது. இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, "(அவரை தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகப் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
நபித் தோழர்கள், "அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம் தான் எங்களிடம் இருக்கின்றது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 2305 2306 2390 2392 2393 2606 2609
நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்கினால் அதை விட அதிகமானதையே கொடுப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீசும் தெளிவுபடுத்துகின்றது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கு கொண்டு விட்டுத் திரும்பி வந்து கொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து, பலமிழந்து போனதால் என்னைப் பின் தங்க வைத்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ஜாபிரா? என்று கேட்டார்கள். நான், ஆம்! என்றேன். "என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?'' என்று கேட்டார்கள். "என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு (உமது வாகனத்தில்) ஏறுவீராக! என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களை விட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீர் மணமுடித்துவிட்டீரா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். கன்னியையா? கன்னி கழிந்த பெண்ணையா? என்று கேட்டார்கள். கன்னி கழிந்த பெண்ணைத் தான்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக்குலாவி மகிழலாமே! என்று கூறினார்கள்.
நான், "எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர். ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக! நிதானத்துடன் நடந்து கொள்வீராக! என்று கூறிவிட்டு பின்னர், "உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா?'' என்று கேட்டார்கள். நான், சரி (விற்று விடுகிறேன்!) என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள்.
பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். "இப்போது தான் வருகிறீரா?'' என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். "உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டு சற்று தாராளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்! என்றார்கள். நான் (மனதிற்குள்) "இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை'' என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 2394 443 2097 2309
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளிவாசலில் சென்றேன்; எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
நூல்: புகாரி 2603
வளரும் இன்ஷா அல்லாஹ்
திருக்குர்ஆன் விளக்கவுரை
தொடர்: 6
கியாம நாளின் அடையாளங்கள்
ஈஸா நபியின் வருகை
பி. ஜைனுல் ஆபிதீன்
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 78:1-5)
உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் தஜ்ஜாலைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம்.
தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.
தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
....மர்யமின் மகன் மஸஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.
நூல்: முஸ்லிம் 5228
மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2476, 3448, 3449
ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 221
நபியாக வர மாட்டார்
ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள்.
உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 3449
ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் "வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் "உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 225
தஜ்ஜாலைக் கொல்வார்கள்
ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர்கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் "எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர்களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் "எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்'' என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின்வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறுவார்கள். அவர்கள் கான்ஸ்டான்டிநோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடேன அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.
அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காகப் படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 5157)
"தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே?'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்'' என விடையளித்தார்கள்.
(நூல்: முஸ்லிம் 5238)
தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
(நூல்: முஸ்லிம் 5228)
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இரண்டு நபர்களுக்கும் இடையில் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 5233)
இந்த நிலையில் "யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
(நூல்: முஸ்லிம் 5228)
ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்
ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.
இது குறித்து திர்மிதியில் 3550வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்....
கேக் விவகாரம் ஜாக்கிற்குப் பகிரங்க சவால்
"கேக் வெட்டிய ஜாக் மவ்லவி' என்ற தலைப்பில் ஜனவரி 2012 ஏகத்துவத்தில் வெளியான கட்டுரை குறித்து, மேற்படி ஜாக் மவ்லவி யாஸீன் இம்தாதி சார்பிலும் ஜாக் நிர்வாகிகள் சார்பிலும் இணைய தளங்கள், பிரசுரங்கள் வாயிலாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அவர்கள் செய்யாத ஒரு விஷயத்தை நாம் இட்டுக்கட்டி ஏகத்துவம் இதழில் வெளியிட்டுள்ளதாகப் பரப்பி வருகின்றனர்.
1. ஜாக் மவ்லவி யாஸீன் இம்தாதி, கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டது உண்மை.
2. அங்கு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடியது உண்மை.
3. கேக்கை மேடையிலேயே ரசித்துச் சாப்பிட்டதும் உண்மை.
4. அந்தக் கிறிஸ்துமஸ் விழாவில் நடைபெற்ற இஸ்லாத்திற்கு எதிரான விஷயங்களைக் கண்டிக்காமல் ஆமோதித்தது உண்மை.
இந்த விஷயங்கள் அனைத்தும் பொய் என்று ஜாக் சார்பில் வெளியாகும் "அல்ஜன்னத்' மாத இதழில் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கத் தயாரா? என்று ஜாக் அமைப்புக்குப் பகிரங்க சவால் விடுக்கிறோம்.
இதை ஏற்று அல்ஜன்னத் இதழில் மறுப்பு வெளியிட்டால், இந்த உண்மைகளை உரிய சாட்சிகளுடன் நிரூபிக்கத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்
10.03.2012. 07:23
ஏகத்துவம் பிப்ரவரி 2012
ஏகத்துவம் பிப்ரவரி 2012
உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர்
அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
இந்தக் கட்டளைக்குப் பயந்து தான் நாம் ஏகத்துவக் கொள்கையை ஏற்று அசத்தியத்திலிருந்து விடுபட்டோம்; விடுதலையானோம். இவ்வாறு விடுபடுவதும் விடுதலையாவதும் நமக்கு மட்டும் தானா? நாளை வரக்கூடிய தலைமுறைக்கு இல்லையா?
பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற நாம், நமக்காக மட்டும் திரட்டுவதில்லை. நாளை வரக்கூடிய நம்முடைய சந்ததிக்கும் சேர்த்துத் தான் திரட்டுகின்றோம். இவ்வுலக வாழ்க்கைக்குக் கொடுக்கக் கூடிய இந்த முக்கியத்துவத்தை மறுமைக்குக் கொடுக்க வேண்டாமா?
இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
அல்குர்ஆன் 93:4
அல்லாஹ் குறிப்பிடும் இந்த மறுமைக்கு நாம் என்ன முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம்? பூஜ்யம் என்பது தான் பூரண பதிலாக அமைகின்றது.
ஏகத்துவத்தை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களை உருவாக்குவதற்காகத் தலைமையின் கட்டுப்பாட்டில் இஸ்லாமியக் கல்லூரி, தவ்ஹீத் கல்லூரி போன்றவை இருக்கின்றன.
எங்களூரில் ஏகத்துவம் வளர்ச்சி கண்டிருக்கின்றது; ஆனால் தாயீ தான் இல்லை, தாயீக்களை அனுப்பி வையுங்கள் என்று கொள்கைவாதிகள் கோரிக்கை வைக்கின்றனர். தாயீ - அழைப்பாளர் அனுப்பவில்லை என்றதும் குறைபடுகின்றனர்; கோபப்படுகின்றனர்.
ரமளான் மாதத்தில் தாயீக்களின் தேவையும் தேட்டமும் பன்மடங்காகப் பெருகி விடுகின்றது. அப்போதும் தலைமை கை விரிக்கும் போது அவர்களின் ஆத்திரத்திற்கும் ஆதங்கத்திற்கும் அளவே இல்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் போதும், இஸ்லாமியக் கல்லூரிக்கு, தவ்ஹீது கல்லூரிக்கு ஆளனுப்பி வையுங்கள் என்று தலைமை ஓயாமால் கூவிக் கொண்டிருக்கின்றது.
ஆனால் இதைக் கிளைகள் காதில் கேட்டுக் கொள்வதும் இல்லை. உள் வாங்குவதும் இல்லை.
இந்த நிலை நீடித்தால் என்னவாகும்? நாம் வளர்த்த நம்முடைய உயிரினும் மேலான இந்த ஏகத்துவக் கொள்கையை நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழித்து விட்டுப் போக வேண்டியது தான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.
அல்குர்ஆன் 16:92
சிரமப்பட்டு ஒரு நூலை நூற்று, பின்னர் அதைத் துண்டு துண்டாக ஆக்கியவரைப் போல் ஆகி விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுவது போல் நாம் உருவாக்கிய இந்த ஏகத்துவக் கோட்டையை நம் கைகளால் தகர்த்தெறிந்து சுக்குநூறாக்கி விடக்கூடாது.
நாம் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை நாளைய தலைமுறையினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், தாயீக்கள் பற்றாக்குறை தீர வேண்டுமானால் உடனடியாக ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஒரு மாணவனை, மார்க்கக் கல்வி பயில்வதற்காக அனுப்பியாக வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் அவருக்குரிய பொருளாதாரத்தை கிளையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி உருவாக்கினாலே தவிர தாயீக்களின் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாது. நாளைய தலைமுறையினருக்கு இந்தக் கொள்கையைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் முடியாது.
இன்று நாம் மிகப் பெரிய சிரமத்திற்கும் சிக்கலுக்கும் இடையே மர்கஸ்களை, அழைப்பு மையங்களை நிறுவுகின்றோம். இந்த அழைப்பு மையங்கள் ஏகத்துவக் கொள்கையின் அடித்தளங்கள். ஆனால் அவற்றில் அழைப்பாளர்கள் இல்லாவிட்டால் அவை உயிரற்ற சடலங்களாகி விடும்.
ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள், இஸ்லாமிய மையமான கஅபாவை நிறுவி விட்டு இறைவனிடம் கையேந்துகின்றார்கள்.
"எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்''
அல்குர்ஆன் 2:129
அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று, நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பி அந்த அழைப்பு மையத்தை அதன் அடிப்படைக் கொள்கையின் பக்கம் திருப்பி விடுகின்றான்.
ஓர் அழைப்பாளர் இருப்பாரானால் அழைப்பு மையத்திற்கு ஒரு வாடகைக் கட்டடத்தைக் கூட பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அழைப்பாளரை வாடகைக்குப் பிடிக்க முடியாது. அழைப்பாளர் இல்லாத மர்கஸ், மாலுமி இல்லாத கப்பல்! அடிக்கின்ற காற்றில் எந்தத் திசையை நோக்கியும் அது திருப்பப்படும்; அலைக்கழிக்கப்படும். இதைக் கவனத்தில் கொண்டு அழைப்பாளர்களை உருவாக்குவோமாக!
வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்புகளை மட்டும் படித்து விட்டு அழைப்புப் பணியைத் தொடரலாம்; தொடர்கின்றோம். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அரபு மொழியில் அமைந்திருப்பதால் அதில் ஆழ்ந்த ஞானம் அவசியம் இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையவர்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது அதற்கு நாம் தக்க பதிலைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தப்பும் தவறுமாக அர்த்தம் கொடுத்து தவ்ஹீதை விட்டு மக்களைத் தடம்புரளச் செய்யும் நிலை ஏற்பட்டு விடும்.
எனவே அசத்தியவாதிகளைச் சந்திக்கும் போது அவர்கள் தூக்கி வருகின்ற ஆயுதங்களை விட வலுவான ஆயுதங்களைத் தூக்கி வர வேண்டும். தூய இஸ்லாத்தைக் காக்க வேண்டும்.
அன்று ஒவ்வொரு நபித்தோழரும் இந்த ஏகத்துவத்தைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈத்தனர். இன்று நாம் உயிரை இழக்கின்ற நிலை ஏற்படவில்லை. அப்படி வந்தால் உயிரையும் விடுவோம். ஆனால் இப்போதுள்ள தேவை குறைந்தபட்சம் இந்தக் கொள்கையைக் காக்க நம் குடும்பத்திலிருந்து ஒருவரையாவது அனுப்ப வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பாடத்திட்டங்களின் படி இங்கு படித்தவர்களின் இவ்வுலக வாழ்க்கை இருண்டு விடாது. இங்கு படித்த மாணவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால் அது இருண்டு விடவில்லை, ஒளிரத் தான் செய்கின்றது. இவ்வுலக வாழ்க்கையுடன் சேர்ந்து மறுமை வாழ்க்கையும் ஒளிர்கின்றது. அதனால் இந்தக் கல்வியைப் பயின்றால் இவ்வுலக வாழ்க்கை பாழாகி விடும் என்று யாரும் கருத வேண்டாம்.
உலகக் கல்வியைக் கற்றால் உலக வாழ்க்கை மட்டும் சிறக்கும்; அவருடைய பொருளாதாரம் வளம் பெறும். அப்படி அவர் அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளாதாரத்தைத் திரட்டுவதில் தவறேதுமில்லை.
அல்லாஹ் இந்தப் பொருளாதாரத்தைப் பற்றிக் கூறும் போது, ஹைர் - நன்மை என்று குறிப்பிடுகின்றான்.
உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.
அல்குர்ஆன் 2:180
பொருளாதாரத்திற்குக் குறிப்பிடும் அதே "ஹைர்' என்ற வார்த்தையை கல்வி ஞானத்திற்கும் குறிப்பிடுகின்றான்.
தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.
அல்குர்ஆன் 2:180
இதற்கு ஏன் அல்லாஹ் இந்த வார்த்தையைக் குறிப்பிட வேண்டும்?
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 3009
ஓர் அழைப்பாளர் மூலம் யார் யாரெல்லாம் நேர்வழி பெறுகின்றாரோ அத்தனை பேரின் நன்மைகளும் அவர்களின் கணக்கில் குறைக்கப்படாமல், அந்த வழிகாட்டிக்குக் கிடைக்கின்றது என்றால் இதென்ன சாமான்யமான, சாதாரணமான நன்மையா? அபரிமிதமான, அளப்பரிய நன்மையாகும். அந்தப் பாக்கியத்தை அடைய குடும்பத்திற்கு ஒருவரை அனுப்பி வைப்போம்.
இறுதி நபித்துவ எதிர்ப்பு வாதங்கள்
அண்மையில் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 11.12.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் பி.ஜே. உரையாற்றினார்.
அவர் உரையாற்றிய போது...
மிர்ஸா குலாம் போன்ற பொய்யர்கள் தோன்றுவதற்கு சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் தான் காரணம்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வஹீ வந்தது; அவர்களுக்குப் வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நம்பிய மக்களை, நபியவர்களுக்குப் பின் பலருக்கும் வஹீ வரும் என்று நம்ப வைத்தார்கள். நான்கு இமாம்களையும் நபி (ஸல்) அவர்களின் இடத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.
"கல்பை (உள்ளத்தை) பளிங்கு போல் ஆக்கி விட்டால் அங்கு அல்லாஹ்வின் கஷ்ஃப் எனும் அகஞானம் தோன்றி விடும். அத்தகையவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் வந்து பேசுவான்'' என்று இவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற, கல்விக் கடல் என்று போற்றப்படுகின்ற கஸ்ஸாலி எழுதி வைத்துள்ளார். இவ்வாறு எழுதி வஹீயின் வாசலைத் திறந்து விட்ட அவரை, மக்களின் தலைவர் என்று இவர்கள் மெச்சுவதுடன், "எங்களின் உள்ளங்களை இவரைப் போல் பிரகாசிக்கச் செய்வாயாக!' என்று பிரார்த்தனையும் செய்கின்றனர்.
மிர்ஸா குலாம் தன்னை நபி என்றதற்கு ஆத்திரப்படும் இவர்கள், யாகுத்பா என்ற பாடல் வரிகளில் முஹ்யித்தீனைக் கடவுளாக்கி ஏற்றிப் புகழ்வதுடன் முஹ்யித்தீன் என்று அவரை அழைத்து திக்ர் செய்கின்றனர்; வணங்குகின்றனர்.
ومـن يـنادي اسمـي ألـفا بخلـوته
عـزمـا بـهمتـه صـرما لـغفوته
أجـبته مـسرعا مـن أجـل دعوتـه
فالـيدع يا عـبد الـقادر محيي الدين
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தை களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.
நூல்: யாகுத்பா
தன்னை ஒரு நபி என்று வாதித்த மிர்சாவைக் கண்டிக்கும் நீங்கள், முஹ்யித்தீனை அல்லாஹ்வாக ஆக்கி, அவரை உதவிக்கு அழைக்கின்ற உங்கள் ஜமாஅத்தினரை ஏன் கண்டிக்கவில்லை?
நான் நபி என்று சொன்ன காதியானி காஃபிர் என்றால், "அனல் ஹக் - நான் தான் ஹக் (அல்லாஹ்)'' என்று சொன்ன மன்சூர் ஹல்லாஜ் யார்?
(நூல்: அல்பஹ்ஜதுஸ் ஸனிய்யா, பக்கம் 136)
இவனுக்கு எப்படி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்) என்று சொல்கிறீர்கள்?
அபூயஸீத் அல்புஸ்தாமி என்பவனை மவ்லிது துஆ ஓதும் போது நினைவு கூர்கின்றீர்களே!
"سبحاني سبحاني ما أعظم شأني" و"ما في الجبة إلا الله
"நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை'' என்று கூறியவன் தானே இந்த அபூயஸீத் அல்புஸ்தாமி.
நூல்: அபூயஸீத் அல்புஸ்தாமி, பக்கம்: 49, ஷத்ராதுத் தஹப், பாகம் 2, பக்கம் 142
فيحمدني وأحمده ويعبدني وأعبده
"அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்''
ழுலூஹீசூகுஞூலூ ணூரீஹீசூகுடூ ணூலூருறீகுஞூலூ ணூரீருறீகுடூ
நூல்: ஃபுசூஸுல் ஹிகம், பாகம்: 1, பக்கம் 83
இப்படிக் கூறிய முஹ்யித்தீன் இப்னு அரபியை, ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்கின்றீர்களே!
மிர்ஸாவை நபி என்று நிலைநிறுத்துவதற்குக் காதியானிகள் மேற்படி நபர்கள் சொன்னதையும் அவர்கள் எழுதிய நூற்களையும் தான் சான்றாகக் கொண்டு வருகின்றனர். எனவே சுன்னத் ஜமாஅத் எனப்படும் இவர்களுக்கு காதியானிகளைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
இறுதி நபித்துவக் கொள்கையில் உறுதியாக நிற்பது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான். நாங்கள் நபித்தோழர்களைக் கூட பின்பற்றக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஸஹாபாக்களை மதிப்போம்; ஆனால் பின்பற்ற மாட்டோம்.
இவ்வளவு ஏன்? நபி (ஸல்) அவர்களைக் கூட இறைத் தூதர் என்ற நிலையில் அவர்கள் நமக்குக் கூறிய விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதாவது மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றியே தீர வேண்டும். கோதுமை, பேரீச்சம்பழம் போன்ற உணவு விஷயங்கள், ஆடைகள், வாகனங்கள் போன்ற உலக விஷயங்களில் அவர்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று தெளிவாக விளங்கி வைத்திருக்கின்றோம். இதற்கு முஸ்லிமில் வரும் ஹதீஸ் தெளிவான சான்றாகும்.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்'' என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன' அல்லது "குறைந்து விட்டன'.
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்று சொன்னார்கள்.
(நூல்: முஸ்லிம் 4712)
இவ்வாறு இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே. தெளிவாக விளக்கிக் கூறினார். அதற்கு முன்பாக ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, காதியானிகளுக்கு எதிராக முதன் முதலில் போர்க்கொடி தூக்கியது தவ்ஹீத் ஜமாஅத் தான்;
கோவையில் 1994ஆம் ஆண்டில் காதியானிகளுடன் 9 நாட்கள் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தில் காதியானிகள் எழுப்பிய கேள்விகளை தவ்ஹீத் ஜமாஅத் எப்படி எதிர்கொண்டது? அதில் ஈஸா (அலை) சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு காதியானிகள் மண்ணைக் கவ்வுகின்ற அளவுக்கு பி.ஜே. தலைமையிலான தவ்ஹீத் ஜமாஅத் அணியினர் நுணுக்கமான விளக்கங்களைக் கொடுத்தனர் என்பதை விளக்கிப் பேசினார்.
பி.ஜே.யின் இந்த அனல் பறக்கும் ஆவேச உரையும், அந்தக் கூட்டத்தில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளமும், எழுச்சியும் 1997ஆம் ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற, "நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட எழுச்சியை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.
அவ்வளவு தான். உலமாக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. உடனே ஸைபுத்தீன் ரஷாதி என்பவரை அழைத்து வந்து 06.01.2012 அன்று பதில் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் நமக்கு எதிரான வக்கிரமத்தையும் வயிற்றெரிச்சலையும் கொட்டித் தீர்த்தார்கள்.
97லும் இதுபோன்று ஒரு கூட்டத்தைப் போட்டு, இதே ஸைபுத்தீன் ரஷாதியைத் தான் அழைத்து வந்து வசை மாறி பொழிந்தார்கள். அன்று கூட்டம் முடிந்தவுடன் தவ்ஹீது சகோதரர்கள் ஸைபுத்தீன் ரஷாதியிடம் கேள்வி கேட்கச் சென்ற போது நைசாக நழுவிச் சென்று விட்டார். அவரை விவாதத்திற்கு அழைத்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
அப்போது நாம் மறுப்புக் கூட்டம் போடவிருந்த தருணத்தில் மேலப்பாளையத்தில் தொடர் கொலைகள் நடந்தன. ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஸய்யது இப்ராஹீம் போன்றோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதனால் அதற்கு மறுப்புக் கூட்டம் போட முடியாமல் போனது. அன்று ஓடிய ஸைபுத்தீன் ரஷாதி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தலைகாட்டினார்.
சவால் விட்டு ஓடிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லாஹ் கோமாளியாவது கடைசியில் ஒருவாறாக பொறியில் சிக்கிக் கொண்டார். விவாதத்திற்கு வந்து விட்டார். ஆனால் இன்று வரை பொறியில் சிக்காமல் நமக்கு எதிராக ஊர் ஊராக சவால் விட்டுவிட்டு, தப்பித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய எத்தர் ஸைபுத்தீன் ரஷாதி தான். மேடையில் நாக்கூசாமல் பொய் பேசுவார்.
இந்தக் கூட்டத்திலும் கேனயன், கிறுக்கன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பெட்டை, இப்லீஸ், தஜ்ஜால் என்று நாலாந்தர ரவுடியின் பாணியில் கத்தி விட்டுப் போனதைத் தவிர நாம் வைத்த வாதங்களுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.
பி.ஜே. பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும் என்று நினைக்கும் கொடூர மாமியாரைப் போல் பேசினார்.
பி.ஜே.வை இகழ வேண்டும்; அவரை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக முஸ்லிம் நூலில் இடம் பெறும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸையே மறுத்து விட்டுப் போயிருக்கின்றார். மவ்லவி என்ற பெயரில் மாநபியவர்களின் ஹதீஸை, அதிலும் குறிப்பாக உலக விஷயம், மார்க்க விஷயம் என்ற வித்தியாசத்தைக் காட்டுகின்ற அதி உன்னதமான ஹதீஸை மறுக்கின்ற இந்தப் பயங்கரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் நமக்கு எதிராகக் கக்கிய விஷக் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது.
தவ்ஹீதுக்கு எதிரான பிரச்சாரத்தில் இவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதி மக்களிடம் தவ்ஹீதுவாதிகள் அடையாளம் காட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இந்தப் பதில் உரையை இங்கு வழங்குகின்றோம்.
இலக்கணமும் தலைக்கனமும்
இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் மவ்லவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களில், "நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்று ஈஸா (அலை) அவர்கள் கூறும் வாசகத்திற்கு கோவை விவாதத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, இந்த விளக்கம் தான் ஈஸா மரணித்து விட்டார் என்ற காதியானிகளின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது என்று பேசினார்.
அந்த விளக்கம் இதோ:
ஈஸா நபி மரணிக்கவில்லை
திருக்குர்ஆன் 19:30-32 ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர். எனவே, இம்மொழி பெயர்ப்பில் எது சரியானது என்பதை விரிவாக நாம் ஆராய்வோம்.
ஏனெனில் தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குக் காதியானிகள் இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.
1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)
மேற்கண்டவாறு இந்த வசனங்களை சிலர் மொழி பெயர்த்துள்ளனர்.
தவறான கொள்கை உடையவர்கள் இந்த மொழி பெயர்ப்பின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்புகின்றனர்.
இரண்டாவது வசனத்தில் "நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்'' என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.
ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.
இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.
எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.
இவ்வசனத்தில் "வ பர்ரன் பிவாலிததீ'' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. "எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பது இதன் பொருள்.
செய்பவன் + ஆக + உம் (செய்பவனாகவும்) என்பதில் "உம்'மைப் பொருளை எங்கே தொடர்புபடுத்துவது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.
"உம்'மைப் பொருளைப் பொறுத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு "உம்'மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் "கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்'' என்ற வரிசைப்படி அமையும்.
"நல்லவனாகவும்' என்பதை தொடர்புபடுத்துவதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூன்றாவது வசனத்தை (19:32) ஆராய்வோம்.
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்'' என்பதை எங்கே தொடர்புபடுத்த வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதைத் தொடர்புபடுத்த முடியும்.
என்னை நபியாகவும் ஆக்கினான் என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக "என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்'' என்ற கருத்து கிடைக்கிறது.
இப்படித் தான் பெரும்பான்மை அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்' என்ற சொற்றொடரை இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட 19:31 வசனத்தின் இறுதியிலும் தொடர்புபடுத்த முடியும்.
"நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும்.
நாம் இரண்டாவதாகக் கூறியபடி தொடர்புபடுத்துவது தான் மிகவும் சரியானதாகும்.
"உம்மை'ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் தொடர்புபடுத்த வேண்டும். அருகில் தொடர்புபடுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் தொடர்புபடுத்த வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.
"என் தாயாருக்கு நன்மை செய்பவனாக' என்பது 19:32-வது வசனம். அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் தொடர்புபடுத்த வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் தொடர்புபடுத்துவதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
"நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்குமாறு கட்டளையிட்டான்'' என்பது தான் சரியான பொருளாகும்.
எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது...
இது பி.ஜே. தர்ஜுமாவில் 19:30-32 வசனங்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விளக்கம்!
கோவையில் காதியானிகளுடன் நடைபெற்ற விவாதத்தில் இந்த விளக்கத்தைக் கூறிய பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதை ஷம்சுல்லுஹா ரஹ்மானி தனது உரையில் குறிப்பிட்டார்.
இதற்கு நகர மஜ்லிசுல் உலமா சார்பில் நடைபெற்ற மறுப்புக் கூட்டத்தில் பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, பி.ஜே. தர்ஜுமாவில் இடம் பெற்ற இந்த அர்த்தத்தை ஆட்சேபித்து இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
1. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவரது தாயார் இறந்து விட்டால் ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?
2. ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார். அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?
இவை தான் அவர் எழுப்பிய இரு கேள்விகளாகும். இவ்வாறு கேள்வி எழுப்பியதன் மூலம் மேற்கண்ட வசனத்திற்கு நாம் கொடுத்த அர்த்தம் தவறு என்று கூறுகின்றார்.
அப்படியானால் நாம் இவர்களிடம், "வானத்திலிருந்து ஈஸா நபி ஸகாத் கொடுக்கின்றார்களா?' என்று காதியானிகள் கேட்கும் கேள்வியைத் திரும்பக் கேட்கிறோம். அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில், "இந்த உலகத்தில்'' என்று வைத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, "நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்' என்ற குர்ஆன் வசனத்திற்கு, 'இந்த உலகத்தில் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்' என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்.
இப்படி அந்தப் பதில் கூட்டத்தில் விளக்கம் கூறியிருக்கிறார்கள்.
"நான் இந்தப் பூமியில் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்க வேண்டும்; வானத்தில் இருக்கும் போது ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை' என்று ஈஸா நபி கூறியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கிறார்கள்; மிர்ஸா குலாம் இப்படித் தான் சுய விளக்கம் கொடுத்தான் என்று நம்மை நோக்கி இந்த சு.ஜ.வினர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் தான் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கின்றார்கள். இவர்கள் இஷ்டத்திற்கு எதையும் சேர்ப்பதற்கு குர்ஆன் என்ன மவ்லிது கிதாபா?
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.
அல்குர்ஆன் 69:44, 45
ஏதாவது ஒரு வசனத்தையோ, ஏன் ஒரு வார்த்தையையோ கூட யாரும் துணிந்து இடைச்செறுகல் செய்யக் கூடாது; செய்யவும் முடியாது என்று கூறும் போது இதில் எப்படி, "ஃபித்துன்யா - இந்த உலகத்தில்' என்று சேர்க்க முடியும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, "அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த'' என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருüய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்) (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்) நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.
இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கüடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். ("நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்' என்பதற்கு பதிலாக) "நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்' என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "இல்லை; "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.
(நூல்: புகாரி 6311)
தான் கற்றுக் கொடுத்த வார்த்தையில் மாற்றம் செய்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர்கள் துணிந்து குர்ஆனில் தங்கள் கைச்சரக்கை நுழைக்கின்றார்கள்.
அல்குர்ஆன் ஓர் அற்புதம்
"பூமியில் இருக்கும் போது' என்று அர்த்தம் செய்வதற்குக் குர்ஆனிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும். அல்லது ஹதீஸிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும்.
அவ்விரண்டையும் விட்டு விட்டு, கைச்சரக்கைச் சேர்த்துச் சொன்னால் காதியானி மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் கூட எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஒரு விவாதக் களத்தில் இந்த வாதம் எப்படி நிற்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உளறித் தள்ளுகின்றார்கள்.
இதிலிருந்து காதியானிகளின் கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை, பண்டமும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்குர்ஆன் ஓர் அற்புதம்! இறுதி நாள் வரை அசத்தியத்தைக் கிள்ளி எறிகின்ற ஓர் அருள் வாக்கு!
இப்படி எவனாவது நபி என்று முளைத்தானென்றால் அதற்கும் அது தனக்குள் ஒரு பதிலை, பாதுகாப்பை வைத்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்கு நாம் பொருள் செய்திருப்பது போன்று பொருள் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
அப்படியானால், மர்யம் (அலை) அவர்கள் மரணித்த பிறகு ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையா என்ற கேள்விக்குப் பதில் என்ன?
ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்படும் வரை மர்யம் (அலை) அவர்கள் உயிருடன் இருந்தார்கள். ஈஸா நபி உயர்த்தப்பட்ட பிறகு தான் அவர்களது தாயார் மரணித்தார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மர்யம் (அலை) அவர்களின் மரணம் தொடர்பான வரலாற்றுக் குறிப்பை இந்த வசனத்திலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். அதனால் மர்யம் (அலை) அவர்கள் இறந்த பிறகு ஈஸா நபி எப்படி தொழுவார்கள்? ஸகாத் கொடுப்பார்கள் என்ற கேள்வியே அர்த்தமற்றதாகி விடுகின்றது.
இவர்களின் இரண்டாவது கேள்வி, ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார்களே, அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றதாகும்.
ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வரும் போது அவர்களின் தாயார் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை.
அதனால் அவர்களுக்குத் தொழுகை இல்லையா? ஸகாத் இல்லையா? என்பது தான் கேள்வி.
இதற்கு நம்முடைய பதில், இல்லை என்பது தான்.
ஈஸா (அலை) அவர்கள், தன்னுடைய தாயாருடன் இருக்கும் போது எந்தத் தொழுகை கடமையாக இருந்ததோ, அந்தத் தொழுகை இல்லை. அவர்கள் தமது தாயாருடன் இருக்கும் போது எந்த ஸகாத் கடமையாக இருந்ததோ அந்த ஸகாத் இல்லை.
இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தொழுகை தான் ஈஸா நபி திரும்ப வரும் போது கடமையாகும். இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஸகாத் தான் ஈஸா நபிக்குக் கடமையாகும்.
அரபியில் ஸலாத் என்றால் தொழுகை என்று பொருள். அஸ்ஸலாத் என்றால் அந்தத் தொழுகை என்று பொருள்.
ஸகாத் என்றால் தர்மம். அஸ்ஸகாத் என்றால் அந்தத் தர்மம் என்று பொருள்.
எனவே இந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்தில் இடம் பெறும் அஸ்ஸலாத், அஸ்ஸகாத் என்பது ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அந்தத் தொழுகையையும் ஸகாத்தையுமே குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்கள் மீண்டும் வரும்போது அந்தத் தொழுகையும் ஸகாத்தும் அவர்களுக்குக் கிடையாது. முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையும் ஸகாத்தும் தான் கடமையாக இருக்கும்.
ஈஸா நபிக்கு இருந்த தொழுகை, முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தொழுகையைப் போன்றது அல்ல என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகவுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!'' என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்க மாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்ற சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்'' என்று கூறிவிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: முஸ்லிம் 225
தாம் வாழ்ந்த காலத்தில் ஈஸா நபி அவர்கள் தொழுவிக்கும் இமாமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் முன்னின்று தொழும் இமாமாக இருக்கவில்லை. இந்த உம்மத்தைப் பின்பற்றியே தொழுகின்றார்கள். இதிலிருந்து அவர்களது தொழுகை வேறு, இந்தத் தொழுகை வேறு என்பதை விளங்கலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஈஸா நபியவர்கள் இந்தச் சமுதாயத்தில் (உம்மத்தில்) ஒருவராகத் தான் வருகின்றார்கள். நபியாக வரவில்லை. இது பாமரனுக்கும் தெரிந்த விஷயம்.
அதாவது, ஈஸா நபிக்கு அவர்களது ஷரீஅத் இப்போது இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஷரீஅத் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதைத் தான் வேண்டுமென்றே இந்த ஆலிம்கள் மறுக்கின்றனர்.
இந்த வசனம் காதியானிஸத்திற்குக் கல்லறை கட்டும் ஒரு வசனமாகும். இந்த வசனத்திற்கு நாம் செய்திருக்கும் பொருள் தான் சரியானது. அது தான் இலக்கணத்திற்கும் உட்பட்டதாகும். இதை இந்த ஆலிம்கள் மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் தலைக்கனமும் திமிரும் தவிர வேறெதுவுமில்லை.
குர்ஆன் வழிகெடுக்குமாம்! குருடர்கள் கூறுகின்றனர்!
ஏகத்துவப் பிரச்சாரம் துளிர் விடத் துவங்கிய மாத்திரத்தில் அதன் போதனையாளர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான். "குர்ஆனைப் படியுங்கள்' என்ற குரல் முழக்கம் தான் அது! அன்று அதற்கு ஆலிம் வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு, வாரியடித்துக் கொண்டு மக்களிடம் சொன்னது, "குர்ஆனைப் படிக்காதீர்கள்; அதை எல்லோரும் நேரடியாக விளங்க முடியாது' என்று தான்.
ஆனால் காலப்போக்கில் மக்களிடம் குர்ஆன் தர்ஜுமா வாங்கும் பண்பு வளர்ந்தது. குர்ஆன் மொழியாக்கங்களுக்காக மக்களிடம் அதிகமான தேட்டமும் தணியாத தாகமும் கூடியிருந்தது.
புரட்டிப் பார்க்காமல் பரணில் பரக்கத்துக்காக மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புனிதக் குர்ஆனின் மொழியாக்கம் புத்தகச் சந்தையில் புதிய விற்பனைப் பரிமாணத்தைக் கண்டிருந்ததால், "பாமரர்களுக்குப் புரியாது; படித்தவர்களுக்கு மட்டும் புரியும்' என்று பாடம் நடத்திய ஆலிம் (?) வர்க்கம் குர்ஆனை மொழியாக்கம் செய்யப் புறப்பட்டது.
தங்களின் குர்ஆன் மொழியாக்கப் புத்தகங்களை சந்தையில் கொண்டு வந்து போட்டது. பணம் என்றதும், புரியாத குர்ஆன் புரிய ஆரம்பித்து விட்டது. இதிலிருந்து இவர்களின் நோக்கம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.
இதில் வேதனை என்னவென்றால், "குர்ஆன் வழிகெடுக்கும்' என்று நமக்கு எதிராகக் கொழுப்பெடுத்த பிரச்சாரம் செய்தனர். அதற்கு அல்குர்ஆன் வசனத்தையே ஆதாரமாகக் காட்டினர்.
கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.
அல்குர்ஆன் 2:26
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். குர்ஆன் வழிகெடுக்கும் என்று இவர்கள் கூறக் கூற, மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதுக் கொள்கையின் பக்கம் குவிய ஆரம்பித்தனர்.
இங்கே அல்குர்ஆன், மக்களிடம் வெறுமனே வாழ்கின்ற வேதமாக அல்ல, ஆளுகின்ற வேதமாகப் பரிணமித்தது. குர்ஆன் விளங்காது என்று இவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் இதை விட்டு விலகி, இந்தப் பக்கம் வராமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? மாறாக, அலை அலையாக தவ்ஹீது நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதிலிருந்து குறை, கோளாறு குர்ஆனில் இல்லை. இந்தக் குருடர்களிடம் தான் இருக்கின்றது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
(இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.
அல்குர்ஆன் 2:18
அல்லாஹ் சொல்வது போன்று காதிருந்தும் செவிடர்கள்; வாயிருந்தும் ஊமைகள்; கண்ணிருந்தும் குருடர்கள்.
மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் இதே வேலையைத் தான் செய்தார்கள்.
"இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 41:26
எனினும் இவர்களது பிரச்சாரம் எடுபடவில்லை. அல்குர்ஆன் மிகைத்து மேலோங்கி விட்டது. இப்போதும் அது தான் நடக்கின்றது. ஆனால் இதை இந்த ஆலிம்கள் புரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பேசிய அதே வசனத்தைத் தான் இப்போதும் பேசுகின்றார்கள்.
இறுதி நபித்துவம் தலைப்பில் பி.ஜே. பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ஸைபுத்தீன் ரஷாதி, அல்குர்ஆனின் 2:26 வசனத்தைக் கூறி, குர்ஆன் விளங்காது என்று பேசினார். இந்த வசனத்தை ஓதி விட்டு அதற்குப் பொருள் செய்யாமல் நழுவினார்.
அன்று இதே கருத்தை அவர்கள் பேசும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு நூறு பேர் தான். ஆனால் இன்று பல நூறாயிரம் பேர். இவர்களுடைய பேச்சு எடுபடவில்லை என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது. இதற்குப் பின்னும் மானம் கெட்டுப் போய் பேசுகின்றோமே என்ற உணர்வு கூட அற்றுப் போய் விட்டது.
உண்மையில் இந்த வசனம் குறிப்பிடுவது குர்ஆனைப் பற்றி அல்ல! அது கூறும் உதாரணத்தைத் தான்.
இவ்வசனத்தில் "இதன் மூலம் வழி கெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.
ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் "இதன் மூலம் வழி கெடுப்பான்' என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே "இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "இவ்வுதாரணத்தின் மூலம்' என்று பொருள் கொள்வதே சரியாகும்.
"இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "வேதத்தின் மூலம்' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.
மேலும் வழி காட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழி கெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.
இதைத் தான் குர்ஆனுடன் பொருத்திப் பார்த்து, குர்ஆன் வழிகெடுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் குர்ஆன், மக்களை நேர்வழியில் பால் இழுத்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனுடைய வேலையும் அது தான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அல்குர்ஆன் 2:185
இதற்கு மாற்றமாகத் தான் இந்த ஆலிம்கள் விஷமப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் அதில் தோற்றுப் போவதுடன், இந்த வாதம் இவர்களை நாளை நரகத்திற்குத் தான் அழைத்துச் செல்லும்.
குர்ஆன் மீது இவர்கள் வெறுப்பூட்டிய குற்றத்திற்கு ஆளாகின்றார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் மறுமையில் இறைவனிடம் புகார் கொடுக்கின்றார்கள்.
"என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்'' என்று இத்தூதர் கூறுவார்.
அல்குர்ஆன் 25:30
இதன் விளைவு என்ன? நரகம் தான். அல்லாஹ் காப்பாற்றுவானாக!
கல்விக் கடலா கஸ்ஸாலி?
"வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!''
காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை.
அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!
இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம்.
العارفون- بعد العروج إلى سماء الحقيقة- اتفقوا على أنهم لم يروا في الوجود إلا الواحد الحق. لكن منهم من كان له هذه الحال عرفانا علميا، ومنهم من صار له ذلك حالا ذوقيا. وانتفت عنهم الكثرة بالكلية واستغرقوا بالفردانية المحضة واستوفيت فيها عقولهم فصاروا كالمبهوتين فيه ولم يبق فيهم متسع لا لذكر غير الله ولا لذكر أنفسهم أيضا. فلم يكن عندهم إلا الله، فسكروا سكرا دفع دونه سلطان عقولهم، فقال أحدهم (أنا الحق) وقال الآخر (سبحاني ما أعظم شأني) وقال آخر (ما في الجبة إلا الله) وكلام العشاق في حال السكر يطوى ولا يحكى. فلما خف عنهم سكرهم وردوا إلى سلطان العقل الذي هو ميزان الله في أرضه، عرفوا أن ذلك لم يكن حقيقة الاتحاد بل شبه الاتحاد مثل قول العاشق في حال فرط عشقه (أنا من أهوى ومن أهوى أنا) ولا يبعد أن يفاجىء الإنسان مرآة فينظر فيها ولم ير المرآة قط، فيظن أن الصورة التي رآها هي صورة المرآة متحدة بها، ويرى الخمر في الزجاج فيظن أن الخمر لون الزجاج. وإذا صار ذلك عنده مألوفا ورسخ فيه قدمه استغفر وقال:
|
رَقَ الزُجاجُ وَراقَتِ الخَمرُ |
|
فَتَشابَها فَتَشاكَـلَ الأَمَـرُ |
|
فَكَأَنّما خَـمـرٌ وَلا قَـدحٌ |
|
وَكَأَنّما قَدحٌ وَلا خَـمـرُ |
وفرق بين أن يقول: الخمر قدح، وبين أن يقول: كأنه قدح. وهذه الحالة إذا غلبت سميت بالإضافة إلى صاحب الحالة (فناء) بل (فناء الفناء): لأنه فنى عن نفسه وفنى عن فنائه، فإنه ليس يشعر بنفسه في تلك الحال ولا يعدم شعوره بنفسه. ولو شعر بعدم شعوره بنفسه لكان قد شعر بنفسه. وتسمى هذه الحالة بالإضافة إلى المستغرق به بلسان المجاز اتحادا أو بلسان الحقيقة توحيدا. ووراء هذه الحقائق أيضا أسرار يطول الخوض فيها.
மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீகத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து, ஒருமித்துக் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த இரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்). இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் "எல்லாம் ஒன்றே' எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து "வோறொன்று' என்ற வார்த்தை - அதாவது பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறொன்றும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் "நான்தான் அல்லாஹ்' என்றும் வேறு சிலரோ "நானே அல்லாஹ். நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்' என்றோ வேறு சிலர் "எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறில்லை' என்றோ கூறியிருக்கின்றார்கள்......
நூல்: மிஷ்காத்துல்அன்வார்
இதன் மூலம், காணும் பொருளெல்லாம் கடவுள் எனும் முஹ்யித்தீன் இப்னு அரபியின் வழிகெட்ட கொள்கையைத் தான் கஸ்ஸாலியும் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
إحياء علوم الدين - (ج 4 / ص 356)
وحكى أن أبا تراب التخشبى كان معجبا ببعض المريدين فكان يدنيه ويقوم بمصالحة والمريد مشغول بعبادته ومواجدته فقال له أبو تراب يوما لو رأيت أبا يزيد فقال إنى عنه مشغول فلما أكثر عليه أبو تراب من قوله لو رأيت أبا يزيد هاج وجد المريد فقال ويحك ما أصنع بأبى يزيد قد رأيت الله تعالى فأغنانى عن أبى يزيد قال أبو تراب فهاج طبعى ولم أملك نفسى فقلت ويلك تغتر بالله عز و جل لو رأيت أبا يزيد مرة واحدة كان أنفع لك من ان ترى الله سبعين مرة قال فبهت الفتى من قوله وأنكره فقال وكيف ذلك قال له ويلك أما ترى الله تعالى عندك فيظهر لك على مقدارك وترى أبا يزيد عند الله قد ظهر له على مقداره فعرف ما قلت فقال احملنى إليه فذكر قصة قال في آخرها فوقفنا على تل تنتظره ليخرج إلينا من الغيضة وكان يأوى إلى غيضة فيها سباع قال فمر بنا وقد قلب فروة على ظهره فقلت للفتى هذا أبو يزيد فانظر إليه فنظر إليه الفتى فصعق فحركناه فإذا هو ميت فتعاونا على دفنه فقلت لأبى يزيد يا سيدى نظره إليك قتله قال لا ولكن كان صاحبكم صادقا واستكن في قلبه سر لم ينكشف له بوصفه فلما رآنا انكشف له سر قلبه فضاق عن حمله لأنه في مقام الضعفاء المريدين فقتله ذلك
ولما دخل الزنج البصرة فقتلوا الأنفس ونهبوا الأموال اجتمع إلى سهل إخوانه فقالوا لو سألت الله تعالى دفعهم فسكت ثم قال إن لله عبادا في هذه البلدة لو دعوا على الظالمين لم يصبح على وجه الأرض ظالم إلا مات في ليلة واحدة ولكن لا يفعلون قيل لم قال لأنهم لا يحبون ما لا يحب ثم ذكر من إجابة الله تعالى أشياء لا يستطاع ذكرها حتى قال ولو سألوه أن لا يقيم الساعة لم يقمها
وهذه امور ممكنة في أنفسها فمن لم يحظ بشىء منها فلا ينبغى أن يخلو عن التصديق والإيمان بإمكانها فإن القدرة واسعة والفضل عميم وعجائب الملك والملكوت
அபூதுராப் தக்ஷபீ சில சீடர்களைக் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தன்னருகில் அழைத்து அவருக்கு நல்லறம் செய்வார். ஆனால் அந்தச் சீடர் இறை வணக்கத்திலும் இறை தியானத்திலும் திளைத்திருப்பார். ஒரு நாள் அபூதுராப் அது போன்ற ஒரு சீடரிடம், "நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?'' என்று கேட்டார். "எனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை'' என்று சீடர் பதிலளித்தார். "நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?'' என்று அபூதுராப் திரும்பத் திரும்ப வலியுறுத்தவே அது அவரது கோபத்தைக் கிளறி விட்டது. "அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்து நான் என்ன கிழிக்க வேண்டியிருக்கிறது? நான் தான் அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன். அவன் அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பதற்குரிய அவசியம் இல்லாமல் ஆக்கி விட்டானே'' என்று சீடர் கூறியதும் அபூதுராபுக்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது.
அபூதுராப் கூறுகிறார்:
அவர் இவ்வாறு சொன்னதும் எனக்குக் கிளம்பி விட்டது. என்னை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை நோக்கி, "உனக்கு நாசம் உண்டாகட்டும். மகத்துவமும் கம்பீரமும் மிக்க அல்லாஹ்வûக் கண்டு நீ ஏமாறுகின்றாய். நீ அல்லாஹ்வை எழுபது தடவை பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியை ஒரு தடவை பார்ப்பது உனக்கு மிகவும் பயனுடையதாகும்'' என்று நான் அந்தச் சீடரிடம் சொன்னேன்.
இந்த வார்த்தையைக் கேட்டு அந்தச் சீடர் என்னை வெறுக்கலானார். "நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகின்றீர்கள்?'' என்று என்னிடம் அவர் கேட்டார். "அல்லாஹ் தஆலா உன்னிடத்தில் உன்னளவுக்குத் தான் காட்சியளிப்பான். ஆனால் அபூயஸீத் அல்புஸ்தாமியிடம் அவர் அளவுக்குக் காட்சியளிப்பான் என்பதை நீ கவனிக்க வேண்டாமா?'' என்று நான் பதிலளித்தேன்.
இதை விளங்கிய அவர் என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். நான் அவரை அழைத்துச் சென்று அவரும் நானும் ஒரு திட்டில் நின்றிருந்தோம்.
வன விலங்குகள் வாழ்கின்ற காட்டில் ஒதுங்கியிருக்கும் அவர், அங்கிருந்து புறப்பட்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போன்றே அவர் எங்களைத் தாண்டிச் சென்றார். அப்போது அவர் தன் முதுகின் மேல் ஒரு தோல் ஆடையைப் புரட்டிப் போட்டிருந்தார்.
நான் அந்த இளைஞரிடம், "இவர் தான் அபூயஸீத் அல்புஸ்தாமி'' என்று தெரிவித்தேன். அந்தச் சீடர் அவரைப் பார்த்த மாத்திரத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அவரை அசைத்துப் பார்த்தோம். அவர் இறந்தே போயிருந்தார். அவரை அடக்கம் செய்தோம்.
நான் அபூயஸீதிடம், "என்னுடைய தலைவரே! அவர் உங்களை நோக்கிப் பார்க்கத் தான் செய்தார். அந்தப் பார்வை அவரைப் பலி கொண்டு விட்டதே!'' என்று கேட்டேன்.
"உண்மை அதுவல்ல! உங்களுடைய நண்பர் ஓர் உண்மையாளராக இருந்தார். அவருடைய உள்ளத்தில் ரகசிய ஞானம் குடிகொண்டிருந்தது. ஆனால் அது அவருக்கேற்ற தன்மையுடன் அவருக்கு உதயமாகவில்லை. அவர் நம்மைப் பார்த்ததுமே அவருடைய உள்ளத்தின் அகமிய ஞானம் வெளிப்பட்டது. அதை அவர் தாங்க முடியாதபடி நெருக்கடிக்கு உள்ளானார். காரணம் அவர் பலவீனமான பக்தர்; சீடர்! அதனால் தான் அவர் இறந்தே போய் விட்டார்'' என்று அபூயஸீத் அல்புஸ்தாமி தெரிவித்தார்.
நூல்: இஹ்யாவு உலூமித்தீன்
இந்தச் சம்பவத்தில் தான் எத்தனை அபத்தங்களும் ஈமானுக்கு வேட்டு வைக்கின்ற விஷக் கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைச் சற்று பார்ப்போம்.
1. அல்லாஹ்வைப் பார்ப்பது மறுமையில் தான் நடக்கும். இவ்வுலகில் நடக்காது என்று அல்லாஹ் திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்லி விட்டான். ஆனால் இந்தக் கதையில் அபூதுராபின் சீடர் அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
2. "அல்லாஹ்வைப் பார்த்து விட்டு ஏமாந்து விடாதே!' என்று அபூதுராப் என்ற ஷைத்தான் சொல்வது!
ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வோம். பாக்கியம் பெற்றவராகத் தானே ஆவார். அவர் எப்படி ஏமாற்றத்திற்குரிவர் ஆவார்?
3. எழுபது தடவை அல்லாஹ்வைப் பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பவன் சிறந்தவன் என்று இந்த ஷைத்தான் கூறுவது! இங்கு அல்லாஹ்வை விட எழுபது மடங்கு அபூயஸீத் அல்புஸ்தாமி உயர்ந்தவன் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது. (நவூதுபில்லாஹ்)
4. அபூயஸீத் என்ற ஷைத்தானைப் பார்த்த மாத்திரத்தில் அந்தச் சீடர் மயக்கமாகி இறந்து விடுதல்.
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேரொளியைப் பார்த்து மயக்கமடைந்தது போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.
அந்தச் சீடர் ஏற்கனவே அல்லாஹ்வைப் பார்த்தவர்(?). அப்போதெல்லாம் மயக்கம் ஏற்படாத அவருக்கு அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தவுடன் மயக்கம் ஏற்படுகின்றது என்றால் அபூயஸீதை எந்த நிலையில் கொண்டு வைக்கின்றார்கள் என்று பாருங்கள்.
அபூயஸீத் அல்புஸ்தாமியை அல்லாஹ்வுக்கும் மேலாக வைத்து வழிபடுகின்ற இந்த அபூதுராபின் சம்பவத்தை, இந்தக் கப்ஸாவை தனது இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் கஸ்ஸாலி பதிவு செய்திருக்கின்றார் என்றால் இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலட்சணத்தில், "இஹ்யாவைப் படிக்காதவன் "அஹ்யா' (உயிருள்ளவர்களின்) பட்டியலில் இல்லை'' என்ற புகழாரம் வேறு! இந்தக் குஃப்ரான கருத்தைப் பதிவு செய்த கஸ்ஸாலிக்கு, கல்விக் கடல் என்ற பட்டமும் பாராட்டும் வேறு!
இவரது நூலில் பரவியும் விரவியும் கிடப்பது, மலிந்தும் குவிந்தும் கிடப்பது "அத்வைதம்' என்ற கேடு கெட்ட கொள்கை தான். ஏகத்துவம் என்ற மரத்தை ஆணி வோரோடு கெல்லி எறிகின்ற நச்சுக் கொள்கையைப் பதிவு செய்கின்ற இவர் எப்படி இமாமாக இருக்கமுடியும்? அவர் எழுதிய நூற்கள் எப்படி இஸ்லாமியப் பாட நூல்களாக இருக்க முடியும்?
இந்தக் கண்ணோட்டத்தில் பி.ஜே. அவர்கள் இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்ததைத் தான் இந்த ஆலிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மற்றவர்களை விமர்சித்தால் கூட இவர்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியை விமர்சனம் செய்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் ஸைபுத்தீன் ரஷாதியின் மறுப்புக் கூட்டம்.
அந்த மறுப்புக் கூட்டத்தில் கஸ்ஸாலி பற்றிய கேள்விக்குப் பதிலளிப்பதாகக் கூறி ஆரம்பித்த ஸைபுத்தீன் ரஷாதி சுமார் 20 நிமிடங்கள் கஸ்ஸாலியின் புகழ் பாடினார். மனிதனின் கருத்துக்களில் தவறு இருக்கலாம் என்று இதில் மட்டும் ஒப்புக் கொள்கின்றார். உண்மையில் கஸ்ஸாலி விஷயத்தில் இப்படி, மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இருந்தன என்று யாரும் எளிதில் நழுவி விட முடியாது என்பதை அவர் எழுதிய இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலைப் படிப்பவர் யாரும் தெரிந்து கொள்ளலாம்.
காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற அத்வைதக் கொள்கை இந்த ஸைபுத்தீன் ரஷாதி கூறுவது போல் சாதாரண தவறல்ல. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை, ஓரிறைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற ஒரு பெரிய பாவச் சொல்லாகும். அல்லாஹ் மன்னிக்காத குற்றமாகும். இதைத் தான் ஸைபுத்தீன் ஏதோ சட்ட விஷயத்தில் ஏற்படும் சிறிய பிழை போல் சித்தரிக்கின்றார்.
கஸ்ஸாலியைப் பற்றி ஸியர் அஃலாமின்னுபலா என்ற நூலில் ஹாபிழ் தஹபீ அவர்கள் புகழ்ந்த புகழ் மாலையை ஸைபுத்தீன் ரஷாதி கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார்.
யார் புகழ் மாலை சூட்டினால் என்ன?
யார் பாராட்டுப் பத்திரம் வழங்கினால் என்ன?
கஸ்ஸாலியின் நூல் கூறுவதென்ன? ஏகத்துவத்திற்கு நேர் எதிரான இறை மறுப்புக் கொள்கையான அத்வைதம். இந்தக் கொள்கையைப் பேசும் நூலைத் தூக்கி எறிவது தான் ஒரு சரியான முஸ்லிமின் நிலையாக இருக்க முடியும்? அதனை தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டி வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தச் செயலைத் தான் ஸைபுத்தீன் ரஷாதி என்ற பொய்யர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இவர் எடுத்துக் காட்டிய அதே ஸியரு அஃலாமின்னுபலா நூலில் இஹ்யா உலூமித்தீனைப் பற்றிக் குறிப்பிடுகையில், "மொத்தத்தில் அதில் பொய்யான ஹதீஸ்களே இடம் பெற்றிருக்கின்றன'' என்று கூறப்படுகின்றது.
ஒழுக்கங்கள், போலி நடைமுறைகள், தத்துவ ஞானிகளின் துறவு நிலைகள், சூபிஸத்தின் கொலை பீடங்கள் மட்டும் இல்லையென்றால் அதில் அதிக நன்மை இருக்கின்றது.
அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன? அது குர்ஆனில் இறங்கியதாகும்.
அல்லாஹ்விடமிருந்து தடை வராத ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் ஆகும்.
என்னுடைய நடைமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என்னுடைய சகோதரனே! அல்லாஹ்வின் வேதத்தை ஆழ்ந்த கவனத்துடன் பற்றிப் பிடித்துக் கொள். புகாரி, முஸ்லிம், சுனன் நஸயீ, நவவீ இமாமின் ரியாளுஸ் ஸாலிஹீன், அவருடைய திக்ரு தொகுப்புகள் போன்றவற்றை முழுச் சிந்தனையுடன் பற்றிப் பிடித்துக் கொள்! நீ வெற்றி பெறலாம்.
தத்துவ ஞானிகளின் வறட்டுத் தத்துவங்கள், அவர்களின் வெற்று ஆன்மீகப் பயிற்சிப் பணிகள், பாதிரிகளின் பட்டினி தவம், தனிமை நாயகர்களின் உருப்படாத உளறல் பேச்சுக்களை நம்பி ஏமாந்து விடாதே என்று உன்னை நான் எச்சரிக்கின்றேன். அனைத்து நன்மையும் தூய, நேரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றன. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.
இறைவா! எங்களை நேரிய பாதையில் செலுத்துவாயாக!
இவ்வாறு ஸியரு அஃலாமின்னுபலாவில் ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.
பொய்யர் ஸைபுத்தீன் இதையும் சேர்த்துப் படித்திருந்தால் கஸ்ஸாலியைப் பற்றிய தஹபீயின் முழு மதிப்பீடும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் இதைச் செய்யவில்லை. இவரும் இவரை அழைத்து வந்த மஜ்லிசுல் உலமாவினருக்கும் நோக்கமே கல்விக் கடல் (?) கஸ்ஸாலியைக் காப்பாற்றுவது தான். அதைத் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். இந்தத் தூய மார்க்கத்தைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கமல்ல!
கஸ்ஸாலியின் நூலிலிருந்து அவர் யார் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதன் பின்னரும் அவரை இமாம் என்றும், அவருடைய ஞானத்தைப் போல் தனக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறுபவர்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் தான் இருக்கின்றார்கள் என்பது தெளிவான ஒன்றாகும்.
ஸைபுத்தீன் உட்பட இந்த உலமா சபையினர் அனைவரும் பரேலவிய சிந்தனைவாதிகள். இவர்களுக்கு ஏகத்துவக் கொள்கை என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் இவர்களுடைய வலையில் விழுந்து விடக் கூடாது என எச்சரிக்கை செய்கிறோம்.
கஸ்ஸாலியைப் பற்றி சில அறிஞர்கள் கூறும் போது, அவர் கடைசி நேரத்தில் திருந்தி விட்டார் என்ற வாதத்தை வைக்கின்றனர். கஸ்ஸாலி திருந்தியிருந்தால் அவரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
ஆனால் அதே சமயம், அவர் திருந்தி ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தால் அதை அவரே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவரிடமிருந்து அந்தக் கருத்து வராத வரை இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது.
அவர் எழுதிய நூற்களை மேற்கோள் காட்டியே அவரது கொள்கை தவறு என்று நாம் விமர்சிக்கின்றோம். நாம் பார்ப்பது வெளிப்படையைத் தான். அவரது நூற்கள் மக்களை வழிகெடுத்து விடக் கூடாது என்பதால் அதை அடையாளம் காட்டுவது நம்முடைய மார்க்கக் கடமையாகும்.
அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்
கே.எம். அப்துந் நாசிர்
இஸ்லாம் என்பது இறைவனுக்குரிய மார்க்கமாகும். இஸ்லாம் என்ற பெயரில் எந்த ஒரு சட்டத்தைக் கூறவும் நீக்கவும் இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இஸ்லாம் இறை மார்க்கம் என்பதன் உண்மையான பொருள், இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் மார்க்கமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.
அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.
(அல்குர்ஆன் 12:40)
இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்
(அல்குர்ஆன் 7:3)
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
(அல்குர்ஆன் 6:106)
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 43:43, 44)
மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவற்றைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.
இதனை தெளிவாகப் பிரித்துக் காட்டுவது தான் ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஏனைய நூற்களில் இடம் பெற்றுள்ள "பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸ் ஆகும்.
நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவான கொள்கைகளுக்குப் பதில் சொல்ல முடியாத போலி முல்லாக்கள் தங்களுடைய மத்ஹபு வண்டவாளங்களை நியாயப்படுத்துவதற்காக, சரியான ஹதீஸ்களையும் கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் பலவீனமாக்கத் துவங்கி விட்டனர்.
எந்த ஒரு செய்தியையும் முறையான சான்றுகளைக் காட்டி பலவீனம் என்று நிரூபித்தால் அதனைத் ஏற்றுக் கொள்வதில் முதலாவதாக நாம்தாம் இருப்போம். அதே நேரத்தில் நபியவர்கள் செய்ததாக வரக்கூடிய சிறிய காரியமாக இருந்தாலும் பொய்யான காரணங்களைக் கூறி அதனை மாற்ற நினைத்தால் அத்தகையவர்களுக்கு முதல் எதிரியாகவும் நாம் நிற்போம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய பி.ஜே., "நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து நமக்கு போதித்தவை தான் மார்க்கம். அவர்கள் உலக விஷயங்களைப் போதிக்க வரவில்லை' என்பதை "பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸைக் கூறி விளக்கினார்கள்.
இதற்கு மறுப்பளிக்கப் போகிறேன் என்று வந்த ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் இந்த ஹதீஸ் பலவீனம் என்று குறிப்பிட்டார். இது முஸ்லிமில் இடம் பெற்று இருந்தாலும் இதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.
இந்த ஹதீஸை பலவீனப்படுத்துவதற்கு அவர் கூறிய காரணங்கள் தான் மிகவும் பலவீனமானவையாகவும் அறியாமையின் வெளிப்பாடாகவும் இருந்தது. குழந்தைக்குப் புரையேறியதற்கான காரணத்தை பிறவிக் குருடி ஆய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்று தான் இவரின் வாதங்கள் அமைந்துள்ளன. அவர் இரண்டு காரணங்களைக் கூறினார்.
1. இது நபித்துவத்தின் தன்மைகளை தகர்க்கக்கூடிய வகையில் உள்ளது.
2. இதன் அறிவிப்பாளர்களில் பலவீனமானவர்கள் உள்ளனர்.
இவை தான் அந்த இரண்டு காரணங்கள் ஆகும்.
இந்த ஹதீஸ் நபித்துவத்தின் தன்மைகளைப் பாதிக்கிறதா? என்பதை மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும் என்ற தனிக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அறிவிப்பாளர்கள் ரீதியாக அவர் கூறும் காரணங்கள் சரியானதா? என்பதை இதில் நாம் காண்போம்.
"குர்ஆனிற்கு அடுத்த படியாக உலகில் மிகச் சிறந்த நூற்கள் புகாரி, முஸ்லிம்' என்று கூறும் மத்ஹப்வாதிகளில் ஒருவரான ஸைபுத்தீன் ரஷாதி, முஸ்லிமில் இடம் பெற்ற இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறுவது மிகவும் வியப்பானதாகும்.
அது மட்டுமில்லாமல் லயீஃப் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் மிகவும் வேடிக்கையானதாகவும், அறியாமையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.
"பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை'' செய்வது தொடர்பான ஹதீஸ் நான்கு ஸஹாபாக்கள் வழியாக முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கிலுமே ஏதாவது ஒரு அறிவிப்பாளரை போகிற போக்கில் பலவீனம் என்று வாதிக்கின்றார். அறியாத மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதைக் காண்போம்.
தல்ஹா பின் உபைதில்லாஹ்வின் அறிவிப்பு
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (4711)
இதன் அறிவிப்பாளர் தொடரில் "ஸிமாக் பின் ஹர்ப்'' என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார் என்று "ஸைபுதீன் ரஷாதீ'' கூறியுள்ளார்.
ஸிமாக் பின் ஹர்ப் பலவீனமானவரா?
ஸிமாக் அவர்களைப் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.
காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.
முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.
இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.
மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.
மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.
இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.
(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 4 பக்கம் 204)
முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸில் "ஸிமாக்''கிடமிருந்து அறிவிப்பவர் "அபூ அவானா'' என்பவராவார். எனவே இந்த ஹதீஸ் மிகவும் சரியானதாகும். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.
"ஸிமாக்'' என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 62 இடங்களில் இடம் பெற்றுள்ளார். அனைத்துமே "இக்ரிமா'' அல்லாதவர்கள் வழியாக வரக்கூடிய அறிவிப்புகளாகும். இக்ரிமா அல்லாதவர்கள் வழியாக ஸிமாக்கின் அறிவிப்புகள் ஸஹீஹானவை என்பதால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் அவர் இடம் பெறக்கூடிய 62 அறிவிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். முஸ்லிம் அல்லாத திர்மிதீ, நஸாயீ, அபூதாவுத் போன்ற பிற நூற்களிலும் இவருடைய அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே பலவீனம் என்று "ஸைபுத்தீன்'' அறிவிப்பாரா?
பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு இரண்டு நிலைகள் இருக்கத் தான் செய்யும். அல்லது குறிப்பிட்ட ஒருவர் வழியாக வரும் அறிவிப்புகளில் தவறிழைத்திருப்பார். அவற்றை பிரித்தறிந்து அவர் எந்நிலையில் சரியாக அறிவித்துள்ளாரோ அந்த அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலையின் அடிப்படையாகும். அறிவு ரீதியிலும் சரியானதாகும்.
ஒரு அறிவிப்பாளர் மீது யாராவது, ஏதாவது ஒரு குறையைக் கூறி விட்டால் அதை மறுத்து விட வேண்டும் என்ற பாணியில் புகாரியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யப் புகுந்தால் புகாரியை 40 பக்க புத்தகத்தில் சுருக்கி விடலாம். ஸைபுத்தீன் ரஷாதீயின் விமர்சனம் அந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் அறிவிப்பு
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்'' என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்'' என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன' அல்லது "குறைந்து விட்டன'.
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே'' என்று சொன்னார்கள்.
(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன'' என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.
(நூல்: முஸ்லிம் 4712)
இந்த அறிவிப்பில் "இக்ரிமா இப்னு அம்மார்'' என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என ஸைபுத்தீன் வாதிக்கின்றார்.
இக்ரிமா பின் அம்மார் பலவீனமானவரா?
ஸைஃபுத்தீன் ரஷாதி மிகப் பெரும் பொய்யர் என்பதற்கும் அவர் கூறுபவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கும் அவரது இந்த விமர்சனமே போதுமான சான்றாகும். உண்மையை மறைத்து மக்களுக்குக் கூறுபவர் எப்படி உண்மையாளராக இருக்க முடியும்.
இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளரை ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றை இங்கு வரிசைப்படுத்தினால் மிகவும் நீண்டு விடும். எனவே சுருக்கத்தைக் கருதி அவற்றைக் கூறவில்லை.
இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் "யஹ்யா பின் அபீ கஸீர்'' என்பவர் வழியாக அறிவிப்பவற்றை மட்டுமே பலவீனம் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இதை அப்படியே மறைத்து பொதுவாக அறிஞர்கள் அவரைக் குறைகூறியுள்ளது போல் ஸைபுத்தீன் நாடகமாடியுள்ளார்.
தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 25ல் இக்ரிமா பின் அம்மாரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ள விமர்சனங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.
இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் அஹ்மத் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். என்றாலும் இமாம் யஹ்யல் கத்தான் அவர்கள், யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக வரக்கூடிய ஹதீஸ்களிலே இவரை பலவீனமாக்கியுள்ளார்.
யஹ்யா பின் அபீ கஸீருடைய ஹதீஸில் மட்டும் குழம்பியுள்ளார் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.
இக்ரிமா பின் அம்மார் உறுதியானவர். யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள அறிவிப்புகளில் குளறுபடிகள் உள்ளது என்று இமாம் அபூதாவூத் கூறுகிறார்.
யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களில் குழம்பியுள்ளார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.
யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களிலே தவிர மற்றவற்றில் இவர் மீது பிரச்சனையில்லை என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்ண்ட ஹதீஸில் "அபூ அந்நஜாஸீ'' என்பவரிடமிருந்து தான் இக்ரிமா பின் அம்மார் அறிவிக்கின்றார். எனவே இந்த ஹதீஸ் இரு நூறு மடங்கு ஸஹீஹானதாகும் என்பதில் எள்ளளவு சந்தேகம் கூட கிடையாது.
மேலும் "இக்ரிமா பின் அம்மார்'' என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 38 இடங்களில் இடம் பெற்றுள்ளார். இவை அனைத்தும் பலவீனம் என்று இவர் ஒத்துக் கொள்வாரா? இன்ன பிற நூற்களிலும் இவரது அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
அனஸ் மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!'' என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.
அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)'' என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
நூல்: முஸ்லிம் (4713)
இதன் அறிவிப்பாளர் தொடரில் "ஹம்மாத் பின் ஸலமா'' என்ற அறிவிப்பாளர் பலவீனம் என்று ஸைபுத்தீன் ரஷாதீ கூறுகிறார்.
ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா?
"ஹம்மாத் பின் ஸலமா'' என்ற அறிவிப்பாளரை ஏராளமான இமாம்கள் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர். அவற்றை இங்கே பட்டியலிட்டால் மிகவும் விரிவாகி விடும். இவர் வயோதிகர் ஆன போது மனனத் தன்மையில் குறையுடையவராகி விட்டார் என்று இமாம் பைஹகி கூறியுள்ளார். ஆனால் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் நம்பகத் தன்மையின் உச்சகட்டத்தில் உள்ளதாகும்.
இமாம் புகாரி அவர்கள் ஹம்மாத் பின் ஸலமா உடைய அறிவிப்புகளை துணைச் சான்றாக பதிவு செய்துள்ளார்கள். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் ஸாபித் என்பவர் வழியாக அறிவிக்கும் (6439வது ஹதீஸ்) அறிவிப்பை முதன்மை ஆதாரமாகப் பதிவு செய்துள்ளார்கள்.
ஏனெனில் ஹம்மாத் பின் ஸலமா என்பவர் ஸாபித் என்பவர் வழியாக அறிவித்தால் அது மிக மிக உறுதியானதாகும் என பல ஹதீஸ் கலை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட செய்தி "ஸாபித்'' என்ற ஆசிரியரிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கக்கூடியதாகும். அதிகப்படியாக "ஹிஸாம் பின் உர்வா'' என்ற மற்றொரு ஆசிரியர் வழியாகவும் அறிவித்துள்ளார்.
ஸாபித் என்பார் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவித்தால் அந்த அறிவிப்பு மிக உறுதியானதாகும் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.
ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் மஃமர் என்பவரை விட ஹம்மாத் பின் ஸலமா மிகவும் உறுதியானவராவார் என இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹம்மாத் பின் ஸலமாவிற்கு மாற்றமாக யாராவது அறிவித்தால் ஹம்மாத் பின் ஸலமாவின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும் என இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.
ஹம்மாத் பின் ஸலமா என்பார் ஸாபித்திடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளைத் தவிர வேறு எதையும் மூலச் சான்றாக (முதன்மை ஆதாரம்) பதிவு செய்யவில்லை. பிற அறிவிப்பாளர்களில் ஒரு சாராரிடமிருந்து அவர் அறிவிப்பவற்றை துணைச் சான்றாக இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.
இந்த விவரங்கள் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம்: 3, பக்கம்: 11) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
எனவே மேற்கண்ட அறிவிப்பும் மிக மிகச் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை
அல்லாஹ் உண்மையை உண்மை என்றும், பொய்யைப் பொய் என்றும் நமக்கு அறியச் செய்வானாக! வழிகேடர்களின் வழிகேட்டிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!
மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும்
கே.எம். அப்துந் நாசிர்
மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களை அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான்.
நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன், அதை ஒரு நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். அதாவது, நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.
நபிவழி - சுன்னா என்றால் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்க வழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்பந்தப்பட்ட காரியங்கள். வணக்க வழிபாடுளைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொறுத்த வரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.
ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை.
தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்குக் கட்டளை இடாததால் அது சுன்னத்தாக ஆகவில்லை.
மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.
எனவே மார்க்க விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.
உலக விஷயங்களைப் பொறுத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள் செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.
வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத் தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.
அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.
அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.
ஏனெனில் அவை யாவும் இறைத் தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.
இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.
மகரந்தச் சேர்க்கையும் மாநபி விளக்கமும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இதைச் செய்யாதிருக்கலாமே?'' என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' எனக் குறிப்பிட்டார்கள்.
(நூல்: முஸ்லிம் 4358)
மற்றொரு அறிவிப்பில், நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: முஸ்லிம் 4357)
மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நூல்: முஸ்லிம் 4356)
பரீரா சம்பவமும் பகுத்தறிவுக் கேள்வியும்
மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.
பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீஸ் அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா "இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கட்டளையில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீஸ் வேண்டாம்'' என்று பரீரா கூறி விட்டார்.
நூல்: புகாரி 5283
கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக் கொண்டார்.
கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களா? அல்லது இனிமேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களா? என்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.
எனவே தான் இது மார்க்கக் கட்டளையா? அல்லது உங்களின் சொந்தக் கருத்தா? என வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.
வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை; வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோ, செயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவுபடுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்... இன்ஷா அல்லாஹ்!
இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 12
அழுது புலம்பிய ஆதம் நபி?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்து, அவரிடமிருந்து அவருடைய மனைவியையும் படைத்து இருவரையும் சொர்க்கத்தில் தங்குமாறு உத்தரவிட்டான். சொர்க்கத்தில் தாங்கள் விரும்பியதை தாராளமாகப் புசிக்குமாறும், அதேவேளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் பக்கம் நெருங்கக்கூடாது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்தான்.
ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைவன் தடுத்த மரத்தை அவ்விருவரும் நெருங்கி அதன் கனிகளைப் புசித்தார்கள். இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். எனவே இறைவன் கோபம் கொண்டு சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான். பிறகு தாங்கள் செய்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, துஆ செய்தார்கள். இச்சம்பவம் திருக்குர்ஆனில் 2வது அத்தியாயம், 35, 36, 37 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.
ஆதம் நபி, இறைவனிடமிருந்து ஒரு பிரார்த்தனையை கற்றுக் கொண்டு, இருவரும் அந்தப் பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்று அவ்வசனங்கள் கூறுகின்றன. ஆதம் நபி இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட பிரார்த்தனை எது என்று அந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தக்ஃபிர்லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்.
இது தான் அந்த துஆ!
பொருள் : "எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள்புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்''
ஆதம் அலை அவர்கள் செய்த பிரார்த்தனை இது தான் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவனுடைய வசனத்திற்கு மாற்றமாக, முரணாக, ஆதம் நபி செய்த துஆ என்று வேறுபட்ட பல துஆக்களை விரிவுரையாளர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள்; புழுகியுள்ளார்கள். அதன் விவரம் வருமாறு:
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை பூமியில் இறக்கிய போது அவர் கஃபாவை ஒரு வாரம் சுற்றினார்கள். கஃபாவிற்கு நேராக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அல்லாஹும்ம அன்த தஃலமு ஸிர்ரி வ அலானிய்யத்தி ஃபஅக்பில் மஃதிரதீ வ தஃலமு ஹாஜதீ ஃப அஃதினீ சுஅலி வ தஃலமு மா இன்தீ ஃபக்ஃபிர்லீ துனூபி அஸ்அலுக ஈமானன் யுபாஹி கல்பி வ யகீனன் ஸாதிகன்... என்ற பிரார்த்தனையைச் செய்தார். அப்போது அல்லாஹ் "ஆதமே! நீ என்னிடம் பிரார்த்தனை புரிந்தாய். நான் உனக்கு பதிலளித்து விட்டேன்'' என வஹீ அறிவித்தான்.
பொருள்: இறைவா நீ எனது இரகசியத்தையும், வெளிப்படையானவற்றையும் அறிவாய். எனவே எனது காரணத்தை ஏற்றுக் கொள். எனது தேவையை நீ அறிவாய். எனவே நான் கேட்பதை வழங்கி விடு. என்னிடத்தில் உள்ளதை நீ அறிவாய். எனவே எனது பாவத்தை மன்னிப்பாயாக. எனது உள்ளத்தை வலுப்படுத்தும் ஈமானையும் உண்மையான உறுதியையும் இறைவா நான் உன்னிடம் கேட்கிறேன்.....
நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 315
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் நழ்ர் பின் தாஹிர் என்ற பொய்யர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.
பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ருகீன், பாகம் 3, பக்கம் 161
ஆதம் (அலை) அவர்கள் இப்படி ஒரு துஆ செய்தார்கள் என்று இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத் தவிர தகுந்த வேறு ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது குர்ஆன் கூறும் செய்திக்கு மாற்றமாகவே ஆகும். ஏனெனில் ஆதம் நபி செய்த துஆ குர்ஆனிலேயே விளக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றமாக வேறு ஒரு துஆவை ஓதினார்கள் என்று ஒரு செய்தி வருமேயானால் அது குர்ஆனுடன் மோதுகின்ற காரணத்தினாலே அந்த செய்தி நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
இது தவிர இன்னும் பல துஆக்கள் கட்டுக்கதைகளோடு பின்னிப் பிணைந்து, புனைந்து விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவற்றில் உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு....
200 வருடங்கள் பாவமன்னிப்பு
ஆதம் அலை அவர்கள் இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு வேண்டினார்கள். இறுதியில் இறைவன் அவர்களுக்குச் சில வார்த்தைகளை வழங்கினான். அதை அவருக்கு சொல்லிக் கொடுத்தான். (அதன் விவரம்) ஆதம் நபி தனது உள்ளங்கையை நெற்றியில் வைத்து அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் அவரிடத்தில் வந்து ஸலாம் கூறினார். ஆதம் நபி அழுததினால் ஜிப்ரீலும் அழலானார்கள். பிறகு "ஆதமே உங்களை பீடித்துள்ள துன்பம் என்ன? எதற்காக இந்த அழுகை?'' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் நபி "ஜிப்ரீலே எப்படி நான் அழாமல் இருப்பேன்? சொர்க்கத்திலிருந்து இழிவான பூமியின் பக்கம், நிலையான வீட்டிலிருந்து இழிவான, அழிவுள்ள உலகை நோக்கி, அருள் நிறைந்த உலகிலிருந்து கேடு உள்ள உலகை நோக்கி, நிரந்தரமான உலகத்திலிருந்து அழியும் உலகத்திற்கு, என்னை எனது இறைவன் அனுப்பி விட்டானே! ஜிப்ரீலே இந்த துன்பத்தை நான் எப்படி அடக்கி கொள்வேன்'' என கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் தமது இறைவனிடம் சென்று ஆதம் அவர்கள் கூறியதை தெரிவித்தார். பிறகு அல்லாஹ் "ஜிப்ரீலே நீ ஆதமிடம் சென்று (நான் கூறியதாக) நான் உன்னை எனது கரத்தால் படைக்கவில்லையா? என்று கேளும். அவர் "ஆம் இறைவா' என்று கூறுவார். எனது ரூஹை நான் உன்னில் ஊதவில்லையா என்று கேளும். "ஆம் இறைவா' எனக் கூறுவார். எனது வானவர்களை உனக்காக பணியச் செய்யச் சொல்லவில்லையா என்று கேளும். ஆம் இறைவா என்பார். சொர்க்கத்தில் தங்க வைக்கவில்லையா என கேட்க, ஆம் இறைவா என்பார். நான் உனக்குக் கட்டளையிட்டு அதை நீ மீறவில்லையா என கேளும்; அதற்கும் ஆம் என்பார். ... இறுதியில் ஆதமே உனது சப்தத்தை, கெஞ்சுதலை நான் செவியுற்றேன். உனது பாரத்தைக் குறைத்து, உனது அழுகைக்காக நான் உனக்கு அருள் புரிகிறேன். இதோ லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ ளலம்து நஃப்ஸி ஃபர்ஹம்னனி இன்னக்க அன்த்த கைருர் ராஹிமீன். லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ ளலம்து நஃப்ஸி ஃதுப் அலைய்ய இன்னக்க அன்த்த தவ்வாபுர் ரஹீம் எனக்கூறுவீராக. என்று ஆதமிடம் தெரிப்பீராக'' என இறைவன் கூறினான்.
நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 319
ஆதம் நபி இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு கேட்டதாகவும், சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக நெற்றியில் கை வைத்து அழுததாகவும், இறைவன் ஆறுதல் கூறியதாகவும், இறுதியில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று துவங்கும் ஒரு துஆவை இறைவன் கற்றுக் கொடுத்தான் எனவும் பல விஷயங்கள் இந்த கட்டுக் கதையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. (இதை அருகில் இருந்து பார்த்தது யாரோ தெரியவில்லை.) இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. இது முழுக்க முழுக்க கப்ஸா தானே தவிர இதற்குக் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஏற்கத்தக்க எவ்வித ஆதாரமும் இல்லை.
இது போன்ற கட்டுக்கதைகளை பதிவு செய்த இமாம்கள் அதே இடத்தில் இது கதை என்று இனங்காட்டியிருக்க வேண்டாமா? என்பதே நமது கேள்வி.
முஹம்மதின் பொருட்டால்...
இது சம்பந்தமாக இன்னொரு தவறான நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிலவுகின்றது. அதாவது ஆதம் (அலை) இறைவனிடம் குறிப்பிட்ட தவறுக்காகப் பாவமன்னிப்பு கோரும் போது, முஹம்மதின் பொருட்டால் தன்னை மன்னிக்குமாறு இறைவனிடம் துஆ செய்தார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சில விரிவுரை நூல்களில் இந்தத் தகவல் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
ஆதம் அலை பாவம் புரிந்த போது தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, "இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்'' என கூறினார். அப்போது, "முஹம்மது யார்?'' என இறைவன் வஹீ மூலம் கேட்க, "நீ கண்ணியம் பொருந்தியவன். நீ என்னை படைத்த போது எனது தலையை உனது சிம்மாசனத்தை நோக்கி உயர்த்தினேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. உன்னுடைய பெயரோடு யாரை சேர்த்திருந்தாயோ அவரை விட உன்னிடம் மதிப்பு பெற்றவர் எவரும் இல்லை என அறிந்து கொண்டேன்'' என கூறினார். அதற்கு அல்லாஹ், "ஆதமே! அவர் உமது சந்ததியிலிருந்து தோன்றும் நபிமார்களில் இறுதியானவர். அவர் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்'' என இறைவன் வஹீ மூலம் கூறினான்.
நூல் : அத்துர்ருல் மன்சூர்
பாகம் 1, பக்கம் 312
இது சில ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றிருந்தாலும் அந்தச் செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும். இட்டுக்கட்டி, பொய்யான தகவல்களைச் சொல்லும் அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகிறார். அபூஹாதம், ஹாகிம், இப்னுல் ஜவ்ஸீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவராலும் இவர் ஹதீஸ்களை அறிவிக்கத் தகுதியற்றவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 178)
அது மட்டுமின்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறிய பிரார்த்தனைக்கு மாற்றமாக இருப்பதினாலும் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.
எனவே இது போன்ற நம்பிக்கை முஸ்லிம்களுடைய உள்ளத்தில் இருக்குமானால் அது குர்ஆனுக்கு எதிரானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
விஷமா? விவிலியமா?
கிறங்கிப் போன கிறிஸ்தவ அணி
உண்மையும் பொய்யும் ஒன்றாகாது; ஒருபோதும் ஒத்திராது. உண்மையின் வேடத்தில் பொய் ஊடுறுவும் போது அதற்காக வைக்கப்படுகின்ற வேதியியல் பரிசோதனையில் பொய் வெந்து பஸ்பமாகி விடும். ஒரு வேதத்திற்கு வைக்கப்படுகின்ற வேதியியல் சோதனை என்ன? விவாதம் தான்.
அல்லாஹ்வின் பாதையில் அழைக்கும் பணியில் தேவைப்படுகின்ற மூன்று முக்கிய ஆயுதங்கள் விவேகம், அழகிய விளக்கவுரை, விவாதம் ஆகியவையாகும். முதல் இரண்டு ஆயுதங்கள் பயன்படாத போது கடைசி ஆயுதம் விவாதம்.
இன்று கிறித்தவர்கள் முஸ்லிம்களின் வீடுவாரியாகப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்கின்ற போது குர்ஆனில் ஈஸா (அலை) அவர்கள் தொடர்பாக இடம் பெற்றுள்ள வசனங்களைத் திரித்து, தில்லுமுல்லுகள் செய்து, கிறித்தவத்தைத் தான் இஸ்லாம் போதிக்கின்றது என்று திருகுதாளம் செய்கின்றனர்.
இப்போது இஸ்லாத்தைக் காப்பதற்காக விவாதம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துவது அழைப்புப் பணியின் முக்கிய அணுகுமுறையாகும். இதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இப்போது செய்து கொண்டிருக்கின்றது.
இந்த விவாதக் களத்தில், தங்கள் வேத வாக்கு, பைபிள் என்ற விவிலியம் உண்மையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அளித்த விஷத்தை கிறிஸ்தவர்கள் அருந்தி நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. இப்படி ஆக்கப்பூர்வமாக, செயல்பூர்வமாக அவர்கள் பதிலளிக்காததால் அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்பதை இந்த விவாதத்தின் இடையே நடைபெற்ற "விஷப்'பரீட்சை எனும் வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியது.
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:64)
இவர்களின் விசுவாசத்தை விஷம் வென்று விட்டது. இவர்களின் இமாலய வேதாகம விசுவாசத்தை ஒரு சாதாரண விஷ பாட்டில் பிசுபிசுக்க வைத்து விட்டது. ஏன்? அவர்களின் வேதாகமம் உண்மையல்ல. பொய்யின் கலப்படம். அதைத் தான் இந்த விவாதக் களம் வெளிப்படுத்தியது.
இந்த முன்னுரையுடன் வாருங்கள்; சகோதரர் நாஷித் அஹ்மத் நடத்திய விவாத உலாவைப் பார்த்து விட்டு வருவோம்.
பைபிள் இறை வேதமா?
விவாதம் குறித்த ஒரு பார்வை
நாஷித் அஹமத்
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நஆச என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.
பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாகப் பிரச்சாரம் செய்யும் வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.
ஆனால், இந்த நஆச அமைப்பினரும், அதன் தலைவரான ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைக் கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஜாகிர் நாயக், மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை ஈர்ம்ல்ஹழ்ண்ற்ண்ஸ்ங் ள்ற்ன்க்ஹ்) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, ஜாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் ஈர்ம்ல்ஹழ்ண்ற்ண்ஸ்ங் ள்ற்ன்க்ஹ் செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர். அதோடு, தாங்கள் விடுத்த விவாத அறைகூவலை ஏற்றுக்கொள்ளாமல் ஜாகிர் நாயக் பின்வாங்கி ஓடி விட்டார் என்று அவர்களது எழுத்துக்களிலும் அவர்கள் நடத்தும் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு தாங்கள் தான் சத்திய மார்க்கத்தைச் சொல்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர் இவர்கள்.
(உண்மையில், ஜாகிர் நாயக் இவர்களுடன் விவாதிக்க முன்வரவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை இந்த விவாதத்தை முழுமையாகக் கவனிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)
ஆக, இந்த நஆச அமைப்பினர், தங்கள் மதத்தைப் பரப்புகிற தொழிலைச் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமியர்களையும் அதிக அளவில் சீண்டிப் பார்க்கும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளனர். விவாதம் என்கிற பெயரில், இஸ்லாத்தை அதிக அளவில் விமர்சனம் செய்து, கிறிஸ்தவம் தான் தூய்மையான மார்க்கம் என்று நிலைநாட்ட முயல்வது இவர்களால் சர்வ சாதாரணமாக செய்யப்படும் வழிமுறை.
ஜாகிர் நாயக்கின் அமைப்பில் இருந்து விலகி தனி இயக்கம் (ஒதஊஎ) நடத்திக் கொண்டிருக்கும் அவரது மாணவர் இம்ரான் என்பவருக்கும் இந்த ஜெர்ரி தாமசுக்கும் நடந்த விவாதத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
மேலும் கேரளா மாநிலத்தில், அதிகமான திருச்சபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.
எது இறை வேதம் என்ற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம், குர்ஆனா? பைபிளா? என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.
அந்த அடிப்படையில், பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர்ஆன் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் 28, 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டைக் கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கிலப் புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதற்கும் தயாரானார்கள்.
விவாதத்தைக் குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம், பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்கக்கூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.
என்ன காரணத்தால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
பைபிளில் மனிதக் கையாடல் பல இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?
என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றாற்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.
ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவப் பார்வையாளர்களையும் கூட வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!
ஒரே ஒரு காரணத்தைக் கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தைப் போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்தப் பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடையச் செய்தது. இதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது.
சரி! பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்தத் திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள். எப்படி?
தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே! இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே! நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே! உங்கள் இறைவன் இவ்வளவு மட்ட ரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன.
இவைகளுக்கு முறையான பதில்களைச் சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள், அதற்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர்ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர்ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.
அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காமக் களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைப் பழங்களாகச் செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்லி தங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர்ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே!
விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்து கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படித் தான் பைபிளில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?
இதைக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்துப் பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர்ஆனிலும் தானே அடிமைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது என்று சொல்லலாயினர்.
பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலைச் சொல்லாமல், குர்ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம்.
இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர்ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனித் தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர்ஆனைக் குறித்துக் கேளுங்கள்; இப்போது பைபிளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.
இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோதரர் பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களைத் தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.
ஹதீஸ் என்று எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.
அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தால் இல்லை. விடாமல், சகோதரர் பி.ஜே., அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், "நாங்கள் ர்ய்ப்ண்ய்ங்ல்த் தளத்தில் பார்த்தோம்' என்றனர். ர்ய்ப்ண்ய்ங்ல்த் தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தைத் திறப்பது முடியாது. தவிர, இதைப் பேசி நேரத்தைக் கடத்தினால், பைபிள் குறித்து நாங்கள் அள்ளிப் போட வேண்டிய இன்னும் பல செய்திகளுக்கு நேரமில்லாமல் போய் விடும், ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் பி.ஜே.
அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதைத் தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்கக் கடமைப்பட்டவர்கள், அதைச் செய்யாமல், "உங்கள் குர்ஆனில் தவ்ராத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதே! இன்ஜீல் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே! அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (இயேசுவுக்கு) கொடுத்ததாகச் சொல்கிறானே! அப்படியானால், இந்தக் கால பைபிளில் மனிதக் கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது'' என்று கேள்வி வைத்தனர்.
ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை!
"பைபிள் இறை வேதம் தான் என்பதை, பைபிளைக் கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர்ஆனைக் கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர்'' என்று ஒரு போடு போட்டார் பி.ஜே.
மேலும், குர்ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று விளக்கினார்.
"இது உங்கள் சுய கருத்து, இதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?' என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, "எந்தக் குர்ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர்ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது'' என்றார்.
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் பி.ஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்தக் கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக் கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பைத் திசை திருப்பி, பி.ஜே. எழுதிய "இதுதான் பைபிள்' நூலில் அது தவறு, இது தவறு என்று சம்பந்தமில்லாமல் பேசத் துவங்கினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், குர்ஆனில், தவ்ராத் குறித்தும் இன்ஜீல் குறித்தும் எந்த வசனதிலெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவைகளை எல்லாம் நீண்ட பட்டியலாக தயாரித்துக் கொண்டு வந்து, ஒவ்வொரு வசனத்தையும் வாசித்து முதல் கேள்வி, இரண்டாம் கேள்வி என்று பட்டியல் போட்டனர்.
"நீங்கள் ஆயிரம் கேள்விகள் என்று பட்டியல் போட்டாலும், அதன் மூலம் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் ஒன்றே ஒன்று தான். குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற தவ்ராத்தும் இன்ஜீலும் நாங்கள் இன்று வைத்திருக்கும் பைபிளும் ஒன்று என்பது தான் நீங்கள் சொல்ல வருகிற விஷயம். அது தவறு என்று நிரூபித்து விட்டோம். நீங்கள் அடுக்கிய பதினைந்து கேள்விகளின் நிலை இது தான்'' என்று மிக எளிதாக விளக்கமளித்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.
முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்யது இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்பிரதிகள் எவ்வாறு இருந்தன? ஒவ்வொரு நூற்றாண்டிலும் அது எவ்வாறு மனிதக் கையாடல் மூலம் திருத்தப்பட்டன? எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின? என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூலப் பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.
ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர் கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட ஆதாரங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ஆழமான ஆதாரங்களைக் கண்டு பாதிரிகள் குலைநடுங்கத் துவங்கினர் என்பது, விவாதத்தைக் கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது.
எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும், உங்களையெல்லாம் விட மிகப் பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.
சரி, மறுப்பு நூல்களைத் தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களிலிருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!
"உங்கள் சுய சிந்தனையை உபயோகித்துத் தான் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை. குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களிலிருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் என்ன? உங்களிடம் மறுப்பு இல்லை! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாகச் சொல்கிறீர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டும் குற்றச்சாட்டுக்கள் இல்லை! அதனால் தான் எங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதிலும் இல்லை'' என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தினர்.
இரண்டாம் நாளின் இறுதியில், "பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே நஹம்ங் நண்க்ங் ஏர்ஹப் போட்டு, உங்களுக்குப் பாயிண்ட் எடுத்துத் தருகிறேன் என்று துவங்கினார் பி.ஜே.
என்ன வித்தியாசமாகச் சொல்கிறாரே என்று பார்த்தால்...
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
மாற்கு 16:17, 18
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 17:20
அதற்குக் கர்த்தர்: கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
லூக்கா 17:6
இந்த வசனங்களைக் காட்டி, எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் "பூ' என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர வேண்டாம். இதோ! இந்த பேப்பர் வெயிட் - இதை "பூ' என்று ஊதித் தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக் கொள்கிறேன் என்றார்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்த பி.ஜே. அவர்கள், அதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து, "இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள்'' என்றார்.
இந்நேரம் வயிற்றில் புளியைக் கரைத்தது அவர்களுக்கு! ஆத்திரத்தில் எடுத்துக் குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ, எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே, நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டுக் காட்டுங்கள் என்று திருப்பிக் கொடுத்தார்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், "நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை! இதை அடுத்த வாரத் தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். அதே நேரம், இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்னையை முடித்துக்கொள்ளலாம்'' என்றனர்.
இதற்குப் பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் இந்தப் பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.
விடாமல் சுற்றி வளைத்த சகோ. பி.ஜே., "இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களைத் தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதைத் தான் பரீட்சிக்கிறோம்'' என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று இயேசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்தப் பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பி.ஜே. சுட்டிக் காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே, அந்தப் பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களைப் பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத் தான் வேண்டும். பைபிளும் அருந்தத் தான் சொல்கிறது என்று ஒரே போடாகப் போட்டார் பி.ஜே.
வெலவெலத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத்த நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.
இறுதியாகப் பேசிய சகோ. பிஜே, "தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது'' என்றார்.
"பைபிளில் உள்ள ஆபாசங்கள், முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்று எத்தனை விஷயங்களை அள்ளிப் போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலைச் சொல்லாமல் உங்கள் குர்ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிறீர்களே! குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்பதைப் போன்று அன்றைக்கு நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களைத் தருவோம்'' என்று கூறி முடித்தார்.
ஆங்கிலத்தில் ஈப்ங்ஹய் நஜ்ங்ங்ல் என்று சொல்கின்ற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
இந்த விவாதத்தின் மூலம் ஏகத்துவவாதிகளுக்குச் சில படிப்பினைகள் உள்ளன.
இது போன்ற விவாதத்தைச் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் முன்வந்துள்ள நிலையில், ஜாகிர் நாயக் போன்ற மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் பின்வாங்கினர் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை என்றால் என்ன என்பதை அதன் ஆணி வேரிலிருந்தே தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிற நம்மைப் போன்ற ஒருவரால் தான் "குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ எந்தக் கேள்வி என்றாலும் கேள்' என்று துணிச்சலாக விவாதத்திற்கு அழைக்க முடியும். காரணம், குர்ஆன் எப்படி இறை வார்த்தையோ, அதே போன்று ஹதீசும் இறை வார்த்தை தான் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ள நாம், இரண்டும் சமமான அந்தஸ்தில் உள்ளவை அல்ல என்பதையும் சேர்த்தே புரிந்து வைத்துள்ளோம். இதன் மூலம் குர்ஆனுக்குரிய முக்கியத்துவமும், ஹதீசுக்குரிய முக்கியத்துவமும் ஒரே நேர்கோட்டில் வைத்து அலசப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.
குர்ஆனைப் பாதுகாக்க நபி (ஸல்) அவர்களின் அன்றைய ஸஹாபாக்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு செய்த முயற்சிகளைப் போன்று ஹதீஸ்கள் விஷயத்தில் செய்யவில்லை. எனவே, ஹதீஸ் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக்கதையும் கூட இடைச்செறுகல்களாக மார்க்கத்தின் உள்ளே நுழைய ஆரம்பித்தன.
இந்தத் தூய மார்க்கத்தை அழித்து ஒழிப்பதையே தங்கள் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அல்லாஹ்வின் எதிரிகள், இது போன்ற கட்டுக்கதைகளை ஹதீஸ் என்று கூறி நம்மை நம்ப வைக்க முயற்சி செய்தனர். இதன் மூலம், உண்மையான இந்த மார்க்கத்தில் களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்குப் போட்டனர்.
அவர்களின் அந்த கணக்கிற்குப் பலியான நம் சமூகத்தில் சிலர், ஹதீஸ் என்கிற பெயரில் எதைச் சொன்னாலும் அதை நம்புவதற்குத் தயாராயினர்.
அந்த வகையில், நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனிலேயே சில வசனங்கள் மாற்றப்பட்டு விட்டன என்று ஹதீஸில் இடைச்செறுகலாகச் சேர்க்கப்பட்டதையும் ஹதீஸ் என்று நம்பினர்.
அல்லாஹ்வுக்கு இணையாக நபிமார்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்று கூறி, குர்ஆனுக்கு எதிராக யுத்தம் செய்தாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.
நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்களுடன் தனியாக இருந்தார்கள் என்று சில பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.
இன்னும் சொல்லப்போனால், நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதம் பைத்தியமாக இருந்தார்கள் என்று சொன்னாலும் கூட, சொல்லப்படும் செய்தியைக் குறித்து சிந்திக்காத இவர்கள், ஹதீஸ் நூல்களில் அல்லவா இது பதியப்பட்டுள்ளது, ஆகவே இதுவும் ஹதீஸ் தான் என்று நம்பினர்.
சொல்லப்படுகிற செய்தி உண்மையா, அது குர்ஆனுக்கு முரணா? அது நபிகளாரின் தன்மைக்கு உகந்த செய்தியா என்றெல்லாம் தங்கள் சிந்தனையை செலுத்தாமல், தாங்கள் இமாம்களாக நம்பிக் கொண்டு வந்தவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்ற ஒரே அளவுகோலைக் கொண்டு பார்க்கலாயினர்.
இத்தகையோரால், குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கூறி தொடுக்கப்படும் மேற்கண்ட கேள்விகளை, கிறிஸ்தப் பாதிரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளை எதிர் கொள்ள இயலுமா? நிச்சயமாக இயலாது.
குர்ஆன் மட்டும் தான் மார்க்கம், குர்ஆனை உறுதி செய்கிற, குர்ஆனின் வரம்புகளைத் தாண்டாத ஹதீஸ்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை, இந்த இரண்டு அளவுகோல்கள் அல்லாத வேறு எதுவும் இஸ்லாமாகாது என்கிற கொள்கையை யார் கொண்டிருக்கிறாரோ, அவர்களால் தான் நெஞ்சுறுதியுடன் குர்ஆன், ஹதீஸ் குறித்த எந்த விவாதத்திற்கும் தயாராக முடியும் என்பதற்கு நடந்து முடிந்த இந்த விவாதமே சாட்சி.
எது இறை வேதம்? பைபிளா? குர்ஆனா? என்று ஒரே தலைப்பாக விவாதம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட நம் சமூகத்தினர் மத்தியில், பைபிள் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும், குர்ஆன் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும் தவ்ஹீத் ஜமாஅத் பிரித்து விவாதிக்க அழைத்ததன் மூலம், எதிர் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த முடிந்தது என்பதும் இந்த விவாதத்தின் மூலம் தெரிகின்ற உண்மை.
ஆக, எல்லா வகையிலும் இந்த விவாதத்தின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தை தலை நிமிரச் செய்திருக்கிறான் அந்த ஏக இறைவன்! எல்லாப் புகழும் அவனுக்கே!
03.02.2012. 14:01
ஏகத்துவம் ஜனவரி 2012
ஏகத்துவம் ஜனவரி 2012
தலையங்கம்
நெகிழ வைத்த நெல்லைப் பொதுக்குழு
அன்று தவ்ஹீதுப் பிரச்சாரம் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள்! எரிமலைகள்!
இன்று இறைவன் அருளால் எங்கள் ஊருக்கு தவ்ஹீதுப் பிரச்சாரம் நடத்த தேதி கிடைக்காதா?' என்ற எதிர்பார்ப்பு அலைகள்! ஏக்க அலைகள்!
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ஓர் இருபதாண்டு கால இடைவெளியில் இத்துணை வளர்ச்சி!
அதன் ஒரு கட்ட வளர்ச்சிப் பரிமாணம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டங்கள்.
மூவாயிரத்துக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் கட்டமைப்பு கூடுவதற்குத் தோதான ஒரு கட்டட அமைப்பு, மண்டபம் மாநிலத்தில் கிடைக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் என்றால் பிற இயக்கங்களில் இருப்பது போன்று பொது அறிவிப்பாக உறுப்பினர்கள் அனைவரையும் அழைக்கும் வழக்கம் நம்மிடம் இல்லை. நமது ஜமாஅத்தில் மாநில, மாவட்ட, நகரக் கிளைகளின் நிர்வாகிகள் மட்டுமே மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கே மண்டபம் கிடைக்கவில்லை. இதில் சிறப்பு அழைப்பு விருந்தினர்களைச் சேர்த்தால் மைதானத்தில் தான் பொதுக்குழு நடத்த வேண்டும்.
பொதுக்கூட்டம் என்றால் ஒரு திறந்த வெளியில் கூடிக் கலையலாம். ஆனால் பத்து மணி நேர அலுவல்களை, நிகழ்ச்சிகளைக் கொண்ட பொதுக்குழுவை, கூரை, குளியலறை, கழிப்பறை வசதிகள் இல்லாமல் கூட்ட முடியாது. அப்படி மைதானத்தில் ஒரு பொதுக்குழு நடத்த வேண்டுமாயின் பொருளாதாரச் செலவு பத்து லட்சத்தைத் தாண்டி விடும். மாநில அளவில் பொருத்தமான ஒரு மண்டபம் கிடைத்தது சேலம் மட்டும் தான். ஒரு மாற்று ஏற்பாடாக பிற மாவட்டத்தில் நடத்துவோம் என்றெண்ணிய தலைமையின் சிந்தனையில் பட்டது திருநெல்வேலி மாவட்டம்.
நெல்லையில் இருப்பதிலேயே அதிகக் கொள்ளளவு கொண்ட ஒரு மண்டபம் பார்வதி சேஷ மஹால். உள்ளே 1400 பேர்; வெளியே 1000 பேர் அமரலாம் என்ற விபரத்தைத் தெரிந்து கொண்டு அந்த மண்டபத்தை தலைமை தேர்வு செய்தது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்தால் இது போதுமானதல்ல என்றாலும் தமிழகத்தின் கடைக்கோடியில் நடத்தப்படுவதால் அதிக தொலைவில் உள்ளவர்கள் மூன்று நாட்களை ஒதுக்க வேண்டும்; அத்துடன் அவர்களுக்கு அதிகம் செலவாகும் என்பதால் அவர்களால் வர இயலாது; எனவே இந்த இடம் போதுமானதாக இருக்கும் என்று கருதி நெல்லையில் பொதுக்குழு நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. பொதுக்குழுவும் இனிதே நடந்து முடிந்தது.
இதில் நெகிழ்வூட்டும் நிகழ்வென்ன?
இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் மேலப்பாளையம். இங்கு தான் 1991ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியன்று உலமா சபையின் பின்னணியிலும் நெல்லையிலுள்ள பணக்காரர்களின் பண பலத்திலும் பி.ஜே. மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். நாமும் அவர்கள் அறியாதவாறு பெரும் சூழ்ச்சி செய்தோம். அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக!
அல்குர்ஆன் 27:50, 51
அல்லாஹ்வின் வசனப்படி அந்தச் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.
அதன்பின் படிப்படியான ஒரு வளர்ச்சிப் படிமானம் கண்டு, கொள்கைச் சகோதரர்களின் கொள்கைப் பிடிமானத்துடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு உருவாகி, இன்று தனது பொதுக்குழுவை நெல்லையில் நடத்தியது.
இந்தக் கொள்கையை வேரறுக்க நினைத்த ஆலிம்கள் அன்றும் இன்றும் இவ்வூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அவர்கள் கண் முன்னாலேயே அவர்களது அசத்தியக் கொள்கை, சன்னம் சன்னமாக சுவாசத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் எதிர்பார்க்காத விதத்தில் இவ்வூர் சந்ததியினர், இளைய தலைமுறையினர் தவ்ஹீது தலைமுறையாயினர். இன்று தவ்ஹீது தலைமை என்ற வேர்களுக்குத் தங்கள் உழைப்பு என்ற அர்ப்பணிப்பு மூலம் அந்த மக்கள் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களை உபசரிப்பதற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தன்னார்வத் தொண்டர்களாக (வாலண்டியர்ஸ்) இவ்வூரிலிருந்து 150 பேர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.
அல்குர்ஆன் 61:8
இந்த வகையில் இப்பொதுக்குழு உள்ளத்தை நெகிழ வைத்த பொதுக்குழுவாகும். அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பார்க்கும் பொதுக்குழுவாகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13வது பொதுக்குழு இது! புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் நடைபெறும் மூன்றாவது பொதுக்குழு! சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு மாநில நிர்வாகத் தேர்தலை மையமாகக் கொண்டது. இரண்டாவது பொதுக்குழு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.
இந்தப் பொதுக்குழு ஆண்டுக்கொரு முறை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கூட்டப்பட்டது. அவ்வாறு கூட்டுவதற்கு முன், இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டிற்கான திட்டத்தை இப்பொதுக்குழுவில் அறிவிக்கலாம் என்று யோசித்து, தலைமை அனைத்து மாவட்டங்களிலும் கருத்து கேட்டது. இதில் அதிகமான மாவட்டங்கள் அழைப்புப் பணிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்தனர். அதன்படி இந்தப் பொதுக்குழு அழைப்புப் பணியை மையமாகக் கொண்டு அமைந்தது. மாவட்டங்களுக்கிடையில் அழைப்புப் பணிக்கான புள்ளிகளைப் பெறுவதில் போட்டி போடும் பொதுக்குழுவாக அமைந்தது. இந்த அமைப்பு உலக ஆதாயத்தை மையமாகக் கொண்டதல்ல. மறுமை ஆதாயத்தை மையமாகக் கொண்ட அமைப்பு என்பதை இப்பொதுக்குழு நிரூபணமாக்கி நம்மை நெகிழ வைத்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக மண்டப உரிமையாளர் நம்மிடத்தில் மனம் திறந்தது தான் ஹைலைட்.
மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் இரத்த தானம் பற்றிப் பேசுகையில், அரசு மருத்துவமனையில் நமது ஜமாஅத்திற்குத் தெரிவித்த பாராட்டைப் பற்றி விவரித்தார். மற்ற இரத்த தானக் கழகங்கள், அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் தருகின்ற இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தருகின்ற இரத்தம் சுத்தமான கலப்படமற்ற இரத்தம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டதை அப்துல் ஜப்பார் விவரித்தார்.
இதைக் கூர்ந்து கவனித்த மண்டப உரிமையாளர், "இரத்த தானம் குறித்து அவர் பேசியது உண்மை தான். இவ்வளவு பெரிய கூட்டத்தில் புகை பிடிக்கும் ஒருவரைக் கூட நான் காணவில்லை. மற்றவர்கள் கூடும் போது மண்டபம் புகை மூட்டமாகக் காட்சியளிக்கும். மண்டபத்திலும் கழிவறைகளிலும் பீடி, சிகரெட் துண்டுகள் சிதறிக் கிடக்கும். ஆனால் இந்தக் கூட்டத்தில் அதைக் காண முடியவில்லை. இதிலிருந்தே இது ஒரு ஒழுக்கமிக்க கூட்டம் என்று நாங்கள் புரிந்து கொண்டோம்'' என்று குறிப்பிட்டார்.
அவரது இந்த மனம் திறப்பும் ஒரு நெகிழ்வை அளித்தது.
தவ்ஹீத் ஜமாஅத் தான் பீடி, சிகரெட் ஹராம் என்று தெரிவித்து ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகின்றது. நமது பத்திரிகைகளில் கூட அது சார்ந்த விளம்பரங்கள் வராமல் ஓர் உறுதிப்பாட்டைக் காத்து வருகின்றது. உறுப்பினர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. இந்த ஜமாஅத்தைத் தவிர வேறு எந்த ஜமாஅத்தும் இந்த உறுதிப்பாட்டை மேற்கொள்ளவில்லை. இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்களில் ஒரு சிலர் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சகோதரர்களுக்கு முன்னால் நமது ஜமாஅத்தைப் பற்றிய மண்டப உரிமையாளரின் மதிப்பீட்டையும் பார்வையையும் முன்வைக்கின்றோம். இந்த மதிப்பீட்டைப் பொய்யாக்காமல், அல்லாஹ்வுக்குப் பயந்து இந்தத் தீய பழக்கத்தை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இறுதியாக, இந்தப் பொதுக்குழுவை ஒட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தலைமை பரிசாக வழங்கியது. மேலப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும் என்ற தலைப்பில் பி.ஜே. ஆற்றிய உரைக்குப் பிறகு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுரையாக, இறுதி நபித்துவம்' என்ற தலைப்பிலான இந்த உரை அமைந்தது. காதியானிகளை மட்டுமல்லாது, சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த ஜமாஅத்துல் உலமாவையும் ஆட்டம் காண வைத்துள்ள இந்த உரை, நேரிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் அனைவரையும் நெகிழ வைத்தது; மன நிறைவை அளித்தது.
சத்தியப் பாதையில் நாம் காணும் இந்த வளர்ச்சி நமக்குப் போதை அளித்து விடாமல், நமது கொள்கைப் பயணத்தைத் தொடர்வோமாக! அல்லாஹ் கூறும் எச்சரிக்கையை நம் மனதில் கொள்வோமாக!
பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.
அல்குர்ஆன் 9:25
முதுமை வரும் பின்னே! துஆ செய்வோம் முன்னே!
மனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பின் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.
அதற்குப் பின்னர், அது வரை ஏறுமுகத்தில் இருந்த அவனது பருவம், வீரியம், வீம்பு, வீராப்பு, திமிர், துணிச்சல், உடல் கட்டு, கூரிய பார்வை அனைத்தும் இறங்குமுகத்தில் ஆகி விடுகின்றது. வளர்பிறையாக இருந்தவன், தேய்பிறையாக மாறி விடுகின்றான்.
தலையில் நரை, பார்வையில், செவிப்புலனில் குறை, துள்ளிக் குதித்த காலம் போய் தளர்ந்த நடை போடும் காலம் அவனைத் தொற்றிக் கொள்கின்றது. இரு கால் பிராணியாக இருந்தவன் முக்கால் பிராணியாக மாறி விடுகின்றான்.
கண்ணில் கண்ணாடி! கையில் கைத்தடி!
ஆம்! கையில் கைத்தடி! கண்ணில் ஒரு கண்ணாடி! உளூச் செய்யும் விரல்களை வாயில் உள்ளே விட்டுப் பல் துலக்கிய காலம் போய் பல் செட்டைக் கழற்றி கையில் வைத்துக் கழுவுகின்றான்.
இரும்பு போன்ற எலும்புகளையும் உடைத்துத் தள்ளிய தாடைப் பற்கள், பொக்கையாகிப் போய் மென்மையான உணவுகளைக் கூட மென்று சாப்பிட முடியாத சூழ்நிலை! சோதனை!
இந்த முதுமையை விட்டு அவனால் தப்பிக்க முடியவில்லை. எத்தனையோ அறிவியல் புரட்சிகள், மருத்துவ சாதனைகள்! எவராலும் இந்த முதுமையை வெல்கின்ற, கொல்கின்ற மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை; கண்டுபிடிக்கப் போவதுமில்லை.
வளர்கின்ற வாலிபனின் தலையில் ஈயக்காட்டுக் கம்பியாக ஒரேயொரு நரைமுடி இழையோடிவிட்டால் அதைக் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து வேதனைப்படுகின்றான். தலையில் நரை, தன் வாலிபத்திற்கு ஒரு திரை என்று வெந்து நீருகின்றான். என்ன செய்ய முடியும்?
தான் இருக்கும் வயதை விட்டுத் தாண்டக் கூடாது என்றே நினைக்கின்றான். ஆனால் அவனது வயது, வாழ்நாள் அவனைக் கேட்காமலேயே தாண்டிச் செல்கின்றது. வயோதிகத்தின் பக்கம் வலுக்கட்டாயமாகத் தள்ளி விடுகின்றது. இதுவே மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?
அல்குர்ஆன் 36:68
பெற்றோரை விரட்டுகின்ற பிள்ளைகள்
மனிதன் வயது ஏற, ஏற நடமாட்டம் நிற்கின்றது. படுக்கையில் விழுந்து விடுகின்றான். சிறுநீர் பிரிவது அவனுக்குத் தெரிவதில்லை. மலம் கழிவதும் அவனுக்குப் புரிவதில்லை. இந்நிலையை திருக்குர்ஆன் படம்பிடித்துக் காட்டுகின்றது.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களைக் கைப்பற்றுவான். அறிந்ததற்குப் பின் எதையும் அறியாதவராக ஆகிட, முதிர்ந்த வயது வரை தள்ளப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்லாஹ் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 16:70
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். அல்குர்ஆன் 22:5
இப்போது அவன் கழிக்கின்ற மலம், கூட இருப்பவர்களின் குடலையே புரட்டுகின்றது; குமட்டலை வரவழைக்கின்றது. கொண்ட மனைவி கூட இதைச் சகித்துக் கொள்வாளா என்பது கேள்விக்குறி!
பெற்ற பிள்ளைகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வார்க்கப்பட்டவர்களாக இருந்தால் முகம் சுளிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் பாடம் பயின்றவர்கள்; பக்குவம் பெற்றவர்கள்.
மற்றவர்களாக இருப்பின் சதாவும், சனியனே! தொலைந்து போ! என்று திட்டித் தீர்ப்பார்கள்; சபித்துத் தள்ளுவார்கள். படுக்கையில் கிடக்கும் பெற்றோரைப் பாரமாக நினைப்பார்கள். பளுவாகவும் நசுக்க முடியாத ஒரு புழுவாகவும் கருதுவார்கள்.
இந்நிலையை அடைந்து தங்களுக்கு ஒரு சுமையாக ஆகி விடக் கூடாது என்பதற்காகச் சிலர் முன்னரே அடித்துத் துரத்தி விடுகின்றனர். இப்படித் துரத்தப்பட்டவர்கள் கிறித்தவ மரணத்தைத் தழுவுகின்றனர்.
காரணம் அவர்கள் தான் இதுபோன்ற அரவணைப்பு நிறுவனங்களை, முதியோர் இல்லங்களை நடத்துகின்றனர். இந்த நிலையை விட்டும் முஸ்லிம்களைக் காப்பதற்காக அவர்கள் ஈமானிய, ஏகத்துவ மரணத்தைத் தழுவ வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத், ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்தைத் துவங்கியிருக்கின்றது.
இப்படி ஒரு முதியோர் இல்லம் முஸ்லிம்களிடமும் வந்து விட்டதா? என்று விமர்சிக்கின்ற மூடச் சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஈமானிய மரணத்தின் பலனை அறியாத இவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இப்படி ஒரு வயோதிக, தள்ளாத பருவம், நம்மைப் பார்த்து முகம் சுளிக்கின்ற, நம்மைப் பாரமாகவும் தூரமாகவும் கருதுகின்ற ஓர் இழிநிலை, ஈன வாழ்க்கை நமக்குத் தேவையா?
அதற்கென ஒரு தீர்வு, இதோ இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் இறைத் தூதர் நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு நிலையை நாம் அடையாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதர நேரங்களிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவது தான் அந்த வழி!
ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
??? அரபி 1
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி
(பொருள்: இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; உலகின் சோதனைகலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்; கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்)
"இந்த விஷயங்கலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் மைமூன் அல் அவ்தீ
நூல்: புகாரி 2822
இந்த ஹதீஸில் வரும், ஒரு ஆசிரியர் மாணவருக்குக் கற்றுக் கொடுப்பது போல் கற்றுக் கொடுத்தார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மாலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
??? அரபி 2
அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஃதஹா, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா பஃதஹா, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
காலையில் ஓதும் துஆ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.
??? அரபி 3
அஸ்பஹ்னா வஅஸ்பஹல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி அஸ்அலு(க்)க கைர மாஃபீ ஹாதல் யவ்மி வ கைர மா பஃதஹூ, வஅவூது பி(க்)க மின் ஷர்ரி மாஃபீ ஹாதல் யவ்மி வ ஷர்ரிமா பஃதஹூ, ரப்பி அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிபரி, ரப்பி அவூது பி(க்)க மின் அதாபின் ஃபின்னாரி, வஅதாபின் ஃபில் கப்ரி
பொருள்: நாங்கள் காலைப் பொழுதை அடைந்து விட்டோம். காலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்தப் பகலின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தப் பகலின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
நூல்: முஸ்லிம் 4901
எல்லா நேரங்களிலும் கேட்க வேண்டிய துஆ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கடம், "உங்கள் சிறுவர்கல் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் ???
அரபி 4
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புஹ்லி வல் ஜுப்னி வ ளலயித்தைனி வ கலப(த்)திர் ரிஜாலி
(பொருள்: இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்கன் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)
என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5425
பிற மேடைகளில் பிரச்சாரம்
தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
சென்ற இதழின் தொடர்ச்சி..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பேச்சாளர்கள் பிற அமைப்பினரோடு இணைந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பற்றிக் கடந்த இதழில் அறிந்தோம்.
அதே போல், பல்வேறு கொள்கையுடையோர் ஒன்றிணைந்து செய்யும் பிரச்சாரத்தைக் கேட்கும் மக்களுக்கு ஏற்படும் அவலங்களைப் பார்ப்போம்.
கொள்கைக் குழப்பம்
அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் வணங்கக்கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்ற மக்கள், தான் மட்டும் ஏற்றுக் கொண்டதோடு நிறுத்தி விடாமல் பிற மக்களுக்கும் இந்தக் கொள்கை சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சத்தியப் பிரச்சாரம் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் அங்கு சென்று சங்கமமாகி விடுவார்கள். இப்படிப்பட்ட தியாகிகளின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயல் தான் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் சொற்பொழிவாற்றுவது!
எந்த அளவிற்கென்றால் மத்ஹபைப் பின்பற்றக்கூடாது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள் இது போன்ற பலதரப்பட்ட கொள்கையுடையோரால் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது அந்த மேடையில் ஓர் அறிஞர், மத்ஹபைப் பின்பற்றக்கூடாது; தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்' என்று முழக்கமிட மற்றொரு அறிஞர், ஸஹாபாக்களை மார்க்கத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்' எனவும் பிரச்சாரம் செய்வார். இந்த இரண்டு உரையையும் பார்க்கும் மக்கள், எது சரியான கொள்கை என்பதைக் கண்டறியாமல் குழப்பத்திற்கு ஆளாகிவிடும் சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டும் உள்ளது.
கடந்த காலங்களில் நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிவாசல்களில் ஒரு வாரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் ஒரு வாரம் ஜாக் அமைப்பு சார்பிலும் ஜுமுஆ பிரசங்கம் நடைபெற்று வந்தது. அப்போது ரமலான், ஹஜ் பெருநாட்களின் போது பிறை விஷயமாக நம் ஜமாஅத் சார்பில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கு மாற்றமாக ஜாக் தரப்பில் ஒரு நிலைப்பாட்டில் அறிவிப்பார்கள். இருவரும் ஒரே பள்ளியில் வாரம் விட்டு வாரம் ஜுமுஆ பிரசங்கம் செய்வதால் ஒருவரையொருவர் சாடிப் பேசாமல் தங்களது நிலைப்பாட்டை மட்டும் அறிவிக்கும் நிலைக்குப் தள்ளப்பட்டார்கள்.
இதனால் பார்க்கும் மக்கள் குழம்பிப் போய், பெருநாள் திங்களா? அல்லது செவ்வாயா?' எனக் கேட்க அதற்கு அந்தச் சபையில் தர்க்க ரீதியாக பதில் சொல்லாமல் ஜாக் சார்பில் திங்கள்கிழமை பெருநாள் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் செவ்வாய்கிழமை பெருநாள் எனவும் கூறி இதனால் மக்கள் குழப்பிப் போய் தங்களின் இபாதத்தே கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். நம் ஜமாஅத் சார்பில் மார்க்க ரீதியாகப் பதில் கொடுக்கத் தெரிந்தாலும் பிற மேடைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்கிற குறுகிய சிந்தனையே இந்த அவலத்தை ஏற்படுத்திவிட்டது.
நம்பிக்கை துரோகம்
பலதரப்பட்ட கொள்கையுடையோர் தங்கள் கருத்துக்களையும் கொள்கைகளையும் சரிசெய்து கொள்ளாமல் சமரசத்துடனும் சுயநலத்துடனும் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் இந்த மக்களின் கொள்கையில் தான் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் இன்னொரு பக்கம் இந்த அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து அவர்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளிவிடுகின்றனர்.
தவ்ஹீத் கொள்கையை ஏற்ற மக்கள் வெறுமனே சத்தியவாதிகளின் பிரச்சாரத்தை மட்டுமே பார்த்து இந்த கொள்கையை ஏற்பது கிடையாது. மாறாக இந்தப் பிரச்சாரகர்களின் ஒழுக்கம், நேர்மை, நாணயம் ஆகியவற்றையும் பார்த்துத் தான் இந்தக் கொள்கையை ஏற்கின்றனர். இதுவே இயல்பு.
"இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?'' என்று (முஹம்மதே!) கூறுவீராக
அல்குர்ஆன் 10:16
நான் சத்தியத் தூதர், என்னைப் பின்பற்றுங்கள் எனக் கூறாமல் உங்களுக்கு முன்னால் பல ஆண்டுகள் நான் வாழ்ந்துள்ளேன்; என் ஒழுக்கத்தையும் நேர்மையையும் பார்த்து இந்தக் கொள்கைக்கு வாருங்கள். என்னை நம்புங்கள் என நபி (ஸல்) அவர்கள் அம்மக்களை சத்தியத்தின்பால் அழைக்கும் போது, தனது நாணயத்தையும் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.
அதைப் போன்று தான் மக்களும் சத்தியப் பிரச்சாரம் செய்வோரை நன்மையை ஏவுபவராகவும், தீமையைத் தடுப்பவராகவும் மட்டும் பார்க்காமல் அவர் ஒழுக்கமுள்ளவராகவும் பார்க்கிறார்கள். ஒருவரை நாம் ஒழுக்க மாண்பு மிக்கவராகப் பார்க்கும் போது அவர் யாருடன் பழகினாலும், யாருடன் இணைந்து மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தினாலும் அவர்களையும் கண்ணியமானவராகவே கருதுவார்கள்.
அதற்குக் காரணம், நாம் யாரை ஒழுக்கமுள்ளவர் என்று நினைக்கிறோமோ அவர்கள் கழிசடைகளுடன் சகவாசம் வைக்க மாட்டார்கள்; என்றென்றும் ஒழுக்கமுடையோருன் மட்டுமே சகவாசம் வைப்பார்கள் என்று அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கும். அதுமட்டுமின்றி இந்த சத்தியப் பிரச்சாரகர்கள் நடத்தை கெட்டோரையும் தவறான கொள்கையுடையோரையும் கண்டால் கடிந்து பேசுவார்களே தவிர அவர்களுடன் பல்லிளிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கும்.
உதாரணமாக, ஒழுக்கக் கேடு மற்றும் பண மோசடியின் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பாக்கரைப் பற்றி நாம் கடுமையாக விமர்சிக்கிறோம். அவர் கடந்த காலங்களில் அடிக்கடி திண்டுக்கல் சென்றார். ஏன் சென்றார்? எதற்காக சென்றார்? என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று அவரால் திண்டுக்கல்லில் ஒரு குடும்பம் நாசமாகி அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியான காரணத்தால், தனக்கு ஏற்பட்ட இந்தப் பாதிப்பு வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட கணவர் கண்ணீர் மல்கக் கொடுக்கிறார். "என்னுடைய மணைவி பாக்கரின் உடன் பிறந்த அக்காள் மகள் என்ற உறவைச் சொல்லி அடிக்கடி எனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் நானும் எனது பிள்ளைகளும் வீட்டில் இல்லாத போது பல முறை வீட்டிற்கு வந்திருக்கிறார்; தங்கியுமிருக்கிறார். மிக நெருங்கிய உறவினர் என்று விட்டு விட்டேன். ஆனால் பின்னால் தான் தெரிந்தது, அவருக்கும் எனது மனைவிக்கும் எந்தவிதச் சொந்தமும் இல்லை என்பது'' என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி வீடியோவில் பேட்டியாகக் கொடுத்து, அது ஒரு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பாக்கர் இறையச்சத்தோடு (?) கத்தி, ஆக்ரோஷமாகப் பேசுபவர், இந்த இழிசெயலைச் செய்து விட்டார் என்ற மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாக்கப்பட்டு, தனது மனைவியை தலாக் விட்டுவிட்டார்.
இப்போது கவனியுங்கள்! இப்படிப்பட்ட கழிசடைகளை வன்மையாகக் கண்டித்து ஒரு புறம் பேசிவிட்டு, மறுபுறம் அவருடன் ஒரே மேடையில் பேசி அந்தக் கழிசடைகளுக்கு நற்சான்று கொடுத்தால் அது, நம் மீது நல்லபிப்ராயம் கொண்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
சிதிலடையும் சிந்தனைத் திறன்
எதைச் சொன்னாலும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போல் தலையாட்டிக் கொண்டிருந்த நாம் இன்று அல்லாஹ்வின் கிருபையால் குர்ஆனையும் நபிமொழிகளையும் சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறு சிந்தித்து செயல்படுவதையே இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.
அல்குர் ஆன் 25:73.
அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்போர் அதைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்ற இந்த இறைவசனத்தை நம் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வலியுறுத்தி மக்களை சிந்திக்கத் தூண்டுகிறோம்.
எந்த அளவிற்கென்றால் கப்ர் வழிபாட்டை வலியுறுத்தி எந்த ஆலிம்சாவாவது உரை நிகழ்த்திவிட்டால் அதற்கு நாம் தனி மேடை போட்டு அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பதிலளிப்பதுடன் அந்த ஆலிம்சாவுக்கு சில கேள்விக் கணைகளைத் தொடுப்போம். அதற்கு அந்த ஆலிம் (?) பதில் சொல்ல முடியாமல் திணறிப் போய்விடுவார். அதைப் பார்க்கும் மக்கள் யாரிடம் சத்தியம் உள்ளது என சிந்தித்து உணர்வார்கள்.
ஆனால் பலதரப்பட்ட கொள்கையுடையோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தால் ஒருவரது தவறை மற்றொருவர் கண்டிக்க முடியாமல் போய்விடும். இதனால் யாருடைய கருத்துக்கள் சரியானவை எனக் கண்டுபிடிக்க முடியாமல் போய் மக்கள் சிந்திக்க மறந்து விடுவார்கள். இதனால் மீண்டும் வந்த வழியே திரும்பிப் போகும் அவலநிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.
எனவே பலதரப்பட்ட கொள்கையுடையவர்களின் சமரசப் பேச்சைக் கேட்டு செல்லாக் காசாகிப் போய்விடாமல் குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு, நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் தனித்தன்மையோடு செய்யப்படும் பிரச்சாரத்தில் பங்கேற்று ஈருலகத்திலும் வெற்றிபெற வல்ல ரஹ்மான் நமக்கு அருள்புரிவானாக.
கேக் வெட்டிய ஜாக் மவ்லவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பிற மேடைகளில் ஏறுவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றது. நாம் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தது, கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களை வைத்துத் தான்.
(இது தொடர்பாக நமது மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ஆர். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் விரிவான விளக்கங்களை "பிற மேடைகளில் பிரச்சாரம் - தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு'' என்ற தலைப்பில் அளித்திருக்கின்றார்.)
நமது இந்த நிலைப்பாட்டை நமக்கு எதிரான அமைப்புகள் அனைத்தும் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. இவர்களது விமர்சனம் தவறானது; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையே நியாயமானது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:
நாகர்கோயில் அருகில் பின்னந்தோடு என்ற ஊரில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இந்த விழாவில் ஜாக் அமைப்பின் பேச்சாளரும், அந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிவாசலின் இமாமுமான யாஸீன் இம்தாதி போய் கலந்து கொள்கின்றார்.
ஒருவேளை, நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழா (மீலாது விழா) தான் பித்அத்; ஈஸா நபியின் பிறந்த தின விழா (கிறிஸ்துமஸ்) கொண்டாடுவது சுன்னத் என்று எண்ணுகிறார்கள் போலும்.
இதில் போய் கலந்து கொண்டு, கேக் வெட்டி, பிறந்த தின விழாவைக் கொண்டாடி ஜாக்கின் கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியுள்ளார்.
இனி நபி (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களிலும் சோறாக்கி, ஜோராக அங்கேயும் இந்தக் கொள்கைப் பிடிப்பைப் பறைசாற்றினால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
"யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூற்கள்: அஹ்மத், பஸ்ஸார்
இந்த மவ்லவி ஏதோ அறியாமல் கலந்து கொண்டிருக்கிறார் அல்லது மயக்கத்தில் போய் கலந்து கொண்டு விட்டார் என்று யாரும் கடுகளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
ஏனெனில் இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, போகக் கூடாது என்று இருக்கிறதா? என்று ஜாக்கிற்கே உரிய தனி பாணியில் கேட்டிருக்கின்றார்.
பெண் வீட்டு விருந்து கூடாது என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது, பெண் வீட்டு விருந்துக்குத் தடை இருக்கின்றதா? என்று ஆணித்தரமான(?) அசத்தலான (?) கேள்வியை ஜாக் கேட்கின்றது. அதே அடிப்படையில் தான் இந்தக் கேள்வியும் அமைந்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் நாளை இவர்கள் மீலாது விழாவும் கொண்டாடுவார்கள். கேட்டால் இதே பதிலைத் தான் தருவார்கள். போகிற போக்கைப் பார்த்தால் குராபிகளை மிஞ்சி விடுவார்கள் போல் தெரிகின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
நபிவழிக்கு முரணான மத்ஹபுகள்
குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாகும். ஒரு வணக்கம் இஸ்லாத்தில் உள்ளதாக அங்கீகரிப்பதாக இருந்தாலும், அல்லது அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறைப்படுத்துவதாக இருந்தாலும் அதை இந்த இரண்டின் மூலமே தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் உயிர் மூச்சாக, வழிகாட்டு நெறியாக, வாழ்வியல் வழிமுறையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டியது குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டைத் தான். இதுவே நம்மை சுவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையாகும். குர்ஆன், ஹதீஸ் எனும் பாதையில் பயணிக்க வேண்டிய முஸ்லிம்கள் புதிய பாதைகள் பலவற்றை ஏற்படுத்திக் கொண்டு அவ்வழிகளில் பயணிக்கின்றார்கள். அவர்கள் புதிதாக உருவாக்கிய அப்பாதைகள் தங்களை அழிவை நோக்கி அழைத்துச் செல்பவை என்பதை ஏனோ உணராமல் உள்ளனர். முஸ்லிம்களை நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகளில் பெரும் பங்களிப்பாற்றுவது மத்ஹபு எனும் ()பாதையாகும். முஸ்லிம்கள் வணக்க வழிபாடு முறைகளில் பல பிரிவுகளாகப் பிளவுண்டு கிடப்பதற்கும், இஸ்லாத்தின் அடிப்படைத் தூண் என்று போற்றப்படுகின்ற தொழுகை முறையிலும் சில முஸ்லிம்கள் வேறுபட்டிருப்பதற்குக் காரணமும் இந்த மத்ஹபுகளே!
கந்தூரி விழா, சமாதி வழிபாடு, யானை ஊர்வலம், மவ்லிது, மீலாது விழா போன்ற வழிகேடுகளை அரங்கேற்றி அதை ஆதரிப்போரும் மத்ஹபைப் பின்பற்றுவோராகவே இருக்கின்றனர். இப்படியாக மத்ஹபுகள் செய்த சாதனை(?)களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். நபிவழிகளை பிரதிபலிப்பவையாக இந்த மத்ஹபுகள் இருந்திருக்குமானால் பல பித்அத்கள் தோன்றியிருக்காது. எண்ணற்ற சடங்குகள் முளைத்திருக்காது. மத்ஹபுகள் நபிவழிக்கு முரண்படுவதாலே முஸ்லிம்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றுகிறது.
மத்ஹபுகள் கூடாது என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் எழுத்து மற்றும் உரைகள் மூலமாக, பல வருடங்களாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதன் பலனாக பல மக்களை இந்த வழிகேட்டிலிருந்து மீட்டெடுத்து ஏகத்துவக் கொள்கையின் பக்கம் ஈர்த்திருக்கின்றோம். இந்த மத்ஹபு இஸ்லாத்திற்கு விரோதமானது, நபிவழிக்கு முரணானது என்பதை மேலும் மக்களின் உள்ளங்களில் ஆழப்பதியச் செய்வதற்காக இத்தகவல்களை இங்கே தருகின்றோம். மத்ஹப் என்றால் என்ன?
மத்ஹபுகள் நபிவழியுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காணும் முன் மத்ஹபு என்றால் என்ன? என்பதன் சிறு விளக்கத்தை அறிந்து கொள்வோம். மத்ஹப் என்ற அரபு பதத்துக்கு வழிமுறை, செல்லுமிடம் என்று பொருளாகும். கழிவறை என்ற பொருளும் உண்டு. இந்த அர்த்தத்தில் தான் அபூதாவூதில் முதல் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ??? அரபி 5
நபியவர்கள் மத்ஹபிற்கு (கழிவறை) செல்ல விரும்பினால் தூரமாகச் செல்வார்கள். (நூல்: அபூதாவூத் 1)
மத்ஹப் என்பது பொதுவாக அனைத்து வழிமுறைகளையும் குறிக்கும் என்றாலும் நடைமுறையில் இமாம்கள் மார்க்க ரீதியாகச் சென்ற வழிமுறையை குறிக்கப் பயன்படுத்துகின்றனர். அதாவது குர்ஆன், ஹதீஸை இமாம்கள் எவ்வாறு புரிந்து கொண்டு தங்கள் நிலைபாட்டை எடுத்தார்களோ, அதன் படி செயல்பட்டார்களோ அதைப் பிசகாமல் பின்பற்றுவது மத்ஹபு எனப்படுகின்றது.
ஷாஃபி இமாம் மார்க்கத்தை எவ்வாறு புரிந்து செயல்பட்டாரோ அவ்வழியைப் பின்பற்றுபவர்கள் ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம். இமாம் அபூஹனிஃபாவின் வழிமுறையைப் பின்பற்றுபவர்கள் ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்கிறோம். மத்ஹபுகள் தோன்றக் காரணம்
ஒருவர் மார்க்க ரீதியாக ஒரு கருத்தைக் கூறுகிறார் எனில் அதைக் கண்மூடித்தனமாக ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாகாது. மாறாகக் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றுடன் ஒத்துப்போகின்றதா என்பதை உரசிப்பார்த்து, ஒப்புநோக்கியே ஏற்றுக் கொள்ளவேண்டும். யானைக்கும் அடிசறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரிடத்திலும் சில, பல தவறுகள் ஏற்படவே செய்யும். மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் அவர்களும் தவறுகளை இழைத்திருப்பார்கள். இதை உணர்ந்து அவர்களின் கருத்தை குர்ஆன், நபிவழியுடன் ஒப்புநோக்கி ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த ஆய்வுக் கண்ணோட்டமின்றி இவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்ற பார்வையே மத்ஹபுகள் தோன்றக் காரணமாகி விட்டது. மத்ஹபிற்கும் இமாம்களுக்கும் சம்பந்தமில்லை
மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கண்ணோட்டம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும் என்பதே இமாம்களின் நிலைப்பாடாக, எண்ணமாக, கருத்தாக இருந்தது. எந்த இமாமும் தன்னைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறவில்லை. மாறாக குர்ஆன், சுன்னாவைப் பின்பற்ற வேண்டும், தங்களை விட அவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
??? அரபி 6
ஹதீஸ் ஸஹீஹ் ஆக இருந்தால் அதுவே எனது மத்ஹபு வழிமுறையாகும் என இமாம் அபூஹனிஃபா கூறினார். மேலும் அவர் "மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் எனது புத்தகத்திலிருந்து ஃபத்வா அளிப்பது தகாது. நான் எங்கிருந்து அக்கருத்தை கூறினேன் என்பதை அவர் அறியும் வரை'' (ஃபத்வா வழங்க அனுமதியில்லை.) என்று கூறினார்.
நூல்: உசூலுத்தீன் இன்தல் இமாமி அபூஹனிஃபா
பாகம் 1, பக்கம் 6
??? அரபி 7
"நீங்கள் கூறிய கருத்து குர்ஆனுக்கு முரண்பட்டால் (என்ன செய்வது)?'' என இமாம் அபூஹனிஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அல்லாஹ்வின் வேதத்திற்காக எனது சொல்லை விட்டுவிடுங்கள்'' எனக்கூறினார். "அல்லாஹ்வின் தூதருடைய சொல்லிற்கு உங்கள் கருத்து முரண்பட்டால்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "அல்லாஹ்வின் தூதரின் சொல்லிற்காக எனது கருத்தை விட்டுவிடுங்கள்'' எனக்கூறினார்.
நூல்: தய்ஸீருல் அஜீர்
பாகம் 1, பக்கம் 487
உதாரணத்திற்கு இமாம் அபூஹனிஃபாவின் கருத்தை இங்கு பதிவு செய்துள்ளோம். இது போன்றே இமாம் ஷாஃபி, மாலிக், அஹ்மத் போன்ற இமாம்களும் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் அவர்களின் வார்த்தைகளாக அவர்களின் நூல்களிலேயே இடம்பெற்றுள்ளன.
இதனால் தான் மத்ஹபுகளைக் கண்டித்து பேசும் நாம் ஒரு போதும் இமாம்களைக் கண்டித்துப் பேசுவதில்லை. அவர்களை மதிக்கவே செய்கின்றோம். அவர்களின் பெயரால் மத்ஹபுகளை உருவாக்கியதையும், அது குர்ஆன் நபிவழிக்கு முரணாக இருந்தும் அதைப் பின்பற்றுவதையுமே கண்டிக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் இந்த ஜமாஅத் இச்செயலைக் கண்டிக்கவே செய்யும். எனவே மக்கள் உருவாக்கியிருக்கும் மத்ஹபுகளுக்கும் அவ்விமாம்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதனை விட்டும் அவர்கள் விலகியவர்கள்.
இமாம் அபூஹனிஃபாவின் மேற்கண்ட கருத்தைக் கவனிக்கும் போது குர்ஆன், நபிவழிக்கு முரணாக அவரது கருத்து இருந்தால் அக்கருத்தை விடுத்து, தூக்கியெறிந்து, குர்ஆன் நபிவழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே இமாம் அபூஹனிஃபாவின் நிலைப்பாடாக இருந்தது என்பதை அறியலாம். எனவே இமாம் அபூஹனிஃபாவின் கருத்து குர்ஆன், சுன்னாவிற்கு முரண்பட்டால் அனைவரும், குறிப்பாக அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் ஹனபி மத்ஹபினர் தயங்காமல் அக்கருத்தைத் தூக்கியெறிய வேண்டும். அது தான் அவர்கள் அந்த இமாமுக்குச் செய்கின்ற மரியாதை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி, இமாம் அபூஹனிஃபாவின் கருத்துக்கள் எவ்விதத்தில் நபிவழியுடன் நேரிடையாக மோதுகின்றது, முரண்படுகின்றது என்பதைக் காண்போம். இதை வேறு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், ஹனபி மத்ஹபினர் தூக்கியெறிய வேண்டிய, மார்க்க ரீதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய விஷயங்களை காண்போம்.
கை கழுவுதலை கை கழுவாதீர்
மேற்கு வங்க மாநிலத்தில், பி.சி.ராய் மருத்துவமனையில் இறந்த 18 குழந்தைகள் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 36 குழந்தைகள் இறந்தனர். நவம்பர் மாதத்திலும் கூட இதுவரை அந்த மாநிலத்தில் மால்டா மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் 22 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றாலும், இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் சிறார் மரணங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. காரணம், பிகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் இதுவரை 82 குழந்தைகள் இறந்துவிட்டனர். புத்தகயா பகுதியில் தான் இந்த மூளைக் காய்ச்சல் மிக அதிகமான குழந்தைகளைத் தாக்கியுள்ளது. 2009-ம் ஆண்டில் இதே பகுதியில் 42 குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் இறந்துள்ளனர்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் ஓர் ஊரில் அல்லது ஒரு மருத்துவமனையில் அதிக எண்ணிக்கையில் நிகழும் போது தான் இத்தகைய மரணங்கள் மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகின்றன. மேற்கு வங்கம், பிகார் மட்டுமன்றி இத்தகைய குழந்தைச் சாவுகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே நடந்துகொண்டிருக்கின்றன. குழந்தை மரணங்களுக்கு மிக முக்கிய காரணம், குழந்தை மருத்துவப் பிரிவுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. நோய்த் தடுப்பூசிகள் முறையாகப் போடப்படுவதில்லை. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் அலட்சியம் ஆகியவை தான்.
எந்த மாநிலம் அல்லது எந்த அரசின் ஆட்சி என்ற போதிலும், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருத்துவர் பணியிடங்களும் பிரிவுகளும் மிகக் குறைவு தான். பொது மருத்துவர் தான் குழந்தைகளின் நோய்க்கும் சிகிச்சை அளிப்பவராக இருக்கிறார். இதையும் மீறி, அந்த மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு இருந்து, அதற்கு மருத்துவரும் இருப்பாரேயானால், அவருக்கு ஊருக்குள் தனியாக கிளினிக் இருக்கும். அரசு மருத்துவமனைக்கு அவரது சேவை நேரம் மிகக் குறைவாகவே இருக்கும். இத்தனை சிக்கல்களையும் மீறித் தான் இந்தியாவில் குழந்தைகள் ஐந்து வயதைக் கடந்து வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 2011-ல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 2008-ம் ஆண்டில் 5 வயதுக்கு உள்பட்ட 3.71 லட்சம் குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். தற்போது மேற்கு வங்கத்தில் இறந்துகொண்டிருக்கும் குழந்தைகளின் மரணத்துக்கும் அதிகளவு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்.
யுனிசெப் அறிக்கையின்படி, 2005-ம் ஆண்டில் இந்தியாவில் இறந்த, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23.5 லட்சம்! இது உலகம் முழுவதிலும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 20 விழுக்காடு!
இந்தியாவில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரும் பெற்றோர் 69 விழுக்காடு தான். மற்ற 31 விழுக்காட்டினர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர். ஒருவேளை, குழந்தைகளுக்கு அவரவர் தெய்வக் குறியீடுகளைப் போட்டு காப்பாற்றும் பொறுப்பைப் படைத்தவனிடமே விட்டுவிடுகிறார்கள் போலும். மருத்துவமனை அல்லது கிளினிக் வரும் 69 விழுக்காடு குழந்தைகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெறும் குழந்தைகள் 13 விழுக்காடு தான்!
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நர்சரி பள்ளிகள் மற்றும் விளையாடும் இடங்களில் தான் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, இக்குழந்தைகள் தங்கள் உணவை உண்ணும் முன்பாக கைகளைக் கழுவிவிட்டு உண்ண வேண்டும் என்கின்ற சிறிய நல்வழக்கத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறது யுனிசெப். இதற்காக பல கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி, மாநிலங்களுக்குக் கொடுக்கிறார்கள். உலக கைகழுவும் நாள் என்று அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிகளில் குழந்தைகளுக்கு கைகளை சோப்புப் போட்டு எப்படி கழுவுவது என்று சொல்லித் தரப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டத்தில் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சோப்பும் துடைத்துக் கொள்ள ஒரு துண்டும் கூடக் கொடுப்பதில்லை. ஆனால், நிதி மட்டும் முழுமையாகச் செலவாகிவிடுகிறது. தண்ணீரில் கை கழுவினாலே நிதி செலவாகிவிடுகிறதே, அது எப்படி என்று யாரும் கேட்பதில்லை. குழந்தைகளுக்கும் கேட்கத் தெரியாது.
நிமோனியா அல்லது மூளைக் காய்ச்சல் போன்ற எந்தவொரு நோய்த் தொற்றுக்கும் அடிப்படைக் காரணம், நம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பது தான். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்குக் குறைந்தது 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதைவிடச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை எந்தவொரு தடுப்பூசியாலும் தடுப்பு மருந்தாலும் அளித்துவிட முடியாது என்கிறது யுனிசெப் நிறுவனம்.
ஆனால், இந்தியாவில் குழந்தைக்குத் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்போர் 46 விழுக்காடு தான் என்று யுனிசெப் சொல்கிறது. இந்தியாவில் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமும் கொண்டாடப்படுகிறது. இதற்கும் அரசு நிறைய பணம் செலவிடுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் சுரக்கும் அளவுக்கு ஆரோக்கியமான தாய்மார்கள் இல்லாமல் இருப்பது கூட அதற்குக் காரணம் என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்?
பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து, குழந்தைகளுக்குச் சுகாதாரமான பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தால் 90 விழுக்காடு காய்ச்சல்களைத் தடுத்துவிட முடியும். நமது நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைக் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நிறுவவும் பராமரிக்கவும் மட்டுமே செலவிட்டாலே போதும், நாளைய தலைமுறை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாகவும், குழந்தைச் சாவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படவும்கூடுமே, இதெல்லாம் சொல்லிக் கொடுத்தா தெரிய வேண்டும்?
"என்ன காரணம்?'' என்ற தலைப்பில் 16-11-2011 அன்று தினமணி நாளிதழில் வெளியான தலையங்கத்தை மேலே பார்த்தீர்கள்.
அடுத்து, ஹிந்து ஆங்கில நாளேட்டில் 14-10-2011 அன்று உர்ய்'ற் ஜ்ஹள்ட் ஹ்ர்ன்ழ் ட்ஹய்க்ள் ர்ச்ச் ட்ஹய்க் ஜ்ஹள்ட்ண்ய்ஞ் என்ற தலைப்பில் வெளியான செய்தியின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
கை கழுவுங்கள் என்று அடிக்கடி சொல்லும் வார்த்தையைக் கேட்டு கொஞ்சம் கடுப்புடன் தான் குழந்தைப் பருவத்தில் கைகளைக் கழுவியெடுப்பீர்கள். ஆனால் கை கழுவுதல் என்பது செலவில்லாத மிகப் பயனுள்ள நோய் தடுப்பு வழிமுறையாகும்.
குழந்தைகள் தான் முதன்முதலில் வயிற்றுப் போக்கு, சுவாசக் குழாய் தொற்று நோய் ஆகியவற்றிற்கு அதிகம் பலியாகி விடுகின்றனர். குழந்தைகளின் மரணத்திற்கும் இது தான் முக்கியக் காரணம். அவர்களின் கைகளில் வைரஸ், தொற்று நோய் கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. கைகளைக் கழுவாததால் அவர்களிடம் நோய்கள் எளிதில் தொற்றி விடுகின்றன. அதனால் அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவ வேண்டும். இந்தப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் கொண்டு வருவதற்காக யூனிசெப் நிறுவனம் அக்டோபர் 15ஆம் தேதியை உலக கைகழுவும் தினமாக அனுஷ்டிக்கின்றது. அந்நாளில் இந்தியாவில் பள்ளிக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கு வெந்நீர், சோப் வைத்து கழுவும் பயிற்சியை அளிக்கின்றது.
பள்ளிக்கூடங்களில் வாராந்திர சுகாதார நிகழ்ச்சிகளை மாநில நல்வாழ்வுத் துறை நடத்துகின்றது என்று அதன் துணை இயக்குனர் வி. வீரபாண்டியன் தெரிவிக்கின்றார். இந்நிகழ்ச்சியில் கை கழுவுதல்' தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் இதோ:
பள்ளி மாணவர்களுக்குக் கை கழுவுகின்ற நுட்பம் இந்நிகழ்ச்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டது. வயிற்றுப் போக்கு, மூச்சுக் குழாய் (நிமோனியா), காற்றினால் பரவுகின்ற பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு இந்தப் பழக்கம் எந்த அளவுக்கு அவசியம் என்பதும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
உள்ளங்கைகள், நக இடுக்குகள் ஆகியன எல்லாம் நன்கு கவனம் செலுத்தப்பட்டு வெந்நீர், சோப்பு வைத்துக் கழுவப்பட வேண்டும்.
பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது கதவுகளின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
"தாய்மார்கள் மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியர்கள், குழந்தைகளிடம் கிருமிகள், வைரஸ்கள் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஒரே வழிமுறை கைகளைக் கழுவுவது தான். இது நீரினால் ஏற்படும் தொற்று நோய்களைப் பாதியளவுக்குத் தடுத்து விடும்'' என்று குழந்தை நல மருத்துவ சங்கத்தின் செயலாளர் தெரிவிக்கின்றார். இது வயிற்றுப் போக்கு, டைபாயிட், வயிற்றுப் புழுக்கள் உள்ளிட்ட நோய்கள் வராமல் காக்கின்றன.
பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய அணைச் சீலைகள் (டயாப்பர்) போன்றவற்றை மாற்றிய பிறகு கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.
கைகளைக் கழுவும் பழக்கம் பெண்களின் சுகாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக மாதவிலக்கு நேரங்களில் கறை பட்ட துணிகளைக் களையும் போதும், அடுத்த புதிய மாற்றுத் துணி அணியும் போதும் கண்டிப்பாகக் கைகளைக் கழுவியாக வேண்டும். காரணம், இது இன உறுப்புகளில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கும் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது உர்ய்'ற் ஜ்ஹள்ட் ஹ்ர்ன்ழ் ட்ஹய்க்ள் ர்ச்ச் ட்ஹய்க் ஜ்ஹள்ட்ண்ய்ஞ் என்ற தலைப்பில் ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியாகும்.
மனிதன் தன் வாழ்க்கையில் தூய்மை, துப்புரவை உச்சக்கட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; குறிப்பாகக் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதை தினமணி தலையங்கத்திலிருந்தும், ஹிந்து நாளேட்டின் செய்தியிலிருந்தும் விளங்கிக் கொள்ளலாம்.
தினமணி தலையங்கம் குறிப்பிடுகின்ற இரண்டு நோய்களில் ஒன்று மூளைக் காய்ச்சல்; மற்றொன்று நிமோனியா!
நிமோனியாவிற்குத் தீர்வைச் சொல்கின்ற இந்தக் கட்டுரை மூளைக் காய்ச்சலுக்குத் தீர்வைச் சொல்லவில்லை. அது நிமோனியாவிற்குச் சொல்கின்ற தீர்வை இஸ்லாம் அன்றே சொல்லி விட்டது.
மூளைக் காய்ச்சலுக்கும் இஸ்லாம் தீர்வைச் சொல்கின்றது. இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். அதாவது மனிதனைப் படைத்த அதே சக்தி தான் அவனுக்குரிய வாழ்க்கை நெறியை, மார்க்கத்தையும் படைத்திருக்கின்றது. அதனால் மனிதனுக்கு எது நன்மை பயக்கும்? எது தீமை விளைவிக்கும் என்பது அந்தச் சக்திக்கு, அதாவது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். அதனால் அவன் அமைத்த அந்த நெறிக்குத் தக்க வாழ்கின்ற போது மனிதன், தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, துப்புரவாக வைத்துக் கொள்கின்றான்.
இஸ்லாம் என்ற இயற்கை மார்க்கம் மனிதனையும் சுத்தமாக இருக்கச் சொல்கின்றது; அவன் வாழ்கின்ற சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைக்கச் சொல்கின்றது.
நிமோனியாவும் தாய்ப்பாலும்
நிமோனியாவுக்குப் பரிகாரம் தாய்ப்பால் என்று தினமணி தலையங்கமே தெரிவிக்கின்றது. உலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்; அதுவும் இரண்டாண்டு காலம் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றது.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அல்குர்ஆன் 31.:14
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.
அல்குர்ஆன் 2:233
வேதம் என்று சொன்னால் தத்துவம், துறவு, நடைமுறைக்குச் சாத்தியமற்ற சமாச்சாரங்கள் அடங்கியதாகத் தான் இருக்கும். ஆனால் திருக்குர்ஆன் நடைமுறைக்கு எளிதான வாழ்க்கை நெறியாகும். இயற்கைக்கு ஒத்த நெறியாகும். அதனால் இத்தகைய இயற்கை வழியை இயல்பான வழியைக் காட்டுகின்றது.
இன்று மக்கள் மனிதப் பால், தாய்ப்பால் கொடுப்பதற்குப் பதிலாக மாட்டுப் பால், மாவுப் பால் கொடுக்கின்றனர். இது குழந்தையின் குடலுக்கு ஒத்துவருவதில்லை. மாறாக ஒவ்வாமையையும் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றது.
ஒரு குழந்தை பிறந்ததும் ஓர் அரை மணி நேரம் அது குடிக்கின்ற தாய்ப்பால் தான் அதன் வாழ்நாள் முழுவதற்கும், ஆயுளின் இறுதி வரைக்கும் தாக்குப் பிடிக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியாக அமைந்து விடுகின்றது. அத்தகைய இயற்கை அருமருந்தாக தாய்ப்பால் அமைந்திருக்கின்றது. அதனால் தான் அது நிமோனியாவை விட்டும் காக்கின்ற காவல் அரணாக நிற்கின்றது.
இதையெல்லாம் தெரிந்த இறைவன், மனிதப் பாலைக் குடிக்க, கொடுக்கச் சொல்கிறான். பெண்களுக்கு இயற்கையிலேயே நோய் அல்லது பலவீனம் போன்ற இடையூறுகள் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் போது கூட மாற்றுக்காக மாவுப் பாலையோ, மாட்டுப் பாலையோ கொடுக்கச் சொல்லாமல் மனிதப்பாலையே கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது.
உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும்.
அல்குர்ஆன் 65:6
இன்று தாய்ப்பால் கொடுக்கும் பழக்கும் வெகுவாகக் குறைந்து வருகின்றது. பெற்ற தாயே தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முன்வருவதில்லை. தங்கள் அழகு கெட்டு விடும் என்று கருதி தாய்ப்பால் கொடுக்காமல், தங்கள் குழந்தைக்குத் தாங்களே எதிரிகளாக ஆகி விடுகின்றனர். இதில் பால்குடித் தாய் மூலம் குழந்தைக்குப் பாலூட்டுவதெல்லாம் கற்பனையே செய்ய முடியாத நிலை.
மார்க்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாகத் திகழும் தவ்ஹீத் ஜமாஅத் தான் இதற்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு பால்குடித் தாய் மூலம் பால் கொடுக்கும் வழிமுறையை உயிர்ப்பிக்க வேண்டும்.
அண்மையில் மேலப்பாளையத்தில் ஏகத்துவப் பிரச்சாரப் பணி செய்து கொண்டிருந்த ஆலிமா ஹஜ் பாத்திமா என்ற கொள்கைச் சகோதரி, குழந்தை பெற்றெடுத்து 14 நாட்களில் மூளையில் இரத்தக் கட்டு ஏற்பட்டு இறந்து விட்டார். பிறந்து பதினான்கு நாட்களில் தாயை இழந்த அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு நமது ஜமாஅத்தில் யாரேனும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, நகரத் தலைவர் ரோஷன் பொறுப்பேற்றுக் கொண்டு தனது மனைவி மூலம் பால் கொடுக்க ஏற்பாடு செய்தார். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
பன்றியும் மூளைக் காய்ச்சலும்
குழந்தைகளின் மூளைக் காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமே பன்றிகள் தான். பன்றிகளில் உட்கார்ந்து இரத்தத்தை உறிஞ்சுகின்ற கொசு, குழந்தையை வந்து கடிக்கும் போது ஏற்படுவது தான் மூளைக் காய்ச்சல் என்பது அறிவியல் உலகம் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
கிறித்தவ மதத்தில் பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டதாகும். இன்னும் சொல்லப் போனால் பன்றி இறைச்சி சாப்பிடுவதைப் புனிதம் என்று கருதும் கிறித்தவர்களும் இருக்கிறார்கள். இந்து மதத்தினரும் பன்றி இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்லாம் அதைச் சாப்பிடுவதற்குத் தடை செய்வதுடன் அதை விற்பதற்கும் தடை செய்கின்றது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் பன்றிப் பண்ணைகள் வளர்ப்பதற்கும் ஊக்குவிக்கின்றனர். என்ன செய்வது? மது, வட்டி போன்ற சமூகக் கேடுகளை விளைவிக்கும் தீமைகள் இவர்களுக்கு அலங்காரமாகத் தெரிவது போன்று இந்தக் கேடும் அலங்காரமாகத் தெரிகின்றது. இதை ஒழிக்க வேண்டுமெனில் இஸ்லாமிய அரசு தான் அமைய வேண்டும்.
தாய்மையும் தூய்மையும்
அடுத்து மகப்பேறு மருத்துவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது பாலூட்டும் பெண்கள், பாலூட்டுவதற்கு முன்பு தங்களது கைகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் என்று தான்.
பொதுவாகப் பிள்ளை பெறுகின்ற தாய்மார்களுக்கு இரண்டு விதமான இயற்கை உபாதைகள் ஏற்படுகின்றன.
1. பிரசவத்திற்குப் பின் நாற்பது நாட்கள் அல்லது அதைவிடக் குறைவான நாட்களுக்குத் தொடர்கின்ற உதிரப் போக்கு மற்றும் வழக்கமான மாத விலக்கு.
2. குழந்தைகள் கழிக்கின்ற மல ஜலம்.
இந்த இரு கட்டங்களிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதில் பிரசவ இரத்தம் என்பது கொஞ்ச நாட்களுக்குத் தான். ஆனால் மாத விலக்கு என்பது மாதந்தோறும் தொடர்கின்ற இயற்கைச் சிரமம்.
குழந்தைகள் கழிக்கின்ற மலஜலமும் அன்றாடம் தொடர்கின்ற ஒன்று தான். இக்குழந்தைகள் தாங்களாக இயற்கைத் தேவைகளை நிறைவேற்றி, தாங்களே சுத்தம் செய்கின்ற வரை தொடர்கின்ற ஒரு சிரமம் தான்.
இதில் தாய்மார்கள் அதிகம் தூய்மை காக்க வேண்டும். அவர்கள் காக்கும் தூய்மை, குழந்தைகளை வைரஸ் கிருமிகளின் தாக்குதலிலிருந்து காக்கும்.
தூய்மையைக் காட்டும் தூய நெறி
தாய்மை தாக்க வேண்டிய இந்தத் தூய்மையை, தூய நெறியான இஸ்லாம், பிள்ளைகளை வளர்க்கும் போதே பெற்றோர்களுக்குக் காட்டித் தருகின்றது.
இறை நம்பிக்கையாளர்களின் அன்னையார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டுவரப்பட்டது. அக்குழந்தை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது (சிறிது) தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதைச் சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.
நூல்: புகாரி 222
குழந்தையை வளர்க்கும் போது இந்தத் தூய பண்பைச் சொல்லித் தருகின்றது. இதன் மூலம் மலம், ஜலம் அசுத்தம் என்பதை உணரச் செய்து குழந்தைகள் வளர, வளர அவர்களுடன் தூய்மை உணர்வையும் சேர்த்தே வளர்க்கின்றது.
உணவுக்கு வலது கை
உண்ணுதல், பருகுதல் போன்று அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையைக் கொண்டே செய்ய வேண்டும் என்று மார்க்கம் கற்றுத் தருகின்றது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தாம் செருப்பு அணிந்துகொள்ளும்போதும் தலைவாரிக் கொள்ளும்போதும் சுத்தம் செய்யும்போதும் தம் அனைத்துக் காரியங்களிலும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.
நூல்: புகாரி 168
வலது கைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கன் வளர்ப்பு மகனாகியன உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கன் மடியில் வளர்ந்து வந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி 5376
சிறுநீர் கழிக்கும் போது வலது கையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறப்புறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)
நூல்: புகாரி 154
இயற்கை மார்க்கத்தின் இனிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இயற்கை நெறியில், உணவுக்கு வலது கை, அசுத்தம் களைவதற்கு இடது கை என்ற நாகரீகப் பழக்கத்தை, நாசூக்கான நடைமுறையை நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். உணவு உண்ணும் போது கிருமிகள் உட்புகுவதை விட்டும் இதன் மூலம் காக்கச் செய்கின்றார்கள். இந்த இனிய மார்க்கத்தைப் பின்பற்றுவோர் தன்னையும் தன் சுற்றுப்புறச் சூழலையும் காப்பவராகி விடுகின்றார்.
இஸ்லாம் ஒரு தூய்மை மார்க்கம்
தூய்மைக்கு மறு பெயர் இஸ்லாம்; இஸ்லாத்திற்கு மறு பெயர் தூய்மை என்று கூறி விடலாம். இஸ்லாத்தின் ஆதார நூலான திருக்குர்ஆன் அருளப்படும் ஆரம்ப கட்டத்திலேயே ஆடைத் தூய்மையைப் பற்றித் தான் அது கட்டளையிடுகின்றது.
உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!
(அல்குர்ஆன் 74:4)
ஒவ்வொரு முஸ்லிமும் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமையாகும். அந்த ஐந்து வேளை தொழுகையின் போது, கை, கால்கள், முகத்தைக் கழுவியாக வேண்டும். அவ்வாறு கழுவாமல் தொழ முடியாது. இந்தத் தூய்மையும் துப்புரவும் கிருமிகள் அண்டவோ, அணுகவோ விடாமல் மனிதனைக் காக்கின்றது. இந்தக் கிருமிகளின் பிடியிலிருந்து மனித சமுதாயம் காக்கப்பட வேண்டுமானால் மனிதனுக்கேற்ற, மண்ணுக்கேற்ற இஸ்லாம் தான் தீர்வு என்பதைத் தெளிவாக உணரலாம்.
கேள்வி பதில்
? தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?
காஜா முஹைதீன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி பைஹகியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : பைஹகீ (2392)
மேற்கண்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். அபூ ளப்யா நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் கூறியுள்ளனர்.
நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 9, பக்கம் : 103
நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 542
அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 7, பக்கம் : 380
நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 7, பக்கம் : 60
இமாம் அஹ்மது அவர்கள், இந்த ஹதீஸ் மறுக்கப்படவேண்டியது. ஏனென்றால் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.
நூல் : அல்இலலுல் முதனாஹியா, பாகம் : 1, பக்கம் : 112
எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 11
நாற்பது இரவுகள்
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.
அல்குர்ஆன் 2:51
தவ்ராத் வேதத்தை வழங்குவதற்காக மூஸா (அலை) அவர்களை தூர் மலைக்கு வருமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். அதற்காக நாற்பது நாட்கள் வாக்களித்து நாற்பதாம் நாள் அவ்வேதத்தை பலகைகளில் வழங்கினான் என்று இது தொடர்பான பிற வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதில் இறைவன் மூஸா (அலை) அவர்களுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தான் என்று வருவதால், அவை எந்த மாதங்கள்? அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) என்ன செய்தார்கள்? என்ன செய்யவில்லை என்பதை ஆய்வு (?) செய்து அதன் முடிவை விரிவுரை நூல்கள் வாயிலாக இமாம்கள் நமக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அவர்கள் சமர்ப்பித்த விளக்கங்கள் இதோ: ???
அரபி 8
(அந்த நாற்பது நாட்கள்) துல்கஃதா (30 நாட்கள்) மற்றும் துல்ஹஜ்ஜில் 10 நாட்களாகும் என அபுல்ஆலியா கூறுகின்றார். நூல்: ஜாமிஉல் பயான் பாகம் 2 பக்கம் 62
நாற்பது நாட்கள் என்று தான் குர்ஆனில் உள்ளதே தவிர அது எந்த மாதம் போன்ற மேலதிகத் தகவல்கள் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ தெரிவிக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்க இந்த அறிஞர் அது துல்கஃதா, மற்றும் துல்ஹஜ் மாதத்திலிருந்து 10 நாட்கள் என்று மூஸா (அலை) அவர்கள் அருகில் இருந்ததைப் போன்று துல்லியமான தகவலை தருகின்றார்.
அரபு மாதங்களான, அரபு மொழிச் சொல்லில் பெயரிடப்பட்ட இந்த மாதங்கள் தான் அரபியரல்லாத மூஸா நபி சமுதாயத்துக்கும் இருந்தது என்பது மடமையாகும் என்பது கூட இவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது
மேலும், இது நமக்குத் தேவையில்லாத வேலை. அது எந்த மாதமாக இருந்தால் நமக்கென்ன? ஏன் இல்லாததை நாமாக வலிந்து கொண்டு விளக்கம் என்ற பெயரில் அள்ளிக் கொட்ட வேண்டும்?
இது மட்டுமல்ல. இன்னும் முக்கிய விவரமும் நமக்கு தரப்படுகின்றது. அது.....
??? அரபி 9
அந்த நாற்பது இரவுகளில் தூர் மலையிலிருந்து இறங்கும் வரை மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என நமக்கு தகவல் வந்தது.
அந்த நாற்பது நாட்களும் மூஸா (அலை) அவர்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்று மேற்கண்ட விரிவுரை நூலில் அதன் தொடர்ச்சியில் கூறப்படுகின்றது.
இது எப்படி சாத்தியாமாகும்? இறைவன் இதைக் கூறியிருந்தால் நாம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்க மாட்டோம். ஏனெனில் இறைவனுக்கு இது சாத்தியமே. ஆனால் இறைவன் இவ்வாறு கூறாமல் இந்த இமாம்கள் சுயமாகக் கூறும் இது போன்ற கூறுகெட்ட விளக்கங்களுக்கு நாம் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்?
மேலும் இன்னார் இத்தனை நாட்கள் மலம், ஜலம் கழிக்கவில்லை என்றெல்லாம் யாராலும் கூறமுடியாது. காரணம் யாருக்கும் தெரியாமல் ஓரிரு தருணங்களிலாவது அவர் மலம் கழிக்கச் சென்றிருப்பார். இறைத்தூதராக இருந்தாலும் மலம், ஜலம் கழிக்கப் போகும் போது கூட இவர்களுக்குத் தகவல் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா? இதற்கெல்லாம் மேல், அந்த வேதப் பலகை எதனால் ஆனது என்பதிலும் மல்லுக்கட்டிக் கொண்டு ஆளாளுக்கு விளக்கமளிக்க முன்வருகின்றார்கள்.
இவர்கள் என்ன விரிவுரையாளர்களா? அல்லது தச்சர், ஆசாரிகளா? என்ற கேள்வியுடன் இந்த விளக்கத்தை முடித்துக் கொள்கிறோம்.
தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம்
தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா? தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள்.
ரீஜினல் அவ்லியா - அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர்.
இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் அளவில் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (பாக்தாத்) போன்ற தர்ஹாக்களுக்குச் சென்று தங்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.
இதுபோக, வீடுகளில் மவ்லிது, கத்தம் பாத்திஹா என்ற அனாச்சாரங்களில் பணம் செலவழித்தனர்.
இந்தச் செலவினங்கள் அனைத்தும் அவ்லியாக்களின் பக்தியின் பெயரால் நடைபெற்றவை.
மற்றொரு புறம் சினிமா, மது, பீடி, கிகரெட், டி.வி. டெக்குகள், ஆடியோ வீடியோ கேஸட்டுகள் என்று தடபுடலாக ஆடம்பர, அனாச்சார வகைகளில் செலவழித்துத் தள்ளினர்.
இவை அனைத்தும் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால்! தீய வழிகளில் பணத்தைச் செலவிட்டு வந்தவர்கள் அந்தச் செலவுகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டதில் வெற்றி பெற்று விட்டாலும் தீயவழியில் செலவிடும் போது இருந்த தாரளத்தன்மை நல்வழிக்கு வந்த பின்னர் மாறிவிட்டது.
ஒரு சிலர் தவ்ஹீதுக்கு வந்த பின்னால் இனி மவ்லிது, பாத்திஹா, தர்ஹா செலவுகள் இல்லை. அப்பாடா! ஒரு வகையில் மிச்சம் என்று இருக்கின்றனர்.
தவ்ஹீதுவாதிகள் ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் இந்தக் கொள்கையை ஏற்ற பின்னர் தாராளமாகச் செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழகத்தில், குறிப்பாக பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் நில புலன்களை அரபி மதரஸாக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் எழுதி வைத்தனர். ஆனால் இன்று தவ்ஹீதுவாதிகள் ஓர் ஐந்து சென்ட் பள்ளிவாசல் இடம் வாங்குவதற்குத் தவியாய் தவிக்கின்றனர். தமிழகமெங்கும் அலையாய் அலைகின்றனர்.
தவ்ஹீது சிந்தனையாளர்கள் கொஞ்சம் மனது வைத்தால் தத்தமது ஊர்களிலேயே தனி நபர்களாகவே பள்ளிக்கு இடம் வாங்கி விடலாம். அவ்வூர் மக்கள் வெளியூர்களில் போய் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தச் சகோதரர்கள் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் தங்கள் செய்த செலவையெல்லாம் சற்று எண்ணிப் பார்த்தார்கள் என்றால் அவற்றை இப்போது செய்யக் கூடிய தர்மத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிக மிகக் குறைவானதாகவே இருக்கும். அசத்தியத்திற்காகச் செலவு செய்ததை விட அதிகமாகவே சத்தியக் கொள்கைக்காகச் செலவு செய்ய வேண்டும்.
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய போது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் (செய்து) நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தர்ம) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்
நூல்: புகாரி 1436, 2538
ஹகீம் பின் ஹிஷாம் அறியாமைக் காலத்தில் செய்த அதே நன்மையை இப்போதும் செய்கிறார். காரணம், ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் செய்த நன்மையையும் சேர்த்தே கொண்டு வருகின்றார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது தான்.
இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அதற்கு முன்பு செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே வேளை, அறியாமைக் காலத்தில் அவர் செய்த பாவங்களைக் கொண்டு வருவதில்லை.
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?'' என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்'' என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (-மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 173
அறியாமைக் காலத்தில் செய்த நன்மைகளைக் கொண்டு வரும் அதே நேரத்தில் அவருடைய பாவங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன என்பது இறைவன் செய்த மிகப் பெரிய அருட்கொடையாகும்.
இன்று தவ்ஹீதுக்கு வந்தவர்களின் நிலைமை, புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களின் நிலையை ஒத்தது தான். அவர்கள் இதனைக் கவனத்தில் கொண்டு தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுக்க முன்வர வேண்டும். அல்லாஹ்வின் அருள் வளத்தை அள்ளிச் செல்ல வேண்டும்.
பொருளியல் தொடர்: 19
அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்
அமர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். "அல்லாஹ்வின் துதரே என்னிடத்தில் பிள்ளையும் செல்வமும் இருக்கின்றது ஆனால் என்னுடைய தந்தை என்னிடம் தேவையுடையவராக இருக்கின்றார்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்), "நீயும் உன்னுடைய செல்வமும் உன் தந்தைக்குரியது; நீங்கள் சம்பாதித்ததில் துய்மையானது உங்களுடைய குழந்தைகளே'' என்று கூறினார்கள்.
(நுல் : அபூதாவுத் 3063)
ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் சம்பாத்தியத்தில் ஒரு அளவு எடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். அந்த அனுமதி என்னவென்றால் ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளையின் வீட்டிற்குச் சென்றால் யாரிடமும் அனுமதியில்லாமல் சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் போது பிள்ளை தடுக்கக்கூடாது. அந்த அனுமதி கூட சாப்பிடுவதற்கு மட்டும் தான். அதை எடுத்து வருவது கூடாது.
கணவன் அனுமதியின்றி பொருளை எடுத்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கடம் "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!'' என்று சொன்னார்கள்
(நூல் : புகாரி 5364, 2460, 5359, 5370, 2211, 7161, 7180)
கணவனிடம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை இஸ்லாம் தருகின்றது. ஆனால் இது பொதுவான சட்டம் அல்ல. கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் கணவருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. ஏனென்றால் சுஃப்யான் கஞ்சனாக இருக்கின்றார் என்று அவரின் மனைவி கூறியபோது தான் இந்த அனுமதியை நபி (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். ஆகவே இது பொதுவானதல்ல என்பதை நாம் விளங்க முடியும்.
வட்டிப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்...
ஒருவர் வட்டியின் மூலம் சம்பாதிக்கின்றார். அதை அவர் நமக்குத் தந்தால் நாம் சாப்பிடலாமா? என்றால் அதை நாம் உண்ணலாம், அதை அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தருகின்றார் என்றால் அது நமக்கு ஹராம் இல்லை என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்ககூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.
திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால்...
வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருடன் திருடிய பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனின் பொருளாகும்.
ஆனால் திருடன், திருடிய பொருள் அவனுடைய பொருள் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்திய நீதிமன்றத்தின் சட்டப்படியும் இன்னும் உலக சட்டப்படியும் இது சாத்தியமற்ற விஷயம் ஆகும். என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் அபகரித்துவிட்டான் என்று வழக்குப் போட முடியுமா? ஆனால் என்னுடைய பொருளை திருடிவிட்டான் என்று ஒருவன் வழக்குப் போட முடியும்.
இதை வைத்து நாம் விளங்குவது என்னவென்றால் திருடிய உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அது அவருடைய பொருள் அல்ல. பின்பு எப்படி அவர் அன்பளிப்பு கொடுக்க முடியும்?
கட்டடத்தை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?
வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் பொருளை வாங்கலாம் என்றால், நம் இடத்தை அல்லது நம் கடையை வாடகைக்கு கொடுக்கலாம்; அதில் என்ன தவறு என்று கேட்கின்றனர். இதில் ஒரு வித்தியாசத்தை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருதாலும் அது அவனது பொருளாகும். ஆனால் அவன் சம்பாதிக்கும் முறை தவறானதாகும். அதற்குரிய பாவம் அவனுக்குக் கிடைக்கும். ஆனால் அவர் கொடுக்கும் பொருள் நமக்கு ஹராம் ஆகாது.
நீங்கள் உங்கள் இடத்தை அல்லது கடையை வாடகைக்குக் கொடுப்பது நீங்கள் அதற்கு உறுதுணையாக இருப்பதாகும். ஆகவே நமது இடத்தையோ அல்லது கடையையோ வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.
கணவன் அனுமதியில்லாமல் தர்மம் செய்யலாமா?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தனது வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால், (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்பலன் அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்பலன் அவளது கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோன்ற (நற்பலன்) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் நற்பலனில் எதனையும் குறைத்துவிட மாட்டார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 2065, 1441, 1437, 1425
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனது சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனது நற்பலனில் பாதி அவளுக்கு உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 2066, 5195, 5260
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அத்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும்'' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2590
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து கணவன் அனுமதியின்றி அவனது பொருளை மனைவி தர்மம் செய்யலாம் என்பதை அறிய முடிகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக திர்மிதியில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறினார்கள்: எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியைக் கொண்டே தவிர தன்னுடைய கணவனின் வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது. "அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும் என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதி (606)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ஷுரஹ்பீல் இப்னு முஸ்லிம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவராவார். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
உறவினர் வீட்டில் உணவு
உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர் வீடுகளிலோ, உங்கள் அன்னையர் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கை யாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
(அல்குர்ஆன் 24:61)
அன்பளிப்பை திருப்பிக் கேட்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நுல் : புகாரி 2622
உமர் பின் கத்தாப் ரலி அவர்கள் கூறியதாவது: ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கி விட்டார். ஆகவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், "நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்'' என்று கூறினார்கள்.
(நுல் : புகாரி 1490, 2623, 2636, 3003)
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!
கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)
குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இதன் காரணமாகத் தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும். இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்படாத காரணத்தினால் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளைப் பற்றி தினமணி நாளிதழ் டிசம்பர் 26ல் எழுதிய தலையங்கத்தை மக்களின் பார்வைக்கு தருகிறோம். இதோ அந்த தலையங்கம்:
நல்லவராவதும் தீயவராவதும்
மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில் தான் உருவாகின்றன.
இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.
தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் "அப்பா-அம்மாவை அழைத்து வா' என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.
இந்த மாணவர்கள் உழைப்பது சரி தான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு "டாப்-அப்' செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு "டாப்-அப்' செய்வதிலும் தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது. தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூக விரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.
மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்து கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.
பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது
பெற்றோர்களே பிள்ளைகளின் பொறுப்பாளர்
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்தவர்களாக நல்லவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றார் தினமணி ஆசிரியர்.
ஆசிரியர்களில் பலர் பொறுக்கிகளாகவும், காமவெறி பிடித்தவர்களாகவும் உள்ள காலகட்டத்தில் பிள்ளைகளைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது தான் என்று குறிப்பிடுவது வேடிக்கையான ஒன்றாகும்.
பெற்றோர்கள் வேலைப் பழுவினால் பிள்ளைகளைக் கவனிக்க இயலாது என்று தினமணி ஆசிரியர் கூறுவது பிற சமுதாயத்தைக் கவனித்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வாதாரங்களைத் தேடும் பொறுப்பை ஆண்களுக்கும் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை பெண்களுக்கும் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்படவேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும். குழந்தைகளைச் சிறந்த குழந்தையாக உருவாக்கும் பொறுப்பை அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தெடுக்கும் தாயிடம் தான் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி (2554)
ஒரு குழந்தையின் தாய்தான் அவனுடைய நல்லொழுக்கத்திற்கு பொறுப்புதாரி ஆவார். குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பு தான்.
முஃமின்களின் இலட்சியம்
"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (25 : 74)
ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் எத்தகைய இலட்சியத்தில் வாழ வேண்டும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
மற்றவர்கள் நம்முடைய வாழ்வை ஒரு முன்மாதிரியான வாழ்வாகக் கருதும் அளவிற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் திகழ வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் முறைகளைப் பார்த்து, இது போன்றல்லவா நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு முஃமினும் தன்னுடைய குடும்பத்தை இறையச்சமுடைய குடும்பமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதும் தான் இறைவனின் வழிகாட்டுதல்.
சிறந்த சமுதாயம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மேற்கண்ட வசனம் தெளிவான ஆதாரமாகும்.
திருமணமே முதல்படி
குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை இஸ்லாம் தாயிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக உருவாக வேண்டுமென்றால் அக்குழந்தையின் தாய் நல்லொழுக்கங்களை அறிந்தவளாக இருக்க வேண்டும். ஒரு தாய் அதிகம் சினிமா பார்க்கக் கூடியவளாகவும், தர்ஹா வழிபாடுகள் செய்பவளாகவும், பில்லி, சூனியம், பேய், பிசாசு நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால் இவள் எப்படி தன்னுடைய குழந்தையை ஒரு நல்லொழுக்கமுள்ள, இறைநம்பிக்கையுள்ள குழந்தையாக உருவாக்குவாள்?
ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகள் நல்லொழுக்கங்கள் உடையவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் நற்சிந்தனையைப் பெற வேண்டும் என்றால் அக்குழந்தையின் தாய் அதற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் திருமணத்தின் போதே நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5090)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (2911)
சிறந்த சமுதாயம் உருவாவதற்கு முதல் அடிப்படை நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இல்லறமும் இனிய சமுதாயத்திற்கே!
ஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (141)
"எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!'' என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.
இஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்...
திருக்குர்ஆன் விளக்கவுரை தொடர்: 5
கியாம நாளின் அடையாளங்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி! அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள். பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
(திருக்குர்ஆன் 78:1-5)
உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது ஏற்படவுள்ள மிகப் பெரிய அடையாளங்கள் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் புகை மூட்டம் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். தஜ்ஜாலைப் பற்றி ஹதீஸ்களில் கூறப்படும் மேலும் சில விபரங்களைக் காண்போம்.
தஜ்ஜால் இனிமேல் தான் பிறப்பானா? தஜ்ஜால் இனி மேல் பிறந்து வரப் போகிறானா? அல்லது முன்பே பிறந்து பிற்காலத்தில் வெளியே வருவானா? இதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். தஜ்ஜாலைச் சந்தித்த விபரத்தை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்த போது அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். எனவே அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இந்த உலகில் இருந்து வருகிறான் என்பதை நாம் நம்பியாக வேண்டும். அந்த நிகழ்ச்சியில் தஜ்ஜால் பற்றி அதிக விபரங்கள் கிடைப்பதால் அந்த ஹதீஸை முழுமையாகப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழைப்பாளர் "அஸ்ஸலாத்து ஜாமிஆ'' (தொழுகை நடத்தும் நேரம் வந்து விட்டது) என்று அறிவிப்பைச் செவியுற்று நான் பள்ளிவாசல் சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டு மிம்பரில் அமர்ந்தார்கள். "ஒவ்வொருவரும் தொழுத இடத்திலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு "நான் உங்களை ஏன் கூட்டினேன் என்பதை அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று நாங்கள் கூறினோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களுக்கு அச்சமூட்டவோ, ஆர்வமூட்டவோ உங்களை நான் கூட்டவில்லை. தமீமுத்தாரி கிறிஸ்தவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தஜ்ஜால் பற்றி நான் உங்களுக்குக் கூறி வந்ததற்கேற்ப அவர் ஒரு செய்தியை என்னிடம் கூறினார். அவர் கூறியதாவது: லக்ம், ஜுகாம் ஆகிய கோத்திரத்தைச் சேர்ந்த முப்பது நபர்களுடன் கப்பலில் நான் பயணம் செய்தேன். ஒரு மாதம் அலைகளால் நாங்கள் அலைக்கழிக்கப்பட்டோம். சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீபகற்பத்தில் ஒதுங்கினோம். சிறு கப்பல் ஏறி தீபகற்பத்தில் நுழைந்தோம். அப்போது அதிகமான மயிர்களைக் கொண்ட பிராணி ஒன்று எங்களை எதிர் கொண்டது. அதிகமான மயிர்கள் இருந்ததால் அப்பிராணியின் மலப்பாதை எது? சிறு நீர்ப்பாதை எது என எங்களால் அறிய முடியவில்லை. அப்பிராணியிடம் "உனக்குக் கேடு உண்டாகட்டும்! நீ என்ன பிராணி?'' என்று கேட்டோம். "நான் ஜஸ்ஸாஸா'' என்று அப்பிராணி கூறியது. "நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்! அவர் உங்களைப் பற்றி அறிவதில் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்'' எனவும் அப்பிராணி கூறியது. அது ஒரு மனிதனைப் பற்றிக் கூறியதும் "அப்பிராணி ஒரு ஷைத்தானாக இருக்குமோ'' என்று அஞ்சினோம். நாங்கள் விரைந்து சென்று அந்த மடாலயத்தை அடைந்தோம். அங்கே பருமனான ஒரு மனிதனைக் கண்டோம். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒரு போதும் கண்டதில்லை. இரண்டு கரண்டைக் கால்களுக்கும் முட்டுக்கால்களுக்குமிடையே இரும்பினால் கழுத்துடன் தலை சேர்த்து அவன் கட்டப்பட்டிருந்தான். "உனக்குக் கேடு உண்டாகட்டும். ஏனிந்த நிலை?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அம்மனிதன், "என்னைப் பற்றி அறிய சக்தி பெற்று விட்டீர்கள். எனவே நீங்கள் யார்? என எனக்குக் கூறுங்கள் என்றான்.'' "நாங்கள் அரபியர்கள். ஒரு கப்பலில் பயணம் செய்த போது ஒரு மாதம் கடல் எங்களை அலைக்கழித்து இந்தத் தீபகற்பத்தில் நுழைந்தோம். அடர்ந்த மயிர்களைக் கொண்ட ஒரு பிராணியைக் கண்டோம். அப்பிராணி நான் ஜஸ்ஸாஸா ஆவேன். இந்த மடாலயத்தில் உள்ள மனிதரைச் சந்தியுங்கள் என்று கூறியது. எனவே உம்மிடம் விரைந்து வந்தோம். அதனால் திடுக்குற்றோம். அது ஷைத்தானாக இருக்குமோ என்று அஞ்சினோம்.'' எனக் கூறினோம். "பைஸான் எனுமிடத்தில் உள்ள பேரீச்சை மரங்கள் பலன் தருகின்றனவா?'' என எனக்குக் கூறுங்கள் என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். அதற்கு அம்மனிதன், "விரைவில் அங்குள்ள மரங்கள் பலனளிக்காமல் போகலாம்'' என்றான். "தபரிய்யா எனும் ஏரியைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! அதில் தண்ணீர் உள்ளதா?'' என்று அவன் கேட்டான். "அதில் அதிகமான தண்ணீர் உள்ளது'' என்று நாங்கள் கூறினோம். "அந்தத் தண்ணீர் விரைவில் வற்றி விடக் கூடும்'' என்று அவன் கூறினான். "ஸுகர் என்னும் நீரூற்றில் தண்ணீர் உள்ளதா? அங்குள்ளவர்கள் அத்தண்ணீரால் விவசாயம் செய்கிறார்களா?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் "ஆம்! தண்ணீர் அதிகமாகவே உள்ளது; அங்குள்ளோர் அத்தண்ணீரால் விவசாயம் செய்து வருகின்றனர்'' என்றோம். "உம்மி சமுதாயத்தில் தோன்றக் கூடிய நபியின் நிலை என்ன? என்பதை எனக்குக் கூறுங்கள்'' என்று அம்மனிதன் கேட்டான். அவர் "மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவில் தங்கியிருக்கிறார்'' என்று கூறினோம். "அவருடன் அரபுகள் போர் செய்தார்களா?'' என்று அம்மனிதன் கேட்டான். நாங்கள் ஆம் என்றோம். "போரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று அவன் கேட்டான். அதற்கு நாங்கள் அவர் தன்னை அடுத்துள்ள அரபியரையெல்லாம் வெற்றி கொண்டு விட்டார்'' எனக் கூறினோம். "அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லதாகும்'' என்று அவன் கூறினான். நான் இப்போது என்னைப் பற்றிக் கூறப் போகிறேன். "நான் தான் தஜ்ஜால் ஆவேன். (இங்கிருந்து) வெளியேற வெகு விரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படலாம். அப்போது நான் வெளியே வருவேன். பூமி முழுவதும் பயணம் செய்வேன். (நான் பயணிக்கக் கூடிய) நாற்பது நாட்களில் எந்த ஊரையும் அடையாமல் இருக்க மாட்டேன். ஆயினும், மக்கா, மதீனா ஆகிய இரு ஊர்களைத் தவிர. அவ்விரு ஊர்களும் எனக்கு விலக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு ஊர்களுக்குள் நான் நுழைய முயலும் போதெல்லாம் தன் கையில் வாளுடன் ஒரு மலக்கு என்னை எதிர் கொண்டு தடுத்து நிறுத்துவார். அவற்றின் ஒவ்வொரு வழியிலும் அதைக் காக்கும் வானவர்கள் இருப்பர்'' என்று அம்மனிதன் கூறினான். இதை தமீமுத்தாரி (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மேலும் தமது கைத்தடியால் மிம்பர் மீது தட்டி, "இது (மதீனா) தைபா (தூய நகரம்) இது தைபா; இது தைபா'' எனக் கூறினார்கள். "இதே விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா?'' என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் "ஆம்''என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், அல்லது எமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான், இல்லை; இல்லை; அவன் கிழக்குத் திசையில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 5235.
தஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு முன்பிருந்தே ஏதோ ஓரிடத்தில் இருந்து வருகிறான் என்பதையும் அவனைப் பற்றிய ஓரளவு விபரங்களையும் இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இஸ்லாத்தை எதிர்ப்பான் முஸ்லிம் சமுதாயத்தை வழி கெடுப்பவர்கள் பல வகையினராக இருப்பார்கள். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டே வழி கெடுப்பவர்களும் தோன்றுவார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறுமாறு கூறி வழிகெடுப்பவர்களும் தோன்றுவார்கள். தஜ்ஜால் என்பவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவனாக இருப்பான். அவன் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்க மாட்டான். இஸ்லாத்தின் பால் அழைப்பதாகவும் கூற மாட்டான். இஸ்பஹான் பகுதியைச் சேர்ந்த யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் 5237.
"தஜ்ஜாலின் நெற்றிக்கிடையே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும், எழுதத் தெரிந்த, எழுதத் தெரியாத அனைத்து முஃமின்களும் அதைப் படிப்பார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5223
அவன் இஸ்லாமிய வட்டத்தில் உள்ளதாக தன்னைக் கூறிக் கொள்ள மாட்டான் என்பதற்கு அவன் செய்யும் வாதமும் சான்றாக உள்ளது. அவன் தன்னைக் கடவுள் என வாதிடுவான். "தஜ்ஜால் என்பவன் ஒரு கண் ஊனமுற்றவன். உங்களது இறைவன் ஒரு கண் ஊனமுற்றவனல்லவன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 7131, 7407, 7408
தஜ்ஜாலின் அற்புதங்கள் இஸ்லாத்தின் பெயரைக் கூறாமல் எவ்வாறு முஸ்லிம்களை வழிகெடுக்க இயலும்? என்ற ஐயம் தோன்றலாம். தன்னைக் கடவுள் என்று சாதிக்கும் வகையில் அவன் பிரமிப்பூட்டும் அற்புதங்களைச் செய்வான். ஒன்றிரண்டு தந்திர வேலைகளைச் செய்வோரின் வலையில் அப்பாவி முஸ்லிம்கள் அநேகர் விழுந்து ஈமானை இழந்து வருவதை இன்றைக்கும் நாம் காண்கிறோம். அவர்களையெல்லாம் விட மிகப் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் தஜ்ஜாலின் வலையில் முஸ்லிம்கள் விழுவது ஆச்சரியத்திற்குரியது அல்ல. அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எத்தகையதாக இருக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். "மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். அது மழை பொழியும், முளைப்பிக்குமாறு பூமிக்குக் கட்டளையிடுவான். அது (பயிர்களை) முளைப்பிக்கும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
"பின்னர் மக்களிடம் வந்து (தன்னைக் கடவுள் என்று ஏற்குமாறு) அழைப்பு விடுவான். அவனை ஏற்க மக்கள் மறுப்பார்கள். அவர்களை விட்டு அவன் விலகி விடுவான். காலையில் அம்மக்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் இழந்து விடுவார்கள்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
பாழைடந்த இடத்துக்குச் சென்று "உன்னுடைய புதையல்களை வெளிப்படுத்து'' என்று கூறுவான். அதன் புதையல்கள் தேனீக்களைப் போன்று அவனைப் பின் தொடரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
"திடகாத்திரமான ஒரு இளைஞனை அவன் அழைத்து வாளால் இரண்டு துண்டுகளாக வெட்டுவான். பிறகு அவனைக் கூப்பிடுவான். உடனே அந்த இளைஞன் சிரித்துக் கொண்டு பிரகாசமான முகத்துடன் உயிர் பெறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 5228
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜால் பற்றி நீண்ட விளக்கம் தந்தார்கள். மதீனாவின் நுழைவாயிலுக்கு வருவது அவனுக்கு விலக்கப்பட்டுள்ளது. எனவே மதீனாவிற்கு வெளியில் உள்ள உவர் நிலத்திற்கு வருவான். ஒரு நாள் சிறந்த மனிதர் ஒருவர் அவனிடம் செல்வார். "அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எச்சரிக்கை செய்த தஜ்ஜால் நீ தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அவர் கூறுவார். "இவரைக் கொன்று விட்டு பின்னர் நான் உயிர்ப்பித்தால் (நான் கடவுள் என்ற) இவ்விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்களா?'' என்று அவன் கேட்பான். அவர்கள் மாட்டோம் என்பார்கள். உடனே அவரை அவன் கொல்வான். பின்னர் உயிர்ப்பிப்பான். உயிர்ப்பிக்கப்பட்டதும் அந்த நல்ல மனிதர் முன்பிருந்ததை விட இன்னும் தெளிவாக நான் இருக்கிறேன்'' என்று கூறுவார். உடனே தஜ்ஜால் அவரைக் கொல்ல நினைப்பான். அவனால் அது இயலாது என்று நபி(ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 7132, 1882
இறந்தவர்களை அவன் உயிர்ப்பிப்பது ஒரே ஒரு தடவை தான் நிகழும். இதனால் தான் இரண்டாம் முறை அந்த நல்ல மனிதரை அவனால் கொல்ல இயலவில்லை. இறந்தவர்களை உயிர்ப்பிப்பது என்பது ஒரே தடவை மட்டுமே அவனால் செய்ய இயலும்; தொடர்ந்து செய்ய இயலாது. ஒரு மனிதனைக் கொன்று அவனை உயிர்ப்பிப்பான். மற்றவர்கள் விஷயத்தில் அவனால் இவ்வாறு செய்ய இயலாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக அன்ஸாரித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.
நூல்: அஹ்மத் 22573
தஜ்ஜால் பிறவிக் குருடையும், வெண் குஷ்டத்தையும் நீக்குவான். இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். மக்களிடம் "நானே உங்கள் இறைவன்'' என்பான். "யாரேனும் நீ தான் என் இறைவன்'' என்று கூறினால் அவன் சோதனையில் தோற்று விட்டான். "அல்லாஹ் தான் என் இறைவன்'' என்று யார் கூறி அதிலேயே மரணித்து விடுகிறாரோ அவர் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து விடுபட்டு விட்டார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி),
நூல்: அஹ்மத் 19292
அவனைப் பின்பற்றியவர்கள் தவிர ஏனைய மக்கள் மிகவும் வறுமையில் இருக்கும் போது அவனிடம் மலை போல் ரொட்டி இருக்கும். அவனிடம் இரண்டு நதிகள் இருக்கும். ஒன்றை அவன் சொர்க்கம் என்பான். இன்னொன்றை நரகம் என்பான். அவன் சொர்க்கம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் நரகமாகும். அவன் நரகம் என்று குறிப்பிடும் நதி உண்மையில் சொர்க்கமாகும். மழை பொழியுமாறு வானத்திற்குக் கட்டளையிடுவான். மக்கள் பார்க்கும் வகையில் மழை பெய்யும். "இதைக் கடவுளைத் தவிர வேறு யாரும் செய்ய முடியுமா? என்று கேட்பான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: அஹ்மத் 14426
தஜ்ஜாலிடம் தண்ணீரும், நெருப்பும் இருக்கும். மக்கள் எதைத் தண்ணீர் என்று காண்கிறார்களோ அது சுட்டெரிக்கும் நெருப்பாகும். மக்கள் எதனை நெருப்பு என்று காண்கிறார்களோ அது சுவை மிக்க குளிர்ந்த நீராகும். உங்களில் யாரேனும் இந்த நிலையை அடைந்தால் நெருப்பு என்று காண்பதில் விழட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: புகாரி 7130
தஜ்ஜால் வாழும் நாட்கள் எத்தனை?
இவ்வளவு அற்புத சக்தியுடன் வெளிப்படும் தஜ்ஜால் நீண்ட நாட்கள் ஆட்டம் போட முடியாது. வெறும் நாற்பது நாட்கள் மட்டுமே அவன் இவ்வுலகில் இருப்பான். "தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள் இந்த நாற்பது நாட்களில் உலகம் முழுவதும் அவன் சுற்றி வருவான். ஆயினும் சில இடங்களை அவனால் அடைய முடியாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். மதீனா நகருக்கு தஜ்ஜால் பற்றிய அச்சம் இல்லை. அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
நூல்: புகாரி 7125
"தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ஷாம் பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கே தான் அவன் அழிவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 2450
"இஸ்பஹான் நாட்டு யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். மதீனாவை நெருங்கி அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு வாயிலிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) கெட்ட மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். ஷாம் நாட்டில் உள்ள பாலஸ்தீன் நகரின் லுத் எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா (அலை) இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன் பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா (அலை) இப்பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்த நீதிமானாக வாழ்வார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அஹ்மத் 23327
மதீனாவுக்கு மட்டுமின்றி மற்றும் மூன்று இடங்களுக்கும் அவனால் செல்ல முடியாது. "அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான். அனைத்து இடங்களையும் அவன் அடைவான். மஸ்ஜிதுல் ஹராம், மதீனாவின் மஸ்ஜித், தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிகளை அவன் நெருங்க முடியாது'' என்பது நபிமொழி.
நூல்: அஹ்மத் 22571
தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வழி தஜ்ஜாலின் காலத்தை அடைபவர்கள் அவனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது என்பதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு இரண்டு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். தொழுகையில் அத்தஹிய்யாத்தின் இறுதியில் நான்கு விஷயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதனை செய்தார்கள். அதில் ஒன்று "தஜ்ஜாலின் சோதனையை விட்டும் இறைவா உன்னிடம் பாதுகாப்புக் கேட்கிறேன்'' என்பதாகும்.
நூல்: புகாரி 833, 1377, 6368, 6375, 6376, 6377
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கற்றுத் தந்துள்ளதால், ஜங்காலமும் தொழுது இந்தப் பிரார்த்தனையைச் செய்து வருபவர்கள் அவனது மாய ஜாலத்தில் மயங்க மாட்டார்கள்; ஈமானை இழக்க மாட்டார்கள். தஜ்ஜாலின் வருகைக்கு முன் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை இது. தஜ்ஜாலை நமது காலத்தில் நாம் அடைந்தால் அவனது அற்புதத்தில் மயங்கி ஈமானை இழக்காமலிருக்க கஹ்ப் அத்தியாத்தின் ஆரம்பப் பகுதியை நாம் ஓதி வர வேண்டும்.
"உங்களில் யாரேனும் அவனை அடைந்தால் கஹ்பு அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை ஓதுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம் 5228 தஜ்ஜால் வெளிப்படும் இடம் தஜ்ஜால் சிரியாவுக்கும், இராக்குக்கும் இடையே வெளிப்பட்டு வலப்புறமும், இடப்புறமும் விரைந்து செல்வான். "அல்லாஹ்வின் அடியார்களே! உறுதியாக நில்லுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
மேற்கில் உள்ள குராஸான் என்ற பகுதியிலிருந்து தஜ்ஜால் வெளிப்படுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : திர்மிதீ 2163
தஜ்ஜால் எந்தப் பகுதியிலிருந்து வெளிப்படுவான் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
31.12.2011. 00:09
