34-வியாபாரம்5

34-வியாபாரம்

பாடம் : 101

இறந்துபோன மிருகத்தின் பதப்படுத்தப்படா தோல்கள்.

2221 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக்கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 102

பன்றிகளைக் கொல்வது.

நபி (ஸல்) அவர்கள் பன்றி வியாபரத்தை (ஹராமாக்கித்-) தடைசெய்தார்கள்.

2222 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (-ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 103

செத்தவற்றின் கொழுப்பை உருக்கக் கூடாது; அவற்றின் (இறைச்சியிலிருந்து வடியும்) திரவக் கொழுப்பை விற்கக் கூடாது.

இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2223 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மதுவை விற்பதாக அறிந்த உமர் (ரலி) அவர்கள், அவரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக (-சபிப்பானாக)! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அவர்களை அல்லாஹ் அழிப்பானாக என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா? எனக் கேட்டார்கள்.

2224 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 104

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் விற்கத்தகாத உருவங்களும்.

2225 சயீத் பின் அபில் ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன் எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவன் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமக்குக்கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்து தான் தீரவேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக! என்றார்கள்.

பாடம் : 105

மதுபான வியாபரம் (மதுபானம் விற்பதோ வாங்குவதோ) ஹராம்- தடைசெய்யப்பட்டதாகும்.

மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும், வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2226 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்பகரா அத்தியாத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து) இறுதி வசனம் வரை இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, மதுபான வியாபாரம் தடைசெய்யப்பட்டு விட்டது! என்றார்கள்.

பாடம் : 106

சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.

2227 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒருகூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 107

யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றிய போது அவர்களின் நிலத்தை விற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது.

இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு (நபிமொழி) அறிவிப்பு உள்ளது.

பாடம் : 108

உயிரினத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது.

ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களைக் கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.

சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்து விட்டு, மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்! என்று கூறினார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம் இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று கடனாக வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகத்தைக் கடனாக வாங்குவதும் ஒரு திர்ஹத்துக்கு ஒரு திர்ஹத்தைக் கடனாக வாங்குவதும் தவறில்லை! என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2228 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில் பிடிக்கப்பட்ட) கைதிகளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒருவராவார். அவர்கள் (முதலில்) திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில் ஒரு பங்காகக்) கிடைத்தார்கள். பின்பு நபி (ஸல்) (அவர்கள் தமது பங்காக ஸபிய்யாவ தேர்ந்தெடுத்துக் கொள்ள) நபியவர்களுக்கு உரியவராய் ஆகிவிட்டார்கள்.

பாடம் : 109

அடிமைகளை விற்பது.

2229 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும் போது, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர்; அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் புணர்ச்சி இடைமுறிப்பு (உடலுறவின் போது பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியே விட்டுவிடும் செயல்-அஸ்ல்) செய்யலாமா? என்று கேட்டேன். அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச்செய்யாமலிருப்பது உங்கள் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும் புணர்ச்சி இடைமுறிப்பு செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை! என்று கூறினார்கள்.

பாடம் : 110

என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் பின்விடுதலையளிக்கப்பட்ட (முதப்பர்-) அடிமையை விற்பது.

2230 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 எனது மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் வாக்களிப்பட்ட (பின்விடுதலையளிக்கப்பட்ட-) அடிமையை நபி (ஸல்) அவர்கள் விற்றார்கள்.

2231 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

எனது மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி (ஸல்) அவர்கள் விற்றார்கள்!

2232 & 2233 ஸைத் பின் காலித் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், விபசாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபசாரம் செய்தால் மீண்டும் அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மூன்றாவது தடவை... அல்லது நான்காவது தடவை விபசாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்றுவிடுங்கள்! என்று பதிலளித்தார்கள்.

2234 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபசாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபசாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபசாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்றுவிடுங்கள்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 111

ஒருவருக்கு அடிமைப்பெண் கிடைத்தால் அவளது கருப்பையில் குழந்தை இல்லை என்பதை உறுதி செய்வதற்கு முன் அவளுடன் பயணம் செய்யலாமா?

அவளைக் கட்டியணைப்பதும் முத்தமிடுவதும் தவறில்லை! என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பிறரால் உடலுறவு கொள்ளப்பட்ட அடிமைப் பெண் அன்பளிப்பாகக் கிடைத்தாலோ, அல்லது விற்கப்பட்டாலோ, அல்லது விடுதலை செய்யப்பட்டாலோ (புதிய எஜமானன்) அவளது கருப்பையில் கரு இல்லையென்பதை ஒரு மாதவிடாய் மூலம் உறுதி செய்து கொள்ளட்டும்! கன்னிப் பெண்ணுக்கு இது அவசியம் இல்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் பிறரால் கர்ப்பமான தமது அடிமைப் பெண்ணை உடலுறவைத் தவிர மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்! மேலும் அவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள் எத்தகையவர்கள் எனில்) தங்கள் மனைவியரிடமோ, தங்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களிடமோ தவிர வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்! என இறைவன் கூறுகின்றான் (23:6) என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2235 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்து, அல்லாஹ் (கமூஸ்) கோட்டையை அவர்களுக்குத் திறந்து விட்ட போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை என்பவரின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப்பெண்ணாக இருந்த அவருடைய கணவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்லத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். சத்துர் ரவ்ஹா எனுமிடத்தை நாங்கள் அடைந்த போது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அவருடன் தாம்பத்தியஉறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) ஹைஸ் எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவியும்! என்றார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது! பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் முழங்கால் மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள்.

பாடம் : 112

செத்தவற்றையும் உருவச் சிலைகளையும் விற்பது.

2236 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 113

நாய் விற்ற காசு.

2237 அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற காசையும் விபசாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்.

2238 அவன் பின் அபீஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள்) குருதிஉறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரது தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள்; அவ்வாறே,அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான்அவர்களிடம் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (குருதி உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகின்ற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடைசெய்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்! என்று பதிலளித்தார்கள்.

 

01.11.2009. 21:50




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
76 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி