29-மதீனாவின் சிறப்புகள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாயம் : 29

29-மதீனாவின் சிறப்புகள்

பாடம் : 1

மதீனாவின் புனிதம்.

1867 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறாரோ அவர் மீது அல்லாஹ்வுடைய... வானவர் (மலக்கு)களுடைய மற்றும் மக்கள் அனைவருடைய சாபம் ஏற்படும்!

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1868 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்! என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்! என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணைவைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; பள்ளிவாசலின் கிப்லா திசையில் (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர்.

1869 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவின் இரு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி என் நாவினால் (என் வாயிலாக) புனித மானதாக ஆக்கப்பட்டு விட்டது! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ ஹாரிஸா குலத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று, பனூஹாரிஸா குலத்தினரே! நீங்கள் ஹரம்-புனித எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள்! என்றார்கள். பின்னர் திரும்பிப் பார்த்து விட்டு, இல்லை! நீங்கள் ஹரம் எல்லைக்குள்தான் இருக்கிறீர்கள்! என்றார்கள்.

1870 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது): ஆயிர் (அய்ர்) என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும்; இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வுடைய -மலக்குகளுடைய மற்றும் மக்கள் அனைவருடைய சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதே)யாகும்! ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ்வுடைய -- மலக்குகளுடைய மற்றும் மக்கள் அனைவருடைய சாபம் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், கூடுதலான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளராக ஆக்கிக் கொண்டால் அவன் மீதும் அல்லாஹ்வுடைய... மலக்குகளுடைய மற்றும் மக்கள் அனைவருடைய சாபம் ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். கூடுதலான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!

பாடம் : 2

மதீனாவின் சிறப்பும் தீயவர்களை அது வெளியேற்றிவிடும் என்பதும்.

1871 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக் கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து-ஹிஜ்ரத் செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன்! அது தான் மதீனா! இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா நகர் தீயவர்களை வெளியேற்றிவிடும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

மதீனாவுக்கு தாபா என்ற பெயரும் உண்டு.

1872 அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக்கிலிருந்து (யுத்தம் முடிந்து) திரும்பினோம். மதீனாவை நெருங்கியதும் இது தாபா! (தூயது!) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 4

மதீனாவின் இரு மலைகள்.

1873 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்க நான் கண்டால், அவற்றை (விரட்டவோ, பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்க மாட்டேன். (ஏனெனில்) மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்டவை புனிதமானவை! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 5

மதீனாவைப் புறக்கணித்தல்.

1874 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனா வளமிக்க நகராக இருக்கும் நிலையில், இரைதேடக் கூடிய பறவைகளும் விலங்குகளும் மட்டுமே நாடி வரக்கூடியதாக அதை மக்கள் விட்டு(ச் சென்று)விடுவார்கள்! மறுமை நாளில், இறுதியாக எழுப்பப்படவிருப்பவர்கள் முஸைனா குலத்தைச் சேர்ந்த இரண்டு இடையர்களே ஆவர்!

(அவர்களுடைய மரணம் எப்படி நிகழும் எனில்) அவர்கள் இவருவரும் தமது ஆடுகளை (இடையர்களின் பாணியில்) அதட்டி அழைத்தபடி மதீனாவை நாடிச் செல்வார்கள்; (மதீனாவைச் சென்றடைந்ததும்) அதை (மனித சஞ்சாரமற்ற) மிருகங்களின் வசிப்பிடமாகக் காண்பார்கள்; இறுதியில் அல்வதா (எனும்) மலைக்குன்றை அடைந்தவுடன் முகம் குப்புற மூர்ச்சையுற்று விழுந்து (இறந்து)விடுவார்கள்!

1875 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யமன், வெற்றிகொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தினர் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு (யமன் நாட்டிற்குச்) சென்றுவிடுவார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா? பின்னர் ஷாம் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றுவிடுவார்கள்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்க கூடாதா? பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே, ஒரு கூட்டத்தார் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு, தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றுவிடுவார்கள்! ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது! இதை அவர்கள் அறிந்திருக்கக் கூடாதா?

இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 6

இறை நம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.

1876 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பாம்பு தன் புற்றில்(சென்று) அபயம் பெறுவது போன்று இறை நம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 7

மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்வது குற்றம்.

1877 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் எவரும் தண்ணீரில் உப்பு கரைவதுபோன்று கரைந்து போவார்கள்.

இதை சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

மதீனாவின் கோட்டைகள்.

1878 உசாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒரு கோட்டையின் மீதிருந்து நோட்டமிட்டார்கள். பிறகு நான் பார்ப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் உங்கள் வீடுகள் நெடுகிலும் (வருங்காலத்தில்) குழப்பங்கள் விளையக் கூடிய இடங்களை மழைத்துளிகள் விழும் இடங்களைப் (பார்ப்பதைப்) போன்று பார்க்கிறேன்! என்று கூறினார்கள்.

பாடம் : 9

தஜ்ஜால் மதீனாவில் நுழைய முடியாது.

1879 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜாவைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரு வானவர்கள் இருப்பார்கள்!

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1880 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1881 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றிவிடுவான்!

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1882 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஜ்ஜால் (மதீனாவை நோக்கி)வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே (மதீனாவுக்கு வெளியே), மதீனாவில் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒரு மனிதர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்! என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களை நோக்கி), நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம்கொள்வீர்களா? என்று கேட்பான். மக்கள் கொள்ள மாட்டோம்! என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தைவிடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒரு போதும் அறிந்திருக்கவில்லை! என்று கூறுவார். தஜ்ஜால் நான் இவரைக் கொல்வேன்! என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் நீண்ட விளக்கம் தரும் போது இதைக் கூறியதாகவும் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

மதீனா தீயவர்களை வெளியேற்றும்.

1883 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி அளித்தார். மறுநாள் முதல் அவர்க காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கிவிடுங்கள்! என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும்! அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்! என்று கூறினார்கள்.

1884 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போருக்குப் புறப்பட்ட போது அவர்களின் தோழர்களிடையே கலந்து விட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் இவர்களைக் கொல்வோம்! என்றனர். மற்றொரு பிரிவினர் இவர்களைக் கொல்லக் கூடாது! என்றனர். அப்போது நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? எனும் (4:88ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவதுபோன்று இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1885 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தை (-பரக்கத்) போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1886 அனஸ் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும் போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தமது வாகனத்தை விரைந்து செலுத்துவார்கள். வாகனத்தின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தால் அன்புடன் அதைத் தட்டிக் கொடுப்பார்கள்.

பாடம் : 11

மதீனாவின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குடிபெயர்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

1887 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலருகே குடிபெயர விரும்பினர். மதீனா(வின் மற்ற பகுதிகள்) நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, பனூசலிமா குலத்தினரே! நீங்கள் (பள்ளிவாசலுக்கு நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்பலனை) எதிர்பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். ஆகவே, பனூசலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.

பாடம் : 12

1888 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவுமேடை (-மிம்பர்)க்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்! எனது மிம்பர் எனது (ஹவ்ளுல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1889 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது, மரணம் தனது செருப்புவாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப்பொழுதை அடைகிறான்! என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கயிதும் வேதனைக் குரலை உயர்த்தி, இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? மஜின்னா எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் (அல்லது இரு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா? என்ற கவிதையைக் கூறுவார்கள்.

மேலும் பிலால் (ரலி)அவர்கள், இறைவா! ஷைபா பின் ரபிஆ, உத்பா பின் ரபீஆ, உமையா பின் கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியதுபோன்று, அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக! என்று கூறுவார்கள். நபி(ஸல்) அவர்கள், இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாஉ, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளம்புரிவாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ஜுஹ்ஃபா எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்! என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்த போது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய்நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) புத்ஹான் எனும் ஓடையில் மாசடைந்த தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!

1890 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்க வழங்குவாயாக! எனது மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்துவாயாக.

01.11.2009. 13:14




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
42 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி