ஜனாஸாவின் சட்டங்கள்
நூலின் பெயர் : ஜனாஸாவின் சட்டங்கள்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள் : 160
விலை ரூபாய் : 28.00
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:180
ஜனாஸாவின் சட்டங்கள்
திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் துணையுடன் தொகுக்கப்பட்ட இந்த நூல் ஜனாஸா பற்றிய சட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள உதவும். கீழ்க்காணும் தலைப்புக்களில் ஜனாஸா குறித்த அனைத்துச் சட்டங்களும் தக்க ஆதாரங்களுடன் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
- மரணம் நெருங்கி விட்டால்...
- மரணத்தை இறைவனிடம் வேண்டுதல்
- துன்பத்தை வேண்டக் கூடாது
- மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்.
- வஸிய்யத்தைப் பதிவு செய்தல்
- மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் வஸிய்யத் செய்தல்
- வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்தல்
- ஏகத்துவத்தைப் பேண வஸிய்யத் செய்தல்
- நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல்
- குர்ஆன் வசனங்களை ஓதி இறை உதவி தேடுதல்
- மரணத்தை நெருங்கியவர் செய்ய வேண்டியது
- மரணத்திற்கு அஞ்சி ஓட்டம் பிடித்தல்
- அலலாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல்
- மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை
- கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்
- முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்.
- பல்வகை மரணங்கள்
- சிறு வயது அல்லது இளம் வயது மரணம்
- தள்ளாத வயதில் மரணித்தல்
- திடீர் மரணம்
- கடுமையான வேதனையுடன் மரணித்தல்
- மக்காவிலும், மதீனாவிலும் மரணித்தல்
- வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்
- இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை
- மறுமணத்தைத் தள்ளிப் போடுதல் (இத்தா)
- காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை
- மறுமணத்தைத் தடுக்கக் கூடாது
- இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை
- கடன்களை அடைத்தல்
- இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்
- இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்
- இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்
- இறந்தவருக்காக நோன்பு நோற்றல்
- இறந்தவர் சார்பில் தொழுகை நிறைவேற்ற முடியாது..
- இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல் .
- பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்
- இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
- ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது
- பாவமன்னிப்புத் தேடல்
- இறந்தவரை ஏசக் கூடாது
- மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல்
- கண்ணீர் விட்டு அழலாம்
- அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!
- ஒப்பாரி வைக்கக் கூடாது
- மூடத்தனமான காரியங்களை செய்யக்கூடாது
- மொட்டையடிக்கக் கூடாது
- சிரைத்தும் சிரைக்காமலும்
- மரணச் செய்தியை அறிவித்தல்
- மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை
- கண்களை மூடுதல்
- உடலுக்கு நறுமணம் பூசுதல்
- உடலை முழுமையாக மூடி வைத்தல்
- பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டலாம்
- இறந்தவர் உடலில் முத்தமிடுதல்
- உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?.
- அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்
- இறந்தவரைக் குளிப்பாட்டுதல்
- ஆடைகளைக் களைதல்
- குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்
- வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்
- ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்
- கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்
- பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்.
- குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
- ஷஹீதுகளைக் குளிப்பாட்டக் கூடாது
- மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை
- குளிப்பாட்ட இயலாத நிலையில்
- கஃபனிடுதல்
- அழகிய முறையில் கஃபனிடுதல் .
- வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்
- வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம் ..
- தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல்
- பழைய ஆடையில் கபனிடுதல் .
- உள்ளாடை அணிவித்தல்
- இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை
- கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல்
- தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்
- கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்
- புதிய ஆடையில் கஃபனிடுதல்
- தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம்
- தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல் .
- தலைப்பாகையுடன் கஃபனிடலாமா? .
- ஷஹீதுகளை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்
- நெருக்கடியில் ஒரு ஆடையில் இருவரை கஃபனிடுதல்...
- உடலை எடுத்துச் செல்லுதல்
- சுமந்து செல்லும் பெட்டி - சந்தூக்
- தோளில் சுமந்து செல்லுதல்
- ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்
- பெண்கள் பின் தொடராமல் இருப்பது சிறந்தது
- ஜனாஸாவை விரைவாகக் கொண்டு செல்லுதல் ..
- வாகனத்தில் பின் தொடர்தல் .
- எடுத்துச் செல்லும் போது எந்த துஆவும் இல்லை
- ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும் . .
- எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை .
- பின் தொடர்ந்தவர் உட்காரக் கூடாது .
- ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்
- ஜனாஸா தொழுகை
- இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை
- முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை இல்லை
- தற்கொலை செய்தவருக்கு தொழுகை இல்லை
- பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துதல்..
- போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை.
- சிறுவர்களுக்கும், கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்
- வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்..
- அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
- ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாம்
- பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
- ஜனாஸாவுக்குத் தனி இடத்தை நிர்ணயித்தல்
- பெண்களும் தொழுகையில் கலந்து கொள்ளுதல்
- ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாத நேரங்கள்
- பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை
- அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல்
- தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் .
- ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை
- ஜனாஸாவை முன்னால் வைத்தல்
- இமாம் நிற்க வேண்டிய இடம்
- மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா? .
- இரண்டு பேர் மட்டும் இருந்தால்
- உளூ அவசியம்
- கிப்லாவை முன்னோக்குதல் .
- தக்பீர் கூறுதல்
- நான்கு தடவை தக்பீர் கூறுதல் ..
- ஐந்து தடவை தக்பீர் கூறுதல்
- ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?
- தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை
- முதல் தக்பீருக்குப் பின்
- இரண்டாவது தக்பீருக்குப் பின்
- மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்
- நபிகள் நாயகம் கற்றுத் தந்த துஆக்கள்
- தக்பீரின் போது கைகளை உயர்த்த வேண்டுமா?
- ஸலாம் கூறுதல்
- உடலை அடக்கம் செய்தல்
- வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது
- அடக்கம் செய்யக் கூடாத நேரங்கள்
- ஒரு குழிக்குள் பலரை அடக்கம் செய்தல் .
- குழியை விசாலமாகத் தோண்டுதல்
- மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்
- கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை
- அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுத்தல்...
- கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
- எடுத்த மண்ணை மட்டும் போட்டு மூட வேண்டும்.
- கப்ரின் மேல் எழுதக் கூடாது
- கப்ருகளைக் கட்டக் கூடாது
- கப்ருகளைப் பூசக் கூடாது
- நபிகள் நாயகத்தின் கப்ரும், பள்ளிவாசலும் ..
- கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
- ஒருவருக்கு அருகில் உறவினரை அடக்கம் செய்தல்.
- தல்கீன் ஓதுதல்
- பித்அத்கள்
மரணம் நெருங்கி விட்டால்...
தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந்து கொள்ள முடியாது.
இவருக்கு இப்போது மரணம் வராது என்று கருதும் அளவுக்கு இளமையாகவும், உடல் நலத்துடனும் கவலை ஏதுமின்றி காணப்படும் எத்தனையோ பேர் யாரும் எதிர்பாராத வகையிலும், விபத்துக்களிலும் திடீரென்று மரணித்து விடுகின்றனர். இத்தகையோர் மிகவும் அரிதாகவே உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்து படிப்படியாகத் தளர்ச்சி அடைந்து மரணிக்கின்றனர். தமக்கு மரணம் விரைவில் வந்து விடும் என்பதை இவர்கள் அன்றாடம் உணரக் கூடிய வாய்ப்பைப் பெறுகின்றனர்.
திடீரென மரணிப்பவர்களுக்குக் கிடைக்காத நல்ல வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கின்றது. மரணம் நெருங்கி விட்டதை இவர்கள் உணர்வதால் கடந்த காலங்களில் செய்யத் தவறிய காரியங்களைச் செய்து முடிக்கவும், கடந்த காலத் தவறுகளைச் சரி செய்யவும் இவர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
மரணத்தை இறைவனிடம் வேண்டுதல்
மரணத்தின் அறிகுறிகளைக் காணும் சிலர் சீக்கிரம் நாம் மரணித்து விட்டால் நல்லது என்று சில வேளை நினைப்பார்கள்.
முதுமையின் காரணமாக மற்றவர்களுக்குப் பாரமாகி, சொந்த பந்தங்கள் கூட அலட்சியப்படுத்துவதைக் காணும் போது ஏன் இவ்வுலகில் நாம் வாழ வேண்டும்? என்று எண்ணுவார்கள். இறைவா! சீக்கிரம் என்னை மரணிக்கச் செய்து விடு! என்று பிரார்த்தனை செய்து விடுவார்கள்.
எந்த நிலையிலும் யாரும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது; மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671, 6351
இதற்கான காரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
எனவே நோய் நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், உடல் உபாதை மற்றும் மன உளைச்சலின் காரணமாக நாம் மரணத்திற்கு ஆசைப்படக் கூடாது. மறுமையில் நமக்குக் கிடைக்கவுள்ள தண்டனையைக் குறைக்க இறைவன் நமக்குத் தந்துள்ள பரிகாரம் என்று துன்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
துன்பத்தை வேண்டக் கூடாது
இறைவன் நமக்கு அளிக்கும் துன்பங்களை நாம் ஏற்றுச் சகித்துக் கொள்ள வேண்டும் என்றாலும் இதை இறைவனிடம் ஒரு கோரிக்கையாக நாம் முன் வைக்கக் கூடாது. இறைவா! மறுமையில் எனக்குத் தரவுள்ள துன்பத்தை இங்கேயே தந்து விடு என்று பிரார்த்திக்கக் கூடாது.
பறவைக் குஞ்சு போல் மெலிந்து போன ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நீ ஏதாவது பிரார்த்தனை செய்து வந்தாயா? என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்! இறைவா, மறுமையில் நீ எனக்கு என்ன தண்டனை கொடுக்க உள்ளாயோ அதை இவ்வுலகிலேயே எனக்கு முன்கூட்டியே வழங்கி விடு என்று பிரார்த்தித்து வந்தேன் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! இதை நீ தாங்க மாட்டாய் என்று கூறிவிட்டு இறைவா இவ்வுலகிலும் எனக்கு நல்லதைத் தா! மறுமையிலும் நல்லதைத் தா! மேலும் நரகத்தின் வேதனையிலிருந்து என்னைக் காப்பாற்று எனக் கூறியிருக்க மாட்டாயா?என்று அறிவுரை கூறினார்கள். அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ் அவரைக் குணப்படுத்தினான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4853
இவ்வுலகிலும் என்னைத் தண்டித்து விடாதே! மறுமையிலும் என்னைத் தண்டித்து விடாதே என்று தான் நமது கோரிக்கை அமைய வேண்டும். இறைவன் நாடினால் இவ்வுலகிலும், மறுமையிலும் நம்மைத் தண்டிக்காமல் இருக்கும் அளவுக்கு அவன் கருணை மிக்கவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மீறப்பட்ட மனித உரிமைகளுக்காகப் பரிகாரம் தேடுதல்
எந்த மனிதராக இருந்தாலும் அவரால் மற்றவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். உடல், பொருளாதாரம் மற்றும் மன ரீதியாக நம்மால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டும். மனிதர்களுக்கு அநீதி இழைத்த நிலையில் நாம் மரணித்தால் மறுமையில் மாபெரும் நட்டத்தை நாம் சந்திக்க நேரும்.
மற்றவரின் மானம், அல்லது வேறு பொருள் சம்பந்தமாக ஒருவர் ஏதேனும் அநீதி இழைத்திருந்தால் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் செல்லாத நாள் வருவதற்கு முன் இன்றே அவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளவும். இவரிடம் நல்லறங்கள் இருந்தால் இவர் செய்த அநியாயத்தின் அளவுக்கு இவரிடமிருந்து நல்லறம் பிடுங்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது சுமத்தப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2449, 6534
இல்லாதவர் யார் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் யாரிடம் காசுகளும், தளவாடங்களும் இல்லையோ அவர் தான் இல்லாதவர் என்று விடையளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் ஒருவர் வருவார். அதே சமயம் இவனைத் திட்டியிருப்பார்; அவன் மீது அவதூறு கூறியிருப்பார்; இவனது சொத்தைச் சாப்பிட்டிருப்பார்; அவனது இரத்தத்தை ஓட்டியிருப்பார்; இவனை அடித்திருப்பார். இவர் செய்த நன்மைகள் இவனுக்கும் அவனுக்குமாக வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன் இவரது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பின்னர் இவர் நரகில் வீசப்படுவார். இவர் தான் மறுமை நாளில் இல்லாதவர் என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4678
வஸிய்யத்தைப் பதிவு செய்தல்
ஒரு மனிதர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பதற்கு இஸ்லாத்தில் தெளிவான சட்டம் உள்ளது. எனவே தனது சொத்துக்களை வாரிசுகள் இவ்வாறு பிரித்துக் கொள்ள வேண்டும் என்று வஸிய்யத் - மரண சாசனம் - செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.
ஆயினும் ஒருவரது சொத்தில் அவரது சொந்த பந்தங்கள் அனைவருக்கும் பங்கு கிடைக்காது.
கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள் ஆகிய உறவுகளுக்குத் தான் சொத்துரிமை கிடைக்கும். தந்தை மகன் போன்ற உறவுகள் இல்லாத போது தான் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும். சகோதர சகோதரிகளும் இல்லாத போது தான் தந்தையின் சகோதரரர்களுக்குக் கிடைக்கும்.
எனவே தனது உறவினர்களில் சொத்துரிமை கிடைக்காத உறவினர்களுக்குத் தனது சொத்தில் ஏதாவது கிடைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படலாம்.
அது போல் பள்ளிவாசல் போன்ற அறப்பணிகளுக்காக தனது சொத்தில் ஏதாவது அளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பலாம்.
அவ்வாறு விரும்புவோர் என் மரணத்திற்குப் பின் இந்த நபருக்கு இவ்வளவு கொடுங்கள்! அந்த நற்பணிக்கு இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்று எழுதி வைப்பது அவசியமாகும்.
எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் வஸிய்யத் செய்யத் தக்கது அவரிடம் இருந்தால் அதை எழுதிக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் கழியலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரி 2738, முஸ்லிம் 3074, 3075
வழங்க வேண்டும் என்று எப்போது நாம் தீர்மானம் செய்கிறோமோ அதை உடன் எழுதிப் பதிவு செய்து விட வேண்டும். ஏனெனில் எந்த நேரத்தில் நமக்கு மரணம் வரும் என்பதை நம்மால் கணிக்க இயலாது.
மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் வஸிய்யத் செய்தல்
வாரிசுகளை அறவே அலட்சியம் செய்துவிட்டு அனைத்து சொத்துக்களையோ அல்லது பெரும் பகுதி சொத்துக்களையோ எந்த மனிதருக்காகவும், எந்த நற்பணிக்காகவும் எழுதி வைக்க அனுமதியில்லை. அவ்வாறு எழுதினால் சட்டப்படி அது செல்லத் தக்கதல்ல. ஒரு மனிதர் அதிகப் பட்சமாக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு, அல்லது அதை விடக் குறைவாகவே வஸிய்யத் - மரண சாசனம் - செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருவரது சொத்தின் மதிப்பு மூன்று லட்சம் என்றால் அவர் ஒரு லட்சம் அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு மட்டுமே வஸிய்யத் செய்ய உரிமை உண்டு. ஒருவர் அறியாமை காரணமாக அனைத்தையும் வஸிய்யத் செய்தால் மூன்றில் ஒரு பங்கு என்றே மார்க்கத்தில் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜின் போது நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது என்னை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் எனக்குக் கடுமையான வேதனை ஏற்பட்டுள்ளது. நானோ செல்வம் உடையவனாக இருக்கிறேன். எனக்கு ஒரே ஒரு மகள் தான் இருக்கிறார். எனவே எனது சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்குகளைத் தர்மம் செய்யட்டுமா? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அப்படியானால் பாதி(யை தர்மம் செய்யட்டுமா?) என்று கேட்டேன். அதற்கும் கூடாது என்றனர். பின்னர் மூன்றில் ஒரு பங்கு தர்மம் செய். அது கூட அதிகம் தான். உனது வாரிசுகளைப் பிறரிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு பெற்ற நிலையில் விட்டுச் செல்வது சிறந்தது என்று அறிவுரை கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 1296, 3936
வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்தல்
ஒருவர் தனது சொத்தில் மகன், மகள், தாய், தந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய அனுமதியில்லை. ஏனெனில் அந்தப் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு நமக்குச் சட்டத்தை வழங்கி விட்டான்.
(வாரிசு) உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்யலாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2047, நஸயீ 3581, 3582, 3583, இப்னு மாஜா 2703, அஹ்மத் 17003, 17007, 17387, 17393
உறவினர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பேண வஸிய்யத் செய்தல்
மரணம் நெருங்கி விட்டதாக உணர்பவர் தமது குடும்பத்தார் ஏகத்துவக் கொள்கையைக் கடைசி வரை கைக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்..
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றே (பிள்ளைகள்) கூறினர்.
திருக்குர்ஆன் 2:133
நிலைத்து நிற்கும் தர்மம் செய்தல்
மனிதன் மரணித்து விட்டால் அவனால் எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.
ஆயினும் நிலைத்து நிற்கும் வகையில் நாம் ஒரு நல்லறத்தைச் செய்துவிட்டு மரணித்தால் அந்த நல்லறத்தின் மூலம் மக்கள் பயனடையும் காலம் வரை நமக்கு நன்மைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை: நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3084
இவ்வுலகில் வாழும் போது நாம் ஒரு பள்ளிவாசல் கட்டிவிட்டு மரணித்தால் அதில் மக்கள் தொழுகை நடத்தும் காலமெல்லாம் நமக்கு நன்மைகள் வந்து சேரும்.
நாம் ஒரு கிணறு தோண்டி விட்டு மரணித்தால் அக்கிணற்றில் மக்கள் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தும் போதெல்லாம் நமக்கு நன்மை வந்து சேரும்.
எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்கள்: புகாரி 6012, 2320, முஸ்லிம் 2904
ஒவ்வொருவரும் இதில் அதிகக் கவனம் செலுத்தி நன்மைகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக மரணத்தை நெருங்கியவர் இதில் சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
குர்ஆன் வசனங்களை ஓதி இறை உதவி தேடுதல்
படுக்கையில் கிடக்கும் நிலையை அடைந்தவர்கள் (குல் ஹுவல்லாஹு அஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்னாஸ் ஆகிய) திருக்குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி, ஊதிக் கொள்ள வேண்டும். இதை ஓத முடியாத அளவுக்கு வேதனை அதிகமாக இருந்தால் அவரது குடும்பத்தினர் அவருக்காக அதை ஓதி கைகளில் ஊதி அதன் மூலம் அவரது உடலில் தடவ வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்படும் போது (முஅவ்விதாத் எனப்படும்) கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி தமது கையால் தடவிக் கொள்வது வழக்கம். அவர்கள் எந்த நோயில் மரணித்தார்களோ அந்த நோயின் போது கடைசி மூன்று அத்தியாயங்களை நான் ஓதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடவி விடுவேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4439, 5735
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்படும் போது தமக்காக கடைசி மூன்று அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். அவர்களின் வேதனை கடுமையான போது அவர்களுக்காக நான் ஓதி அவர்களின் கைகளுக்குரிய பரகத்துக்காக அவர்கள் கையால் தடவி விட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5016
மரணத்தை நெருங்கியவர் இறுதியாகச் செய்ய வேண்டியது
மரணத்தை நெருங்கியவர் கடைசியாக லாயிலாஹ இல்லலல்லாஹ் என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ், மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள். பின்னர் தமது கைகளை ஊன்றி ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி...) என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4449, 6510
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது ஃபிர் ரஃபீகில் அஃலா என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4436
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக் என்று கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4440
இறைவா என்னை மன்னித்து அருள் புரிவாயாக! நண்பனுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்பது மேற்கண்ட துஆவின் பொருள்.
மரணத்திற்கு அஞ்சி ஓட்டம் பிடித்தல்
நாம் வசிக்கும் ஊரில் வயிற்றுப் போக்கு, பேதி, காலரா, பிளேக் போன்ற கொடிய நோய் பரவி அங்குள்ள மக்கள் அதிக அளவில் மரணிக்க நேர்ந்தால் நமது ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கக் கூடாது.
மற்றொரு ஊரில் இது போன்ற நோய்களால் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தால் அவவூருக்குப் பயணம் செய்யக் கூடாது.
ஓர் ஊரில் பிளேக் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 3473, 5728, 6974
பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு, அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 3474, 5734, 6619
அலலாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்
மரணத்தை நெருங்கும் போது நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வரும். இதற்காக இறைவன் நம்மிடம் கொடூரமாக நடந்து கொள்வானோ என்று எண்ணாமல் அவனிடம் மன்னிப்புக் கேட்டால் நம்மை மன்னித்து அரவணைப்பான் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5124, 5125
மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை
கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல்
ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1523, 1524
மேற்கண்ட நபிமொழிக்கு வேறு விதமாகப் பொருள் கொண்டு சிலர் குழப்புவதால் இது பற்றி சற்று அதிகமாக அறிந்து கொள்வது நல்லது.
மேற்கண்ட நபிமொழியில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் மவ்த்தா என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு மரணித்தவருக்கு என்பதே நேரடிப் பொருளாகும். இதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இறந்த பின் அவருக்கு அருகில் லாயிலாஹ இல்லலல்லாஹ் என்று கூறிக் கொண்டு இருக்க வேண்டும் என்று குழப்பி வருகின்றனர்.
மவ்த்தா என்ற சொல்லின் நேரடிப் பொருள் மரணித்தவர் என்பது தான். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனாலும் சில சொற்களுக்கு நேரடிப் பொருள் கொள்ள இயலாத நிலை ஏற்படும் போது அதற்கு நெருக்கமான வேறு பொருள் கொள்வது எல்லா மொழிகளிலும் உள்ளது போலவே அரபு மொழியிலும் உள்ளது.
சிங்கத்தின் வீர முழக்கம் என்ற சொற்றொடரில் சிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் குறிப்பிட்ட வனவிலங்கு என்றாலும் அத்துடன் இணைந்துள்ள வீர முழக்கம் என்ற சொற்றொடர் சிங்கத்துக்கு நேரடிப் பொருள் கொள்வதைத் தடுக்கிறது. வனவிலங்கு எந்த முழக்கமும் செய்யாது என்பதால் வீரமிக்க ஒரு மனிதரைப் பற்றித் தான் பேசப்படுகிறது என்று புரிந்து கொள்வோம்.
அகராதியில் வனவிலங்கு என்று தானே பொருள் செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் இந்தச் சொற்றொடருக்குப் பொருந்தாது. இது போல் ஆயிரமாயிரம் உதாரணங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. இதே அடிப்படையில் தான் மேற்கண்ட ஹதீஸும் அமைந்துள்ளது.
மரணித்தவரிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுங்கள் என்று சொல்லப்பட்டால் இவர்கள் செய்கின்ற வாதம் பொருந்தலாம்.
மரணித்தவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லிக் கொடுங்கள் என்பது தான் ஹதீஸின் வாசகம். சொல்வது வேறு! சொல்லிக் கொடுப்பது வேறு! சொல்லிக் கொடுப்பது என்றால் அவர் முன்னே நாம் ஒன்றைச் சொல்லி அவரையும் சொல்ல வைப்பதாகும்.
மரணித்தவருக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதால் இந்த இடத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு என்று தான் பொருள் கொண்டாக வேண்டும்.
(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்பவர்களே என்று திருக்குர்ஆன் (39.20) கூறுகிறது. இதிலும் மய்யித் என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களை மய்யித் என்று அல்லாஹ் கூறுகிறான். இனி மரணிக்கப் போகிறவர் என்று இந்த இடத்தை நாம் புரிந்து கொள்கிறோம். இந்த வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்திருந்தார்கள் என்று ஒருவர் கூட புரிந்து கொள்ள மாட்டோம்.
சொல்லிக் கொடுங்கள் என்று கூறுவதாக இருந்தால் செவியேற்பவருக்குத் தான் சொல்லிக் கொடுக்க முடியும்.
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது. (27.80) என்று அல்லாஹ் கூறுவதால் மரணத்தை நெருங்கியவருக்கு சொல்லிக் கொடுங்கள் என்று தான் மேற்கண்ட நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இப்னு ஹிப்பான் என்ற நூலில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு நபிமொழி நாம் கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் 7/272
இந்த ஹதீஸிலும் மவ்த்தா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிற்பகுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை மவ்த்தா என்பதற்கு நாம் என்ன பொருள் செய்ய வேண்டும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது. யாருடைய கடைசி வார்த்தை லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைகிறதோ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து மரணித்தவர் அருகில் மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்பதையும், மரணத்தை நெருங்கியவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த செயல் விளக்கமும் இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சார்களில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்வீராக! எனக் கூறினார்கள். அதற்கு அம்மனிதர் (நான் உங்களுக்கு) மாமாவா? சிறிய தந்தையா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் மாமா தான் எனக் கூறினார்கள். பிறகு அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது எனக்கு நன்மை பயக்குமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 12104, 13324
மரணத்தை நெருங்கியவர் அருகில் நாம் தான் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். மரணத் தறுவாயில் உள்ளவரைச் சொல்லுமாறு நேரடியாகக் கூறக் கூடாது என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். நாம் இவ்வாறு கூறச் சொல்லும் போது அவர் மறுத்து விட்டால் அவர் இறை மறுப்பாளராக மரணிக்கும் நிலை ஏற்படும் என்று காரணம் கூறுகிறார்கள்.
இவர்கள் கூறுவது தவறு என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கலாம். மேலும் சொல்லிக் கொடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளதால் நேரடியாகச் சொல்லிக் கொடுப்பதே நபிவழியாகும்.
முஸ்லிமல்லாதவருக்கும் கலிமா சொல்லிக் கொடுத்தல்
மரணத்தை நெருங்கியவர் முஸ்லிமல்லாதவர் என்றால் நாம் சொல்லிக் கொடுப்பதால் கடைசி நேரத்தில் அவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றவராக மரணிக்கக்கூடும் என்று நாம் நம்பினால் அவர்களுக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை அதன் பொருளுடன் சொல்லிக் கொடுப்பது சிறந்ததாகும்; நபிவழியுமாகும்.
யூத இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தார். அவர் நோயுற்ற போது அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது தலைக்கு அருகில் அமர்ந்து, நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் தனது தந்தையைப் பார்த்தார். நபிகள் நாயகம் (ஸல்) கூறுவதைக் கேள் என்று அவரது தந்தை கூறினார். உடனே அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவரை நரகத்திலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறிக் கொண்டே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1356, 5657
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தனர். அங்கே அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா ஆகியோர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையை மொழியுங்கள். அதை வைத்து அல்லாஹ்விடம் உங்களுக்கு சாட்சி கூறுகின்றேன் என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்ல், அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யா இருவரும் அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீ புறக்கணிக்கப் போகிறாயா?என்று கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவ்விருவரும் தாம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள். முடிவில் நான் அப்துல் முத்தலிபின் வழியில் தான் இருப்பேன் என்று அபூ தாலிப் கூறி விட்டார். லாயிலாஹ இல்லல்லாஹ் கூற மறுத்து விட்டார்.
அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)
நூல்: புகாரி 1360, 3884, 4675, 4772
முஸ்லிமல்லாதவர்கள் நம்மோடு பழகியவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கடைசி நேரத்திலாவது இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல முயல வேண்டும் என்பதற்கு மேற்கண்ட நபிமொழிகள் சான்றுகளாகவுள்ளன.
பல்வகை மரணங்கள்
ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலை பரவலாக மக்களிடம் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும், அவர்கள் காலத்தில் மரணித்த பலரது மரணங்களையும் ஆய்வு செய்யும் போது இந்த மனநிலை முற்றிலும் தவறானது என்று அறிந்து கொள்ளலாம்.
சிறு வயது அல்லது இளம் வயது மரணம்
ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.
சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.
எப்போது மரணம் ஏற்படும் என்று இறைவன் திட்டமிட்டபடி தான் ஒருவர் மரணிக்கிறார். ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 7:34
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 10:49
எந்தச் சமுதாயமும் தனது காலக் கெடுவை முந்தாது; பிந்தாது.
திருக்குர்ஆன் 15:5
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 16:61
மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 35:45
அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்)
திருக்குர்ஆன் 40:67
அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 63:11
ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி இரண்டு குழந்தைகள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளும் தான் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 102, 1250, 7310
சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக இல்லை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்த போது, இவருக்குச் சொர்க்கத்தில் பாலுட்டும் அன்னை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1382, 3255, 6195
பால் குடிக்கும் பருவத்தில் இப்ராஹீம் மரணித்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். பெற்றோரின் தவறுகள் காரணமாகவே குழந்தைகள் இறக்கிறார்கள் என்றால் இப்ராஹீம் நிச்சயம் குழந்தைப் பருவத்தில் மரணித்திருக்க முடியாது.
இளம் வயதில் அல்லது நடுத்தர வயதில் ஒருவர் மரணித்தால் அதற்குக் காரணம் அவரது தீய செயல்கள் கிடையாது. எத்தனையோ நன்மக்கள் இளம் வயதில் மரணம் அடைந்ததற்குச் சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு புதல்விகளை அல்லாஹ் கொடுத்தான். நான்கு பேரும் மிகவும் இளம் வயதில் தான் மரணித்தார்கள். மூன்று புதல்விகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே மரணித்து விட்டார்கள்.
ருகையா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 2ஆம் ஆண்டில் மரணித்தார்கள்.
ஸைனப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜ்ரி 9ஆம் ஆண்டு மரணித்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஆறு மாதங்களில் மரணித்தார்கள். (புகாரி 4241)
நடுத்தர வயதைக் கூட அடையாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு புதல்விகளும் மரணித்திருப்பதால் இளமை மரணம் துர்மரணம் அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.
தள்ளாத வயதில் மரணித்தல்
சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.
(புகாரி 2822, 6365, 6370, 6374, 6390,)
இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இவ்வுலகில் துன்பங்களைச் சந்தித்தால் இதன் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் அவர் தண்டிக்கப்படாமல் தப்பிக்க உதவும். ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319
இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் 5318
எனவே முதுமையில் மரணித்தாலும், இளமையில் மரணித்தாலும் இரண்டுமே நன்மையில் தான் முடியும்.
தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியிருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முதுமையில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள். (முஸ்லிம் 1543)
இப்னு உமர் (ரலி) அவர்களும் தள்ளாத வயதில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள்.
கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள். (புகாரி 3889, 4676, 6690, 7225)
எனவே தள்ளாத வயதில் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணிப்பதால் அவருக்கு ஏற்பட்டது துர்மரணம் என்று கூற முடியாது.
திடீர் மரணம்
சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.
திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை.
திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.
ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 654, 721, 2829, ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)
நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694 பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2830, 5732
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் திடீர் மரணங்கள் தாம். ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதவில்லை.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1388, 2760
இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.
கடுமையான வேதனையுடன் மரணித்தல்
சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள்.
மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும்.
மரணத்தின் கடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுபவித்த பின், வேறு எவருக்கும் மரணம் கடுமையாக இருப்பதை நான் வெறுக்க மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 4446
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடுமையான வேதனையுடன் தான் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். எனவே இத்தகைய வேதனையை ஒருவர் அனுபவிப்பதால் அதைத் துர்மரணம் எனக் கூற முடியாது.
மக்காவிலும், மதீனாவிலும் மரணித்தல்
மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது ஒரு பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது
இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.
(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.
இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்அவ்ஸத் (6/89) நூலில் உள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் மூஸா பின் அப்துர் ரஹ்மான் அல்மஸ்ரூகி இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.
பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளரான யூசுப் பின் அதிய்யா அல்பஸரி என்பவர் பலவீனமானவர். வானத்தில் மரணித்தவர் என்பன போன்ற சொற்களில், நபிமார்களின் சொற்களில் காணப்படும் கருத்தாழம் எதுவும் இல்லை.
இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதுடன் இதன் கருத்தும் ஏற்புடையதாக இல்லை.
இரண்டு புனிதத் தலங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எத்தனையோ எதிரிகள் மரணித்துள்ளனர். முனாஃபிக்குகள் எனப்படும் வேடதாரிகள் பலரும் மதீனாவில் தான் இறந்தனர்.
அது போல் எத்தனையோ நபித்தோழர்கள் இரண்டு புனிதத் தலங்களை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் மரணித்தனர். நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் புனிதத் தலங்களில் மரணிக்கவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் மரணமடைவது எவரது அதிகாரத்திலும், விருப்பத்திலும் உள்ளது அல்ல. நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் மரணிக்கும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.
மேற்கண்ட காரணங்களால் இதன் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.
வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்
வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று நம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன.
யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.
இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ் திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பலவீனமானது என்பதை திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.
இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்.
எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மரணித்தால் அது சிறப்பானது என்பது தவறாகும்.
ஒரு மனிதர் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த வயதில், எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை
இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகிறது.
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுடையதல்ல.
கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் கருவில் வளரும் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மறுமணம் செய்யலாகாது.
கணவன் இறந்த மறு நாளே மனைவி குழந்தையைப் பெற்று விட்டால் அந்த ஒரு நாள் தான் இவளுக்குரிய இத்தா - திருமணத்தைத் தள்ளிப் போடும் - காலமாகும்.
கணவன் மரணிக்கும் போது எட்டு மாத கர்ப்பிணியாக மனைவி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகலாம். இந்தக் காலமே இவளுக்குரிய இத்தாவாகும்.
கணவன் மரணிக்கும் போது மனைவி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பது தெரியாவிட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும். நான்கு மாதம் பத்து நாட்களுக்குள் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா மேலும் நீடிக்கும்.
நான்கு மாதம் பத்து நாட்களில் குழந்தை இல்லை என்பது உறுதியானால் மறு நாளே அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.
முதல் கணவனின் குழந்தையைச் சுமந்து கொண்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்தினால் ஒருவனின் குழந்தைக்கு வேறொருவனைத் தந்தையாக்கும் மோசடியில் அது சேர்ந்து விடும்.
கணவன் இறந்த பின் மனைவி கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் வரை கணவனின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கருத்தில் கொண்டும், கருவறையில் வளரும் குழந்தையின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும் கணக்கிட்டு முதல் கணவனின் சொத்திலிருந்து பங்கு பெற்றுத் தரும் பொறுப்பு இவளுக்கு உள்ளது. எனவே தான் இஸ்லாம் இந்தச் சட்டத்தை வழங்கியுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.
திருக்குர்ஆன் 65:4 ஒரு பெண்ணிண் வயிற்றில் கரு வளர்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாதமே போதுமானது என்ற நிலையில் நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அதிக காலம் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்வது ஏன்? என்று சிலருக்குத் தோன்றலாம்.
மாதவிடாய் நின்றவுடன் ஒருத்தி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றாலும் ஒரு பெண் சீக்கிரம் திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது வயிற்றில் கரு வளரவில்லை என்று சொல்லி விடலாம்.
அல்லது அவள் கருவுற்றிருப்பது வெளிப்படையாகத் தெரியாத நிலையில் முதல் கணவன் இறந்து ஒரு மாதத்தில் மற்றொருவனை அவள் திருமணம் செய்தால் தனக்குப் பிறந்த குழந்தை தன்னுடையதாக இருக்காதோ என்று இரண்டாவது கணவன் சந்தேகப்படலாம்.
நான்கு மாதம் பத்து நாட்களில் ஒரு பெண் கருவுற்றிருப்பது அவளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் தெரியும் அளவுக்கு வளர்ந்து விடும். நான்கு மாதம் பத்து நாட்களில் எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் இரண்டாவது கணவனுக்கு எந்தச் சந்தேகமும் வர முடியாது.
இப்படி திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுவதற்குப் பெயர் தான் இத்தா. ஆனால் தமிழக முஸ்லிம்கள் இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் இத்தா என்ற பெயரில் இருட்டறையில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்லத் தடை விதிக்கின்றனர்.
மார்க்கம் கட்டளையிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த போதும் எந்த ஆணும் அவளைப் பார்க்கக் கூடாது என்கின்றனர்.
ஆண் குழந்தைகளைக் கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.
இவை அனைத்தும் மூடநம்பிக்கை ஆகும்.
கணவன் இறந்த பின் இஸ்லாம் அவளுக்கு வரையறுத்துள்ள காலத்துக்கு மறுமணத்தை அவள் தள்ளிப் போட்டால் அவள் இத்தாவைக் கடைப்பிடித்தவளாக ஆகி விடுவாள்.
இத்துடன் இன்னும் சில விதிகளும் உள்ளன. அவற்றை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது.
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் நறுமணம் பூசக்கூடாது. கண்மை இடக்கூடாது. அஸப் எனப்படும் வண்ண உடை தவிர வேறு வண்ண உடைகளை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
துணிகளை நெய்வதற்கான நூல்களை முறுக்கிய நிலையில் சாயத்தில் முக்கி எடுத்துப் பின்னர் பிரித்து நெய்யப்படுவதே அஸப் எனப்படும். இவ்வாறு செய்வதால் முறுக்கப்பட்ட நூல் தொகுப்பின் உட்பகுதி சாயமில்லாமலும், வெளிப்பகுதி சாயமாகவும் இருக்கும். அதாவது வெள்ளையும், நிறமும் கலந்ததாக அது இருக்கும்.
முற்றிலும் வண்ணமாக உள்ள ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும், வண்ணமும் கலந்த நிலையில் உள்ள ஆடைகளையோ, முற்றிலும் வெண்மையான ஆடைகளையோ அணியலாம்.
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 1960, அஹ்மத் 25369
இவற்றைக் கடைப்பிடித்தால் ஒருத்தி இத்தாவைக் கடைப் பிடித்து விட்டாள் என்பது பொருள்.
இந்தக் காலகட்டத்தில் திருமணத்தை நிச்சயம் செய்யவும் கூடாது. (காத்திருக்கும் கால கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பெண்ணிடம் ஆண்கள் பேசலாம் என்பதையும், அவ்வாறு பேசும் போது உண்னை நான் மணந்து கொள்கிறேன் என்று நேரடியாகப் பேசக் கூடாது என்பதையும், சாடைமாடையாக இவ்வாறு பேசிக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இத்தா காலத்தில் ஆண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கும் இவ்வசனம் போதிய சான்றாக உள்ளது.
இது பற்றி மக்களிடம் அதிகமான அறியாமை நிலவுவதால் மேலும் சில சான்றுகளை முன் வைக்கிறோம்.
(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்.
நூல்: முஸ்லிம் 1527
கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தா காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.
இத்தா இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத் தான் இத்தாவின் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை
அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும்.
இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து விட்ட தவறான நம்பிக்கையாகும்.
மறுமணத்தைத் தடுக்கக் கூடாது
கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது.
தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.
தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
திருக்குர்ஆன் 4.19
பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
அல்லாஹ்வுடைய எச்சரிக்கைக்கு அஞ்சி சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.
இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை
எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.
ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.
அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:134
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.
திருக்குர்ஆன் 2:286
(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 6.164
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.
திருக்குர்ஆன் 17:15
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.
திருக்குர்ஆன் 35:18
ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.
திருக்குர்ஆன் 39:7
மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
திருக்குர்ஆன் 53:36-39
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்ற பொதுவான இந்த விதியிலிருந்து சில காரியங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்காகக் காட்டித் தந்த அந்தக் காரியங்களை மட்டும் இறந்தவர் சார்பில் உயிருடன் உள்ள அவரது வாரிசுகள் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்ச் சேரும்.
கடன்களை அடைத்தல்
ஒருவர் கடன்பட்டவராக மரணித்தால் அதை மற்றவர்கள் அடைக்கலாம். அவ்வாறு அடைத்தால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் வழக்குத் தொடர முடியாது. எனவே மரணித்தவர் செய்த நல்லறங்கள் மரணித்தவருக்குச் சேர வேண்டுமென்று அவரது வாரிசுகள் விரும்பினால் அவர் பட்ட கடன்களை அடைப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? எனக் கேட்டார்கள். மக்கள் இல்லை எனக் கூறினார்கள். ஏதாவது சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள் இல்லை எனக் கூறினார்கள். உடனே தொழுகை நடத்தினார்கள். பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அல்லாஹ்வின் தூதரே! தொழுகை நடத்துங்கள் என்று மக்கள் கூறினார்கள். இவர் மீது கடன் ஏதும் உள்ளதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஆம் என்று சொல்லப்பட்டது. ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட்டார்கள். மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மூன்றாவதாக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கூறினார்கள். 'இவர் ஏதேனும் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள் இல்லை என்றனர். 'இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'மூன்று தங்கக் காசுகள் கடன் உள்ளது' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது அபூ கதாதா (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்! இவரது கடனுக்கு நான் பொறுப்பு' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அறிவிப்பவர்: ஸலமா பின் அல்அக்வஃ (ரலி)
நூல்: புகாரி 2291, 2295
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்டால் 'கடனை அடைப்பதற்கு எதையேனும் இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். கடனை அடைக்க எதையேனும் அவர் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டால் அவருக்குத் தொழுகை நடத்துவார்கள். இல்லாவிட்டால் 'உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்' என்று முஸ்லிம்களிடம் கூறி விடுவார்கள். ஏராளமான வெற்றிகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய போது 'மூமின்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிக உரிமை படைத்தவன். எனவே கடன்பட்டு மூமின்கள் யாரேனும் மரணித்து விட்டால் அதைத் தீர்ப்பது என் பொறுப்பு. அவர் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேர்ந்தது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2297, 5371
கடன்பட்டவர் சொத்து எதையும் விட்டுச் சென்றால் வாரிசுகள் அதைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு முன்னால் அவரது சொத்திலிருந்து அவரது கடனை அடைப்பது அவசியம். கடன் போக மிஞ்சியது தான் உண்மையில் அவர் விட்டுச் சென்றதாகும். இதைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
'இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லா விட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:11
உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 4:12
ஒருவர் கடனை அடைக்கும் அளவுக்கு சொத்து எதையும் விட்டுச் செல்லாவிட்டால் அவரது வாரிசுகள் சொந்தப் பொறுப்பில் அதை நிறைவேற்ற வேண்டும். அல்லது கடன் கொடுத்தவரைச் சந்தித்து தள்ளுபடி செய்யுமாறு கேட்க வேண்டும்.
அவ்வாறு கடனை நிறைவேற்றா விட்டாலோ, கடன் கொடுத்தவர் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டாலோ இறந்தவர் மறுமையில் பெரிய அளவில் நட்டம் அடைவார். கடன் கொடுத்தவர் மறுமையில் இறைவனிடம் முறையிடும் போது இவருடைய நன்மைகளை எடுத்துக் கடன் கொடுத்தவர் கணக்கில் அல்லாஹ் சேர்த்து விடுவான். செய்த நல்லறங்கள் யாவும் மற்றவருக்குப் போய்ச் சேர்ந்து விடும்.
இறந்தவருக்காக ஆடம்பர விழாவும், விருந்துகளும் வைப்பவர்கள் இறந்தவர் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால் அவரது கடன்களை அடைப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள்.
இறந்தவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல்
இறந்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் செய்யும் மற்றொரு நன்மை அவருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் துஆச் செய்வதாகும்.
அவர்களுக்குப் பின் வந்தோர் 'எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்' என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 59:10
குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.
'ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். அவை நிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3084
மனிதன் மரணித்த பின் பயன் தரும் மூன்று காரியங்களில் பெற்றோருக்காகப் பிள்ளைகள் செய்யும் பிரார்த்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே பிள்ளைகள் தமது பெற்றோருக்காக அதிகமதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே வர வேண்டும். இதனால் பெற்றோர் நன்மைகளை அடைவார்கள்.
இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்
இறந்தவரின் நன்மைக்காக அவரது வாரிசுகள் சாதாரண அல்லது நிலையான தர்மத்தைச் செய்தால் அதன் நன்மை இறந்தவரைச் சேரும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1388, 2760
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 'எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன்' என அவர் கூறினார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2756, 2762, 2770
'என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா?' என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி
நூல்: முஸ்லிம் 3081
'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?' என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். 'எது சிறந்த தர்மம்?' என்று கேட்டேன். 'தண்ணீர் வழங்குதல்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅது பின் உபாதா (ரலி)
நூல்: நஸயீ 3604, 3606
பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு குளம் வெட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்
இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.
அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.
ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1852, 7315
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார்' எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6699
இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். 'அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.
இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்
இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தார். அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி விட்டனர். இவர்களிடம் ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை என்பதால் அவருக்காக ஹஜ் செய்யலாகாது.
அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.
இறந்தவருக்காக நோன்பு நோற்றல்
இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.
'தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1952
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1953
இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது
ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.
ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.
ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.
நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுதியும், ஆதாரமும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளை பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.
தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:59,60
தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவ மன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.
தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
திருக்குர்ஆனின் 36வது அத்தியாயமான யாஸீன் அத்தியாயத்தை ஒருவர் இறந்தவுடன் அவரது உடலுக்கு அருகில் அமர்ந்து சிலர் ஓதி வருகின்றனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நாட்களிலும் யாஸீன் அத்தியாயத்தை ஓதுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றனர்.
'உங்களில் இறந்தவர் மீது யாஸீன் ஓதுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2714, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19416, 19427 ஹாகிம் 1/753
மேற்கண்ட ஹதீஸ்களில் அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யார் என்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் எந்த ஹதீஸாக இருந்தாலும் அதை அறிவிப்பவருக்கு வரலாறு இருக்க வேண்டும். அவரது நினைவாற்றல், நாணயம் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இருவரும் யார் என்றே தெரியாததால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அபூ உஸ்மான் என்பவர் தனது தனது தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் மஃகில் பின் யஸார் வழியாக நேரடியாக அறிவிக்கும் சில ஹதீஸ்கள் உள்ளன. பைஹகி, இப்னு ஹிப்பான் மற்றும் சில நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ உஸ்மான் என்பவர் யார் என்று அறியப்படாதவர் என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் மஃகில் பின் யஸார் வழியாக ஒரு மனிதர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு மனிதர் என்றால் யார்? அவரது நம்பகத் தன்மை எத்தகையது என்பதை யாரும் அறிய முடியாது. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
இவை அனைத்துமே பலவீனமாக உள்ளதால் இறந்தவர்களுக்கு அருகில் அல்லது இறந்தவரின் நன்மைக்காக யாஸீன் ஓதுவதற்கு ஆதாரம் இல்லை.
'மரணத்தை நெருங்கியவரின் அருகில் யாஸீன் ஓதினால் அவரது வேதனை இலேசாக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அல்ஃபிர்தௌஸ் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அறிவிக்கும் ஸாலிம் பின் மர்வான் என்பவர் பலவீனமானவர்.
யாஸீன் என்பது 114 அத்தியாயங்களில் ஒரு அத்தியாயம். மற்ற அத்தியாயங்களை நமது நன்மைக்காக நாம் ஓதுவது போல யாஸீனையும் நமது நன்மைக்காக ஓதலாம். இறந்தவரின் நன்மைக்காக இதை ஓதக் கூடாது.
பா(த்)திஹா, பகரா அத்தியாயம் ஓதுதல்
'இறந்தவரின் தலைமாட்டில் அல்ஹம்து சூராவையும், கால்மாட்டில் பகரா அத்தியாயத்தின் கடைசி வசனங்களையும் ஓதுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. (தப்ரானியின் அல்கபீர் 12/144)
இதை அறிவிக்கும் அய்யூப் பின் நஹீக் என்பவரும், யஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் பலவீனமானவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்ய வேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.
இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள், இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர்.
இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ, அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.
'நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 3243
'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 2697, முஸ்லிம் 3242
'(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும் அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: நஸயீ 1560
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காண மாட்டோம். இந்த விஷயத்திலும் இது போன்ற தெளிவு நமக்கும் அவசியம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மூன்று மகள்களையும், ஒரு மகனையும் இழந்தார்கள். மனைவி கதீஜாவையும் இழந்தார்கள். இறந்தவர்களுக்காக மேற்கண்ட காரியங்களைச் செய்வது நன்மை என்றிருந்தால் தமது குடும்பத்தினருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பார்கள். ஆனால் இது போன்ற ஃபாத்திஹாக்களை அவர்கள் செய்ததில்லை. அவர்களுக்குப் பின் பலநூறு ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இவற்றைச் செய்ததில்லை.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து இறந்தவர்களுக்கு உதவுவோம்.
இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும், கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ, மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு 'ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 2725, அஹ்மத் 1660, திர்மிதி 919, இப்னுமாஜா 1599
இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம்.
ஒருவர் இறந்தவுடன் மற்றவர்கள் கூற வேண்டியது
ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும். நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்' என்பது இதன் பொருள்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். திருக்குர்ஆன் 2.155, 156, 157
மேற்கண்ட சொற்களை மரணத்தின் போது மட்டுமின்றி நமக்கு ஏற்படும் எத்தகைய துன்பத்தின் போதும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
நமக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவரின் இழப்பு நம்மைப் பாதிக்கும் என்றால் 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' என்பதுடன் மற்றொரு பிரார்த்தனையையும் சேர்த்துக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
'ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' எனக் கூறிவிட்டு 'அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா' (இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக!) என்று கூறினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் என் கணவர் அபூ ஸலமா இறந்த போது 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த குடும்பத்தவரான அபூ ஸலமாவை விட சிறந்த முஸ்லிம் வேறு யார் இருப்பார்?' என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். என் கணவருக்குப் பகரமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குத் தந்தான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1525, 1526, இறந்தவரின் வீட்டுக்கு அல்லது நோயாளியைச் சந்திக்கச் செல்பவர் நல்லதையே கூற வேண்டும். ஒரு நோயாளியை நாம் சந்திக்கச் சென்றால் அவர் பிழைப்பது அரிது என்ற நிலையில் இருந்தாலும், அவருக்கு நல்லதைத் தான் கூற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தைத் தருவான் என்பன போன்ற சொற்களைத் தான் கூற வேண்டும்.
இது போல் தான் மரணித்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அவரது உறவினர்களிடம் நல்லதையே கூற வேண்டும்.
'நீங்கள் நோயாளியையோ, மரணித்தவரையோ காணச் சென்றால் நல்லதையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு வானவர்கள் ஆமீன் கூறுகின்றனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1527
மரணச் செய்தியைக் கேட்டவுடன் பாவமன்னிப்புத் தேடல்
மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் 'அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!' என்று அவருக்காக உடனே துஆச் செய்ய வேண்டும்.
அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது 'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1328
ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது 'அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' எனக் கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 21509
இறந்தவரை ஏசக் கூடாது
ஒருவர் மரணித்து விட்டால் அவரைப் பற்றி நல்லதாகக் கூற முடிந்தால் அவ்வாறு கூற வேண்டும். நல்லதாகக் கூறுவதற்கு ஏதும் இல்லாவிட்டால் வாய் மூடிக் கொள்ள வேண்டும். ஏசுவதற்கு அனுமதி இல்லை.
'இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் செய்ததை (அதன் பயனை) அவர்கள் அடைந்து விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1393, 6516
'இறந்தவரை ஏசி உயிருடன் உள்ளவர்களை வேதனைப் படுத்தாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்: திர்மிதீ 1905
மறுமை நன்மையை நம்பி சகித்துக் கொள்ளுதல்
ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். திருக்குர்ஆன் 2.155, 156, 157
'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை ஒரு முஸ்லிம் இழந்து விட்டால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைக்காமல் இருப்பதில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1248, 1381
'எந்தப் பெண்ணுக்காவது மூன்று குழந்தைகள் மரணித்து விட்டால் அக்குழந்தைகள் அவளை நரகம் செல்லாமல் தடுப்பவர்களாகத் திகழ்வார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகள்?' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தைகளும் தான்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 102, 1250, 7310
'மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் 5318
கண்ணீர் விட்டு அழலாம்
ஒருவர் மரணித்து விட்டால் கண்ணீர் விட்டு அழுவது தவறல்ல. அழுவதால் பொறுமையை மேற்கொள்ளவில்லை என்று ஆகிவிடாது. ஏனெனில் பொறுமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துன்பங்களின் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணத்தை நெருங்கிய போது நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவ்ஃபின் மகனே! இது இரக்க உணர்வு' என்று கூறி விட்டு வேறு வார்த்தையில் பின் வருமாறு விளக்கினார்கள். 'கண்கள் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் கவலைப்படுகிறது; நமது இறைவன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாம் கூற மாட்டோம். இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1303
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவரை நோய் விசாரிப்பதற்காக அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) ஆகியோருடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றனர். அவரது குடும்பத்தினர் அவரைச் சுற்றி இருப்பதைக் கண்டனர். முடிந்து விட்டதா?' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இல்லை' என்று (வீட்டில் உள்ளவர்கள்) கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்கள் அழுவதைக் கண்டவுடன் மக்களும் அழுதார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'கண்ணீர் வடித்ததற்காகவோ, உள்ளத்தால் கவலைப்பட்டதற்காகவோ அல்லாஹ் தண்டிக்க மாட்டான். என்றாலும் இதன் காரணமாகவே தண்டிப்பான் அல்லது அருள் புரிவான்' என்று கூறி விட்டு தமது நாவைச் சுட்டிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1304
தன் மகன் மரணத்தை நெருங்கி விட்டான் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மகள் (ஸைனப்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லி அனுப்பி 'உடனே வர வேண்டும்' என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளுக்கு ஸலாம் கூறச் சொல்லிவிட்டு 'அல்லாஹ் எடுத்துக் கொண்டது அவனுக்குரியது. அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவனிடத்தில் ஒவ்வொன்றும் நேரம் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது. எனவே அவர் பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்கட்டும்' என்று செய்தி சொல்லி அனுப்பினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் சத்தியம் செய்து கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என்று மறு செய்தி அனுப்பினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅது பின் உபாதா (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பலர் புறப்பட்டனர். சிறுவர் (பேரன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டார். அவருக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. 'அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?' என்று ஸஅது பின் உபாதா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இந்த இரக்க உணர்வை அல்லாஹ் மனித உள்ளங்களில் அமைத்திருக்கிறான். தனது அடியார்களிடம் இரக்கம் காட்டுபவருக்கே அல்லாஹ்வும் இரக்கம் காட்டுவான்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 1284, 5655, 6655, 7377
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுததற்கும் மற்றவர்கள் அழுத போது அதைத் தடுக்காமல் இருந்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. (பார்க்க புகாரி 3063, 1288, 1244, 1293)
அழுகையும் துக்கமும் மூன்று நாட்களே!
அழுவதற்கும், துக்கத்தில் ஆழ்ந்து போவதற்கும் அனுமதி இருந்தாலும் மூன்று நாளைக்குப் பின் அழுவதற்கு அனுமதி இல்லை. துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் சரியாக உண்ணாமல் பருகாமல் தொழிலுக்குச் செல்லாமல் இருப்பதற்குக் கூட அனுமதி உண்டு. இதுவும் மூன்று நாட்களுக்கு மேல் தொடரக் கூடாது.
நான்காவது நாளில் வழக்கமான நடவடிக்கைகளில் இறங்கிவிட வேண்டும். அதன் பின்னரும் அழுதால், துக்கத்தை வெளிப்படுத்தினால் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவில்லை என்ற நிலையை அடைவார்கள்.
'இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர. கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
அபூ ஸுஃப்யான் மரணித்த செய்தி கிடைத்ததும் அவரது மகள் உம்மு ஹபீபா (நபிகள் நாயகத்தின் மனைவி) அவர்கள் மூன்றாம் நாள் அன்று மஞ்சள் நிற நறுமணத்தைக் கொண்டு வரச் சொல்லி தமது விலாவிலும், கையிலும் தடவிக் கொண்டார்கள். 'அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் பெண்கள், கணவர் தவிர மற்றவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தைக் காட்டக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்கா விட்டால் இந்த நறுமணம் எனக்குத் தேவையற்றது' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைனப் (ரலி)
நூல்: புகாரி 1279, 1280, 1282
அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். 'இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது' எனக் கூறினார்கள். 'என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: ஜஃபரின் மகன் அப்துல்லாஹ்
நூல்கள்: நஸயீ 5132, அபூ தாவூத் 3660, அஹ்மத் 1659
தந்தை இறந்து விட்டால் மகனுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளக் கூடாது. கவலையின் காரணமாக ஜஃபரின் குடும்பத்தினர் குழந்தைகளைப் பராமரிக்கவில்லை. முட்டையிலிருந்து வெளி வந்த குஞ்சுகள் எவ்வாறு மயிர்களைச் சிலிப்பிக் கொண்டிருக்குமோ அது போன்ற நிலையில் அக்குழந்தைகள் இருந்ததால் மொட்டை அடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸின் வாசகத்திலிருந்தே இதை அறியலாம்.
ஒப்பாரி வைக்கக் கூடாது
கண்ணீர் விட்டு அழுவதற்கு மட்டும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. ஒப்பாரி வைப்பதற்கு அறவே அனுமதி இல்லை. ஒப்பாரி வைத்தல் இறை மறுப்புக்கு நிகரான குற்றம் என்ற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர்.
'இரண்டு காரியங்கள் மக்களிடம் உள்ளன. அவை இரண்டும் அவர்களை இறை மறுப்பில் தள்ளி விடும். பிறரது பாரம்பரியத்தைப் பழித்தல், இறந்தவர்களுக்காக ஒப்பாரி வைத்தல்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 100
மூடத்தனமான காரியங்களை செய்யக்கூடாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உடன்படிக்கை எடுத்த போது, 'இவ்வுடன்படிக்கையை மீறக் கூடாது; துன்பத்தின் போது முகத்தில் கீறக் கூடாது; தீமையை வேண்டக் கூடாது; சட்டையைக் கிழிக்கக் கூடாது; தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்ளக் கூடாது' என்று உறுதிமொழி எடுத்தனர்.
நூல்: அபூ தாவூத் 2724
'கன்னத்தில் அறைந்து கொள்பவனும், சட்டைகளைக் கிழித்துக் கொள்பவனும், மூடத்தனமான வார்த்தைகளைப் பேசுபவனும் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 1294, 1297, 1298, 3519
மொட்டையடிக்கக் கூடாது
பொதுவாக ஒருவர் மொட்டை அடிப்பதற்கும், முடி வளர்ப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆயினும் மரணத்திற்கு அடையாளமாக மொட்டை அடிப்பதற்கு அனுமதி இல்லை. கணவன் இறந்ததற்காக மனைவியும் தந்தை இறந்ததற்காக மகனும் மொட்டை அடிக்கும் வழக்கம் பலரிடம் காணப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்.
அபூ மூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனைக்கு உள்ளாகி மூர்ச்சயைகி விட்டார். அவரது தலை அவரது மனைவியின் மடி மீது இருந்தது. அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அலறினார். அவருக்கு அபூ மூஸா அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. மயக்கம் தெளிந்ததும் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரை விட்டு நீங்கிக் கொண்டார்களோ அவர்களை விட்டு நானும் நீங்கிக் கொள்கிறேன். அலறுபவள், மொட்டை அடிப்பவள், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவள் ஆகியோரை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கிக் கொண்டார்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ புர்தா (ரலி)
நூல்: முஸ்லிம் 149
கவனிக்க ஆள் இல்லாத போது சிறுவர்களின் முடிகளைச் சரியாகப் பராமரிக்க முடியாது என்றால் அதற்காக மொட்டை அடிப்பது தவறல்ல என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
சிரைத்தும் சிரைக்காமலும்
தலை முடியை மழிப்பது என்றால் தலை முழுவதும் மழிக்க வேண்டும். ஒரு பகுதியை மட்டும் மழித்துவிட்டு மற்ற பகுதியை மழிக்காமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
தமிழகத்தின் சில பகுதிகளில் இரண்டு பக்கம் இரண்டு குடுமிகளை விட்டுவிட்டு மற்ற பகுதியைச் சிரைக்கும் வழக்கம் இருக்கிறது. அது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள். 'முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 4962, அஹ்மத் 5358
மரணச் செய்தியை அறிவித்தல்
ஒருவர் மரணித்து விட்டால் அது பற்றி மக்களுக்கு அறிவிப்பது தவறில்லை. அது விரும்பத்தக்கது ஆகும். ஏனெனில் இறந்தவரின் ஜனாஸா தொழுகையில் அதிகமான மக்கள் பங்கு பெறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
'இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காகப் பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1576
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் 'குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!' என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். 'நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம் 1577
அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொள்வது சிறப்பானது என்றால் மக்களுக்கு அறிவிப்புச் செய்தால் தான் இது சாத்தியமாகும். அதுவும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டால் தான் இன்றைய சூழ்நிலையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காத நாற்பது பேர் தேறுவார்கள். எனவே மரணச் செய்தியை மக்களுக்கு அறிவிப்பது தான் சிறந்ததாகும்.
நஜ்ஜாஷி மன்னரின் மரணச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1245, 1318, 1328, 1333, 3880
மரணத்தை அறிவிக்கக் கூடாது என்ற கருத்திலமைந்த ஹதீஸ்கள் யாவும் குறைபாடு உடையதாகும்.
'மரண அறிவிப்புச் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (906) ஹதீஸ் உள்ளது.
இதை அறிவிக்கும் அபூ ஹம்ஸா மைமூன் அல்அஃவர் பலவீனமானவர்.
'நான் மரணித்து விட்டால் என்னைப் பற்றி அறிவிப்புச் செய்யாதீர்கள்! ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்' என்று ஹுதைபா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: பிலால் பின் யஹ்யா
நூல்: திர்மிதி 907
பிலால் என்பார் ஹுதைபாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்பதால் ஹுதைபா கூறியதை இவர் அறிவிக்க முடியாது. எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
மரணித்த உடலுக்குச் செய்ய வேண்டியவை
கண்களை மூடுதல்
ஒருவர் மரணித்தவுடன் அவரது கண்கள் நிலை குத்தியதாகக் காணப்படும். உடனடியாக இறந்தவரின் கண்களை மூட வேண்டும்.
அபூ ஸலமா மரணித்தவுடன் அவரருகே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அவரது கண்கள் நிலைகுத்திக் காணப்பட்டது. உடனே அதை மூடினார்கள். 'உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைத் தொடர்கிறது' என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1528
உடலுக்கு நறுமணம் பூசுதல்
இறந்தவரின் உடலிலிருந்து துர்நாற்றம் வந்தால் அதை மறைப்பதற்காக நறுமணம் பூச வேண்டும்.
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் மரணித்த போது 'இவருக்கு நறுமணம் பூச வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1839, 1849, 1850, 1851)
பொதுவாக இறந்தவர் உடலுக்கு நறுமணம் பூசுவது நடைமுறையில் இருந்ததால் தான் இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
உடலை முழுமையாக மூடி வைத்தல்
ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை போர்வை போன்றவற்றால் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது யமன் நாட்டில் தயாரான கோடு போடப்பட்ட போர்வையால் மூடப்பட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 5814
பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டலாம்
போர்வையால் மூடப்பட்டாலும் பார்க்க வரும் பார்வையாளர்கள் விரும்பினால் அவர்களுக்காக முகத்தைத் திறந்து காட்டலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகர் பகுதியான) ஸுன்ஹ் என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தார்கள். கேள்விப்பட்டு குதிரையில் விரைந்து வந்தார்கள். குதிரையிலிருந்து இறங்கி யாரிடமும் பேசாமல் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். ஆயிஷா அவர்களின் அறைக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உடலை நாடிச் சென்றார்கள். கோடுகள் போடப்பட்ட யமன் நாட்டுப் போர்வையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்த்தப்பட்டிருந்தார்கள். உடனே அவர்களின் முகத்தை விலக்கிப் பார்த்தனர். அவர்கள் மீது விழுந்து முத்தமிட்டு பின்னர் அழலானார்கள். பின்னர் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணத்தை ஏறப்படுத்தவில்லை. உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மரணத்தை அடைந்து விட்டீர்கள்' என்று கூறினார்கள். வெளியே வந்த போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்து உட்காருங்கள் என்று அபூ பக்ர் (ரலி) கூறினார்கள். அவர் உட்கார மறுத்தார். மீண்டும் உட்காரச் சொன்னார்கள். அப்போதும் மறுத்தார். உடனே அபூ பக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். மக்களெல்லாம் உமரை விட்டு அபூ பக்ர் (ரலி) அருகில் திரண்டனர். 'உங்களில் யாராவது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். உங்கள் யாராவது அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்) அவன் தான் சாகாமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்' என்று கூறிவிட்டு 'முஹம்மத் தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்' என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அபூ பக்ர் (ரலி) ஓதிக் காட்டும் வரை அப்படி ஒரு வசனம் இருப்பதை மக்கள் அறியாது இருந்தனர். அதைக் கேட்ட ஒவ்வொருவரும் அதை ஓதலனார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1242, 3670, 4454
மூடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தை அபூ பக்ர் (ரலி) அவர்கள் திறந்து பார்த்துள்ளனர்.
இறந்தவரின் உடலை மூடி வைப்பதற்கும், பார்வையாளர்களுக்கு முகத்தைத் திறந்து காட்டுவதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இதற்கு உள்ளது என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
என் தந்தை கொல்லப்பட்ட போது நான் அழுது கொண்டே என் தந்தையின் முகத்தைத் திறந்து பார்க்கலானேன். மக்கள் என்னைத் தடுத்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 1244
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஜாபிர் அவர்கள் தமது தந்தையின் முகத்தைத் திறந்து பார்த்திருக்கிறார். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள்.
இறந்தவர் உடலில் முத்தமிடுதல்
இறந்தவர் உடலில் முத்தமிடலாம் என்றோ, முத்தமிடக்கூடாது என்றோ நேரடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மார்க்க சம்பந்தமில்லாத விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். தடுத்திருக்கா விட்டால் அது அனுமதிக்கப்பட்டது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மார்க்கம் தொடர்பான வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை தடுத்துள்ளார்களா என்று பார்க்கக் கூடாது. அனுமதித்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். அனுமதி இருந்தால் அதைச் செய்ய வேண்டும். அனுமதிக்கு ஆதாரம் இல்லாவிட்டால் அதைச் செய்யக் கூடாது.
இந்த அடிப்படையில் முத்தமிடுதல் என்பது வணக்கம் அல்ல. நமது அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அனுமதி என்றே அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அபூ பக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் முகத்தில் முத்தமிட்டுள்ளனர் (புகாரி 1242, 3670, 4454, 5712, 4457) என்பது இதை வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
எனவே மரணித்தவர் மீது அன்பு வைத்துள்ளவர்கள் முத்தமிட்டால் அதைத் தடுக்கக் கூடாது. அன்னிய ஆண்கள் அன்னியப் பெண்களுக்கு முத்தமிட பொதுவான தடை உள்ளதால் அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்தவர்கள் உடலை முத்தமிட்டால் அது குற்றமாகாது.
உடலை கிப்லா திசை நோக்கி வைக்க வேண்டுமா?
இறந்தவர் உடலை கிப்லா திசை நோக்கித் திருப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பலவீனமாக உள்ளன.
'பெரும் பாவங்கள் யாவை?' என்று ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை ஒன்பது என்று கூறிவிட்டு, 'முஸ்லிமான பெற்றோருக்கு நோவினை அளிப்பது, உயிருள்ளவருக்கும் இறந்தவர்களுக்கும் கிப்லாவாக இருக்கும் கஃபாவின் புனிதத்தை மறுத்தல்' என்பதை அதில் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: உமைர் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2490, பைஹகீ 3/408, 10/186,
தப்ரானீ 17/47, ஹாகிம் 1/127
மேற்கண்ட நான்கு நூல்களிலும் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ஹமீத் பின் ஸினான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமான செய்தியாகும்.
பைஹகியின் மற்றொரு அறிவிப்பில் (3/409) அய்யூப் பின் உத்பா என்பார் இடம் பெறுகிறார். இவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் பலவீனமானவை.
இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் இல்லாததால் கிப்லாவை நோக்கி உடலைத் திருப்பி வைக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
மேலும் மேற்கண்ட ஹதீஸின் கருத்திலும் குழப்பம் உள்ளது.
உயிருள்ளவருக்கும், இறந்தவர்களுக்கும் கிப்லா என்று கூறப்பட்டுள்ளது. உயிருள்ளவருக்கு கிப்லா என்றால் 24 மணி நேரமும் அதை நோக்கியே இருக்க வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். தொழும் போது கிப்லாவை நோக்க வேண்டும் என்றே புரிந்து கொள்வார்கள்.
அது போல் இறந்தவர்களுக்கு கிப்லா என்றால் இறந்தவர் தொழும் போது அதை நோக்க வேண்டும் என்ற கருத்து வரும். இறந்தவருக்கு தொழுகை இல்லை. தொழ முடியாது எனும் போது இறந்தவர்களுக்கு கிப்லா என்பதும் பொருளற்றதாகி விடுகிறது.
எனவே நமது வசதிக்கு ஏற்ப உடலை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் வைக்கலாம்.
அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்துதல்
ஒருவர் இறந்து விட்டால் அவசரமாக உடனேயே அடக்கம் செய்து விடுவது தான் நல்லது என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது.
தல்ஹா பின் அல்பரா (ரலி) அவர்கள் நோயுற்றார்கள். அவரை நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். 'இவருக்கு மரணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். இவர் மரணித்தவுடன் எனக்குச் சொல்லி அனுப்புங்கள். ஏனெனில் எந்த ஒரு முஸ்லிமின் உடலும் (வீட்டில்) வைத்திருக்கக் கூடாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுஸைன் பின் வஹ்வஹ்
நூல்: அபூ தாவூத் 2747
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் உர்வா பின் ஸயீத் என்பார் யாரென்று தெரியாதவர். எனவே இது பலவீனமாகும்.
மேலும் நோய் விசாரிக்கச் சென்றால் நல்லதையே கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம்.
ஒரு நோயாளி வீட்டுக்குச் சென்று சீக்கிரம் இவர் போய் விடுவார். போனதும் சொல்லி அனுப்புங்கள் என்பன போன்ற அநாகரிகமான பேச்சை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவே மாட்டார்கள். எனவே இதன் கருத்தும் தவறாகவுள்ளது.
'உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவரது உடலை உடனே கப்ருக்கு எடுத்துச் செல்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: தப்ரானி 12/444
இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் அப்துல்லாஹ் பாபலத்தி என்பவரும் அய்யூப் பின் நஹீக் என்பவரும் இடம் பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
'ஜனாஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி வைத்தவர்களாவீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1315
இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் இவர்கள் கூறுகின்ற கருத்தை இது தரவில்லை. உடலைத் தோளில் தூக்கி விட்டால் வேகமாக நடந்து செல்ல வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது. உங்கள் தோள்களிலிருந்து' என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம். வீட்டில் உடலை வைத்திருப்பதற்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எனவே உடலை அடக்கம் செய்வதைத் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் இல்லை.
அதிகமான பேர் தொழுகையில் பங்கேற்பது இறந்தவருக்குப் பயன் தரும் என்ற ஹதீஸ்களை வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
அதிகமான மக்கள் சேருவதற்காகத் தாமதம் செய்யலாம் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனே அடக்கம் செய்து விட வேண்டும் என்று கட்டளையிடாத காரணத்தால் தான் அவர்கள் மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும்.
ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால் மூன்று நாட்களுக்கு மேல் உடலை வைத்திருக்கக் கூடாது. ஒரு வீட்டில் உடல் இருக்கும் வரை சோகம் நீடிக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது..
இறந்தவரைக் குளிப்பாட்டுதல்
ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.
இறந்தவுடன் கசப் மாற்றுவது' என்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் குளிப்பாட்டுகின்றனர்.
இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும் என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒரு தடவை குளிப்பாட்டுவது தான் அவசியம்.
சுன்னத் என்றோ கடமை என்றோ கருதாமல் உடலிலிருந்து துர்வாடை வரக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பாட்டினால் அது குற்றமாகாது.
மார்க்கத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற தவறான எண்ணத்தை ஊட்டும் வகையில் இருந்தால் அது தவறாகும்.
ஆடைகளைக் களைதல்
உடலைக் குளிப்பாட்டும் போது அவர் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டினால் அதில் தவறில்லை. அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டினால் அதுவும் தவறல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். 'மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை' என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்' என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2733, ஹாகிம் 3/59,
பைஹகீ 3/387, அஹ்மத் 25102
'மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று' என்ற வாசகம் அணிந்திருந்த ஆடையைக் களைந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது.
இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே அதை மாற்றியமைத்திருப்பார்கள்.
எனவே சட்டை, பேன்ட், பனியன் போன்ற ஆடைகளைக் களைந்து அவரது மறைவிடம் தெரியாத வகையில் மேலே ஒரு துணியைப் போட்டுக் கொண்டு கழுவலாம்.
குளிப்பாட்டுபவர் இரகசியம் பேண வேண்டும்
உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம்.
உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.
'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி)
நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315
வலப்புறத்திலிருந்து கழுவ வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் குளிப்பாட்டிய பெண்களிடம் 'இவரது வலப்புறத்திலும், உளுச் செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி
நூல்: புகாரி 167, 1255, 1256
ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகள் மரணித்த போது 'மூன்று அல்லது ஐந்து அல்லது அதை விட அதிகமாக இவரைக் கழுவுங்கள்! ஒற்றைப் படையாகக் கழுவுங்கள்!' என்று எங்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 1254, 1263
கற்பூரம் கலந்து குளிப்பாட்டுதல்
'இவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் விரும்பினால் இதை விட அதிகமாக இலந்தை இலை கலந்த தண்ணீரால் கழுவுங்கள். கடைசியில் கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 1253, 1254, 1259, 1261, 1263
இறந்தவரின் உடல் நன்கு சுத்தமாக வேண்டும் என்பதற்காக சோப் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.
குளிப்பாட்டும் போது பெண்களின் சடைகளைப் பிரித்து விடுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைக் குளிப்பாட்டிய போது அவரது தலையில் போட்டிருந்த மூன்று சடைகளைப் பிரித்து, குளிப்பாட்டிய பின் மூன்று சடைகளைப் போட்டனர்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 1260, 1254, 1259, 1262, 1263
குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? என்பதில் மாறுபட்ட கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. 'நாங்கள் இறந்தவரைக் குளிப்பாட்டி விட்டு சிலர் குளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் குளிக்காதவர்களாகவும் இருந்தோம்' என்று இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.
நூல்: தாரகுத்னீ 2/72
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் இது விஷயத்தில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைத் தான் இப்னு உமர் (ரலி) கூறுகிறார்.
குன்னா (கடந்த காலத்தில் இவ்வாறு இருந்தோம்) என்ற சொல்லை இப்னு உமர் (ரலி) பயன்படுத்தியிருப்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே விரும்பியவர் குளித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் குளிக்காமலும் இருக்கலாம். இரண்டும் சமமானவை தான்.
ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் இல்லை.
ஆயினும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளைப் பெண்கள் தான் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை முன்னரே சுட்டிக் காட்டியுள்ளோம்.
கணவனை மனைவியும் மனைவியை கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் இதைத் தடுக்க முடியாது.
புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது
அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து 'இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1346, 1343, 1348, 1353, 4080
மார்க்கத்துடன் தொடர்பு இல்லாதவை
* குளிப்பாட்டுவதற்கு என்று சிறப்பான துஆக்கள் ஏதும் இல்லை.
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்
* பல் துலக்குதல்
* அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
* பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
* வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல்
* ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது சந்தனத்தினாலோ, வேறு எதன் மூலமோ நெற்றியில் எதையும் எழுதுதல்
போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச் செய்ததில்லை.
குளிப்பாட்ட இயலாத நிலையில்...
இறந்தவரின் உடல் சிதைக்கப்படாமல் இருந்தால் தான் குளிப்பாட்டுவது சாத்தியமாகும்.
குண்டு வெடிப்பில் இறந்தவர்கள், வாகன விபத்தில் இறந்தவர்கள், துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள், தீயில் எரிந்து கருகிப் போனவர்கள் ஆகியோரின் உடல்களைக் குளிப்பாட்ட இயலாத நிலை ஏற்படுவதுண்டு.
குண்டு வெடிப்பு, வாகன விபத்து போன்றவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லை என்றாலும் தீயில் எரிந்து போகவும், துண்டு துண்டாக சிதைக்கப்படவும் வாய்ப்புகள் இருந்தன.
ஆனாலும் எந்த முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற நிலையில் மரணமடைந்ததாகக் காண முடியவில்லை.
போர்க்களத்தில் மட்டும் சிலரது உடல்கள் சிதைக்கப்பட்டன. ஷஹீத்கள் என்ற முறையில் அவர்களின் உடலைக் குளிப்பாட்டக் கூடாது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
சாதாரணமாக இது போன்ற நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் யாருக்கும் ஏற்படாததால் இத்தகையோரின் உடல்களைக் குளிப்பாட்டுவது பற்றி நேரடியாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
நேரடி ஆதாரம் கிடைக்கா விட்டாலும் வேறு ஆதாரங்களின் துணையுடன் இது பற்றி நாம் முடிவுக்கு வர முடியும்.
உயிருடன் இருக்கும் ஒருவர் குளிக்க முடியாத நிலையில் இருந்தால் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யுமாறு மார்க்கம் கூறுகிறது. சிதைந்து போன உடல்களைக் குளிப்பாட்டுவது அதை விடக் கடுமையானது. எனவே குளிப்பாட்டுவதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம். அதற்கும் இயலாத நிலை ஏற்பட்டால் ஒன்றும் செய்யாமல் அடக்கம் செய்வது குற்றமாகாது. குளிப்பாட்ட இயலாது என்ற நிலையில் தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
'நான் உங்களுக்கு ஒரு கட்டளையிட்டால் அதை இயன்ற வரை செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7288
எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மேலே நாம் சிரமப்படுத்த மாட்டோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
திருக்குர்ஆன் 2:286
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 6:152
எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.
திருக்குர்ஆன் 7:42
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.
திருக்குர்ஆன் 23:62
வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
திருக்குர்ஆன் 65:7 எனவே நம்மால் இயலாத நிலையில் எந்தக் காரியத்தையும் விட்டு விடுவது குற்றமாகாது.
கஃபனிடுதல்
குளிப்பாட்டிய பின் துணியால் உடலை மறைக்க வேண்டும். இதை கஃபன் என்று மார்க்கம் கூறுகிறது.
கஃபன் என்றால் அதற்கென குறிப்பிட்ட சில வகைகள் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.
சட்டை, உள்ளாடை, வேட்டி, மேல்சட்டை, தலைப்பாகை, பின்னர் முழு உடலையும் மறைக்கும் துணி இப்படி இருந்தால் தான் அது கஃபன் என்று நினைக்கிறார்கள்.
அது போல் பெண்களின் கஃபன் என்றால் அதற்கென சில வகை ஆடைகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளனர்.
கஃபன் இடுவதற்கு இப்படியெல்லாம் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.
உடலை மறைக்க வேண்டும் அவ்வளவு தான். உள்ளே எதையும் அணிவிக்காமல் உடலை ஒரு போர்வையால் போர்த்தி மறைத்தால் அதுவும் கஃபன் தான். அதுவே போதுமானதாகும்.
அது போல் ஒருவர் வாழும் போது அணிந்திருந்த சட்டை, கைலியை அணிவித்தால் அதுவும் கஃபன் தான்.
அதே நேரத்தில் மேற்கண்டவாறு சட்டை, உள்ளாடை என்று கஃபனிட்டால் அது நபிவழி என்ற நம்பிக்கையில்லாமல் நம்முடைய திருப்திக்காகச் செய்தால் அதில் தவறில்லை.
பின் வரும் தலைப்புகளில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.
அழகிய முறையில் கஃபனிடுதல்
உடலின் பாகங்கள் திறந்திருக்காத வகையிலும், உள் உறுப்புகளை வெளிக்காட்டாத வகையிலும், ஏனோ தானோ என்றில்லாமலும் நேர்த்தியாகக் கஃபன் இட வேண்டும்.
'உங்களில் ஒருவர் தமது சகோதரருக்குக் கஃபன் இட்டால் அதை அழகுறச் செய்யட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்ம் 1567
வெள்ளை ஆடையில் கஃபனிடுதல்
கஃபன் ஆடை எந்த நிறத்திலும் இருக்கலாம்; ஆயினும் வெள்ளை ஆடையே சிறந்ததாகும்.
'நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 915, அபூ தாவூத் 3539, இப்னு மாஜா 1461,
அஹ்மத் 2109, 2349, 2878, 3171, 3251
வெள்ளை ஆடையில் கஃபனிடுவது கட்டாயம் இல்லை என்பதையும் அதுவே சிறந்தது என்பதையும் மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.
வண்ண ஆடையிலும் கஃபன் இடலாம்
வண்ண ஆடையில் கஃபனிடுவது பொருளாதார ரீதியாகச் சிரமமாக இல்லாதவர்கள் வண்ண ஆடையில் கஃபனிட இயலுமானால் அவ்வாறு கஃபனிடுவது தவறில்லை.
'உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2739
தைக்கப்பட்ட ஆடையில் கஃபனிடுதல்
தைக்கப்படாத ஆடையில் தான் கஃபனிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. தைக்கப்பட்ட மேலாடை, கீழாடை ஆகியவற்றாலும் கஃபனிடலாம்.
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள் (அதில்) அவரைக் கஃபனிட வேண்டும்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். (சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1269, 4670, 5796
ஒரு கிராமவாசி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தார். அப்போரில் கழுத்தில் அம்பு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஜுப்பாவை (குளிராடை - ஸ்வெட்டர்) அவருக்குக் கஃபன் ஆடையாக அணிவித்தார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: நஸயீ 1927
பழைய ஆடையில் கபனிடுதல்
... குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்ததும்) நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம். தமது இடுப்பிலிருந்து வேட்டியைக் கழற்றி 'இதை அவருக்கு உள்ளாடையாக்குங்கள்!' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 1253, 1254, 1257, 1259, 1261
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அணிந்திருந்த ஆடையைத் தமது மகளுக்குக் கஃபனாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் பழைய ஆடைகளைக் கஃபனாகப் பயன்படுத்துவது தவறல்ல என்று அறியலாம்.
உள்ளாடை அணிவித்தல்
இறந்தவரின் உடலை முழுமையாக மறைப்பது தான் கஃபன் என்றாலும் மேலே போர்த்தும் துணியுடன் உள்ளாடையாக மற்றொரு துணியைச் சேர்த்துக் கொள்ளலாம். முந்தைய தலைப்பில் எடுத்துக் காட்டிய ஹதீஸே இதற்கு ஆதாரமாக உள்ளது.
இஹ்ராம் அணிந்தவரின் கஃபன் ஆடை
ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர் மரணித்து விட்டால் இஹ்ராமின் போது அணிந்த ஆடையிலேயே அவரைக் கஃபனிட வேண்டும்.
இஹ்ராம் அணிந்த ஒருவர் அரஃபா மைதானத்தில் நபிகள் நாயகத்துடன் இருந்த போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இவரைத் தண்ணீராலும், இலந்தை இலையாலும் குளிப்பாட்டுங்கள். இவருடைய இரண்டு ஆடைகளில் இவரைக் கஃபனிடுங்கள். இவருக்கு நறுமணம் பூச வேண்டாம். இவரது தலையை மறைக்க வேண்டாம். ஏனெனில் இவர் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1265, 1266, 1267, 1268, 1850, 1851
கஃபனிட்ட பின் நறுமணம் பூசுதல்
கஃபனிட்ட பின் இறந்தவரின் உடலுக்கு நறுமணம் பூசலாம். இஹ்ராம் அணிந்தவருக்கு நறுமணம் தடை செய்யப்பட்டதால் அவர் இறந்த பிறகு நறுமணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்கச் சொன்னார்கள். இதிலிருந்து மற்றவர்களின் உடலுக்கு நறுமணம் பூசலாம் என்று அறிய முடியும்.
தலையையும் மறைத்து கஃபனிட வேண்டும்
கஃபன் என்பது தலை உள்ளிட்ட முழு உடலையும் மறைக்கும் வகையில் இருக்க வேண்டும். உடம்பை மறைத்துவிட்டு தலையை மட்டும் விட்டுவிடக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஹிஜ்ரத் செய்தோம். அதற்கான நன்மை அல்லாஹ்விடம் உறுதியாகி விட்டது. தமது நன்மையில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமல் மரணித்தவர்களும் எங்களில் இருந்தனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவாராவார். அவர் உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவர் ஒரு போர்வையை மட்டுமே விட்டுச் சென்றார். அதன் மூலம் அவரது தலையை மறைத்தால் கால்கள் தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை தெரிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இதன் மூலம் இவரது தலையை மூடுங்கள். இவரது கால் பகுதியில் இத்கர் என்ற புல்லைப் போடுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 4045, 4047, 1275, 1276, 3897, 3914, 4082, 6448
கஃபனிடும் போது தலையை மூட வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிய வரும்.
இஹ்ராம் அணிந்தவர் பற்றிய ஹதீஸில் அவரது தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் இஹ்ராம் அணிந்தவர் தலையை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தலையை மறைக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து மற்றவர்களின் தலை மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கலாம்.
கஃபனிடும் அளவுக்குத் துணி கிடைக்கா விட்டால்...
சில சமயங்களில் முழு உடலையும் மறைக்கும் அளவுக்கு துணி கிடைக்காமல் போகலாம். அல்லது அதை வாங்கும் அளவுக்கு வசதியில்லாமல் போகலாம். அது போன்ற சந்தர்ப்பங்களில் வைக்கோல் போன்ற கிடைக்கும் பொருட்களால் எஞ்சிய பகுதியை மறைக்க வேண்டும். முந்தைய தலைப்பில் இடம் பெற்றுள்ள நபிமொழியே இதற்கு ஆதாரமாகும்.
புதிய ஆடையில் கஃபனிடுதல்
மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் என்பதை அறியலாம்.
ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை.
ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மேலாடையைக் கொண்டு வந்தார். 'நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன்' என்று அவர் கூறினார். அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் 'இது எவ்வளவு அழகாக உள்ளது. எனக்குத் தாருங்கள்' என்று கேட்டார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மிகவும் விருப்பத்துடன் அணிந்திருக்கிறார்கள். எவர் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களிடம் இதைக் கேட்டு விட்டாயே!' என்று மற்றவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள். அதற்கு அவர் 'நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லை; எனக்குக் கஃபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே கேட்டேன்' என்றார். அதுவே அவரது கஃபனாக அமைந்தது. (சுருக்கம்)
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 2093, 1277, 5810, 6036
தனது கஃபனை தானே தயார்படுத்திக் கொள்ளலாம்
நாம் மரணித்த பின் நமக்கு இது தான் கஃபனாக அமைய வேண்டும் என்று விரும்பி தனது கஃபன் துணியை ஒருவர் தயார் படுத்தி வைக்கலாம். அவ்வாறு ஒருவர் தயார் படுத்தி வைத்திருந்தால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
மேற்கண்ட ஹதீஸிலிருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.
தைக்கப்படாத ஆடையில் கஃபனிடுதல்
(என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரண வேளையில் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், 'நபிகள் நாயகத்தை எத்தனை ஆடையில் கஃபனிட்டீர்கள்?' என்று கேட்டார்கள். 'யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளையான மூன்று ஆடைகளில் கஃபனிட்டோம். அதில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை' என்று நான் கூறினேன். 'எந்த நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்?' என்று அவர்கள் கேட்டார்கள். 'திங்கள் கிழமை' என்று நான் கூறினேன். 'இன்று என்ன கிழமை?' எனக் கேட்டர்கள். 'திங்கள் கிழமை' என்று நான் கூறினேன். 'இன்றிரவுக்குப் பின் எனக்கு மரணம் வந்துவிடும் என்றே எதிர்பார்க்கிறேன்' என்று கூறினார்கள். தாம் அணிந்திருந்த ஆடையை உற்று நோக்கினார்கள். அதில் குங்குமப் பூ கறை இருந்தது. 'எனது இந்த ஆடையைக் கழுவி இத்துடன் மேலும் இரண்டு ஆடைகளை அதிகமாக்குங்கள். அதில் எனக்குக் கஃபனிடுங்கள்' என்று கூறினார்கள். 'இது மிகவும் பழையதாக உள்ளதே!' என்று நான் கூறினேன். அதற்கவர்கள் 'உயிருடன் உள்ளவர் தான் புதிய ஆடைக்கு அதிகம் தகுதியானவர். இந்த ஆடை சீழ் சலத்திற்குத் தானே போகப் போகிறது' என்றார்கள். (ஆனால் அவர்கள் விரும்பிய படி திங்கள் கிழமை மரணிக்கவில்லை) செவ்வாய்க் கிழமை மாலை தான் மரணித்தார்கள். விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1378
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தைக்கப்பட்ட சட்டையில் கஃபனிடப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
முக்கியப் பிரமுகருக்கு தலைப்பாகையுடன் கஃபனிடலாமா?
மார்க்க அறிஞர்கள் போன்ற பிரமுகர்கள் கஃபனிடப்படும் போது அவர்களுக்குத் தலைப்பாகை கட்டி அதனுடன் கஃபனிடும் வழக்கம் பல பகுதிகளில் காணப்படுகிறது. வாழும் போது தனியாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டது போல மரணித்த பிறகும் வேறுபாடு காட்டப்படுவது கொடுமையிலும் கொடுமையாகும்.
மாமனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை, சட்டையுடன் கஃபனிடப்படவில்லை என்ற மேற்கண்ட ஹதீஸிலிருந்து அவர்கள் செய்வது ஆதாரமற்றது என்பதை அறியலாம்.
கிரீடம், தலைப்பாகை போன்றவற்றை அணிந்து கபனிடுவது கெட்ட முன்மாதிரியாகும்.
வீரமரணம் அடைந்தவர்களை அவர்களின் ஆடையில் கஃபனிடுதல்
நியாயத்துக்காக நடக்கும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டவர்களை அவர்கள் அணிந்திருந்த ஆடையிலேயே கஃபனிடுதல் நல்லது.
முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கு அணிந்திருந்த ஆடையே கஃபனாக ஆனது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
'அவர்களை (ஷஹீத்களை) அவர்களின் ஆடைகளிலேயே கஃபனிடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸஃலபா (ரலி)
நூல்: அஹ்மத் 22547
ஆயினும் இது கட்டாயமானது அல்ல.
ஹம்ஸா அவர்கள் கொல்லப்பட்ட போது அவர்களின் சகோதரி ஸஃபிய்யா அவர்கள் இரண்டு ஆடைகளைப் போர்க்களத்திற்குக் கொண்டு வந்து அதில் தனது சகோதரர் ஹம்ஸாவுக்குக் கஃபனிடுமாறு கூறினார்கள். ஹம்ஸாவுக்கு அருகில் மற்றொருவரும் கொல்லப்பட்டுக் கிடந்ததால் இருவரையும் தலா ஒரு ஆடையில் கஃபனிட்டோம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
நூல்: அஹ்மத் 1344
ஹம்ஸாவும், மற்றொருவரும் போரின் போது அணிந்திருந்த ஆடையில் கஃபனிடப்படாமல் வேறு ஆடையில் கஃபனிடப் பட்டார்கள். இது தவறு என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்திருப்பார்கள்.
நெருக்கடியான நேரத்தில் ஒரு ஆடையில் இருவரைக் கஃபனிடலாம்
உஹதுப் போரில் கொல்லப்பட்ட என் தந்தையும், என் சிறிய தந்தையும் ஒரு போர்வையில் கஃபனிடப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1348
உஹதுப் போரில் கொல்லப்பட்ட இருவரை ஒரு ஆடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1343. 1348, 4080
உடலை எடுத்துச் செல்லுதல்
குளிப்பாட்டி, கஃபனிட்ட பின் தொழுகை நடத்துவதற்காகவும், தொழுகை முடிந்து அடக்கம் செய்வதற்காகவும் அடக்கத்தலம் நோக்கி உடலை எடுத்துச் செல்ல வேண்டும்.
உடலை எடுத்துச் செல்பவர்களும், உடன் செல்பவர்களும், உடலை வழியில் காண்பவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் உள்ளன.
சுமந்து செல்லும் பெட்டி - சந்தூக்
ஜனாஸாவை எடுத்துச் செல்வதற்கு என குறிப்பிட்ட வடிவில் ஒரு பெட்டியைப் பயன்படுத்துகின்றனர். சந்தாக் அல்லது சந்தூக் என்ற பெயரால் இப்பெட்டி குறிப்பிடப்படுகிறது.
இவ்வாறு மார்க்கத்தில் வலியுறுத்தப்படவில்லை. இப்போது நடைமுறையில் உள்ள வடிவத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாப் பெட்டி இருந்ததில்லை.
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் இதைக் கவனத்தில் வையுங்கள் என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779,
இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
'நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் என்னை முற்படுத்துங்கள்!' என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று அது கேட்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1882
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கட்டிலில் வைத்து ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து வழக்கம். உடலை வளையாமல் எடுத்துச் செல்வது தான் முக்கியமே தவிர குறிப்பிட்ட வடிவம் முக்கியம் அல்ல.
இப்போது நடைமுறையில் பயன்படுத்தப்படும் சந்தாக் பெட்டியில் எடுத்துச் செல்வதும் கட்டிலின் மேல் உடலை வைத்துத் தூக்கிச் செல்வதும் சமமானது தான்.
தோளில் சுமந்து செல்லுதல்
ஜனாஸாவைப் பற்றிக் குறிப்பிடும் ஹதீஸ்களில் ஆண்கள் அதைத் தமது தோள்களில் சுமந்து சென்றால்... என்பன போன்ற சொற்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
எனவே தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிச் செல்வதை விட தோளில் சுமந்து செல்வதே சிறப்பானதாகும்.
ஆயினும் சில சந்தர்ப்பங்களில் வாகனத்தில் தான் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். வெளியூரில் மரணித்தவரை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதாக இருந்தால் தோளில் சுமந்து செல்வது சாத்தியமாகாது.
ஊரை விட்டு வெகு தொலைவில் அடக்கத்தலம் அமைந்திருந்தால் அவ்வளவு தூரம் தூக்கிச் செல்வது சிரமமாக அமையும். மேலும் உடலைத் தூக்கி விட்டால் சீக்கிரம் கொண்டு போய் இறக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர்.
கிலோ மீட்டர் கணக்கான தொலைவில் அடக்கத்தலம் இருந்தால் தோளில் தூக்கிச் செல்வது அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களில் எடுத்துச் சென்றால் சீக்கிரம் வந்துவிடலாம்.
மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்வதற்குச் சிறந்த நன்மைகள் உள்ளன. நீண்ட நேரம் நடக்கும் நிலை ஏற்பட்டால் பெரும்பாலானவர்களால் பின் தொடர்ந்து வர முடியாத நிலை ஏற்படலாம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் அடக்கத்தலத்துக்கு நெருக்கமான தூரம் வரை ஜனாஸாவைக் கொண்டு சென்று அங்கிருந்து தோளில் சுமந்து சென்றால் அங்கிருந்து ஜனாஸாவை மக்கள் பின் தொடர்ந்து சென்று அந்த நன்மைகளையும் மக்கள் அடைந்து கொள்ள முடியும்.
மேலும் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று அல்லாஹ் பல்வேறு வசனங்களில் அறிவுறுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல்
உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நாலைந்து பேர் போதும் என்றாலும் உடலைப் பின் தொடர்ந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டனர். அவைகளாவன: ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், நோயாளிகளை விசாரிக்கச் செல்லுதல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுதல், சத்தியத்தை நிறைவேற்றுதல், ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், தும்மல் போட்டவருக்காக துஆச் செய்தல்.
அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 1239, 2445, 5175, 5635, 5863, 6222, 6235, 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப் பின் தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல் போட்டவருக்கு துஆச் செய்தல்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1240
'நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 47, 1235
'உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நான்' என்று சொன்னார்கள். 'இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்தது யார்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள். 'ஏழைக்கு இன்று உணவளித்தவர் யார்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நான்' என்று கூறினார்கள். 'இன்று உங்களில் நோயாளியை விசாரிக்கச் சென்றவர் யார்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அபூ பக்ர் (ரலி) 'நான்' என்றார்கள். 'இவை அனைத்தும் ஒருவரிடம் ஒரு சேர அமைந்தால் அவர் சொர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1707, 4400
பெண்கள் ஜனாஸாவைப் பின் தொடராமல் இருப்பது சிறந்தது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது அதிக நன்மை தரக் கூடியது என்றாலும் ஜனாஸாவைப் பெண்கள் பின் தொடர்ந்து செல்லாமல் இருப்பது நல்லது. பின் தொடர்ந்தால் குற்றமாகாது. 'ஜனாஸாவைப் பின் தொடர வேண்டாம் என்று (பெண்களாகிய) நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (ஆயினும்) வலிமையாகத் தடுக்கப்படவில்லை' என்று உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல்: புகாரி 1278
மென்மையான முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றால் அதைச் செய்யாமலிருப்பது நல்லது என்றே புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
விரைவாகக் கொண்டு செல்லுதல்
ஜனாஸாவைத் தோளில் சுமந்து விட்டால் ஆடி அசைந்து நடக்காமல் வேகவேகமாகக் கொண்டு செல்ல வேண்டும்.
'ஜனாஸாவை விரைவாகக் கொண்டு செல்லுங்கள். அது நல்லவரின் உடலாக இருந்தால் நல்லதை நோக்கிக் கொண்டு சென்றவராவீர்கள். அது கெட்டவரின் உடலாக இருந்தால் கெட்டதை (சீக்கிரம்) தோளிலிருந்து இறக்கியவர்களாவீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1315
'ஜனாஸா (கட்டிலில்) வைக்கப்பட்டு ஆண்கள் அதைத் தோளில் தூக்கி விட்டால் அது நல்லவரின் உடலாக இருந்தால் சீக்கிரம் கொண்டு போங்கள்' என்று அது கூறும். அது கெட்டவரின் உடலாக இருந்தால் அய்யஹோ! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?' என்று கேட்கும். அந்த சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் செவியுற்றால் மூர்ச்சையாவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1314, 1316, 1380
வாகனத்தில் பின் தொடர்தல்
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்பவர் நடந்தும் செல்லலாம்; வாகனத்தில் ஏறியும் பின் தொடரலாம்.
'வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி) நூல்கள்: திர்மிதி 952, நஸயீ 1917, அஹ்மத் 17459, 17468, 17475
வாகனத்தில் பின் தொடரக் கூடாது என்ற கருத்துடையவர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது.. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி)
நூல்: அபூ தாவூத் 2763
இந்த ஹதீஸ் இவர்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆகாது. வானவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகக் கண்டனர். அவர்கள் நடந்து வருவதையும் அறிந்தனர். இதனால் வாகனத்தைத் தவிர்த்தனர். இந்த நிலை மற்றவர்களுக்கு இல்லை. வானவர்கள் வருகிறார்கள் என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வாகனத்தில் வருகிறார்களா? நடந்து வருகிறார்களா என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே நமக்குத் தெரியாத விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
வாகனத்தில் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததற்கு ஆதாரம் உள்ளதால் விரும்பினால் வாகனத்தில் ஏறி ஜனாஸாவைப் பின் தொடரலாம்; ஜனாஸாவை முந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜனாஸாவுடன் நடந்து செல்பவர் ஜனாஸாவுக்கு முன்னேயும் வலது இடது புறங்களிலும் செல்வதற்கு அனுமதி உண்டு.
நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம் என்று மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளதே இதற்குப் போதுமான சான்றாகும்.
ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது எந்த துஆவும் இல்லை
ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது பல்வேறு திக்ருகளைக் கூறிக் கொண்டு செல்லும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இதற்கு என தனிப்பட்ட திக்ரோ, துஆவோ இருந்திருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயம் ஓதிக் காட்டியிருப்பார்கள். அவர்கள் அவ்வாறு ஓதி இருந்தால் அது நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை.
எனவே ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது மௌனமாகத் தான் செல்ல வேண்டும்.
ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்
முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
'உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1308
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா' என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1311, 1313
எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை
ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். நாங்களும் உட்கார்ந்தோம்' என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 1599
இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.
எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை' என்பது போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் கொள்ள முடியும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் அமைந்துள்ளது.
ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற கருத்தைத் தான் இது தரும்.
எழுந்தார்கள்' என்பதை எழவில்லை' அல்லது எழுவதைத் தடுத்தார்கள்' என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.
எழுந்தார்கள்' என்பதை உட்கார்ந்தார்கள்' என்பது மாற்றாது.
இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸும் உள்ளது.
நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். 'ஏன் எழுந்து நிற்கிறாய்?' என்று என்னிடம் கேட்டார். 'ஜனாஸா வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்' என்று நான் கூறினேன். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் உட்கார்ந்தார்கள்' என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார்' என அவர் பதிலளித்தார்.
அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்
நூல்: முஸ்லிம் 1597
இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.
ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை உட்காரக் கூடாது
ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.
'அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் வரை நில்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: புகாரி 1307, 1308, 1310
கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் கூறப்பட்டது.
நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து 'எழுங்கள்' என்றார். 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார்' என்றும் கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், 'இவர் சொல்வது உண்மை தான்' என்றார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி
நூல்: புகாரி 1309
'ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்: புகாரி 1310
ஓட்டமும் நடையுமாகச் செல்லுதல்
ஜனாஸாவைச் சுமந்தவர்களும், பின் தொடர்பவர்களும் ஓடுகிறார்களோ என்று கருதும் அளவிற்கு ஓட்டமும் நடையுமாகச் செல்வது சிறந்ததாகும்.
நாங்கள் அப்துர்ரஹ்மான் பின் ஸமுரா அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொண்டோம். (அப்போதைய ஆட்சியாளர்) ஸியாத் கட்டிலின் முன்னால் நடக்கலானார். அப்துர் ரஹ்மானின் குடும்பத்தினர் சிலர் ஜனாஸாவின் கட்டிலை எதிர் நோக்கி பின்புறம் நடந்தவர்களாக 'வாருங்கள்! அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வான்' என்று கூறினர். அப்போது மெதுவாக அவர்கள் ஊர்ந்து சென்றனர். மிர்பத் எனும் இடத்தை நாங்கள் அடைந்த போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் கோவேறுக் கழுதையில் வந்து எங்களுடன் சேர்ந்தனர். மக்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்கள் மீது கோவேறுக் கழுதையை ஏவினார்கள். அவர்களை நோக்கிச் சாட்டையால் சொடுக்கினார்கள். 'நபிகள் நாயகத்தின் முகத்தைக் கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நாங்கள் நபிகள் நாயகத்துடன் ஓட்டமாக ஓடும் அளவுக்கு விரைந்து செல்வோம்' என்று கூறினார்கள். உடனே மக்கள் நெருக்கமாக நடக்கலானார்கள்.
அறிவிப்பவர்: யூனுஸ்
நூல்: நஸயீ 1886
ஜனாஸா தொழுகை
யாருக்கு ஜனாஸா தொழுகை?
இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் புகழ்வதும், இறந்தவரின் மறுமை நன்மைக்காகப் பிரார்த்தனை செய்வதும் தான் ஜனாஸா தொழுகையாகும்.
இவ்வுலகில் நன்மைகளை வேண்டி முஸ்லிம்களுக்காகவும், முஸ்லிம் அல்லாதவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மறுமை நன்மைகள் இல்லாத்தை ஏற்றவர்களுக்கு மட்டுமே உரியது என்று இஸ்லாம் பிரகடனம் செய்வதால் இறைவனை நிராகரிக்காதவர்களுக்கும், இணை கற்பிக்காதவர்களுக்கும் மட்டுமே ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும்.
முனாஃபிக்குகளுக்கு ஜனாஸா தொழுகை இல்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டதாக சிலர் நடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் முனாஃபிக்குகள் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை இறந்த போது இவனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இதை இறைவன் தடை செய்து விட்டான்.
அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவரது மகன் (இவர் முஸ்லிமாக இருந்தார்) நபிகள் நாயகத்திடம் வந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையை எனக்குக் கொடுங்கள்! அதில் அவரைக் கஃபனிடுகிறேன். இவருக்காகத் தொழுகை நடத்துங்கள். மேலும் இவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்' என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தமது சட்டையை வழங்கி, 'எனக்குத் தகவல் கொடு! நான் அவருக்குத் தொழுகை நடத்துகிறேன்' எனக் கூறினார்கள். அவர் தகவல் கொடுத்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்த எண்ணிய போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிடித்து இழுத்தார்கள். 'முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்துவதற்கு அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்கு மன்னிப்புத் தேடினாலும் தேடாவிட்டாலும் (சரி தான்) அவர்களுக்காக எழுபது தடவை நீ மன்னிப்புத் தேடினாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று (9:80) கூறி இரண்டில் எதையும் தேர்வு செய்யும் உரிமையை எனக்குத் தந்துள்ளான்' என்று கூறிவிட்டு அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். உடனே 'அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் ஒரு போதும் தொழுகை நடத்தாதே! அவர்களின் அடக்கத்தலத்திலும் நிற்காதே' என்ற வசனத்தை (9:84) அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1269, 4670, 4672, 5796
முனாபிக்குகளுக்குத் தொழுகை நடத்தக் கூடாது என்ற தடை நபிகள் நாயகத்துக்கு மட்டும் உரியதாகும்.
ஒருவர் முனாபிக்கா? இல்லையா? என்பதை இன்னொருவர் அறிய முடியாது. வெளிப்படையாக ஒருவர் கூறுவதைத் தான் நாம் நம்ப வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் யார் யார் முனாபிக்குள் என்று அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தான்.
நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
திருக்குர்ஆன் 3:179
இதன் அடிப்படையில் யார் யார் முனாபிக்குகள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முனாபிக்குகளைப் பிரித்தறியும் ஆற்றல் இல்லை.
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. ஆயினும் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பதே சரியான கருத்தாகும்.
ஈட்டியால் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் நபிகள் நாயகத்திடம் கொண்டு வரப்பட்டார். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1624
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறவில்லை என்று காரணம் கூறி இந்த நபிவழியை சிலர் நிராகரிக்கின்றனர்.
யாரேனும் கடன்பட்டிருந்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'உங்கள் தோழருக்கு நீங்கள் ஜனாஸா தொழுகை நடத்துங்கள்' என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்கொலை செய்தவருக்கு இப்படிக் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்றால் அதை மீறி நபித்தோழர்கள் தொழுகை நடத்தியிருக்க மாட்டார்கள் என்பதை ஏனோ இந்த அறிஞர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
மேலும் ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதும், மறுமைப் பயன்களை அவருக்காக வேண்டுவதுமாகும்.
தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்ற கருத்தில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. யாருக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் முடிவு எடுத்து விட்டானோ அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவது இறைவனின் தீர்ப்பை எதிர்ப்பதற்குச் சமமாகும்.
'ஒரு மனிதருக்குக் காயம் ஏற்பட்டது. (அதன் வேதனை தாங்க முடியாமல்) தற்கொலை செய்து கொண்டார். என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன்' என்று அல்லாஹ் கூறி விட்டான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி 1364
'யாரேனும் மலையிலிருந்து உருண்டு தற்கொலை செய்து கொண்டால் அவன் நரகத்தில் உருண்டு கொண்டே நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டால் விஷத்தைக் குடித்துக் கொண்டே நரகில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான். யாரேனும் இரும்பின் மூலம் தற்கொலை செய்தால் தன் கையில் அந்த இரும்பை வைத்துக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டு நரகத்தில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5778
தற்கொலை செய்தவனுக்கு நிரந்தர நரகம் என்று தீர்மானமாகி விட்ட பின் அவருக்காக மறுமைப் பயன் கோருவது இறைவனின் கட்டளையை அப்பட்டமாக மீறுவதாகும். எனவே தற்கொலை செய்தவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.
பாவம் செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துதல்
இறைவனுக்கு இணை கற்பித்தல், அல்லாஹ்வை மறுத்தல், தற்கொலை செய்தல் ஆகிய மூன்று குற்றங்கள் தவிர மற்ற குற்றங்கள் செய்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாம்.
கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
நூல்கள்: நஸயீ 1933, அபூ தாவூத் 2335
விபச்சாரம் செய்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய பின் அவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3209
எனவே ஒருவர் பாவம் செய்திருக்கிறார் எனக் காரணம் காட்டி அவருக்காக ஜனாஸா தொழுகை மறுக்கப்படக் கூடாது.
போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை
அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நடத்தும் போரில் எதிரிப் படையினரால் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டுமா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
இது பற்றி முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் வந்துள்ளதே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1343, 1348, 4080
ஒரு கிராமவாசி நபிகள் நாயகத்தைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார். அவர் போரில் கொல்லப்பட்டார். அவரை தமது குளிராடையால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபனிட்டார்கள். பின்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஷத்தாத் (ரலி)
நூல்: நஸயீ 1927
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தும் விஷயத்தில் முரண்பட்ட இரண்டு அறிவிப்புகள் உள்ளதால் இதில் கருத்து வேறுபாடு உள்ளது.
ஆயினும் வீரமரணம் அடைந்தவர்களுக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்பதே சரியாகும்.
உயிருடன் உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுபவர் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின் தொழுகை நடத்தினார்கள். பின்னர் மிம்பர் (மேடை) மீது ஏறினார்கள். 'நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். நான் உங்கள் மீது சாட்சி கூறுபவனாக இருக்கிறேன். ஹவ்ல் (கவ்ஸர்) தான் உங்களை நான் சந்திக்கும் இடம். நான் இந்த இடத்திலிருந்து கொண்டே அதைக் (கவ்ஸரை) காண்கிறேன். நீங்கள் இணை வைப்பீர்கள் என்பது பற்றி (நபித் தோழர்களாகிய) உங்கள் விஷயத்தில் நான் அஞ்சவில்லை. மாறாக இவ்வுலகம் பற்றியே அதில் மூழ்கி விடுவீர்கள் என்று அஞ்சுகிறேன்' எனக் கூறினார்கள். அது தான் நபிகள் நாயகத்தை நான் இறுதியாகப் பார்த்ததாகும்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 4042
இறந்தவர்களுக்குத் தொழுகை நடத்துவது போல் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்று சில அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளது. (புகாரி 1344, 3596, 4085, 6426, 6590)
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு உடணடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்றாலும் தாம் மரணிப்பதற்குச் சில நாட்களுக்கு முன், உஹதுப் போர் நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள் என்றால் இதைத் தான் நாம் சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உஹதுப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நாம் தொழுகை நடத்தவில்லையே என்று எண்ணி நாம் மரணிப்பதற்குள் எப்படியும் தொழுகை நடத்திவிட வேண்டும் என்று முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஏற்கனவே விட்ட ஜனாஸா தொழுகையை இப்போது தொழுதிருக்கும் போது இதில் கருத்து வேறுபாட்டுக்கு எந்த நியாயமும் இல்லை.
பருவமடையாத சிறுவர்களுக்கும், குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்
'சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 952, நஸயீ 1917, இப்னு மாஜா 1496,
அஹ்மத் 17459, 17497
'விழு கட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2766, அஹ்மத் 17468, 17475
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1921
சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.
ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது குற்றமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)
நூல்: அபூ தாவூத் 2772, அஹ்மத் 25101
சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.
வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும்.
ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது காயிப் ஜனாஸா என்று குறிப்பிடப்படுகிறது.
இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.
'இன்றை தினம் அபீஸீனியாவில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டார். வாருங்கள்! அவருக்குத் தொழுகை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அணிவகுத்தோம். அவர்களுடன் நாங்கள் அணிவகுத்து நிற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1320, 3877, இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நஜ்ஜாஷி மன்னரைத் தவிர இன்னும் எண்ணற்ற நல்லவர்கள் பல்வேறு ஊர்களில் மரணமடைந்திருந்தார்கள். அவர்களில் எந்த ஒருவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் தொழுகை நடத்தவில்லை.
அபீஸீனிய மன்னரான நஜ்ஜாஷி அவர்கள் இரகசியமாக இஸ்லாத்தை ஏற்றிருந்தார். எனவே அவர் இறந்த பின் அவருக்குத் தொழுகை நடத்தப்படவில்லை. ஒருவரும் தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்து விட்ட காரணத்தால் அவருக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.
இது பற்றி மற்றொரு அறிவிப்பில் 'நஜ்ஜாஷி மன்னர் முஸ்லிம்கள் வசிக்காத பகுதியில் இறந்து விட்டார். எனவே உங்கள் சகோதரருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நுல்கள்: அஹ்மத் 14434, 14754, 15559, 15560, 15561,
இப்னு மாஜா 1526 நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் ஏன் தொழுகை நடத்தினார்கள் என்பது இந்த அறிவிப்பிலிருந்து தெளிவாகிறது.
ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தாமல் அடக்கம் செய்தது நமக்குத் தெரிய வந்தால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்று தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவத்தைக் கருதி உலகின் பல பகுதிகளிலும் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அடக்கத் தலத்தில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
ஒருவர் பள்ளிவாசல்களைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்து விட்டார் என்று மக்கள் கூறினார்கள். 'எனக்கு அது பற்றி அறிவித்திருக்க மாட்டீர்களா? அவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். அவரது அடக்கத்தலம் வந்து அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 458, 460, 1337
இந்தக் கருத்து புகாரி 857, 1247, 1321, 1340 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒருவரது ஜனாஸா தொழுகையில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவரது அடக்கத்தலம் சென்று அதன் முன்னே நின்று தொழுகை நடத்தலாம் என்று இதனடிப்படையில் சிலர் வாதிக்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்து காட்டியிருந்தால் அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால் இது சரியான நிலை போல் தோன்றினாலும் இதைப் பொதுவான நிலைபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் சிறப்புத் தகுதி உடையவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் துஆவுக்கு அதிக சக்தி உள்ளது. தனது துஆ தன் காலத்தில் தன்னோடு வாழ்ந்த யாருக்கும் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற தகுதியின் அடிப்படையில் இவ்வாறு தொழுகை நடத்தினார்களா? அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தினார்களா? என்று ஆராய வேண்டும். தூதர் என்ற சிறப்புத் தகுதிக்காக இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதில் நாம் போட்டி போடக் கூடாது.
'இந்தக் கப்ருகள் இதில் அடக்கப்பட்டவர்களுக்கு இருள் நிறைந்ததாக உள்ளன. நான் அவர்களுக்குத் தொழுவதன் மூலம் அவர்களது கப்ருகளை அல்லாஹ் ஒளிமயமாக்குகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தைக் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி)
நூல்கள்: நஸயீ 1995, இப்னுமாஜா 1517
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் என்ற தகுதியின் காரணமாகவே ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு மீண்டும் தொழுகை நடத்தியுள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டிருந்தாலும் தமது தொழுகைக்கு ஒரு சிறப்பு உள்ளது என்ற காரணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இது நபிகள் நாயகத்திற்கு மட்டுமே உரிய தனித் தகுதியாகும்.
ஏற்கனவே தொழுகை நடத்தப்பட்டவருக்கு என் தொழுகையால் அருள் கிட்டும் என்று சொல்லும் தகுதி இந்த உம்மத்தில் எவருக்கும் இல்லை என்பதால் கப்ரில் போய் ஜானாஸா தொழுகை நடத்தக் கூடாது.
ஜனாஸா தொழுகையை வீட்டில் தொழலாம்
ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலைப் பள்ளிவாசலுக்கோ, அல்லது ஜனாஸா தொழுகைக்காக நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கோ கொண்டு சென்று தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம் அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519
பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்துதல்
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617
ஜனாஸாவுக்குத் தனி இடத்தை நிர்ணயித்தல்
வீட்டிலும், பள்ளிவாசலிலும் ஜனாஸா தொழுகை நடத்தலாம் என்றாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரிதாகவே நடந்திருக்கிறது.
பளளிவாசலில் ஜனாஸாவை வைப்பதற்கு என தனியாக ஒரு இடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் அங்கு தான் ஜனாஸாவை வைத்து தொழுகை நடத்தினார்கள்.
விபச்சாரம் செய்த ஆணையும், பெண்ணையும் யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பள்ளிவாசலுக்கு அருகில் இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் இடத்தில் வைத்து அவ்விருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1329, 4556, 7332
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜனாஸாக்களை வைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தனியிடம் இருந்தது என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை.
அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ்
நூல்: ஹாகிம் 1/519
பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக்கூடாது என்றால் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பாக்ள்
ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) மரணித்த போது அவரது ஜனாஸாவைப் பள்ளியில் வைத்து, தாங்கள் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்டு நபிகள் நாயகத்தின் மனைவியர் தூது அனுப்பினார்கள். அவ்வாறே அவரது உடல் அவர்களது அறையின் அருகே வைக்கப்பட்டது. அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 'ஜனாஸாவைப் பள்ளிக்குள் கொண்டு வரும் வழக்கம் (நபியின் காலத்தில்) இருந்ததில்லை' என்று மக்கள் பேசிக் கொண்டனர். இதை மக்கள் குறை கூறுவது நபிகள் நாயகத்தின் மனைவியருக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் கிடைத்தது. உடனே அவர்கள் 'தங்களுக்கு அறிவு இல்லாத விஷயத்தைக் குறை கூற மக்கள் என்னே அவசரம் காட்டுகிறார்கள்? பள்ளிவாசலுக்குள் ஜனாஸாவைக் கொண்டு சென்றதற்காக எங்களைக் குறை கூறுகின்றனர். ஸுஹைல் பின் பைளா அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் தான் தொழுகை நடத்தினார்கள்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1616, 1615, 1617
பெண்கள் எப்படி ஜனாஸா தொழுகையில் சேரலாம் என்று நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்யவில்லை. ஜனாஸாவை எப்படி பள்ளிவாசலுக்குள் கொண்டு வரலாம் என்று தான் நபித்தோழர்கள் ஆட்சேபணை செய்ததாக இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் ஜனாஸா தொழுகையில் பங்கெடுப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததன் காரணமாகவே நபித்தோழர்கள் இதை ஆட்சேபிக்கவில்லை என்று அறியலாம்.
ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாத நேரங்கள்
1. சூரியன் உதிக்கும் நேரம். 2. சூரியன் உச்சிக்கு வரும் நேரம். 3. சூரியன் மறையும் நேரம் ஆகிய மூன்று நேரங்களில் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1373
மேற்கண்ட நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதால் அதில் ஜனாஸா தொழுகையும் அடங்கும். மேலும் இறந்தவர்களை அந்த நேரங்களில் அடக்கம் செய்யக் கூடாது என்று இணைத்துக் கூறியிருப்பது மேலும் இக்கருத்தை வலுப்படுத்துகின்றது.
பல ஜனாஸாக்களுக்கு ஒரே தொழுகை
ஒரு நேரத்தில் அதிகமானவர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்காகவும் தனித் தனியாக நாம் ஜனாஸா தொழுகை நடத்துவது போல் அனைவருக்கும் சேர்த்து ஒரே தொழுகையாக நடத்தினால் அதுவும் போதுமானதே!
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு நேரத்தில் ஒன்பது ஜனாஸாக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஆண்களின் உடல்களை இமாமுக்கு அருகிலும், பெண்களின் உடல்களை கிப்லாவுக்கு (கிப்லாவின் பக்கம் உள்ள சுவருக்கு) அருகிலும் வைத்தார்கள். அனைத்து உடல்களும் ஒரே நேர் வரிசையில் வைக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்களின் மனைவி உம்மு குல்சூம், ஸைத் பின் உமர் என்ற அவரது மகன் ஆகியோரின் உடல்களும் வைக்கப்பட்டன. அப்போது ஸயீத் பின் ஆஸ் (ரலி) இமாமாக இருந்தார். அந்தச் சபையில் இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகிய நபித்தோழர்களும் இருந்தனர். அப்போது ஒரு மனிதர் 'இதை நான் ஆட்சேபிக்கிறேன்' என்றார். அப்போது நான், இப்னு அப்பாஸ் (ரலி) அபூ ஹுரைரா (ரலி), அபூ ஸயீத் (ரலி), அபூ கதாதா (ரலி) ஆகியோரைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இது நபி வழி தான்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: நஸயி குப்ரா 1/141, பைஹகீ 4/33
தொழுகையில் அதிகமானோர் பங்கெடுப்பதற்காகக் காத்திருத்தல்
'இறந்தவருக்காக நூறு பேர் அளவுக்கு முஸ்லிம் சமுதாயம் திரண்டு தொழுகையில் பங்கேற்று இறந்தவருக்காக பரிந்துரை செய்தால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1576
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் கதீத் என்ற இடத்தில் மரணித்து விட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் 'குரைப்! மக்கள் எவ்வளவு பேர் கூடியுள்ளனர் என்று பார்த்து வா!' என்றார்கள். நான் சென்று பார்த்த போது மக்கள் திரண்டிருந்தனர். இதை இப்னு அப்பாஸிடம் தெரிவித்தேன். 'நாற்பது பேர் அளவுக்கு இருப்பார்களா?' என்று இப்னு அப்பாஸ் (ரலி) கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் ஜனஸாவை வெளியே கொண்டு செல்லுங்கள்! எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்' என்று கூறினார்கள்..
அறிவிப்பவர்: குரைப் நூல்: முஸ்லிம் 1577
அதிகமானவர்கள் ஜனாஸாவில் கலந்து கொண்டு துஆச் செய்வதற்காகத் தாமதப்படுத்தலாம் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
தொழுகை நடத்தத் தகுதியானவர்கள்
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர். அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்க முடியாது.
'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் 1079, 1078
நபிகள் நாயகத்தின் இந்தப் பொதுவான அறிவுரையில் திருமணம் நடத்தி வைத்தல், ஜனாஸா தொழுகை நடத்துதல் உள்ளிட்ட அனைத்துமே அடங்கும் என்பதால் இறந்தவரின் குடும்பத்தினரே ஜனாஸா தொழுவிக்க உரிமை படைத்தவர்கள் என்பதை அறியலாம்.
ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை
ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர்கள் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாயக் கடமையாகும்.
ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது சிலர் இத்தொழுகையை நடத்திவிட்டால் போதுமானதாகும்.
கடன்பட்டவரின் உடல் கொண்டு வரப்பட்ட போது இவருக்கு நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். மற்றவர்கள் தொழுத இத்தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கேற்கவில்லை.
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இறந்தவரின் பெற்றோரும் மட்டுமே தொழுதனர். ஒட்டு மொத்த சமுதாயமும் தொழவில்லை. இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஜனாஸாவை முன்னால் வைத்தல்
ஜனாஸா தொழுகை நடத்தும் போது இறந்தவரின் உடலை முன்னால் வைக்க வேண்டும்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்' என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 383
இமாம் நிற்க வேண்டிய இடம்
இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
நூல்: புகாரி 332, 1331, 1332
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். 'அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். 'நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?' என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் 'இதைக் கவனத்தில் வையுங்கள்' என்றார்கள்.
நூல்கள்: திர்மிதீ 955, அபூ தாவூத் 2779,
இப்னு மாஜா 1483, அஹ்மத் 11735, 12640
இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மூன்று வரிசைகளாக நிற்பது அவசியமா?
ஜனாஸா தொழுகையில் குறைவான நபர்களே வந்தாலும் அவர்களை மூன்று வரிசைகளாகப் பிரித்து நிற்க வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இவ்வாறு செய்து வருகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்திய போது அவர்களுடன் ஏழு பேர் இருந்தனர். அவர்களை இருவர் இருவராக நிறுத்தி மூன்று வரிசைகளாக ஆக்கினார்கள் என்று அபூ உமாமா அறிவிப்பதாக தப்ரானியில் (8/190) ஒரு ஹதீஸ் உள்ளது
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹ்யஆ இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
'யாருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்துகிறார்களோ அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
நூல்கள்: திர்மிதி 949, அபூ தாவூத் 2753,
இப்னு மாஜா 1479, தப்ரானி 19/299
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் (16125) நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அறிவிப்புகளிலும் முஹம்மத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தத்லீஸ் செய்பவர் என்பதால் இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
(தான் நேரடியாக யாரிடம் செவியுற்றாரோ அவரை இருட்டடிப்புச் செய்து விட்டு, அவருக்கு மேலே உள்ள அறிவிப்பாளர் கூறியது போல் ஹதீஸை அறிவிப்பது தத்லீஸ் எனப்படும்.)
தொழுகையில் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப வரிசைகளை அமைத்துக் கொள்ளலாம்.
இரண்டு பேர் மட்டும் இருந்தால்...
பொதுவாக ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் இருவரும் அடுத்தடுத்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இருவர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் ஜனாஸா தொழுகையில் இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் அவர் இமாமுக்குப் பின்னால் தான் நிற்க வேண்டும்.
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூ தல்ஹா நின்றனர். அபூ தல்ஹாவின் மனைவி அதற்குப் பின்னால் நின்றார் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
பெண்ணையும், அபூ தல்ஹவையும் சேர்த்து இருவர் நின்றதால் தான் அபூ தல்ஹாவைப் பின்னால் நிற்க வைத்தார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும், எனது தாயாரும் தொழுத போது என்னைத் தமது வலது பக்கத்திலும், என் தாயாரைப் பின்னாலும் நிற்க வைத்து தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1056
ஜனாஸா தொழுகையிலும், சாதாரண தொழுகையிலும் ஒரு ஆண் ஒரு பெண் இருந்த போது இரண்டுக்கும் வெவ்வேறு முறையில் வரிசையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைத்ததால் ஜனாஸாவுக்குத் தனிச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
உளூ அவசியம்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா இல்லாததால் இதற்கு உளூ அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் இல்லை.
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,
இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019
ஜனாஸா தொழுகையை தக்பீரில் துவக்கி ஸலாமில் முடிக்கிறோம். எனவே இதுவும் தொழுகை தான். இதற்கும் உளுச் செய்வது அவசியமாகும்.
கிப்லாவை முன்னோக்குதல்
மற்ற தொழுகைகளை எவ்வாறு கிப்லாவை நோக்கித் தொழ வேண்டுமோ அது போல் ஜனாஸாத் தொழுகையையும் கிப்லாவை நோக்கித் தான் தொழ வேண்டும்.
'நீ தொழுகைக்கு நின்றால் முழுமையாக உளூச் செய்து விட்டு கிப்லாவை நோக்கு!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6251, 6667
தக்பீர் கூறுதல்
ஜனாஸா தொழுகையில் ருகூவு, ஸஜ்தா போன்றவை கிடையாது. நின்ற நிலையில் சில பிரார்த்தனைகளைச் செய்வது தான் ஜனாஸா தொழுகையாகும்.
அதில் முக்கியமானது அல்லாஹு அக்பர்' என்று கூறி மற்ற தொழுகைளைத் துவக்குவது போலவே அல்லாஹு அக்பர்' எனக் கூறி துவக்க வேண்டும்.
'தொழுகையின் திறவு கோல் தூய்மை (உளூ) ஆகும். அதன் துவக்கம் தஹ்ரீமா (அல்லாஹு அக்பர் கூறுவது) அதனை முடிப்பது தஸ்லீம் (ஸலாம் கொடுப்பது)' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 56, 523 திர்மிதி 3, 221,
இப்னு மாஜா 271, அஹ்மத் 957, 1019
நான்கு தடவை தக்பீர் கூறுதல்
நஜ்ஜாஷி மன்னருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திய போது அவருக்காக நான்கு தடவை தக்பீர் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1245, 1318, 1319, 1328, 1334, 1333, 3881, 3879
ஐந்து தடவை தக்பீர் கூறுதல்
ஐந்து தடவை தக்பீர்கள் கூறுவதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.
ஸைத் (ரலி) அவர்கள் எங்கள் ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறி தொழுவிப்பார். ஒரு தடவை ஐந்து தடவை தக்பீர் கூறினார். இது பற்றி அவரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐந்து தடவையும் தக்பீர் கூறியிருக்கிறார்கள்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா
நூல்: முஸ்லிம் 1589
நான்கு தக்பீர் கூறுவது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்துள்ளது என்பதையும், மிக அரிதாக ஐந்து தக்பீர்கள் கூறியுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஐந்து தடவைக்கு மேல் தக்பீர் கூறலாமா?
ஐந்துக்கு மேல் ஆறு, ஏழு, ஒன்பது தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறியதாகச் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் நான்கு, ஐந்து, ஆறு, ஏழு தக்பீர்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்று திரட்டி அனைவரையும் நான்கு தக்பீர் என்ற கருத்துக்குக் கொண்டு வந்தார்கள் என்ற செய்தி அபூ வாயில் அறிவிப்பதாக பைஹகியில் (4/37) பதிவாகியுள்ளது.
அபூ வாயில் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி இருந்தது என்று இவர் அறிவிப்பதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் ஜனாஸா என்றால் ஏழு முறை தக்பீர் கூறுவார்கள். ஹாஷிம் குலத்தவர் என்றால் ஐந்து தடவை தக்பீர் கூறுவார்கள். பின்னர் கடைசிக் காலம் வரை நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என்று ஒரு ஹதீஸ் தப்ரானியில் (11/160) உள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் நாஃபிவு அபூ குர்முஸ் என்பார் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் கூறியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒன்பது ஒன்பதாகவும், பிறகு ஏழு ஏழாகவும் தக்பீர் கூறி வந்தனர். பின்னர் மரணிக்கும் வரை நான்கு தக்பீர் கூறி வந்தனர் என்ற ஹதீஸ் தப்ரானியில் (11/174) பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஷ்ர் பின் அல்வலீத் அல்கின்தீ என்பவர் வழியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் பலவீனமானவர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டதும் அவரது உடல் வைக்கப்பட்டது. அவருக்கு ஒன்பது தக்பீர் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்ற செய்தி தப்ரானியில் (11/62) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் அஹ்மத் பின் அய்யூப் பின் ராஷித் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமான அறிவிப்பாளர். மேலும் உஹதுப் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று புகாரியில் பதிவான ஆதாரப்பூர்வமான செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளது.
எனவே நான்கு அல்லது ஐந்து தக்பீர்கள் கூறுவதே நபிவழியாகும்.
தக்பீர்களுக்கு இடையே ஓத வேண்டியவை
நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூற வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் தக்பீர் கூற வேண்டும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
மாறாக ஒரு தக்பீருக்கும், இன்னொரு தக்பீருக்கும் இடையே கூற வேண்டிய திக்ருகள் உள்ளன. அவற்றை அந்தந்த இடங்களில் கூறிக் கொள்ள வேண்டும்.
முதல் தக்பீருக்குப் பின்...
முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பின்பற்றி ஜனாஸா தொழுகை தொழுதேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். 'இதை நபிவழி என்று மக்கள் அறிந்து கொள்வதற்காகவே (சப்தமாக) ஓதினேன்' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1335
இத்துடன் நமக்குத் தெரிந்த ஏதேனும் அத்தியாயத்தை ஓத வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'இது நபிவழியும், உண்மையும் ஆகும்' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ்
நூல்: நஸயீ 1961
முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் மூன்று தடவை தக்பீர் கூறுவதும், கடைசியில் ஸலாம் கொடுப்பதும் நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: நஸயீ 1963
இரண்டாவது தக்பீருக்குப் பின்...
இரண்டாவது தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். முதலில் இமாம் தக்பீர் கூறுவதும், பின்னர் முதல் தக்பீருக்குப் பின் அல்ஹம்து அத்தியாயத்தை மனதுக்குள் ஓதுவதும், பின்னர் உள்ள தக்பீர்களில் குர்ஆனிலிருந்து எதனையும் ஓதாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறி, இறந்தவருக்காகத் தூய்மையான முறையில் துஆச் செய்வதும், மனதுக்குள் ஸலாம் கூறுவதும் ஜனாஸாத் தொழுகையில் நபிவழியாகும் என்று ஒரு நபித் தோழர் கூறியதாக அபூ உமாமா அறிவிக்கிறார்.
நூல்: பைஹகி (4/39)
மேற்கூறிய ஹதீஸில் ஸலவாத், துஆ என்ற வரிசையில் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாம் தக்பீருக்குப் பின்னால் ஸலவாத் ஓத வேண்டும்.
ஒவ்வொரு தக்பீருக்குப் பின் இதை ஓத வேண்டும் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
தொழுகையில் ஓதுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவது தான் நல்லது.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
மூன்றாவது, நான்காவது தக்பீருக்குப் பின்... மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்குப் பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும்.
ஜனாஸா தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை ஓதியுள்ளனர். அவை அனைத்தையுமோ, அவற்றில் இயன்றதையோ நாம் ஓதிக் கொள்ளலாம்.
அத்துடன் நாம் விரும்பும் வகையில் நமது தாய் மொழியில் இறந்தவருக்காக துஆச் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்ம அப்து(க்)க வப்னு அப்தி(க்)க கான யஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த வஅன்ன முஹம்மதன் அப்து(க்)க வரசூலு(க்)க வஅன்(த்)த அஃலமு பிஹி மின்னீ இன் கான முஹ்ஸினன் ஃபஸித் ஃபீ இஹ்ஸானிஹி வஇன் கான முஸீஅன் ஃபக்ஃபிர்லஹு வலா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தஃப்தின்னா பஃதஹு
பொருள்: இறைவா! இவர் உனது அடிமையும் உனது அடிமையின் மகனுமாவார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி உனது அடியாரும், தூதரும் ஆவார் என்றும் சாட்சி கூறிக் கொண்டு இருந்தார். அவரைப் பற்றி நீயே நன்கு அறிந்தவன். இவர் நல்லவராக இருந்தால் இவரது நற்கூலியை அதிகரிப்பாயாக! இவர் தீயவராக இருந்தால் இவரை மன்னித்து விடுவாயாக! இவரது நற்செயலுக்கான கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! இவருக்குப் பின் எங்களைச் சோதனையில் ஆழ்த்தி விடாதே!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்னத் அபூ யஃலா (11/477)
ஒரு ஜனாஸாத் தொழுகையின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தனர்.
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஃபு அன்ஹு வஆஃபிஹி வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பிமாயின் வஸல்ஜின் வபரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வ(க்)கிஹி ஃபித்ன(த்)தல் கப்ரி வஅதாபன்னார்
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1601
அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் க(த்)தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்
பொருள்: இறைவா! இவரை மன்னித்து அருள் புரிவாயாக! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக! பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப் படுத்துவாயாக! அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்தப்படுவது போல் இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக! இவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பத்தாரை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இங்குள்ள ஜோடியை விட சிறந்த ஜோடியை இவருக்குக் கொடுத்தருள்வாயாக! கப்ரின் வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் இவரைப் பாதுகாத்து இவரைச் சொர்க்கத்தில் புகச் செய்வாயாக!
இந்த துஆவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த போது மனனம் செய்து கொண்டேன். இந்தச் சிறப்பான துஆவின் காரணத்தால் அந்த மய்யித்தாக நான் இருக்கக் கூடாதா என்று எண்ணினேன்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1600
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வரும் துஆவை ஓதுவார்கள். அல்லாஹும்மஃபிர் லிஹய்யினா வமய்யி(த்)தினா வஷாஹிதினா வகாயிபினா வஸகீரினா வகபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹும்ம மன் அஹ்யை(த்)தஹு மின்னா ஃபஅஹ்யிஹி அலல் இஸ்லாம். வமன் தவஃப்பை(த்)தஹு மின்னா ஃபதவஃப்பஹு அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு வலா துழில்லனா பஃதஹு
பொருள்: இறைவா! எங்களில் உயிருடனிருப்பவர்களையும், மரணித்தவர்களையும், இங்கே வந்திருப்போரையும், வராதவர்களையும், சிறுவர்களையும், பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், பெண்களையும் மன்னித்து விடுவாயாக! இறைவா எங்களில் உயிரோடு இருப்பவர்களை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் இறந்தவர்களை ஈமானுடன் இறக்கச் செய்வாயாக! இறைவா! இந்த மய்யித்தின் கூலியைத் தடுத்து விடாதே! இவருக்குப் பிறகு எங்களை வழி தவறச் செய்து விடாதே!
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2786, இப்னு மாஜா 1487
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகையில் பின்வருமாறு துஆச் செய்துள்ளனர்.
அல்லாஹும்ம இன்ன ஃபுலானப்ன ஃபுலானின் ஃபீ திம்மதி(க்)க வஹப்லி ஜிவாரி(க்)க ஃப(க்)கிஹி மின் ஃபித்ன(த்)தில் கப்ரி வமின் அதா பின்னாரி ஃபஅன்(த்)த அஹ்லுல் வஃபாயி வல்ஹக்கி ஃபக்ஃபிர்லஹு வர்ஹம்ஹு இன்ன(க்)க அன்(த்)தல் கஃபூருர் ரஹீம்
பொருள்: இறைவா! இன்னாரின் மகனான இவர் உனது பொறுப்பில் இருக்கிறார். கப்ரின் வேதனையை விட்டு இவரைப் பாதுகாப்பாயாக! நரகின் வேதனையை விட்டும் காப்பாயாக! நீயே வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன். உண்மையாளன். இவரை மன்னித்து அருள் புரிவாயாக! நீயே மன்னிப்பவன். அருள் புரிபவன்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 2787, இப்னு மாஜா 1488, அஹ்மது 15443
இன்னாரின் மகன் இன்னார் என்ற இடத்தில், அதாவது ஃபுலானப்ன ஃபுலான் என்ற இடத்தில் இறந்தவரின் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது, நான்காவது தக்பீர்களுக்குப் பின் மேற்கண்ட துஆக்களை ஓதிக் கொள்வதுடன் நமக்குத் தெரிந்த மொழியிலும் துஆச் செய்யலாம்.
'இறந்தவருக்கு நீங்கள் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் 7/345, 7/346
உள்ளத் தூய்மையுடன் கலப்பற்ற முறையில் துஆச் செய்வது என்றால் நமக்குத் தெரிந்த மொழியில் துஆச் செய்யும் போது தான் அது ஏற்பட முடியும். எனவே இறந்தவருக்காக மறுமை நன்மையை வேண்டி தாய் மொழியில் துஆச் செய்யலாம்.
ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்த வேண்டுமா?
ஜனாஸாத் தொழுகையில் ஒவ்வொரு தடவை தக்பீர் கூறும் போதும் கைகளை உயர்த்தி மீண்டும் கைகளைக் கட்டிக் கொள்ளும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது.
இதற்கு ஆதாரம் இல்லை. தக்பீர் என்ற சொல்லுக்கு அல்லாஹு அக்பர் எனக் கூறுதல் என்பதே பொருள். எனவே நான்கு தடவை அல்லாஹு அக்பர் எனக் கூறுவது தான் நபிவழியாகும். கைகளை அவிழ்த்துக் கட்டுவதோ, அல்லது உயர்த்திக் கட்டுவதோ நபிவழி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும் கைகளை உயர்த்துவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரி 693, 694, 696, 697
ஜனாஸா தொழுகையில் ருகூவு, சுஜுது இல்லாததால் தொழுகையின் முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்த வேண்டும். அதன் பின்னர் கைகளைக் கட்டிய நிலையிலேயே மற்ற தக்பீர்களைக் கூற வேண்டும். ஸலாம் கூறுதல்
கடைசி தக்பீர் கூறி, துஆக்கள் ஓதிய பிறகு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று காரியங்களைச் செய்து வந்தனர். அவற்றை மக்கள் விட்டு விட்டனர். (மற்ற) தொழுகையில் ஸலாம் கொடுப்பது போல் ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுப்பது அம்மூன்றில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: பைஹகீ 4/43, தப்ரானி 10/82
மற்ற தொழுகைகளில் ஸலாம் கொடுப்பது போன்றே ஜனாஸா தொழுகையிலும் ஸலாம் கொடுக்க வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற தொழுகைகளில் வலது புறமும், இடது புறமும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: நஸயீ 1130, 1302, 1303, 1305, 1307, 1308
வலது புறம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' இடது புறம் அஸ்ஸலாமு அலைக்கும்' என்று மட்டும் ஸலாம் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: நஸயீ 1304
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு ஒரு ஸலாம் கொடுத்ததாக தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் உள்ளது.
கன்னாம் பின் ஹஃப்ஸ், அப்து:ல்லாஹ் பின் கன்னாம் ஆகிய இருவர் வழியாகவே இது அறிவிக்கப்படுகிறது. இவ்விருவரும் யார் என்று அறியப்படாதவர்கள்.
எனவே ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல.
உடலை அடக்கம் செய்தல்
வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது
இறந்தவர்களை குறிப்பாக சிறுவர்களை வீடுகளில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் வீடுகளில் அடக்கம் செய்யும் வழக்கம் சில பகுதிகளில் நிலவுகிறது.
இந்த நம்பிக்கை தவறானதாகும். வீடுகளில் அடக்கம் செய்யக் கூடாது.
'(கடமையில்லாத) உங்கள் தொழுகைகளில் சிலவற்றை உங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ளுங்கள். வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 432, 1187
வீடுகளை மண்ணறைகளாக ஆக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்திருப்பதால், குடியிருக்கும் வீட்டில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது.
அடக்கம் செய்யக் கூடாத நேரங்கள்
சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கு வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1373
இந்த மூன்று நேரங்களில் தவிர மற்ற நேரங்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யலாம்.
இரவில் அடக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்வது தவறில்லை.
தமது தோழர் ஒருவர் மரணித்து, குறைவான அளவு கஃபனிடப்பட்டு இரவில் அடக்கம் செய்யப்பட்டதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரை நிகழ்த்திய போது குறிப்பிட்டார்கள். 'நான் தொழுகை நடத்தும் வரை இரவில் ஒருவரை அடக்கம் செய்ய வேண்டாம்; இதற்கான அவசியம் ஏற்பட்டால் தவிர' என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1567
இரவில் அடக்கம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்றாலும் அவசியம் ஏற்பட்டால் இரவில் அடக்கம் செய்யலாம் என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
ஒரு குழிக்குள் பலரை அடக்கம் செய்தல்
ஒரு நேரத்தில் அதிகமான மக்கள் இறந்து விட்டால் அனைவருக்கும் தனித் தனியாக குழிகள் வெட்டுவது சாத்தியமில்லாமல் போகலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பெரிய அளவில் குழிகள் வெட்டி இருவர் அல்லது மூவரை அந்தக் குழியில் அடக்கம் செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை ஒரு கப்ருக்கு இருவர் என்ற முறையில் அடக்கம் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1345
குழியை விசாலமாகத் தோண்டுதல்
அடக்கம் செய்வதற்காகக் குழிகளை வெட்டும் போது தாராளமாகவும், விசாலமாகவும் வெட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, 'தலைப் பக்கம் விசாலமாக்கு! கால் பக்கம் விசாலமாக்கு!' என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்ஸாரித் தோழர்
நூல்: அபூ தாவூத் 2894
மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல்
அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர்.
இந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அடக்கத்தலம் வந்து அவரது தலைமாட்டில் மூன்று கைப்பிடி மண் அள்ளிப் போட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு மாஜா 1554
இவ்வாறு மண் அள்ளிப் போடும் போது 'மின்ஹா கலக்னாகும் வபீஹா நுயீதுக்கும் வமின்ஹா நுக்ரிஜகும் தாரதன் உக்ரா' என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூற வேண்டியவை
குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்' எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4982, 51115 குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத் 2798
குழிக்குள் உடலை வைக்கும் போது 'பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்' எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அஹ்மத் 4581, 4748
அடக்கம் செய்யப்பட்ட உடலைத் தோண்டி எடுத்தல்
என் தந்தையுடன் மற்றொருவரும் சேர்ந்து ஒரு குழியில் அடக்கம் செய்யப்பட்டார். இதை என் மனம் ஒப்பவில்லை. எனவே என் தந்தையின் உடலை வெளியே எடுத்துத் தனியாக வேறு கப்ரில் மறு அடக்கம் செய்தேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 1352
மற்றொரு அறிவிப்பில் ஆறு மாதம் கழித்து அவரது உடலை வெளியே எடுத்தேன். அவரது காதைத் தவிர உடலின் மற்ற பாகங்கள் சற்று முன் வைக்கப்பட்டது போல் இருந்தன என்று கூறப்படுகிறது. (புகாரி 1351)
உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்கள் இருவருக்கு ஒரு கப்ர் என்ற முறையில் அடக்கம் செய்யப்பட்டனர். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் மனம் ஒப்பாமல் தம் தந்தையை மட்டும் வெளியே எடுத்து தனி கப்ரில் அடக்கம் செய்தனர். இது உஹதுப் போர் நடந்து ஆறு மாதத்தில் நடந்துள்ளது. இந்தச் சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தனர். இதன் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்களின் இந்தச் செயல் நபியவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது.
இது போன்ற சாதாரண காரணத்துக்காக உடலை வெளியே எடுக்கலாம் என்றால் மரணத்தில் சந்தேகம் ஏற்படும் போது உண்மையைக் கண்டறிவதற்காக வெளியே எடுப்பது தவறில்லை என்பதை அறியலாம்.
கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்டு வைக்கும் வழக்கம் தமிழகத்தில் காணப்படுகிறது. பின்வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு தோட்டத்தின் அருகில் கடந்து சென்றனர். அப்போது தமது கப்ருகளில் வேதனை செய்யப்படும் இருவரின் சப்தத்தைக் கேட்டார்கள். 'இவ்விருவரும் பெரும் பாவங்களுக்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளாதவராக இருந்தார்; மற்றொருவர் கோள் சொல்லிக் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள். பின்னர் பேரீச்சை மட்டை ஒன்றைக் கொண்டு வரச் செய்து அதை இரண்டாக முறித்து ஒவ்வொரு கப்ரிலும் ஒரு துண்டை வைத்தார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'இது காய்வது வரை இவ்விருவரின் வேதனை இலேசாக்கப்படக் கூடும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 216, 218, 1361
புகாரியின் மற்றொரு அறிவிப்பில் (211, 1273) 'அந்த மட்டையை இரண்டாகப் பிளந்து பாதியை ஒரு கப்ரிலும், மறுபாதியை மற்றொரு கப்ரிலும் வைத்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டே இவ்வாறு செடி கொடிகளை வைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் இந்த நடவடிக்கையைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாதது தான் இதற்குக் காரணம்.
பேரீச்சை மட்டைகள் ஊன்றி வைத்தால் முளைக்கக் கூடிய தன்மை உடையது அல்ல. அதை இரண்டாகப் பிளந்தால் இன்னும் சீக்கிரத்தில் காய்ந்து போய் விடும்.
கப்ரின் மேலே காலா காலம் செடி கொடிகள் இருப்பது பயன் தரும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
விரைவில் காய்ந்து விடும் தன்மை கொண்ட பேரீச்சை மட்டையைத் தேடி, அதைச் சீக்கிரம் காய்ந்து விடும் வகையில் இரண்டாகப் பிளந்து வைத்ததிலிருந்து செடி கொடிகள் கப்ரின் வேதனையிலிருந்து காக்கும் என்பதற்காகச் செய்யவில்லை என்று அறியலாம். அப்படி இருந்தால் பேரீச்சை மட்டைக்குப் பதிலாக பேரீச்சை மரத்தை அதன் மேல் நட்டியிருப்பார்கள்.
அப்படியானால் வேறு எதற்காக வைத்தார்கள்? இது காயும் வரை வேதனை இலேசாக்கப்படக் கூடும் என்று கூறியது ஏன்?
இந்தக் கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே விடையளித்து விட்டனர்.
'நான் செய்த துஆவின் காரணமாக இவ்விரு மட்டைகளும் காய்வது வரை வேதனை இலேசாக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5328
தமது உம்மத்தினர் இருவர் வேதனை செய்யப்படுவது இறைத் தூதர் என்ற முறையில் அவர்களுக்குக் காட்டித் தரப்படுகிறது. இதைக் கண்ட பின் அவர்கள் மனம் இவ்விருவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. 'இறைவா! இம்மட்டை காய்வது வரையாவது இவர்களின் வேதனையை இலேசாக்கு' என்று துஆச் செய்திருக்கிறார்கள். அந்த துஆவின் காரணமாகவே வேதனை இலேசாக்கக் கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மேற்கண்ட அறிவிப்பைச் சிந்திப்பவர்கள் இதை உணரலாம்.
மரம் செடிகளை நடுவது பயன் தரும் என்றால் இறந்த ஒவ்வொருவருக்கும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள். அப்படிச் செய்யவில்லை.
மேலும் நபித்தோழர்களும் இதை நபிகள் நாயகத்துக்கே உரிய சிறப்புச் சலுகை என்று விளங்கியதால் தான் கப்ருகள் மீது அவர்கள் மரம் செடிகள் நட்டதாகக் காண முடியவில்லை.
மேலும் கப்ரு வேதனையைத் தமது காதுகளால் கேட்டதன் அடிப்படையில் தான் மட்டையை ஊன்றினார்கள். கப்ரு வேதனையைக் கேட்காத மற்றவர்கள் நபிகள் நாயகத்துடன் போட்டியிடுவது என்ன நியாயம்?
தோண்டி எடுத்த மண்ணை மட்டும் போட்டு மூட வேண்டும்
உடலை அடக்கம் செய்த பின் எந்த அளவு மண்ணை வெட்டி எடுத்தோமோ அதை மட்டும் போட்டு மூட வேண்டும்.
உயரமாக கப்ரு தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மண்ணை அதிகமாக்கக் கூடாது.
கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807
மண்ணைக் கூட அதிகமாக்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ள போது சிமிண்ட், செங்கல் போன்றவற்றால் நிரந்தரமாகக் கட்டுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை நாம் அறியலாம்.
கப்ரின் மேல் எழுதக் கூடாது
அடக்கத் தலத்தின் மேல் மீஸான் என்ற பெயரில் கல்வெட்டை ஊன்றி வைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உள்ளது. சில ஊர்களில் இதற்காகக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு வசதி படைத்தவர்கள் மட்டும் இவ்வாறு கல்வெட்டு வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். சமரசம் உலாவும் அடக்கத் தலத்திலும் இறந்த பிறகு கூட அநியாயமான இந்தப் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது.
கப்ருகள் மீது எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: அபூதாவூத் 2807
மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸில் கப்ரின் மேல் எழுதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். இத்தடையில் மேற்கண்ட செயலும் அடங்கும் என்பதில் ஐயமும் இல்லை.
மக்கள் தொகை அதிகரித்து அடக்கத்தலம் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு இடத்தில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அதே இடத்தில் மற்றொருவரை அடக்கினால் தான் நெருக்கடி குறையும். வசதி படைத்தவர்கள் அடக்கத்தலத்திலும் தங்களுக்கென ஒரு இடத்தை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொண்டால் எதிர் காலத்தில் அடக்கம் செய்ய அறவே இடம் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கப்ருகளைக் கட்டக் கூடாது
ஒருவர் இறந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய மகான் என்று நாம் கருதினாலும் அவரது அடக்கத் தலத்தின் மேல் கட்டுமானம் எழுப்பக் கூடாது..
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
நபியின் மனைவியரான உம்மு ஹபீபா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் அபீஸீனியாவில் தாங்கள் பார்த்த ஆலயத்தைப் பற்றியும், அதில் உள்ள உருவங்களைப் பற்றியும் நபிகள் நாயகத்திடம் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேலே வழிபாட்டுத் தலத்தை கட்டிக் கொள்கிறார்கள். அவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுகிறார்கள். கியாமத் நாளில் இவர்கள் தான் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 34, 1341, 3850, 3873
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது தமது போர்வையை முகத்தில் போட்டுக் கொண்டார்கள். காய்ச்சல் தணிந்ததும் முகத்தைத் திறந்தார்கள். இந்த நிலையில் இருக்கும் போது 'யஹூதிகள் மீதும் நஸாராக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உள்ளது. (ஏனெனில்) அவர்கள் தங்களது நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர்' என்று கூறினார்கள். அவர்களின் செயலை எச்சரிக்கும் வகையில் இவ்வாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 436, 3454, 4444, 5816
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்ட அந்த நோயின் போது 'யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக (தர்காவாக) ஆக்கிக் கொண்டனர்' என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு எச்சரிக்கை செய்து இருக்காவிட்டால் அவர்களின் கப்ரையும் உயர்த்தி இருப்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1330, 1390, 4441
'உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோரின் கப்ருகளை வழிபாட்டுத் தலங்களாக (தர்காக்களாக) ஆக்கி விட்டனர். எச்சரிக்கை! கப்ருகளை தர்காக்களாக ஆக்காதீர்கள். இதை விட்டு உங்களை நான் தடுக்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுன்துப் ((ரலி)
நூல்: முஸ்லிம் 827
நல்லடியார்கள் ஆனாலும் அவர்களின் அடக்கத் தலங்களைக் கட்டுவதையும், அதன் மேல் ஆலயம் எழுப்புவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து அறியலாம்.
நல்லடியார்களில் நபிமார்கள் தான் முதலிடத்தில் உள்ளவர்கள். மற்றவர்களை நல்லடியார்கள் என்று நாம் திட்டவட்டமாகக் கூற முடியாது. நம்மால் நல்லடியார்கள் எனக் கருதப்பட்டவர்கள் மறுமையில் கெட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நபிமார்கள் நல்லடியார்கள் தான் என்பதில் ஐயமில்லை.
நபிமார்களுக்குக் கூட தர்காக்கள் கட்டக் கூடாது என்றால் மற்றவர்களுக்கு எப்படிக் கட்டலாம்?
மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்
நூல்: முஸ்லிம் 1609
இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேற்கண்ட நபிமொழியில் 'கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று கூறப்படவில்லை. மாறாக 'கப்ரைச் சீர்படுத்து' என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
'தரை மட்டமாக்கு' என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் 'சீர்படுத்துதல்' என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.
கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.
வானத்தை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.
ஸவ்வா என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.
கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.
அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.
அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.
இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.
உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும்... என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (புகாரி 410, 1735, 3963)
இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது.
குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன.
'உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!' என்பதற்கு 'தரை மட்டமாக்காமல் விடாதே!' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.
நபிகள் நாயகத்தின் கப்ர் மீது குப்பா எழுப்பப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை மற்றவர்கள் செய்தால் அது எப்படி ஆதாரமாகும் என்பதைக் கூட இவர்கள் விளங்க மறுக்கின்றனர்..
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்தார் என்று புகாரி (1302) செய்தியையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்த ஒன்றை இது போன்ற செய்திகளால் முறியடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
நபிகள் நாயகத்தின் பெயராலேயே அவர்களின் கட்டளையை மீறுவதை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான்.
கப்ருகளைப் பூசக் கூடாது
அடக்கம் செய்து மண்ணை அள்ளிப் போட்டதும் ஆரம்பத்தில் சற்று உயரமாகத் தான் இருக்கும். உள்ளே உடல் வைக்கப்பட்டதாலும் வெட்டி எடுக்கப்பட்ட மண் அழுத்தம் குறைவாகி விட்டதாலும் உயரமாக இருப்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. சில நாட்களில் மண் இறுகி, பழைய நிலைக்கு வந்து விடும்.
ஆனால் அந்த நிலையைத் தக்க வைப்பதற்காக கப்ரின் மேல் சுண்ணாம்பு, காரை, சிமிண்ட் போன்ற பொருட்களால் பூசக் கூடாது.
கப்ருகளைப் பூசுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
கட்டுவது மட்டுமின்றி பூசுவதும் தெளிவாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சிமிண்ட் சுண்ணாம்பு போன்றவற்றால் பூசுவதும், சந்தனம் பூசுவதும், வேறு எதனைப் பூசுவதும் குற்றமாகும். யாருடைய கப்ருக்கும் இதில் எந்த வித்தியாசமும் இல்லை.
நபிகள் நாயகத்தின் கப்ரும், பள்ளிவாசலும்
நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளிவாசலை ஒட்டி அமைந்திருந்த அவர்களின் வீட்டில் தான் இருந்தது. அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலம் பள்ளியின் ஒரு பகுதியாக ஆக்கப்படவில்லை.
பின்னர் வலீத் பின் அப்துல் மாலிக் (இவர் இஸ்லாத்தை அறவே பேணாதவர்) ஆட்சியில் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நபவி இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டும் போது தான் நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் பள்ளிவாசலுக்குள் அவர் கொண்டு வந்தார்.
இந்தச் சமயத்தில் மதீனாவில் எந்த ஒரு நபித் தோழரும் உயிருடன் இருக்கவில்லை. நபித்தோழர்களில் மதீனாவில் கடைசியாக மரணித்தவர் ஜாபிர் (ரலி) அவர்கள். இவர்கள் ஹிஜ்ரி 78ஆம் ஆண்டு மரணித்தார்கள். மதீனாவில் ஒரு நபித்தோழரும் உயிருடன் இல்லாத 88ஆம் ஆண்டு தான் இந்தத் தவறை வலீத் என்ற மன்னர் செய்தார்.
உஸ்மான் (ரலி) அவர்கள் தான் கப்ரை பள்ளியில் சேர்த்தார் என்பது கட்டுக் கதையாகும். அவர்கள் காலத்தில் பள்ளிவாசலை விரிவுபடுத்திய போது நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தையும் நபிகள் நாயகத்தின் மனைவியர் வசித்த அறைகளையும் தவிர்த்து விட்டுத் தான் விரிவுபடுத்தினார். அவர் மரணித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வலீத் இக்காரியத்தைச் செய்தார்.
கப்ரைக் கண்டு கொள்ள அடையாளம் வைத்தல்
உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாறாங்கல்லை தூக்க முடியாமல் தூக்கி வந்து அவரது தலைமாட்டில் வைத்தார்கள். 'எனது சகோதரர் உஸ்மானின் கப்ரை நான் அடையாளம் கண்டு என் குடும்பத்தில் யாரேனும் இறந்தால் இவருக்கு அருகில் அடக்குவதற்காக இந்த அடையாளம்' என்றும் கூறினார்கள்.
நூல்: அபூ தாவூத் 2791
இது கப்ரைக் கட்டக் கூடாது என்பதற்கு மேலும் வலுவான சான்றாகவுள்ளது. அவரது கப்ரை அடையாளம் காண விரும்பிய போதும் அந்த இடத்தில் ஒரு கல்லை எடுத்துப் போட்டார்களே தவிர நிரந்தரமாக இருக்கும் வகையில் கல்வெட்டு கூட வைக்கவில்லை. நினைத்தால் அப்புறப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு பொருளை அடையாளம் காண்பதற்காக வைத்தால் தவறில்லை.
ஒருவரது உடலுக்கு அருகில் அவரது உறவினரை அடக்கம் செய்தல்
ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் அவரது குடும்பத்தாரை அருகில் அடக்கம் செய்ய சிலர் விரும்புகின்றனர். இதில் எந்தத் தவறும் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறியலாம்.
அதற்கான வாய்ப்பு இருந்து அதனால் யாருக்கும் இடைஞ்சல் இல்லாவிட்டால் அப்படிச் செய்வதில் குற்றம் இல்லை.
தல்கீன் ஓதுதல்
ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன் என்ற பெயரில் எதையோ கூறுவர்.
'உன்னிடம் வானவர்கள் வருவார்கள். உன் இறைவன் யார் எனக் கேட்பார்கள். அல்லாஹ் என்று பதில் கூறு! உன் மார்க்கம் எது எனக் கேட்பார்கள். இஸ்லாம் என்று கூறு' என்று அரபு மொழியில் நீண்ட அறிவுரை கூறுவது தான் தல்கீன்.
ஒருவர் உயிருடன் இருக்கும் போது சொல்லிக் கொடுக்க வேண்டியதை இறந்த பின் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இப்படிச் சொல்லிக் கொடுத்து, அது இறந்தவருக்குக் கேட்டு, அவரும் இந்த விடையைச் சொல்ல முடியும் என்றால் இதை விட உச்ச கட்ட மடமை வேறு என்ன இருக்க முடியும்?
இது போன்ற மூடத்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) 'உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்' என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).
நூல்: அபூ தாவூத் 2894, ஹாகிம் 1/370 பைஹகீ 4/56
எனவே மய்யித்திற்குச் சொல்லிக் கொடுக்கும் தல்கீனை ஒழித்துக்கட்டி அல்லாஹ்விடம் அவர் நல்ல முறையில் பதில் சொல்ல அனைவரும் துஆச் செய்ய வேண்டும்.
பித்அத்கள்
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
* மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
* மய்யித்தின் வயிற்றை அழுத்தி உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றுதல் நி ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ, அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்
* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்
* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்
* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்
* இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் நடத்துதல்
* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
* வெளியூரில் இறந்தவருக்காகத் தொழுகை நடத்துதல்
* கப்ரின் மேல் செடி கொடிகளை நடுதல்
* கப்ரின் மேல் எழுதுதல்; கல்வெட்டு வைத்தல்
* கப்ருகளைக் கட்டுதல்; கப்ருகளைப் பூசுதல்
* கப்ருக்கு அருகே நின்று தல்கீன் ஓதுதல்
* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்
* சோகத்துக்கு அடையாளமாக கருப்பு ஆடையை அணிதல்
* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்
* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்
* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்
* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல் இருத்தல்
*இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்
* பூக்கள் மற்றும் மாலைகள்
* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்
* கப்ரில் பன்னீர் தெளித்தல் நி அடக்கம் செய்தவுடன் இறந்தவரின் உறவினரிடம் முஸாஃபஹா
* அடக்கம் செய்து விட்டு, இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்
* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்
* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்
* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்
* தனக்காக முன்னரே கப்ரை தயார் செய்தல்
* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்
* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்
* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்
* ஷஃபான் 15ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்
* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்
* கப்ரின் முன்னே கைகளைக் கட்டிக் கொண்டு நிற்பது
* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.
05.11.2009. 18:14
